எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 21 ஜூன், 2025

நீங்களும் உங்கள் கடவுளும் என் கேள்வி பதிலும்!!!

 நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா? 

“ஆம்” என்பது உங்கள் பதிலாயின், மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் கடவுளை நம்புவதோடு அவ்வப்போதோ எப்போதுமோ அவரிடம் ‘கோரிக்கைகள்’ வைக்கும் பழக்கம் உள்ளவரா?

இதற்கும் “ஆம்” என்பது உங்கள் பதில் எனின், நீங்கள் வைக்கும் கோரிக்கைகளில், “கடவுளே, எனக்குச் சாகாவரம் கொடு” என்பதும் இடம்பெறுவதுண்டா?

நன்கு யோசித்துச் சொல்லுங்கள், இல்லைதானே?

காரணம்?

மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்க இயலாதது; கூடாதது என்பது கடவுள் வகுத்த நெறி. எனவே, சாகா வரம் அருளும்படிக் கோரிக்கை வைத்தால் அவர் அதை நிராகரிப்பார் என்பதுதானே?

உயிர்களை மரணிக்கச் செய்வது கடவுள் வகுத்த உயிர்களுக்கான வாழ்க்கை நெறி என்பது போல, அவை தத்தம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அனுபவிக்க நேர்வதும் அவரால் வகுக்கப்பட்ட நெறிதான்.

எனவே, என்னைத் தாக்கும் துன்பங்களை அகற்றி இன்பங்களை வாரி வழங்கு” என்பது போல நீங்கள் நம்பும் கடவுளிடம் கோரிக்கைகள்[வேண்டுதல்கள்] வைப்பது தவறு என்கிறேன் நான்.

உங்களால் மறுக்க இயலுமா?