எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 28 ஜனவரி, 2019

நான் காதல் போதையில் 'கிறுக்கிய' 'கிளு கிளு' கவிதைகள்!!!

நான் காதல் பைத்தியமாய் இருந்தபோது ‘கிறுக்கிய’ காதல் கவிதைகளில் சில கீழே.... ‘கால்கட்டு’க்குப் பிறகு காதல் கசந்தது; எனினும், இன்றுவரை கவிதை  இனிக்கிறது! இது என்ன விந்தை!!

அவள் கொடுத்த அது!

திருமணப் பத்திரிகையோடு வந்தாய்.
திடுக்கிட்டேன்.
“கல்யாணம் அக்காவுக்கு” என்று நீ
சிரித்தபோது
ஆறுதலடைந்தேன்.
எல்லோருக்கும் அதைக் கொடுத்துவிட்டு
எனக்கும் கொடுத்தாய்...
துயரத்தில் சரிந்தேன்.
நீ எனக்குக் கொடுத்தது.....
 அன்றொரு நாள் நான் உனக்குக் கொடுத்த
காதல் கடிதம்!

நீயுமா சிரிக்கிறாய்!?
தேர்வில்
நான் தோல்வியடைந்த போதும்
எல்லோருக்கும் இனிப்பு வழங்கினேன்.
ஏளனமாய்ச் சிரித்தார்கள்;
நீயும் சேர்ந்து சிரித்தாய்.
நான் இனிப்பு வழங்கியது
வகுப்பில் முதல் மாணவியாய் நீ
தேர்ச்சி பெற்றதற்காக.
இதை உனக்குப்
புரிய வைப்பது எப்படி?
புரியாமல் பரிதவிக்கிறேன் பெண்ணே.

மழையோ மழை!
மழையில் நீ நனைந்தபோது
குடை கொடுத்தேன்.
வாங்க மறுத்தாய்.
‘என்னவள் மழையில்... நான் குடையிலா?’...
குடையிருந்தும் நனைந்தேன்.
நீயோ கண்டுகொள்ளவில்லை.
என் கண்களில் கண்ணீர் மழை!

ஆஹா...கொண்டாட்டம்!
எனக்கு வயது இருபத்தெட்டு.
இரண்டு வருடமாய்த்தான் பிறந்தநாள்
கொண்டாடுகிறேன்.
காரணம்.....
உன் மீது கொண்ட காதல்.
புரியவில்லையா?
நான் கொண்டாடுவது.....
உன் பிறந்த நாளை!

சொர்க்க ரேகை!
பல நாட்களாய் நான் குளிக்கவில்லை.
அப்பா திட்டினார்;
அம்மா கெஞ்சினாள்.
நான் “லவ் யூ” சொன்னபோது
என் கன்னத்தில் பதிந்த உன் விரல் ரேகைகள்
அழிந்துவிடும் என்று
என்னவளே.....
அவர்களிடம் சொல்ல முடியுமா?!
----------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்மணமே, ஏன் இந்தப் பாராமுகம்?!

கீழ்க்காணும் கதையைப் படியுங்கள். மிக மிக மிகப் பலமுறை முயன்றும், தமிழ்மணம் இதை இணைத்துக்கொள்ள மறுக்கிறது[இது என்னளவில் அவ்வப்போது நிகழ்கிறது].  தமிழ் வளர்க்கும் பணியை மிக மிக மிகச் சிறப்பாகச் செய்துவரும் தமிழ்மணம் இதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டுவதில்லை. ஏன் இந்தப் பாராமுகம்?[அமேசான் கிண்டிலில் வெளியான என் மின் நூல்களின் பட்டியலைப் பதிவு செய்வது தவறோ?!]

வாழ்க தமிழ்மணம்! 


கதை.....

''மிதுன், நாளை பெண் பார்க்கப் போறோம். இவளுகள்ல ஒருத்தியை செலக்ட் பண்ணு'' என்று சொன்ன மகாலட்சுமி, தன் வசமிருந்த புகைப்படக் கற்றையை மிதுனிடம் நீட்டினாள்.

அதைப் பெற்றுக்கொள்ள மறுத்த மிதுன், ''தமிழரசியை உயிருக்குயிராய் நேசிச்சிக் காதல் கல்யாணம் பண்ணினேன். அவ உயிரோடு இருக்கும்போது இன்னொரு கல்யாணமா? இனியும் இந்தப் பேச்சை எடுத்தீங்கன்னா நான் பொல்லாதவனா மாறிடுவேன்'' என்று சூடான வார்த்தைகளோடு கனல் கக்கும் பார்வையையும் தன்னைப் பெற்றவளின் மீது வீசினான்.

''ஆறு மாசம் முந்தி நீங்க ரெண்டு பேரும் போன கார் விபத்துக்குள்ளானதில் உன் பெண்டாட்டிக்கு அடி வயித்தில் பலமான அடி. இனி குழந்தை பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால.....''

குறுக்கிட்டான் மிதுன். ''அதனால இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்ல. அனாதை ஆசிரமத்தில் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்.''

''யாரோ பெத்துப்போட்டதை என் பேரப் புள்ளையா என்னால ஏத்துக்க முடியாது.''

''அது உன் விருப்பம். நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தமிழரசியே என்னை வற்புறுத்தியிருக்கா. நீயும் அதைத்தான் சொல்லுறே. இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்துத்தான், தமிழரசிக்குக் கருப்பை சிதைஞ்சிடிச்சுன்னு டாக்டர் சொன்னப்பவே நான் கருத்தடை அறுவை பண்ணிட்டேன்'' என்று சொல்லிச் சிரித்தான் மிதுன்.

மகாலட்சுமியின் கையிலிருந்த புகைப்படங்கள் நழுவித் தரையில் விழுந்து சிதறின.
------------------------------------------------------------------------------------------------------------------
இம்மாதிரிக் கதை ஏதும் வந்ததில்லை என்பது என் நம்பிக்கை. அது தவறுன்னா, தவறாம என்னை மன்னிச்சுடுங்க!