எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 5 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... தீர்ப்பளித்த சுவாமிநாதனும் தமிமுன் அன்சாரியின் 'அடடா' விமர்சனமும்!

//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*

இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு 'நீதிப் பேரரசர்' ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆற்றவுள்ள எதிர்வினை என்னவாக இருக்கும்?

என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.


மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;


“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”

                                         *   *   *   *   *

*https://tamil.oneindia.com/news/madurai/tamimun-ansari-attacks-judge-gr-swaminathan-over-lamp-at-the-thiruparankundram-temple-755755.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links

‘தீ’யைத் ‘தீபம்’ ஆக்கிய அந்த அயோக்கியர்கள் யார்?!

ற்கள் ஒன்றோடொன்று உரசும்போது ‘தீ’ப்பொறி சிதறுவதையும், காய்ந்த மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காடுகள் தீப்பற்றி எரிவதையும் ஊன்றிக் கவனித்த காட்டுமிராண்டிகளாக இருந்த நம் மூதாதையர்கள், கற்களை உரசி, சருகுகளிலும் காய்ந்த மரத் துண்டுகளிலும் தீயைப் பற்றவைத்து, பச்சையான இறைச்சியை அதில் சுட்டுச் சுவைகூட்டி உண்ணப் பழகினார்கள்.

அப்போதெல்லாம் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.

காலப்போக்கில் அதை உருவாக்குவதில் புதிய புதிய வழிமுறைகள் கையாளப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருப்பிடத்தில் சூழ்ந்துள்ள இருளை அகற்ற விளக்குகளைக் கண்டுபிடித்தார்கள்[சிம்னி விளக்கு, மண் விளக்கு, லாந்தர் என்றிப்படி...]. அப்போதும் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.

இரவு நேர இருட்டில் வெளியே செல்லும்போது, தடிமனான நீண்ட குச்சிகளில் துணியைச் சுற்றி, தீயைப் பற்றவைத்துத் தீப்பந்தம்[தீவட்டி] ஆக்கிப் பயன்படுத்தினார்கள். அந்தக் காலக்கட்டத்திலும் ‘தீ’ தீ என்றே கருதப்பட்டது.

சமையலுக்காக அதைப் பயன்படுத்திய நிலையிலும் ‘தீ’ தீதான்.

குவிந்துகிடக்கும் குப்பைகளை அள்ளி எடுத்து அப்புறப் படுத்துவதைத் தவிர்க்க, அவற்றில் தீயிட்டார்கள். பற்றிப் பரவி, பெரு நெருப்பாக அது கொழுந்துவிட்டு எரிந்தபோதும் அது சாதாரணத் ‘தீ’தான். மனிதர்கள் பகை காரணமாக ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் உடமைகளுக்குத் தீயிட்டு அழித்தபோதும் ‘தீ’ தீயாகவே இருந்தது.

இவ்வாறு, பலவகையிலும் பயன்படுத்தப்பட்ட அதே ‘தீ’தான் கோயில்களில் விளக்கு ஏற்றும்போது ‘தீபம்’ ஆன பேரதிசயம் நிகழ்ந்தது.

அது தானாக நிகழவில்லை; கட்டப்பட்ட கோயில் கலசங்களில், வேத மந்திரங்கள் சொல்லி அவற்றைப் புனிதமாக்குவதாகவும், உள்ளே வைக்கப்படும் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதி, அபிஷேகம் செய்து, அவற்றில் கடவுளைக் குடியேற்றுவதாகவும் கதையளந்து மக்களை நம்ப வைத்த ‘அவர்கள்’தான் ‘தீ’யைப் புனிதமான ‘தீபம்’ ஆக்கினார்கள்.

மக்களும் அதை நம்பினார்கள்.

கோயில்களில், உலோகங்களால் ஆன விளக்குகளில் தீபம் ஏற்றும் வழக்கம், காலப்போக்கில் கடவுள்கள் குடியிருப்பதாகச் சொல்லப்படும் மலை உச்சிகளில், அகன்ற பெரிய குண்டாக்களிலும் அண்டாக்களிலும்[கொப்பரை] பிரமாண்டமான திரிகள் வைத்து தீயைப் பற்றவைத்து ‘மகா தீபம்’ ஏற்றுவது வழக்கத்திற்கு வந்தது.

வெறும் ‘தீ’, இன்று மக்களுக்கிடையேயான மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் காரணமாகவுள்ள ‘மகா தீபம்’ ஆன கதை இதுதான்!