செவ்வாய், 30 ஜூன், 2020

04.01.2016இல் இதைப் 18 பேர் படித்தார்கள்[பாவம் ‘பசி’பரமசிவம்!]; 30.06.2020இல்?

பெண்கள் ஆண்களைவிடவும் அறிவில் சிறந்தவர்கள். அதை உறுதிப்படுத்தும் வகையிலான ஓர் ஒரு பக்கக் கதை!

மூணார் - கேரளா



=======================================================================
குமுதம் இதழுக்கு நன்றி!
=======================================================================

திங்கள், 29 ஜூன், 2020

ஐயோ பாவம்...அவதாரங்கள்!!!

இராமகிருஷ்ண பரமஹம்சர், ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி  சாய்பாபா, ரமண மகரிஷி போன்றோர் லட்சோபலட்சம் பக்தர்களால் மகான்கள் என்று போற்றப்பட்டவர்கள்; படுபவர்கள்.

முழுமுதல் கடவுளே இம்மகான்கள் உருவில் இம்மண்ணில் அவதரித்ததாகக் கருதி, இவர்களைப் வணங்கி வழிபடுகிறார்கள் நம் மக்கள்.

மேற்கண்ட நான்கு மகான்களும் குணப்படுத்த இயலாத[அன்றைய நிலையில்] கொடிய நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்[ஆன்மிகவாதிகளின் நோக்கில் ‘மகா சமாதி ஆனவர்கள்].

கடவுளின் மறுபிரதிகளாக இம்மண்ணில் தோன்றிய இவர்கள் தீராத நோய்களுக்குள்ளாகி மரணிக்கும் அவலம் நேரலாமா? 

நேர்ந்தது என்றால் இவர்கள் மகான்களா? அவதாரங்களா?


கேட்டால், நேரடியான பதில் கிடைக்காது. கொஞ்சமும் புரியாதா தத்துவங்களை உதிர்த்துக்  கேட்போரை மயங்க வைப்பார்கள் ஆன்மிகவாதிகள். அதோடுகூட.....

கேள்வி எழுப்ப வேண்டியவர்கள், இவர்கள் இட்டுக்கட்டிய கதைகளால் சிந்திக்கும் அறிவு மழுங்கடிக்கப்பட்டு, அதீத பக்தி எனும் போதையில் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.

போதை தெளிய  ஆண்டுகள் பல ஆகக்கூடும்.

காத்திருப்பது மக்கள் நலம் விழைவோர் கடமை!

வருகைக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

*கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு ஆகியவை காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. 
இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறும் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையைக் கவனித்து வந்தனர்.

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதப் பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது.

85 வயதில் திரு. சத்ய சாய் பாபா இயற்கை எய்தியபோது அவர் தாம் ஒன்றும் அதிசய அற்புதங்களை நிகழ்த்தும் கடவுள் பிறவியல்ல என்பதை நிறுவி, தாமும் ஒரு மனிதப் பிறவி தான் என்பதை உரத்துக் கூறியுள்ளார் என்று தான் கூற வேண்டும். 2000ஆம் ஆண்டில் புட்டபர்த்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் சாய் பாபா நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன் என்று உறுதிபட ஆருடம் கூறினார். அதன் பின்னரும் பலமுறை அவர் ஆருடம் கூறி வந்துள்ளார். ஆயினும், அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதைக் குறிக்கும் வகையில் 85 வயதிலேயே இயற்கை எய்தினார். 

கடவுள் அவதாரம் எடுத்தவருக்கே 85 வயதில் ஆயுள் முடியும் போது பக்தர்கள் தங்களது ஆயுளை நீட்டிக்கச் சாமியார்களை நாடிப்போவது தான் ஆச்சரியமாய் இருக்கிறது.  [www.keetru.com]

*ராமகிருஷ்ண பரமஹம்சரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரைக் கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர், 1886 ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டுப் பிரிந்தது.

*1948ஆம் ஆண்டு ரமண மகரிஷியின் இடது கையில் ஒரு கட்டி ஏற்பட்டது. அது புற்றுநோய்க் கட்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் குணம் ஆகவில்லை.

நோய் முற்றிய நிலையில், 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 8.47 மணிக்கு ரமணர் காலமானார்.

*ஷீரடி சாய்பாபாவுக்கு 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி லேசான காய்ச்சல் அடித்தது. மூன்று நாட்களில் காய்ச்சல் குணமாகிவிட்டது. ஆனால் பாபா சோர்வாகக் காணப்பட்டார். இந்த நிலையில் தன் உயிருக்கு உயிரான செங்கல்[தனிக்கதை!] உடைந்ததால் அவர் சாப்பிடுவதைக் குறைத்தார். இதனால் அவர் உடல்நிலை பலவீனமானது.

16 நாட்களாக அவர் வழக்கம் போல் சாப்பிடவில்லை. 17ஆவது நாள் அதாவது 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாபா மரணம் அடைந்தார். 
=======================================================================

ஞாயிறு, 28 ஜூன், 2020

“ஓம் நமோ நாராயணாய”!!!

இப்படி நான் சொல்லலீங்க. சொன்னவர்...தினமும் சொல்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் அவர்கள்.
இந்த மந்திரத்தை[?!] வீடுதோறும், 108 முறை சொல்லி ஜெபம் செய்தால் கொரோனா ஓடி ஒளிஞ்சுடும்/ஒழிஞ்சுடும்னு('28.06.20 இந்து தமிழ்'நாளிதழ்ச் செய்தி) சொல்லியிருக்கார் அவர். 

உலகெங்கிலும் இது உச்சரிக்கப்பட்டா கொரோனா ஒழிஞ்சிடுமா?

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்னு சொல்றீங்களா? சரி, ஒழியலேன்னா.....

நாராயணன் மேல மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையும் ஒழிஞ்சிடுமே!

நாராயணன் கவலைப்பட மாட்டார்.  ஜீயர் கவலைப்படாம இருப்பாரா?

தெரியல.

“அல்லாவின் பேரைச் சொல்லு, கொரோனா ஒழிஞ்சிடும்”னு சாயபுகளோ[ஏதோ ஓர் ஊர்ல, கொரோனா சிகிச்சைக்காக மசூதியை ஒப்படைக்கத் தயார் என்று இவர்கள் அறிவித்திருப்பதாகச் செய்தி படித்தேன்], "கர்த்தரை அழை, கொரோனா காணாமல் போயிடும்”னு கிறித்தவர்களோ அறிக்கை விட்ட மாதிரித் தெரியல. ஜீயருக்கு மட்டும் இதற்கான துணிச்சல் பிறந்தது எப்படி?

எப்படியாச்சும் சில நாட்களில் கொரோனா காணாம போனா, “எல்லாம் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தைச் சொன்னதன் பயன்” என்று சொல்லி, வைணவத்தை வளர்க்கவும், தன் கௌரவத்தை உயர்த்தவும் ஆசைப்படுகிறாரோ?

சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே, இது தெரியாதா ஜீயருக்கு? ரெண்டொரு ஆண்டாள் கோயில் அர்ச்சகர்களுக்கேனும் கொரோனா தொத்தணுன்னு நினைக்கிறாரோ?

“தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் திறக்கணும்” என்று அரசுக்கு இவர் வைத்துள்ள வேண்டுகோள் இதை உறுதிப்படுத்துது.

இப்பதிவின் மூலம் ஜீயரின் மனதை நோகடிப்பது என் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.

இனியும் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு, தன் மீதான நாராயண பக்தர்களின் நன் மதிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்பதே என் அன்பான வேண்டுகோள்.
=======================================================================

சனி, 27 ஜூன், 2020

தமிழால் இணைந்த ஆத்திகமும் நாத்திகமும்!!

திராவிடர் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் இரண்டு கழகங்களும் தமிழ் மொழி, இன வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் அமைப்புகளாகும். இவற்றுக்கிடையேயான நட்பு நாளும் போற்றப்படுகிற ஒன்று.

நூற்பதிப்புக் கழகத்தை நிறுவிய திருவரங்கம் பிள்ளையின் இணையரும், தனித்தமிழ்ப் பற்றாளர் மறைமலையடிகளாரின் மகளுமான நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில், 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் பெரியாருக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தைக் கடுமையாக வெறுத்த மறைமலையடிகள், அவரின் தன்னலமற்ற, மூநடம்பிக்கை ஒழிப்புப் பணியையும், தமிழினத்தின் மேம்பாட்டுக்கான தொண்டினையும் கருத்தில் கொண்டு அவரின் நண்பரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிகளாரின் பாடநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் விலக்கிக்கொள்ளப்பட்டபோது பெரியார் அதைக் கண்டித்தார். தனித்தமிழ், சைவத்தில் நிலைகொண்டது, திராவிட இயக்கம் கடவுள் மறுப்பைக் குறிக்கோளாகக் கொண்டது. எனினும், தமிழையும் தமிழினத்தின் உரிமைகளையும் பாதுகாப்பதில் இவ்விரு அமைப்புகளும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இணைந்து இயங்கின என்பது நினைவுகூரத்தக்கது.
                                    *                    *                           *                      *
நன்றி: ‘இந்து தமிழ்’[27.06 2020] நாளிதழ். ‘கழகமும் செல்வியும் வளர்த்த தமிழ்’ என்னும், ‘செல்வ புவியரசன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தாண்டது இப்பதிவுக்கான கருத்துரை.

=====================================================================
இடம் நிறையவே காலியாக உள்ளது. குங்குமத்தில் முன்பு[2015] வெளியான என் ஒருபக்கக் கதையையும் போகிறபோக்கில் வாசித்துச் செல்லுங்கள். நன்றி.

 






வெள்ளி, 26 ஜூன், 2020

கத்தி ஏந்து பெண்ணே! மனசில் ‘கெத்து’ம் வேணும்!!

#.....தங்கை சொன்ன சொல்லுக்கு மறுப்புச் சொல்லாமல் உடனே தலையாட்டிய அங்கம்மா, அடுத்த சில நிமிடங்களிலேயே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். “கடையைக் காலி பண்ணிட்டா உனக்கும் அம்மாவுக்குமே மூனு நேரச் சோத்துக்கு வழியில்ல. நான் வேற உனக்குச் சுமையா இங்க இருக்கணுமா?” என்றாள்.

“வேற என்ன பண்ணுவே?” -வேணி கேட்டாள்.

“உள்ளூர்ல இருந்தா என் புருசன் தொல்லை பண்ணுவான். எதுனாச்சும் வெளியூர் போயிக் கூலிநாழி செஞ்சி பொழச்சுக்கிறேன்.”

“தனியாவா போறே?”

“செல்லம்மா என் அம்மா மாதிரி லட்சணமா பொறந்துட்டா. அவளை அடையறதுக்கு நான் நீன்னு போட்டி போடுறானுக. நான் அப்பா மாதிரி, கட்டக்கறுப்பா, மண்ட மூக்கும் தூக்குன பல்லுமாப் பொறந்துட்டேன். எங்க போனாலும் என்னை எவனும் சீந்த மாட்டான்” என்றாள் அங்கம்மா.

ஒரு வெடிச் சிரிப்பை வெளிப்படுத்தினாள் வேணி.

“ஏன் வேணி சிரிக்கிறே?”என்று வினவினாள் அங்கம்மா.

"முட்ட முட்டத் தண்ணி அடிச்சுட்டும் போதை மாத்திரையை முழுங்கிட்டும் பொம்பள நெனப்போடு அலையுற காலிப்பசங்க பொம்பள அழகா இருக்காளா இல்லையான்னெல்லாம் பார்க்குறதில்ல. அவனுகளுக்கு வெறியைத் தணிச்சிக்க ஒருத்தி வேணும். அவ்வளவுதான். நீ பஸ் ஏறிப் போனா, அதிலிருந்து இறங்குனதும் இறங்காததுமா உன்னை அலேக் பண்ணிட்டுப் போக ஓநாய்ங்க காத்திருக்கும். ரயில் ஏறிப் போனீன்னா, நீ ஒத்தப் பொம்பளைன்னு தெரிஞ்சி, இறங்குறதுக்குள்ளயே  கக்கூஸ் ரூமுல அடைச்சி நாசம் பண்ணி ஓடுற ரயிலிலிருந்து தூக்கி வீசிட்டுப் போயிடுவானுக. இன்னொரு வாட்டி இப்படிச் சொல்லிடாதே” என்றாள் வேணி.

“நாடு இவ்வளவு மோசமாவா இருக்கு?”

“இதைவிடவும் மோசம். வசமா மாட்டிகிட்டாக் கட்டுன புருசனையே கட்டிப் போட்டுட்டு அவன் கண் முன்னாலையே ஒருத்தியைக் கூட்டணி அமைச்சிக் கெடுத்துடுறானுக. கொஞ்ச நாள் முந்தி நியூஸ் பேப்பர்ல படிச்ச சமாச்சாரம் இது. தண்ணியடிச்சுட்டுப் பொம்பளை சுகத்துக்குத் தெரு நாயா அலைஞ்ச நாலு குடிகாரனுங்க நடைபாதையில் படுத்திருந்த அறுபது வயசுக் கிழவியைத் தூக்கிட்டுப் போயி மானபங்கப்படுத்தியிருக்கானுக. அதிர்ச்சியில் கிழவி பரலோகம் போய்ச் சேர்ந்துட்டா. நிராதரவா இருக்கிற ஒருத்தி கொஞ்சம் லட்சணமாவும் இருந்துட்டா அவள வாழ விடமாட்டானுக. அது போகட்டும், நம்ம பிரச்சினையைப் பேசுவோம்.....” என்று சொல்லி, செல்லம்மாவின் முகம் பார்த்து ‘நீ சொல்லு’ என்பதாகச் சைகை செய்தாள் வேணி.

“ஒரு திட்டம் வெச்சிருக்கேன்” என்றாள் செல்லம்மா. அதை அறியும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள் அங்கம்மாவும் வேணியும்.

“அத்தியப்பனுக்குச் சொந்தமான இந்த இடத்தைக் காலி பண்ணிட்டுத் தள்ளுவண்டிக் கடை போட நினைக்கிறேன். காபி பலகாரத்தின் தரம் குறையாம பார்த்துகிட்டா நிறையவே வாடிக்கையாளருங்க வருவாங்க. கும்பல் சேருறதைப் பொருத்து அப்பப்பக் கடையை இடமாற்றம் செய்துக்கலாம்” என்றாள் செல்லம்மா.

“தள்ளுவண்டிக்கு மாறிட்டா, எனக்கு ரெண்டாந்தாரமா வந்துடுன்னு அங்கம்மா புருசன் சொல்லுறதை நிறுத்திடுவாரா? செந்தில் உனக்குத் தூது அனுப்புறதை விட்டுடுவானா? ‘இது எட்டாக்கனி’ன்னு அத்தியப்பன் தன் மனசைப் பக்குவப்படுத்திட்டு உன்னைத் தொந்தரவு பண்ணாம ஒதுங்கிடுவாரா?” என்று ஒன்றன்பின் ஒன்றாகக் கேள்விக் கணைகளை வீசினாள் வேணி. “இதெல்லாம் நடக்கவே நடக்காது” என்று பதிலும் சொன்னாள்.

"தள்ளுவண்டிக் கடை போட்டீன்னா, உன் கிட்ட வந்து நின்னு, ‘ஒரு காப்பி குடு’ன்னு சொல்லிட்டுக் கைலிக்குள்ள கையை விட்டுகிட்டு நிப்பானுக தறுதலைங்க. ஒரு நாள் சண்டைபோட்டு விரட்டலாம். தினம் தினம் இப்படி வந்து அசிங்கம் பண்ணுறவனுகளோட எத்தனை நாளைக்கு மல்லுக் கட்ட முடியும்? இது மாதிரியான காலிப்பசங்களோட அடாவடித்தனத்தைத் தடுக்க, வெளியில் தெரியும்படியா இடுப்பில் ஒரு கத்தி செருகிக்கோணும். அதோட, மனசில் அவனுகளை எதிர்த்துப் போராடுறதுக்கான ‘கெத்து’ம் இருக்கணும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் செல்லம்மாவின் உயிர்த்தோழி வேணி......#
=============================================================

‘செல்லம்மா தேவி’ என்னும் என் புதினத்திலிருந்து[கிண்டில் வெளியீடு] தேர்வு செய்து வெளியிட்டது இப்பதிவு.

புதன், 24 ஜூன், 2020

‘சுவரெழுத்து’ சுப்பையா என்றொரு அதிசயச் சுயமரியாதைக்காரர்!!!

இது, நீங்கள் தேடிக் கண்டறிந்து வாசிக்கக் கிட்டாத மிக அரிய வரலாற்றுக் குறிப்பு. தவறாமல் வாசியுங்கள்.

சுவரெழுத்து சுப்பையா பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர். ஆனாலும், அறிவாயுதத்தின் வீரியம் அவருக்குத் தெரிந்திருந்திருக்கிறது. மயிலாடுதுறையில் வசித்து வந்தாலும் அவருக்கென்று வீடோ, குடும்பமோ இருக்கவில்லை. கழகத் தொண்டர் ரெங்கசாமியின் டீக்கடையில் தங்கிக்கொண்டு அங்கே கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கிறார். சதா சர்வ காலமும் சுயமரியாதைக் கொள்கையை நெஞ்சில் தாங்கிக்கொண்டு தன்னைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்திருக்கிறார். உடனிருந்த தோழர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை.
21.jpg

சுப்பையா ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு ஒப்புதல் தந்திருந்தார். தோழர்களும் அவருக்காக நிதி திரட்டியிருக்கிறார்கள். கூரை வீடு, கொஞ்சம் தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்க அந்த நிதியைப் பயன்படுத்தச் சொல்லி தந்திருக்கிறார்கள். ஆனால், சுப்பையாவோ அந்தத் தொகை முழுவதையும் பிரச்சாரத்துக்குச் செலவழித்துவிட்டுக் கல்யாணத்திற்குக் கல்தா கொடுத்திருக்கிறார்.

அவர் சுவரில் எழுதிக்கொண்டிருக்கையில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டாராம். அவரை அடிக்க வந்தால்கூட அடியை வாங்கிக்கொண்டே, எழுத நினைத்ததை எழுதி முடிப்பாராம். ஒருமுறை ஒரு பிராமணர் வீட்டுச் சுவரில் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த வீட்டுக்காரர் குச்சியால் தட்டி ‘‘யாரைக் கேட்டு என் வீட்டுச் சுவரில் எழுதுகிறாய்’’ எனக் கேட்க,  ‘‘யாரைக் கேட்டு ராமானுஜர் பிரசாரம் செய்தார்?’’ என்றிருக்கிறார்.

பிறிதொருமுறை நாகை புராட்டஸ்டன்ட் தேவாலயச் சுவரில் ‘தேவனின் ஆலயத்தை வியாபார ஸ்தலமாக்காதே’ என்ற பைபிள் வாசகத்தை ஒரு பக்கமும், ‘கோயில் திருடர்களின் குகை’ என்ற காந்தியின் வாசகத்தை இன்னொரு பக்கமும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். விஷயமறிந்த வைதீகர்கள் கொதித்தெழ, பிரச்னை பெரிதாகிவிட்டதாம். ‘பைபிளில் சொல்லியிருப்பதுதானே... காந்தியால் எழுதப்பட்ட வாசகம்தானே’ என்று விவாதப் புரட்சி செய்து கழகத் தோழர்கள் அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் முற்றாக வெளியேற பெரியார் நடத்திவந்த கருத்துப் புரட்சிக்கு, சுப்பையா போன்றோர் உதவியிருக்கிறார்கள். குப்பைத் தொட்டியைக் காட்டி, ‘‘இதிலே எதையாவது எழுதுங்கள்’’ என்றால், ‘புராணங்களை இதிலே போடு’ என்று எழுதும் நெஞ்சுரத்தோடு சுப்பையா செயல்பட்டிருக்கிறார். எது பக்தி? எது பித்து? என்பதை உணர்ந்தவராக அவர் இருந்ததால்தான், ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்ற ராமலிங்க வள்ளலாரை ஆதரித்திருக்கிறார்.

அன்றைய காங்கிரஸ் பேச்சாளர்களில் சிலர் பெரியாரைத் தரக்குறைவாகப் பேசியபொழுது அவரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் விவாதிக்கக் கூப்பிட்டிருக்கிறார். ‘முடியாது’ என்று முரண்டு பிடித்தவர்களோடு மோதவும் துணிந்திருக்கிறார். இன்றைக்குக்கூட நாம் தலைவர்கள் கொள்கையோடும், தொண்டர்கள் கொள்கைக்காகவும் வாழவேண்டும் என விரும்புகிறோம்.

அவ்வகையில், வரித்துக்கொண்ட கொள்கைக்காக வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம் என்று எத்தனையோ சுப்பையாக்கள் தங்களை இழந்திருக்கிறார்கள். தியாக வாழ்வை மேற்கொண்ட அவர்களுக்கு மணிமண்டபங்களோ மகுடாபிஷேகங்களோ தேவையில்லை. குறைந்தபட்ச நினைவுகூரல். அதுகூட கிடைப்பதில்லை என்பதுதான் சோகம்.

 சுப்பையா தன் வாழ்வையே சுவர் எழுத்துக்காக அர்ப்பணித்தவர். புகைப்படம் எடுக்கக்கூட விரும்பாதவர். ‘‘எதற்கு புகைப்படம்? பின்னால் மாலை போடவா!’’ எனக் கேட்டு முகங்காட்ட மறுத்திருக்கிறார்.

தீவிரமான திராவிடக் கழகத் தொண்டரான சுவரெழுத்து சுப்பையா செய்துவிட்டுப் போயிருக்கும் காரியங்கள் போற்றுதலுக்குரியன. தனி ஒரு மனிதனாகத் தமிழகத் தெருக்கள் முழுக்க பகுத்தறிவுப் பிரசாரம் செய்திருக்கிறார். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்ற வாசகம் நமக்குள் பதிய அவரே காரணம். ‘நெற்றியில் திருமண், நெஞ்சிலே களிமண்’ என்றும், ‘விஞ்ஞானி கண்டது விரைவு ராக்கெட், அஞ்ஞானி கண்டது விபூதிப் பாக்கெட்’ என்றும் அவரே சுயமாக முழக்கங்களை உருவாக்கினார். அவர் கலர் வில்லைகளைப் பயன்படுத்தவில்லை.

நெடுஞ்சாலைகளில் உருகும் தாரையே மண்ணெண்ணெயைக் கலந்து மையாக்கியிருக்கிறார். தூரிகையைத் தேடவில்லை. தன் கைவிரலில் துணியைக் கட்டிக்கொண்டு சுவர்களில் எழுத்துருக்களைக் கொண்டுவந்திருக்கிறார்! பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என்றால் முதல் நாளே அந்த ஊருக்குப் போய் தெரு முழுக்க எழுதுவார்; ‘மெகாபோன்’ மூலம் விளம்பரப்படுத்தியும் இருக்கிறார். மக்கள் பெருமளவு கூட்டத்தில் கலந்துகொண்டால், ‘நேற்று சுப்பையா வந்தாரா?’ என்று பெரியாரே கேட்கும் அளவுக்கு அவரது பணி இருக்கும்.

உயரமான சுவர்களில் ஒற்றையாளாக ஏறி ஏணியிலிருந்து எத்தனையோ முறை கவிழ்ந்திருக்கிறார். ‘‘யாரையாவது உதவிக்கு வைத்துக்கொள்ளக் கூடாதா?’’ என்று தோழர்கள் கேட்டதற்கு, ‘‘ஆளுக்கொரு வேலை செய்தால்தான் அதிக வேலை செய்ய முடியும்’’ என்றிருக்கிறார். அப்படித்தான் சென்னையில் ஒருமுறை சுவர் விளம்பரம் செய்துகொண்டிருக்கையில் காவல் துறையினர் வந்திருக்கிறார்கள். யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரைக் கைது செய்தவர்கள், விசாரிக்காமல் தார்ச்சட்டியைத் தலையில் கவிழ்த்திருக்கிறார்கள்.

யாரிடமும் எந்த உதவியும் கோர விரும்பாத சுப்பையா அமைதியாக இருந்திருக்கிறார். அதன் விளைவாக அவர் கண்பார்வை மங்கி இறுதியில் பார்வையே போய்விட்டது. அப்போதும்கூட ஒற்றைக் கண்ணால் தன்னுடைய சுவர் விளம்பரத்தைத் தொடர்ந்திருக்கிறார். பெரியார் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் மக்களை அறியாமை அழுக்கிலிருந்து மீட்டெடுக்க அவர் கொண்டிருந்த ஆவேசமும் அளப்பரியன.

ஏன் இத்தனைப் பாடுகளையும் ஒருவர் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்? எல்லோரையும் போல வாழ எண்ணாமல் எதையாவது சமூகத்திற்குச் செய்யவேண்டும் என எண்ணுகிறார்? பெரியாரின் தத்துவார்த்த கொள்கைகளைப் பிரசாரம் செய்வதே வாழ்நாள் கடமையாகக் கருத அவரை எது உந்தித் தள்ளியது? ‘இருக்கும் வரை பிறருக்கு உதவியாகவும், இறந்தபிறகு காக்கை குருவிக்கு இரையாகவும் இருங்கள்’ என்றார் பெரியார். அதை அட்சரம் பிசகாமல் செய்ய நினைத்தவர் சுப்பையா.

அதனால்தான், மயிலாடுதுறை ரயில் பாதையில் மரித்துக் கிடந்த அவர் உடலைக் காக்கை, குருவிகள் கொத்தித் தின்றன. கழகத் தோழர்களுக்குக்கூட செய்தி தாமதமாகவே தெரிந்திருக்கிறது. தோழர்கள் தகவலறிந்து போவதற்குள் ரயில்வே நிர்வாகமே அவரை அடக்கம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 
=======================================================================
‘யுகபாரதி’யின்‘ஊஞ்சல் தேநீர்’ என்னும் தலைப்பிலான, அவரின்[குங்குமம் வார இதழில் வெளியான] தொடர் கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டது. கவிஞருக்கு நன்றி.

செவ்வாய், 23 ஜூன், 2020

சந்தைக் கடையில் கேட்ட ஒரு சமையல்காரியின் கதை!

இன்று காலை, காய்கறி அங்காடியில் கத்தரிக்காய் பொறுக்கிக் கொண்டிருந்தபோது என் காதில் விழுந்த உரையாடல் இது. கொஞ்சமும் கற்பனை கலக்காமல், கேட்டதைக் கேட்டவாறே பதிவு செய்திருக்கிறேன்.
“சரசு, உன்னைத்தான் புள்ள பார்க்கணும்னு இருந்தேன்.  நீ வேலை செய்யுற வீட்டில் எவ்வளவு சம்பளம் தர்றாங்க?” -காய்கறி வாங்க வந்த இளம் வயதுப் பெண்ணிடம் கேட்டாள் கடைக்காரி.

“பத்தாயிரம்” என்றாள் சரசு என்னும் அந்த இளசு.

“என்ன வேலை?”

“அழுக்குத் துணிகளை மிசின்ல போட்டுக் காய வைச்சுட்டு, பாத்திரம் கழுவி, வீடு துடைச்சி, எல்லாருக்கும் டிபன் செஞ்சி குடுக்கணும். அப்புறம், மத்தியானத்துக்குச்  சமைச்சு வைச்சுட்டுக் கிளம்பிடுவேன். ராத்திரிக்கு வீட்டு அம்மாவே ஏதும் செஞ்சுக்குவாங்க.”

“என் எதிர்த்த வீட்டு  மருந்துக் கடைக்காரர் வீட்டுக்கு நம்பிக்கையான வேலைக்காரி கிடைக்கலியாம். அவர் சம்சாரம் விசாரிக்கச் சொல்லிச்சி. கிழவன் கிழவி ரெண்டு பேர்தான். பசங்க பொண்ணுங்க எல்லாம் வெளியூர்ல இருக்காங்க. மாசம் பன்னிரண்டாயிரம் தருவாங்க. வந்துடேன்.” -கடைக்காரி.

“ஊஹூம்.”

“ஏண்டி, ரெண்டாயிரம் ரூபா அதிகம் வருது. மருந்துக் கடைக்காரர்  வீட்டுக் காசு கசக்குமா?”

“அதில்லம்மா. இப்ப வேலை செய்யுற வீட்டை விட்டுட மனசில்ல.”

“ஏனாம்?”

“பெரியவங்களும் சரி சிறுசுகளும் சரி, வாங்க போங்கன்னு எனக்கு மரியாதை குடுத்துத்தான் பேசுவாங்க. ரெண்டு நாள் சொல்லாம நின்னுட்டாலும் உடம்பு சுகமில்லியான்னு கேட்பாங்களே தவிர, ஏன் வரலேன்னு எரிஞ்சி விழ மாட்டாங்க. சாப்பிட்ட எச்சில் தட்டுகளைத் தண்ணியில் அலசிட்டுத்தான் கழுவ வைப்பாங்க. வீட்டு வேலையைத் தவிர வேறே வேலை எதுவும் தரமாட்டாங்க. வருசம் தவறாம சம்பளத்தையும்....”

குறுக்கிட்டாள் கடைக்காரி, “போதும்டி. வேலைக்காரிய இத்தனை கவுரவமா நடத்துற குடும்பத்தை வேற எங்கயும் பார்க்க முடியாது. நீ குடுத்து வெச்சவடி.”
=======================================================================

திங்கள், 22 ஜூன், 2020

பாதி நெருப்பில்! மீதி இருப்பில்!!

தீப்பெட்டியும் தீக்குச்சியும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் எரியும் நெருப்பை அணையாமல் பாதுகாக்க வேண்டிய தேவை மனிதனுக்கு இருந்தது.

அந்த நெருப்பை ‘அக்கினி தேவன்’ ஆக்கி, ‘ஹோமம்’ என்னும் பெயரில் நெய், சமித்து எனப்படும் குச்சிகள், அருகம்புல் போன்றவற்றை நெருப்பிலிட்டு அவனுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்லித் தம் பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டார்கள் புரோகிதர்கள். விலை மதிப்புள்ள பொருள்களில் பாதியை நெருப்பில் போட்டு மீதியைத் தம் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். இதர வருமானங்களும் உண்டு.. 

யாகங்கள் பல வகை. பிள்ளைப்பேறுக்கு யாகம். பதவி பெற யாகம். பதவியைத் தக்க வைக்க யாகம். செல்வம் கொழிக்க யாகம். நோய் குணமாக யாகம்[கொரோனா ஒழிய அண்மையில் எடியூரப்பா யாகம் நடத்தியதை நினைவுகூர்க] என்றிப்படி. எதிரிகளை ஒழிக்கக்கூட யாகம்[சத்துரு சம்ஹார யாகம்] நடத்தப்படுவடுண்டு. கொஞ்ச காலம் முன்பு நம்ம ஊர் ராஜா இந்த யாகத்தை நடத்தினார். பலன் என்னவோ பூஜ்யம்.

நெய்யையும் இதர பொருட்களையும் நெருப்பில் கொட்டி, கடவுள் பாஷை என்று கதைக்கப்படும் சமஸ்கிருதத்தில்[பிறவற்றைப் போல இதுவும் ஒரு மொழி] மந்திரங்கள் என்று எதையெதையோ ஓதுவதால் நினைப்பது நடக்குமா? குணப்படுத்துவதற்கு அரிதான நோய்கள் குணமாகுமா?

கொடுமை என்னவென்றால், புரோகிதர்களின் புரட்டு வேலைகளுக்குப் பலியாகும் கூட்டத்தில் பதவியிலிருப்போரும் மெத்தப் படித்தவர்களும்கூட இருக்கிறார்கள்.

சிரார்த்தம் செய்வது இவர்களின் பிழைப்புக்கான இன்னொரு வழி. இங்கே அர்ப்பணிப்பவை எங்கோ இருக்கும் செத்துப்போனவர்களின் வயிற்றை நிரப்பும் என்கிறார் புரோகிதர். அறிவியல் வளர்ச்சி பெற்றுவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டிலும், அவர் சொல்வதை நம்புகிறவர்களின் எண்ணிக்கை மிகப் பலவாக இருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

சமுதாயச் சீர்திருத்தவாதிகள் பலரும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது.



=======================================================================
நன்றி: ‘மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை’[அருணன்], நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.

ஞாயிறு, 21 ஜூன், 2020

‘அது’க்குக்கூடவா கடன்?!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே தளத்தில் வெளியானது இந்தச் சிரிப்புக்கதை. படித்துச் சிரித்துப் புளகாங்கிதப்பட்டவர்கள் வெறும் 60 பேர்தான். ஓர் அருமையான, புதிரும், புன்னகை பூக்கச் செய்யும் எதிர்பாராத முடிவும் கொண்ட நகைச்சுவைக் கதையை, ஆறாயிரம் அறுபதாயிரம் என்றில்லாவிட்டாலும், 600 பேராவது, கொரோனா பயத்தை ஒதுக்கி வெச்சிட்டு, வாசித்து மகிழ வேண்டும் என்னும் தர்ம சிந்தனை[ஹி...ஹி...ஹி!]யுடன் மீண்டும் பதிவு செய்கிறேன்.
ணி முடிந்து வீடு திரும்பியதும், கைலிக்கு மாறி, கைகால் அலம்பி தொ.க.முன் அமர்ந்தான் மனோகரன்.

"பைனான்ஸ்காரங்க ஃபோன் பண்ணினாங்க. தவணைத் தேதி முடிஞ்சி ரெண்டு வாரம் ஆச்சாம். இன்னிக்கிக் கண்டிப்பா பணம் கட்டணும்னு சொன்னாங்க" என்றாள் அவன் மனைவி பூர்ணிமா.

"இன்னிக்கே கட்டலேன்னா தலையை வாங்கிடுவானோ? வட்டிக்கு வட்டி போடுவான். வேறென்ன? நாலு நாள் போகட்டும். உன் வேலையைப் பாரு" என்று கடுப்படித்தான் மனோகரன்.

சமையலறைக்குள் நுழைந்து, தேனீர்க் கோப்பைகளுடன் திரும்பிய பூர்ணிமா, "தமண்ணா மளிகையிலிருந்து பையன் வந்திருந்தான். ‘ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக்கு. இன்றே பணத்துடன் வரவும்’னு செட்டியார் சீட்டு அனுப்பியிருந்தார்" என்றாள்.

"இன்னும் யாரெல்லாம் கடன்காரங்க வந்தாங்க?" -தேனீரை உறிஞ்சிக்கொண்டே கேட்டான் மனோகரன்.

"டைலர் ரவி வந்தான்......"

குறுக்கிட்டான் மனோகரன், "அவனும் இன்னிக்கே பாக்கிப்பணம் தரணும்னு சொன்னானோ?"

"ரொம்ப அவசரமா பணம் தேவைப்படுதாம்."

"தைக்கத் துணி கொடுத்தா, ஒரு வாரத்தில் தர்றேன்னு சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சிக் கொடுப்பான். கூலியை மட்டும் கறாராக் கேட்டு வாங்கிடுவான். மறுபடியும் வந்தான்னா நாலு நாள் போகட்டும்னு சொல்லிடு."

"அப்புறம்....வந்து...."

"சொல்லு."

"நெளிநெளியா தலைமுடியோட கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு ஒரு லேடி வந்தா. முப்பது வயசு மதிக்கலாம். பேரு குமுதாவாம். மேட்டுத்தெருவுல குடியிருக்காளாம். 'உன் புருஷன் ஆயிரம் ரூபா எனக்குப் பாக்கி வெச்சிருக்கான். ஒரு மாசம் ஆச்சு. நேர்ப்படும் போதெல்லாம் இதா தர்றேன்...அதா தர்றேன்னு சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிச்சிட்டே இருக்கான். இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலேன்னா நாளைக்கு வந்து அவன் மானம் மரியாதை எல்லார்த்தையும் கப்பலேத்திடுவேன்; தெருப்பூரா சிரிப்பா சிரிக்க வெச்சுடுவேன். அவன் கிட்டே சொல்லி வை’னு சொல்லிட்டுப் போனா. ஆளப் பார்த்தா ‘எதுக்கும்’ துணிஞ்சவள்னு தெரியுது."

மனோகரனின் முகம் முழுக்கக் 'குப்'பென்று  பீதி பரவியது.

சட்டையை மாட்டிக்கொண்டு  கிளம்பினான்.

"அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க?" -வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.

"அவள்கிட்ட கடன் வாங்கல; 'அது'க்குக் கடன் சொன்னேன்" என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாய் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறி விரைந்தான் மனோகரன், குமுதாவுடன் சல்லாபித்ததற்கான ஆயிரம் ரூபாய்க் கடனுக்கு மேலும் அவகாசம் கேட்பதற்காக!
========================================================================
எழுதியவர்?

வேறு யார், இந்தக் ‘கத்துக்குட்டி’ பரமசிவம்தான்!

சனி, 20 ஜூன், 2020

ஒரு ‘நிரந்தர’க் கழித்தல் கணக்கு!!!

இந்தப் பூமியின் வயசு [The age of the Earth is approximately] 4.54 ± 0.05 billion years (4.54 × 109 years ± 1%).[1][2][3][4  -Wiki] என்று விஞ்ஞானிகள் அடிச்சிவிட்டிருக்காங்க. இது இதனுடைய இப்போதைய வயசு. முழு ஆயுள் இன்னும்  அதிகம். இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம் பொதுவாச் சொல்ல மட்டும்தான்  நமக்குத் தெரியும்.

பூமியின் ஆயுசு இப்படின்னா, சூரியனுடையது இதைவிடவும் மிகப் பல மடங்கு[.....This lifespan began roughly 4.6 billion years ago, and will continue for about another 4.5 – 5.5 billionyears] அதிகமாகத்தான் இருக்கும்[கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடியுங்க... நான் சொல்ல வருகிற விசயமே வேறு]. 

சூரியனை விடவும் பலப்பல மடங்கு பெருசான நட்சத்திரங்களின் ஆயுசு இன்னும் இன்னும் இன்னும் அதிகம். இதுகளுக்கு அப்பன், முப்பாட்டன் கொள்ளுப் பாட்டன், எள்ளுப்பாட்டன் எல்லாம் இருக்காங்க. 

எல்லார்த்தையும் உள்ளடக்கிய ஒன்னுதான் 'அண்டம்'கிறான். 'பிரபஞ்சம்'கிறான். 'வெளி'[Space]யில் அவ்வப்போது நிகழ்கிற பெருவெடிப்புகள் காரணமா இதுகளெல்லாம் தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறதுகளாம்.

கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு 'முற்றுப்பெறுதல்' என்பதே இல்லை என்கிறார்கள். முற்றுப்பெறாத இம்மாதிரி நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரபஞ்ச[வெளி]த்தின்  ஆயுளோடு மனிதர்களுடைய ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்த்தா.....இவர்களுடைய ஆயுள் அற்பம்...அற்பம்...வெகு அற்பம்... அற்பத்திலும் அற்பம்[துல்லியமாகச் சொல்லத் தெரியல].

மனிதர்களின் ஆயுள் நூறு[சிலர் கூடக்குறைய வாழலாம்]. அவற்றில், தூங்கிக் கழிக்கிற 30ஐக் கழித்தால் வாழக் கொடுத்துவைத்தது 70 ஆண்டுகள்தான். அதிலும்.....

வயித்துப்பாட்டுக்கு உழைக்கிறதுக்கும், வாட்டும் நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கும், வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துறதுக்கும் என ஒரு 40 வருடங்களை ஒதுக்கிவிட்டால்  அந்த எழுபது 30 ஆகிறது.

எதிரிகளோடு போராடுவது, நம்மைவிடவும் நன்றாக வாழ்பவனைப் பார்த்துப் பொறாமைப்படுவது, ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தாலும், 'இன்னும் வேணும்...இன்னும் வேணும்'னு பேராசைப்படுவது,  காதல் கத்திரிக்காய்னு சுய சிந்தனை இழந்து திரிவது, கோயில் குளம்னு உதவாக்கறைச் சாமிகளை வேண்டிக்கொண்டு அலைவது, சாதி மத வெறியர்களால் தூண்டப்பட்டுச் சக மனிதர்களைத் தாக்குவது என்றிவ்வாறு வேண்டத்தகாத காரியங்களுக்கு என்று 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செலவு செய்யுறோம்.

இந்த இருபதையும் முப்பதிலிருந்து கழிச்சா மிஞ்சுவது பத்தே பத்துதான்.

அந்தப் பத்துக்குள்ளேதான், கல்யாணம் கட்டிக் கணவனும் மனைவியும் இன்பசுகம் துய்த்தல், குழந்தை பெற்றுக் கொஞ்சிக் குலவுதல், ஊருலகமெல்லாம் சுற்றிவந்து குதூகலித்தல், சொந்தபந்தங்களோடு அளவளாவிப் பாசத்தையும் நேசத்தையும் பகிர்ந்து மகிழ்தல் என்றிப்படியான சுகங்கள் பலவும் அடக்கம்.

பிறந்ததன் பயன் பத்தே பத்து ஆண்டு மகிழ்ச்சிதானா?

பத்து என்பதைக் கிட்டத்தட்ட எழுபது ஆக்குவது சாத்தியமா?

சாத்தியம்தான்.

‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றான் நம் பாரதி.

உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் ‘மனித நேயம்’ போற்றினால், எந்தவொரு மனிதனும் உணவின்றிச் செத்தொழியும் கொடூரம் நேராது.

அத்தனை மனிதர்களும் மனிதநேயம் போற்றினால், கொடிய நோயால் தாக்குண்டு ஆறுதல் சொல்லக்கூட நாதியில்லாம, அனாதரவாக ஒருவன் உயிர் துறக்கும் அவலநிலை மாறும்.

அத்தனை மனிதர்களும் மனிதநேயம் போற்றினால், சாதி, மதம், இனம், மொழி எனும் இவற்றால் உருவாகும் மோதல்கள் வேரறுக்கப்பட்டு, இவற்றால் நேரும் பொருளிழப்பும் உயிரிழப்பும் முற்றிலுமாய்த் தவிர்க்கப்படும்.

இவையெல்லாம் நடக்கணும்னா ஒவ்வொரு தனி மனிதனும் மனித நேயம் போற்றுபவனாக மாறணும்.

இப்போதைக்கு இது சாத்தியமே அல்ல. பின் எப்போது?

மனித இனம் அழியாமலே இருந்துகொண்டிருந்தால்.....

எப்போதாவது!?!?!
=======================================================================

வெள்ளி, 19 ஜூன், 2020

இவர்கள் மகான்களா, ‘மாயாவி’களா?!

ஞானிகள் hashtag on Twitter
நம் மக்களில், பல்லாயிரவரால் பெரிதும் மதித்துப் போற்றி வழிபடப்படுகிற சில மகான்கள்[?!?!?!] குறித்த நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன. 

இவற்றையும் இவற்றையொத்த கதைகளையும் ஊடகங்கள் பிரசுரிப்பதும், பதிப்பகத்தார் தொகுத்து நூலாக வெளியிடுவதும் இன்றளவும் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிற அக்கிரமம்.

இம்மாதிரி இட்டுக்கட்டிய கதைகளை வாசிக்கும்போதெல்லாம், இன்னும் எத்தனையெத்தனை இளிச்சவாயர்களும் கூமுட்டைகளும் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி, வேதனைப் பெருமூச்செறிபவன் நான்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கக் கற்ற பக்தர்களேனும், இவற்றை வாசிப்பதால் மனம் திருந்தக்கூடும் என்னும் நம்பிக்கையில் இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி


*அந்நாளில், ஆதோனி, ரெய்ச்சூர் பகுதிகள் சித்திக் மசூத்கான் என்கிற தளபதியின் வசம் இருந்தது. ஒரு நாள், மற்றொரு தளபதியிடமிருந்து ஓலையொன்று வந்தது. அவனுக்குத் தெரியாத மொழியில் அது எழுதப்பட்டிருந்தது. அந்த மொழியறிந்தவர் யாரும் அருகில் இல்லை. அவன் கண்ணில் சற்றுத் தொலைவிலிருந்த வெங்கண்ணா[இது ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பூர்வாசிரமப் பெயராம்] தென்பட்டான்.

“ஓலையை அவனிடம் நீட்டி, “இதைப் படித்துக்காட்டு” என்றான் மிரட்டும் தோரணையில்.

படிப்பு வாசனையில்லாத வெங்கண்ணா பயத்தால் நடுங்கினான். கடவுளைத் தியானித்தான். தன் கையிலிருந்த ஓலையை பிழையில்லாமலும் தெளிவாகவும் படித்துக் காட்டினான்.

பின்னர், நடந்த இந்த அதிசயத்தை அறிந்த நவாப் வெங்கண்ணாவைத் தன் திவானாக நியமித்தாராம்

*சாயிபாபா சீரடிக்கு வந்தபோது, ஊரின் எல்லையிலிருந்த கந்தோபா கோயிலில் தங்கிக்கொள்ள விரும்பினார்.  கோயில் பூசாரி அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும், அன்று இரவே, பூசாரியின் கனவில் தோன்றி, “மடையா, பாபா ஓர் அவதாரப் புருஷர்டா” என்று கடிந்துகொண்டாராம் கடவுள்.

விடிந்ததும் விடியாததுமாக, பாபாவைத் தேடிக் கண்டறிந்து அவரிடம் மன்னிப்புக் கோரினாராம் பூசாரி.

*பாம்பன் சுவாமிகள் திருமணம் புரிந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றவர்[இரண்டு ஆண், ஒரு பெண்]. இருப்பினும், அவரின் மனம் பெரிதும் துறவறத்தையே விரும்பியது.

ஒரு முறை தன் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், “நாளை நான் பழனிக்குச் செல்கிறேன்” என்றார். “பழனிக்கு வருமாறு முருகன் கட்டளையிட்டிருக்கிறாரோ?” என்று நக்கலாகக் கேட்டார் நண்பர். “ஆம்” என்றார் சுவாமிகள்.

இதையறிந்த முருகப்பெருமான், “என் கட்டளை என்று நீ பொய் சொன்னதால், நானே கட்டளையிடும்வரை நீ பழனிக்கு வரக்கூடாது’ என்று முருகனே[அசரீரியாக?] கட்டளையிட்டுவிட்டாராம்.

*சேஷாத்ரி சாமி 1870ஆம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே கிருஷ்ண பக்தர்.

“நான் நைஷ்டிக பிரமச்சாரி[?]. உபாசகன்” என்று சொல்லிக்கொண்டார். கால நேரம் பார்க்காமல் தியானத்தில் மூழ்கிவிடுவார். இரவு நேரங்களில் மயானத்திற்குச் சென்று தியானம் செய்வதும் உண்டு.

தினமும் மூன்று முறை குளிப்பதோடு, உடம்பில் அசுத்தம் ஏற்பட்டுவிட்டதென்று அடிக்கடி குளிப்பாராம். ஊரார் ‘நீர்க்காக்கை’ என்று பட்டப்பெயர் சூட்டி, இவரின் அன்றாட நடவடிக்கையை வேடிக்கை பார்த்தார்கள்.

இவரால் உண்டான அவமானங்களைப் பொறாமல், இவரின் தம்பி ஒரு நாள் இவரை ஓர் அறையில் தள்ளிப் பூட்டி வைத்தார். சில மணி நேரம் கழித்து கதவைத் திறந்து பார்த்தபோது சாமி மாயமாய் மறைந்துவிட்டிருந்தாராம்.

சில மாதங்கள் கழித்து, மாமண்டூர் கிராமத்தில், பஞ்சபாண்டவர் குகையில் இவர் தவக்கோலம் பூண்டிருப்பது கண்டு பிரமித்தாராம். இதையறிந்த ஊர் மக்கள்  இவர் ஓர் அவதார புருஷன் என்பதறிந்து போற்றினார்களாம்.

*குருஞான சம்பந்தர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் செர்ந்தவர். திருவாரூரில் இருந்த ஞானப்பிரகாசர் என்னும் அருளாளரைத் தன் குருவாக ஏற்றவர்.

ஒரு நாள் குருவானவர் அர்த்தஜாம பூஜை செய்துகொண்டிருந்தார்.

பணியாள் இல்லாததால், குருஞானசம்பந்தனே தீபம் ஏந்தி நின்றார். குரு தம் இல்லம் நோக்கிப் புறப்பட்டவுடன் இவரும் பின்தொடர்ந்தார்.

இல்லத்தை அடைந்தவுடன், “நீ இங்கேயே நில்” என்று சொல்லிவிட்டுக் குரு உள்ளே சென்றுவிட்டார்.

தீபம் ஏந்திய கோலத்தில் குருஞானசம்பந்தன் நின்ற இடத்தைவிட்டு அசையாமல் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்.

எதிர்பாராமல் மழை பெய்ய ஆரம்பித்தது. அது கன மழையாக மாறி இரவெல்லாம் கொட்டிக்கொண்டே இருந்தது. சம்பந்தனோ நின்ற இடத்தைவிட்டு நகரவேயில்லை. அவர் ஏந்தியிருந்த தீபம் அணையாமல் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டே இருந்ததாம்.

*தாமல் என்னும் பெரியவரும் அவர் மனைவியும் குழந்தை இல்லாத ஏக்கத்துடன் வாழ்ந்துவந்தனர்.

ஒரு நந்தவனத்தில் அனாதையாகக் கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்தார்கள். அதற்குக் ‘கபீர்’ என்று பெயரிட்டு வளர்த்தார்கள். அவன், குழந்தைப் பருவத்திலிருந்தே கருணை உள்ளத்துடன் வளர்ந்தான்.

ஒரு நாள், ஒரு பட்டுத் துண்டைக் கபீரிடம் கொடுத்து அதைச் சந்தையில் விற்றுவருமாறு சொன்னார்.

சந்தைக்குச் சென்ற கபீர், அங்கே ஓர் ஏழை அந்தணன் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரின் வேண்டுகோளின்படி, தான் வைத்திருந்த பட்டுத் துணியால் அவரின் காதுகளை மூடி, தலையில் சுற்றிவிட்டு வந்தான்.

வெறுங்கையுடன் வீடுவந்த கபீரிடம் விசாரித்த தாமல், கையில் பிரம்புடன் கபீரையும் இழுத்துக்கொண்டு சந்தைக்குப் போனார்.

தலையில் பட்டுத் துண்டுடன் இருந்த அந்தணனிடம் நடந்ததை விசாரித்து அறிந்துகொண்டு, கையிலிருந்த பிரம்பால் கபீரின் முதுகில் ஓங்கி ஓங்கி அடித்தார்.

இதை கவனித்த அந்தணர், “ஹரே ராம்...ஹரே ராம்” என்று ஓங்கிய குரலில் அலறினார்.

கபீருக்குப் பதிலாக, சந்தையிலிருந்த அத்தனை பேரும் அலறினார்கள். சாட்டையடி அத்தனை பேருக்கும் உறைத்ததுதான் காரணம்[பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வந்ததா?].

“ராம்...ராம்” என்று சொல்லிக்கொண்டே பிராமணர் அங்கிருந்து அகல, ராமபிரான் அருளால்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதை அறிந்த தாமலும் கபீரும் “ராம்...ராம்” என்று சொல்லிக்கொண்டே வீடு திரும்பினார்கள்.

கபீர் ஒரு முஸ்லீம் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

இந்தக் கபீர் வேறு யாருமல்ல, மகான் என்று மக்களால் போற்றப்படும் கபீர்தாசர்தான்!

*கல்வி கற்காமல் இளம் பருவத்தை வீணாகக் கழித்தவர் ராமலிங்கம். 

தன் சகோதரர் சபாபதியிடம், கல்வி கற்பதற்குத் தனக்குத் தனி அறை ஒதுக்குமாறு கேட்டார். சபாபதியும் ஏற்பாடு செய்தார்.

அறையில் விளக்கேற்றி, ஒரு கண்ணாடியைச் சுவரில் மாட்டி, அதற்கு மாலை சூட்டி இமை கொட்டாமல் அதையே உற்று நோக்கினார் ராமலிங்கம். சற்று நேரத்தில் அதில் முருகப்பெருமானின் உருவம் தெரிந்தது. அன்று முதல் அத்திருவுருவத்தை வழிபடலானார். முருகனின் அருளால் கல்வியறிவைப் பெற்றார்.

இம்மாதிரிக் கதைகள் ஏராளம் உள்ளன. இவற்றிற்குக் கூடுதல் விமர்சனம் எழுதினால், அது மிக மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதால் தவிர்க்கிறேன். பதிவின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
=======================================================================
நன்றி: ‘சிறந்த சித்தர்கள், ஞானிகள், மகான்களை அறிந்துகொள்ளுங்கள்’, மணிமேகலைப் பிரசுரம், பதிப்பு ஆண்டு 2000.


வியாழன், 18 ஜூன், 2020

‘சிகரங்கள்’...கதையின் தலைப்பு ‘பழசு’! ‘கரு’...புத்தம் புதுசு!!

கிஞ்சித்தும் கவர்ச்சி சேர்க்கப்படவில்லை; ‘கலகல’ உரையாடல் இல்லை; சிலிர்ப்பூட்டும் வர்ணனை இல்லை; எதிர்பாராத முடிவுகூட இல்லை. ஆனாலும், இது கதைதான்; ‘நல்ல’ கதையும்கூட.!


கதைத் தலைப்பு:                         ‘சிகரங்கள்’

காந்திநேசன், அன்று காலை தான் வகித்துவந்த ‘முதல்வர்’ பதவியை உதறித் தள்ளினார். மாலையில்  வீடு திரும்பினார்.

வீட்டிற்குள் நுழையும்போதே, அவர் மகன் சத்தியன், “ஏம்ப்பா வயசான காலத்தில் உங்களுக்கு இப்படிப் புத்தி போகுது?” என்று கேட்டு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.

மனைவி மெய்யம்மை அவள் பங்குக்கு, “உங்களுக்குப் பித்தம் தலைக்கேறிடிச்சா?” என்று கடிந்துகொண்டாள்.

‘உட்கார்ந்து பேசுவோம்’ என்பது போல, சாய்வு நாற்காலியில் சரிந்தார் காந்திநேசன்.

மகனையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார். இருவரும் சண்டைக் கோழிகளாய்த் தெரிந்தார்கள். “நேரே விசயத்துக்கு வரலாம்” என்றார்.

“நீங்க வேலையை ராஜினாமா பண்ணிட்டதா உங்க கல்லூரிக் கணிதப் பேராசிரியர் கணேசன் தொலைபேசியில் சொன்னார். ஏன் அப்படிச் செஞ்சீங்க?” -சத்தியன் கணை தொடுத்தான்.

“காரணத்தையும் அவரே சொல்லியிருப்பாரே?”

“சொன்னார். இத்தனை காலமும் தகுதி அடிப்படையில் நீங்கள் மாணவர்களச் சேர்த்தீங்களாம். இந்த ஆண்டு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரணும்னு புதிய நிர்வாகி உங்களுக்கு உத்தரவு போட்டாராம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லையாம். அவரோட சண்டை போட்டீங்களாம். பதவியை உதறித் தள்ளிட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களாம்.” -சத்தியன் குரலில் எகத்தாளம். 

“அவரே எல்லாம் சொல்லிட்டார். அப்புறம் எதுக்கு என்னிடம் அனாவசியக் கேள்வி?”

“கல்யாணத்துக்கு ஒரு மகள் காத்திருக்கிறது ஞாபகம் வந்து ராஜினாமாவை வாபஸ் வாங்கிட மாட்டீங்களான்னு ஒரு நப்பாசைதான்” என்றாள் அவரின் மனைவி மெய்யம்மை குத்தலாக.

“பதவியில் நேர்மையைக் கடைபிடிப்பது என் கொள்கை. எதுக்காகவும் அதை விட்டுக்கொடுத்துப் பழக்கமில்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் காந்திநேசன்.

“பெத்த மகன் தனியார் கம்பெனியில் அற்பமான சம்பளத்துக்கு நாயாய்ப் பேயாய் அலையுறான். சின்னதா ஒரு தொழில் தொடங்கப் பத்து லட்சம் கேட்குறான். திரட்டித் தர வக்கில்ல. வீட்டுமனை வாங்கிப்போட்டு நாலு வருசம் ஆகிப்போச்சு. ஒரு வீடு கட்ட யோக்கியதை இல்ல. உங்க சிநேகிதர்  சிதம்பரம் பள்ளிக்கூட வாத்தியார். வேலையையும் பார்த்துகிட்டே டியூசன் நடத்துறது, கல்வித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து வாத்தியார்களுக்கு மாறுதல் வாங்கித் தர்றது, விடைத்தாளில் தில்லுமுல்லு பண்றதுன்னு ஏதேதோ செஞ்சி ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சுட்டார். நீங்கதான் நேர்மை நியாம்னு சம்பளம் மட்டுமே வாங்கிட்டு இருக்கீங்க.” -பொரிந்தாள் மெய்யம்மை.

சத்தியன் வரிந்து கட்டினான்: “அப்பா, தெரியாமத்தான் கேட்குறேன், உங்கள மாதிரி இளிச்சவாயனுங்க நாட்டுல எத்தனை பேர் தேறுவாங்க?” என்றான்.

“எனக்குத் தெரியாதுப்பா.”

“நேர்மையா வாழ்ந்து நீங்க சாதிச்சது என்ன? ஒன்னுமில்ல. சம்பாதிச்சது எவ்வளவு? வெறும் சம்பளம்தான். எதுக்காக நேர்மையைக் கட்டிகிட்டு அழறீங்க? ஊர் உலகம் பாராட்டணும்னா?” 

“இல்ல.”

“அரசாங்கம் உங்க நேர்மையை மெச்சி, உத்தமர், சத்தியர்னு பட்டம் கொடுக்கும்னு எதிர்பார்க்கிறீங்களா?’

“இல்லப்பா.”

“பாவம் புண்ணியம்னு.....”

“இல்லவே இல்ல.”

“பின்ன ஏம்பா நேர்மை நியாயம்னு கிடந்து சாகறீங்க?” -ஆத்திரம் பொங்கக் கூச்சலிட்டான் சத்தியன்.

கொஞ்சமும் நிதானம் இழக்காமல் காந்திநேசன் சொன்னார்: “ஊருலகத்தைப் பத்திக் கவலைப்படாம, பலாபலன்களை எதிர்பார்க்காம நேர்மையா வாழுறவங்க இன்னிக்கும் இருக்கத்தான் செய்யுறாங்க. அவர்களால ஈர்க்கப்பட்டு நேர்மையா வாழ்க்கை நடத்துறவங்களும் இருக்கவே செய்யுறாங்க. நான் இரண்டாம் வகை.” -பெருமிதத்துடன் புன்னகைத்துக்கொண்ட காந்திநேசன், தொடர்ந்தார்.

“இந்தக் கல்லூரிக்கு நான் வேலை தேடிப் போனபோது, அப்போதிருந்த கல்லூரி நிர்வாகி, தன் சொந்தபந்தங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, தகுதி அடிப்படையில் எனக்கு விரிவுரையாளர் வேலை கொடுத்தார். உண்மையா உழைச்சேன். அனுபவ அடிப்படையில் கல்லூரி முதல்வராகவும் ஆனேன்.....

.....மாணவர் சேர்க்கையிலும், தேர்வுகள் நடத்துவதிலும் நேர்மையைக் கடைபிடிச்சேன். நிர்வாகி அதற்கு முழு ஆதரவு தந்தார். அவருக்கப்புறம் பொறுப்புக்கு வந்த அவரின் மகன், வழக்கமா வர்ற வருமானம் போதாதுன்னு, மாணவர் சேர்க்கையில் நன்கொடைங்கிற பேரில் லஞ்சம் வாங்கச் சொன்னார். எனக்கு விருப்பம் இல்ல. அவரைப் பகைச்சுகிட்டுப் பதவியில் நீடிப்பது முடியாதுன்னு தெரிஞ்சுது. விலகிட்டேன். இதே ஊரில் உள்ள இன்னொரு கல்லூரி நிர்வாகி, அவர் கல்லூரிக்கு என்னை முதல்வராக்க விருப்பம் தெரிவிச்சிருக்கார். அவர் என் மாணவர். நேர்மை வாழும்; வாழவைக்கும்.”

கண்மூடி மவுனத்தில் ஆழ்ந்தார் காந்திநேசன்.
=======================================================================

புதன், 17 ஜூன், 2020

நடந்தது ‘தன்வந்திரி’ யாகம்! முடிந்தது கரோனாவின் கதை!!

#செய்திப்பிரிவு
Published : 17 Jun 2020 07:23 am
Updated : 17 Jun 2020 07:23 am
கரோனா ஒழிய தன்வந்திரி யாகம் நடத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா
dhanvandhiri-yaga-for-corona
பெங்களூரு: இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் கரோனா வைரஸ் ஒழிய மகா தன்வந்திரி யாகம் நடத்தினார். சிருங்கேரியை சேர்ந்த புரோகிதர்கள் மந்திரங்களை ஓத எடியூரப்பா பூக்களைத் தூவியும், தீபாராதனை காட்டியும் வேண்டிக் கொண்டார்.

இதுகுறித்து ஒரு புரோகிதர்கள் கூறுகையில், “உலகத்தைக் காக்கவும், உலக நன்மைக்காகவும், கரோனா வைரஸ் ஒழியவும் இந்த மகா தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கரோனா கொள்ளை நோய் ஒழிந்து உலகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் நன்மை உண்டாகும். எடியூரப்பாவுக்கு ஆன்மீக நம்பிக்கை இருப்பதால் அவர் பங்கேற்றார்” என்று தெரிவித்தனர்#

இன்றைய[17.06.2020] ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தி இது.

அதென்ன ‘தன்வந்திரி’?

முன்னொரு யுகத்தில், பாற்கடல் கடையப்பட்டபோது, கிருஷ்ண பரமாத்மா புதுசா ஒரு அவதாரம்[இது தசாவதாரத்தில் அடங்காது] எடுத்து அமுதக் கலசத்தோட வெளிப்பட்டாராம். அந்த அவதாரம்தான் தன்வந்திரி[விக்கிப்பீடியா].

அசுரர்களுடன் நடந்த போரில் தோற்று, மனம் நொந்து நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தேவர்களுக்கு அமுதம் வழங்கிக் குணப்படுத்தினாராம் தன்வந்திரி[மோகினியாய் ஆட்டம் போட்டு அரக்கர்களை மயக்கி அமுதம் தராமல் ஏமாற்றியது தனிக்கதை]. அன்றிலிருந்து தேவர்களின் வைத்தியர் என்று அழைக்கப்பட்டாராம்.

இவரைத் தேவலோகத்திலிருந்து நாம் வாழும் பூமிக்கு வரவழைக்கத்தான் இந்தத் தன்வந்திரி யாகம்.

தன்வந்திரியார் தயவில் கரோனா பூண்டோடு அழிக்கப்பட்டுவிடுமா?. ஆள்வோரும், அதிகாரிகளும், மருத்துவர்களும், பிற துறைகளைச் சார்ந்தவர்களும் கொரோனாவை ஒழிப்பதற்கான அவசரகால நடவடிக்கைகளைக் கைவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடலாமா?

“ஆம்” என்று சொல்ல ஆசைதான். இருக்கிற கொஞ்சம் பகுத்தறிவு தடுக்கிறது.

மக்கள் ஆளாளுக்கு ஏதோவொரு தொழில் செய்து பிழைக்கிறார்கள். இல்லாத கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துகிற இந்தப் புரோகிதர்களுக்கு, உலகில் அசம்பாவிதங்கள் நேரும்போதெல்லாம் இம்மாதிரி யாகங்கள் நடத்துவது ஓர் உபதொழில்.

இந்த யாகத்தை நடத்துவித்தவர் கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பா. மூடநம்பிக்கைகளைப் போற்றிப் பாதுகாப்பதிலும் முதல்வராக இருக்கிறார்.

எடியூரப்பா அவர்களே, 

கரோனா தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. ஓய்வின்றி உழைக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். புரோகிதர்களுடன் இணைந்து, யாகம் வைபோகமெல்லாம் நடத்தி உங்களின் நேரத்தை இனியும் வீணாக்காதீர்கள்.

‘நேரம் பொன் போன்றது’ என்னும் வழக்கை நீங்கள் அறியாதவரா என்ன?
dhanvandhiri-yaga-for-corona
நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்

செவ்வாய், 16 ஜூன், 2020

பக்தகோடிகளுக்கு என் பணிவான வேண்டுகோள்!

இந்த உலகில் பிறந்து வாழும் மானுடர்களாகிய நாம் அனுபவிப்பது இன்பம் மட்டுமல்ல, துன்பமும்தான்.

இவற்றில் எது அதிகம்?

நடுநிலை உணர்வுடன் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்ததுண்டா?

கருணைக் கடலான உங்கள் கடவுள் நிகழ்த்திய அற்புதங்களை நெஞ்சுருகச் சொல்லிச் சொல்லி, ஆனந்தப்படுவதற்கும், அவன் பெருமைகளை வியந்து துதி பாடுவதற்கும், விழாக்கள் நடத்திக் குதூகளிப்பதற்குமே உங்களுக்கு நேரம் போதவில்லை. இதற்கெல்லாம் ஏது நேரம்?!

இப்போதேனும் சிந்தியுங்கள்.

மனிதர்கள் அதிகம் அனுபவிப்பது இன்பத்தையா, துன்பத்தையா?[அவரவர் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தைப் பொருத்தது என்று கதை விடவேண்டாம்]. கண்ணால் காணும் நடைமுறை வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து ஒரு ‘முடிவு’ காணுங்கள்.

இயற்கை அழகை அனுபவிப்பது இன்பம். அது எழுப்பும் இன்னோசைகளைக் கேட்பது இன்பம். உண்பது இன்பம். உறங்குவது இன்பம். நறுமணங்களை நுகர்வது இன்பம். ஆண் பெண் இணைவது மகத்தான இன்பம். மழலைச் செல்வங்களைத் தழுவுவது அலுக்காத இன்பம். இவை அனைத்திற்கும் மேலாக.....

உள்ளம் உருக, உடம்பு சிலிர்க்க, நா தழுதழுக்க ‘அவன்’ கருணையை நாளெல்லாம் பாடிப் பாடிப் பரவசப்பட்டுப் பெறுவது ‘பேரின்பம்!

இப்படி நீங்கள் இடும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றியும் சிந்தியுங்கள்.

பிறந்ததிலிருந்து இறக்கும்வரை, நோய், வறுமை, பகைமை, இயற்கைச் சீற்றங்கள் என்றிவற்றால், நாம் நம் புலன்களால் அறிந்தும் உணர்ந்தும் பெறும் துன்பங்கள் அளவிடற்கரியவை. நமக்கு வாய்த்துள்ள அறிவைப் பயன்படுத்தி இவற்றை ஓரளவு தவிர்க்கலாம்; ‘இவ்வகைத் துன்பம் இனி இல்லை' என்னும் நிலைமையை உருவாக்குவது எக்காலத்தும் சாத்தியப்படாத ஒன்று.

எத்தனை முயன்றாலும் தவிர்க்கவே இயலாத துன்பங்களும் உள.

பிறத்தலும், வாழ்தலும், இறப்புக்குள்ளாதலும் ஏன்?

இறப்புக்குப் பின்னர் என்னவாகிறோம்?

சிந்திக்க வைக்கிற அறிவு வாய்த்திருப்பினும், எத்தனை சிந்தித்தாலும் இவை போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறிய இயலாத குறைபாட்டுடன் நாம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்?

இக்கேள்விகளுக்கான பதில்களைப் பெறாமலே நாம் செத்துவிடப் போகிறோம் என்று மனம் கலங்குவது, வாழ்நாள் முழுக்க நம்மை வாட்டி வதைக்கிற மிகக் கொடிய துன்பமாகும். 

ஆக, இவ்வாறான துன்பங்களை நாம் அனுபவித்து வாழ நேர்ந்தது இயற்கை நெறி எனின், குறைபட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. புதிர்கள் நிறைந்த அந்த இயற்கை நெறி குறித்து மனித இனம் அழியாமல் இருக்கும்வரை ஆராயலாம். அது எக்காலத்தும் முற்றுப் பெறாத ஓர் ஆய்வாகவே இருத்தல்கூடும்.

'எல்லாம் இறைவன் செயல். இன்பங்களுடனும் பெரும் துன்பங்களுடனும் மனிதர்களை அவன் வாழப் பணித்ததற்கான காரணத்தை அவனே அறிவான்' என்று சொல்லி, இயற்கை அமைவுகள் குறித்தும், கடவுளின் இருப்பு குறித்தும் நிகழ்த்தப்படும் ஆய்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள் மனித இனத்தின் எதிரிகள்; துரோகிகள்!
கோவை எம் தங்கவேல்: 2018
=======================================================================