//“நான் அவளை(அம்பிகை)த் தேடிப் போகவில்லை. அவள்தான் என்னை கூட்டிச்செல்கிறாள். அவள் சொல்கிறாள், நான் செய்கிறேன். “வாழ்க்கையில் நீ எல்லாவற்றையும் பார்த்துவிட்டாய். இனிமேல் எனக்குச் சேவை செய்யத்தான் நீ” என்று கூறினாராம் அம்பிகை. அதிலிருந்து கடவுளுக்குச் சேவை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம் நளினி[நடிகை].
நளினி அதிகாலையில் கண்விழித்துவிடுவாராம். அப்படியே தூங்கினாலும் “நான் இருட்டில் இருக்கிறேன், வந்து விளக்கேற்று” என்று அம்மன்[அம்பிகை] எழுப்பிவிடுவாளாம். நளினி எழுந்து விளக்கேற்றிவிட்டு, 10 நிமிடம் பிரபஞ்சத்திடம் பேசுவாராம்// - இது ‘ராணி’ வார இதழில் வெளியான அபூர்வச் செய்தி*
இப்படியொரு அதிசயப் பிறவியை இந்நாள்வரை இந்த உலகம் கண்டதில்லை.
“இனி எனக்குச் சேவை செய்யத்தான் நீ” என்றாராம் அம்பிகை. அவள் நளினியின் கண் எதிரே தோன்றியா, அசரீரியாகவா எப்படிப் பேசினார் என்பதையும், என்ன மொழியில் பேசினார் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை. இது ஒரு பொருட்டல்ல.
ஒரு பெண் கடவுள் ஒரு பெண்ணிடம் நேரிடையாக வேண்டுகோள் வைத்தது இதுவரை நிகழாததொரு பேரதிசயம் ஆகும்.
அருள்மிகு அம்மன், நளினியைத் தன் பூங்கரத்தால் தொட்டு எழுப்புவதை நினைவுகூரும்போதெல்லாம் நம் ஒட்டுமொத்த மேனியும் சிலிர்க்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ‘நளினி அன்னை’ 10 நிமிடம் பிரபஞ்சத்துடன் பேசுவதாகத் திருவாய் மலர்ந்திருப்பது நம்மைப் மீள இயலாத பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
பிரமிப்பிலிருந்து அரைகுறையாய் விடுபட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் மிகப் பணிவுடன் நாம் முன்வைக்கும் கோரிக்கை:
முதல்வர் அவர்களே,
உடனடியாக, தெய்வத்திரு நளினித் தாயை நம் பிரதமர் மோடியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துங்கள்.
மண்ணுலக உயிர்களுக்கு அயராது தொண்டு செய்வதற்கென்றே கடவுளால் அனுப்பிவைக்கப்பட்ட அவர், தலைநகரிலேயே அன்னை நளினிக்குக் கோயில் எழுப்பி, அவரை அங்கே எழுந்தருளச் செய்து[அயோத்தியில் பாலராமரை எழுந்தருளச் செய்தது போல], உலகறிய ஒரு பெரும் விழா நடத்திச் சிறப்பிப்பார் என்பது உறுதி.
போற்றி போற்றி! நளினி அன்னை போற்றி!! வளர்க பக்தி!!!
* * * * *
*https://www.ranionline.com/top-stories/this-is-the-reason-i-am-alive-actress-nalini-7377