எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 29 அக்டோபர், 2021

மக்களை வதைக்கும் மதவாதிகளும் வருந்தும் நீதியரசரும்!


மத நம்பிக்கைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது; விழாக்காலங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிவைத்துக்கொண்டு அதிக ஒலி எழுப்பி, மதச் சார்பற்றவர்களின் மன நிம்மதிக்குப் பங்கம் விளைவிப்பது; 'சுவாமி ஊர்வலம்' என்னும் பெயரில் அத்தியாவசியப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வது; அரசின் சட்டதிட்ட விதிகளை மீறுவதையே வழக்கமாக்கிகொள்வது என்றிவ்வாறான மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்டித்துக் குரல் எழுப்புவதற்கு மாறாக, 'நமக்கென்ன' என்று கண்டும் காணாமல் இருப்பது நம் எல்லோருக்குமே குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட கோழைத்தனம் ஆகும்.. 

இந்த அவல நிலைக்கிடையே.....

நீதிநெறிகளைக் கட்டிக் காப்பதையே தம் கடமையாகக் கொண்டிருக்கும் நீதியரசர் ஒருவர், மத அமைப்புகளின் மேற்கண்டவாறான  விரும்பத்தகாத செயல்பாடுகளைக் கண்டித்துள்ளார் என்னும் செய்தி நம் செவிகளில் தித்திக்கும் தேனைப் பாய்ச்சுவதாகும்.

போற்றுதலுக்குரிய அந்த நீதியரசர்.....

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள்.

மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை  எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழகத் தலைமைச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவு ஒன்றில், அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலான சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

'மத வழிபாட்டுத் தலங்களின் இடையூறுகளால் ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை' என்று தம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரோட்டில், உரிய அனுமதி பெறாமல் கட்டிய  தேவாலயத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு தொப்பம்பாளையம் பெந்தக்கோஸ்த் மிஷன் சர்ச் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு, தம்மிடம் விசாரணைக்கு வந்தபோதுதான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்ததோடு வருந்தவும் செய்திருக்கிறார் நீதியரசர் அவர்கள்.

============================================================================

 https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=715929       -2021-10-28@ 17:03:12