அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 28 ஜூன், 2011

கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி

                                                 கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி


கடவுளே,


கடந்த ஒரு வினாடி வரை உம்மை நாம் நம்பியதில்லை.


’நீர் எப்படித் தோன்றினீர்? உம்முடைய தோற்றம் எப்போது, எவ்விடத்தில்,
எவ்வாறு நிகழ்ந்தது என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, விடை தெரியாத நிலையில்....................................................

ஆன்மிகவாதிகள் தரும் உம்மைப் பற்றிய விளக்கங்கள் வெறும்
அனுமானங்களே தவிர, அறிவு பூர்வமானவை அல்ல என்ற காரணத்தால்..........

நீர் ‘இருப்பதாக’ நாம் ஒப்புக் கொண்டதும் இல்லை. இருப்பினும்.............................

ஆன்மிகவாதிகள் எம் போன்றவர்கள் மீது வீசுகிற சில கேள்விக் கணைகளை எம்மால் புறம் தள்ள முடியவில்லை.

அவை............................

“ஏன், எப்படி.....என்பன போன்ற கேள்விகள் கிடக்கட்டும், உன் கண் முன்னால்
கோள்களும் நட்சத்திரங்களும் எல்லையில்லாத பெரு வெளியில் இறைந்து
கிடப்பதையும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறாய். இவையெல்லாம்
பொய்; மாயை என்கிறாயா? இல்லையே. ‘உண்மை’ என ஒப்புக் கொள்கிறாய்தானே?

நீ இருப்பது; நாம் இருப்பது; நாம் இயங்குவது.............எல்லாம் உண்மைதானே?

உனக்கு ஆறாவது அறிவு இருப்பதை நம்புகிறாய்.

 அந்த அறிவைக் கொண்டுதான் சிந்திக்கிறாய்.

கடவுளைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கிறாயே, எல்லாம் அந்த ஆறாவது அறிவு இருப்பதால்தானே?

இந்த அறிவு ‘உண்மையானது’ என்பதை நீ மறுக்க முடியாது.

ஆனால், ஓர் உண்மையையும் நீ மறந்துவிடக் கூடாது.

உனக்கு வாய்த்திருக்கிற இந்த அறிவு நிரந்தரமானது அல்ல; அழியக் கூடியது.

அழியக் கூடிய இந்த அறிவு தானாகத் தோன்றியிருக்க முடியாது; இதைத் 
தோற்றுவிக்க இதைவிட ஆற்றல் வாய்ந்த ஓர் அறிவு தேவை.

 விவரிப்புக்கு அடங்காத அந்தப் ‘பேரறிவைத்தான் ‘கடவுள்’ என்கிறோம்.

அந்த அறிவு எப்படித் தோன்றியது என்ற கேள்வி அவசியமற்றது. ஏனென்றால்...

கோள்கள் இருப்பது போல, நீ இருப்பது போல, நாம் இருப்பது போல, நமக்கு
ஆறாவது அறிவு இருப்பது போல நம் அறிவுக்கும் மேலான ஓர் அறிவு 
இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்”.

கடவுளே,

இவ்வாறாக எழுப்பப்படுகிற கேள்விகளை எம்மால் அலட்சியப் படுத்த
முடியவில்லை என்பது உண்மைதான்.

ஐம்புலன்கள் இல்லாமல் நீர் எப்படிப் பார்க்கிறீர், கேட்கிறீர்......என்பன போன்ற    
எத்தனயோ கேள்விகளை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு.........................

நீர் ஒருவர் ‘இருக்கிறீர்’ என்று தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு..........................

உம்மிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

இந்தப் பிரபஞ்சம், எந்தவொரு அளவுகோலும் கொண்டு அளந்து அறிய
முடியாதது; நீளம், அகலம்,மேல்,கீழ் மையப்புள்ளி என்று எதுவுமே இல்லாதது; விளிம்பு நிலை அற்றது என்பதை எல்லாம் நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.

இந்தப் பிரமிக்கத் தக்க.......................................................................................

கற்பனக்கு எட்டவே எட்டாத..........................................................................

பிரபஞ்ச வெளிக்கு நீர் ஒரே ஒரு கடவுள்தானா?

நீர் கடவுளாக இருந்தாலும் உம்மாலும் கணிக்கவே இயலாத....அளந்தறியவே இயலாத அனைத்து அண்டங்களுக்கும் நீர் ஒருவர்தான் கடவுள் என்று உம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

உம்மைப் போல இன்னும் எத்தனை கடவுள் இருந்தால், முழுமை பெறாத பிரபஞ்ச வெளியைக் கட்டி ஆள்வது சாத்தியமாகும்?


கடவுள்கள் பலர் என்றால், உங்களுக்குள் ஆதிக்கப் போட்டி வருமே?

போட்டியை எப்படித் தவிர்த்தீர்கள்?

சமரசமா? இல்லை, சமர் புரிந்து மற்றவர்களை அழித்துவிட்டு நீர் மட்டுமே அனைத்தையும் ஆள்கிறீரா?

பிரபஞ்சப் பரப்பையே அளந்தறிய முடியாத போது கடவுளரின்
எண்ணிக்கையையும் கணக்கிட முடியாதே?

கடவுளே,

கேள்விமேல் கேள்விகளை அடுக்கி உம்மை நோகடிப்பதோ, இழிவு படுத்து
வதோ எம் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.


நீர் எமக்குத் தந்த பகுத்தறிவு இவ்வாறு கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.
அதைத் தடுக்க இயலவில்லையே ஐயா.

கேள்விகள் கேட்பதுகூடக் குற்றமா கடவுளே?

நீர் இருப்பது உண்மையானால், எல்லாம் வல்லவரான உம்மை இந்தக் கேள்விகள் களங்கப் படுத்திவிடுமா!?

ஓ.....கடவுளே,

இன்னும் உம்மிடம் கேட்பதற்குக் கேள்விகள் உள்ளன. அவற்றை இப்போதே முன் வைக்க நாம் விரும்பவில்லை.

இந்த ஒரு கேள்விக்கு நீர் பதில் தந்தால் போதும்.

அற்ப மனிதனான எம்மை மதித்து நீர் எம்முடன் தொடர்பு கொள்ள மாட்டீர்
என்பது எமக்குத் தெரியும்.

சரியான பதிலை உம்முடைய ‘அவதாரங்கள்’ மூலமாக அனைத்து மக்களும் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தும்.

உமது பதில் எமக்கு முழுத் திருப்தி அளித்தால் உம்மை நாம் நிரந்தரமாகஏற்றுக் கொள்வோம். கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எம் ஐயனே.

**********************************************************************************
**********************************************************************************

















திங்கள், 20 ஜூன், 2011

கடவுளின் ஓர வஞ்சனை

                                          கடவுளின் ஓர வஞ்சனை


மனிதர்களால் நம்பப்படும் விதியில் ’இரண்டு வகை’ உள்ளது.

ஒன்று ’தீய விதி’. இன்னொன்று ’நல்ல விதி’

உயிர்களுக்குத் தீமை பயப்பது தீய விதி; நன்மை பயப்பது நல்ல விதி.

உயிருள்ள.....உயிரற்ற அனைத்தையும் இயக்குவது இந்த விதி[கள்]தான். அதாவது , கடவுளே நல்ல விதி மூலம் உயிர்களுக்கு நன்மையையும், தீய விதி மூலம் தீமையும் செய்கிறார். [பக்தர்கள் முகம் சுழிக்க வேண்டாம்]

இதோடு நில்லாமல் உயிர்களுக்குச் ‘சுய அறிவும்’ கொடுத்திருக்கிறார்.

சுய அறிவு என்பது, உயிர்கள் ‘தன்னிச்சையாய்’ச் செயல்பட உதவுவது.


உயிர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடவுள், உயிர்கள் சுயமாகச் செயல்படுவதற்கான அறிவை ஏன் கொடுத்தார்?

தம் விதியையும் உயிர்களின் மதியையும் மோத விடுவதற்குத்தானே?


அந்த மோதலில், உயிர்கள் படும் பாட்டை.....துன்பங்களை.....துயரங்களை.........
அடையும் வேதனைகளைக் கண்டு ரசிக்கத்தானே?

வேறென்ன காரணம்.....காரணங்கள்? சொல்லுங்களேன்.

“இதெல்லாம் கடவுளின் விளையாட்டு. இந்த விளையாட்டில் உயிர்கள் இன்பம் துன்பம் இரண்டுமே அனுபவிக்க நேரிடும். முழு நம்பிக்கையோடு அவனை வழிபட்டால் வீடு பேறு எய்தலாம்”.

இப்படிச் சொல்பவர்கள் யார்?

ஆன்மிக வாதிகள்; மதவாதிகள்.

இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களின் ஆறாவது அறிவை மழுங்கடித்து
விட்டார்கள்.

இந்த “ஆறாவது அறிவு’ மனிதர்களுக்கு எப்படி வாய்த்ததோ யாருக்கும்
தெரியாது. [இது கடவுளால் அருளப்பட்டது என்று கதை விடாமல், ‘தெரியவில்லை’ என்று மனப்பூர்வமாய் உண்மையை ஒப்புக் கொள்ள
வலியுறுத்துவது இந்த ஆய்வுரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

எதையும் ஏன், எப்படி, எப்போது, எங்கே என்றெல்லாம் மனிதனைக் கேள்விகள் எழுப்பத் தூண்டியது இந்த அறிவுதான்.

அயராது சிந்தித்து, விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அரிய பல
சாதனைகளை நிகழ்த்த அடிப்படையாய் அமைந்தது இந்த அறிவுதான்.

இந்த அறிவில், சராசரி மனிதன் பயன்படுத்துவது மிக மிகக் குறைந்த
அளவுதான் [ஐந்து அல்லது ஆறு சதவீதம்தான். விஞ்ஞானிகள்
பயன்படுத்துவதே13% தான்(?) என்கிறார்கள் அறிஞர்கள்.]

மனிதன், தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு ஆளாகி, கடும்
துன்பங்களுக்கு உள்ளாகக் காரணம் அவன் தன் அறிவை முழுமையாகப் பயன்படுத்தாததே.

படிப்படியாக, தன் அறிவை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான பயிற்சி.......
அயராத முயற்சி.....கட்டுக்கடங்காத ஆர்வம் எல்லா மனிதர்களுக்கும் தேவை.


பகுத்தறிவின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் சந்திக்க நேரும் தோல்விகளின் எண்ணிக்கை கண்டிப்பாகக் குறையும்.

துன்பங்களைத் தாங்கும் சக்தி நாளும் வளரும்.

மனிதன் தன் அறிவை முழுமையாக [100%] பயன்படுத்தும் காலம் வந்தால், அப்போது மனித சமுதாயம் எய்தும் இன்ப நிலையை எண்ணிப் பாருங்கள்.

நாம் அனுபவ ரீதியாக அறிந்து வைத்திருக்கும் இந்த ‘அறிவை’ப்
பயன்படுத்துவதைத் தவிர்த்து, நம்மால் கொஞ்சமும் அறியப்படாத, நம்பவே முடியாத விதியை நினைத்து..........................................

”விதி வலியது. அதை நம்மால் வெல்ல முடியாது. விதியால் விளையும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடவுளைச் சரணடைவதுதான் வழி’ என்று
புலம்புவதால் பயன் இல்லை.

இன்றுவரை பலன் விளைந்ததும் இல்லை. [தற்செயலாக நடந்ததையெல்லாம் கடவுளின் அருட்செயல் என்று சாதிக்க வேண்டாம்]

கடவுள் உருவாக்கிய விதி ’உண்மை’ எனக் கொண்டால்..............................

விதிப்படி எல்லாம் நடந்தே தீரவேண்டும்.

கடவுளை வழிபடுவதால் விதியின் பிடியிலிருந்து தப்பலாம் என்றால்..........

கடவுள், விதியை உருவாக்காமலே இருந்திருக்கலாமே?

ஏன் உருவாக்கினார்?

மனிதர்கள் தன்னை வழிபட வேண்டும் என்ற ஆசை காரணமா?

கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்து, காணிக்கைகள் செலுத்த வேண்டும் என்னும் பேராசை காரணமா?

என்னதான் காரணம்? சொல்லுங்களேன்.

கடவுள் பற்றிய மதவாதிகளின் கருத்துகளையும் அவர்களின் செயல்பாடு களையும் ஆராய்ந்தால் ஒன்று நன்றாகப் புரியும். அது?

கடவுள் ஓர் ஓரவஞ்சனையாளர்!

பகுத்தறிவால் இயற்கையின் நடைமுறைகளை வென்று புதிய 
கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியல் அறிஞர்கள் [விஞ்ஞானிகள்] பலர், மதவாதிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் 
இடம் பெற்றுள்ளன.


அந்தக் கொலைகாரர்களில் யாரையேனும் கடவுள் தண்டித்தது உண்டா?

எனவே, கடவுள் என்று ஒருவர் இருந்தால்........................................

அவர் வஞ்சக நெஞ்சம் கொண்டவர் என்கிறோம்.

உங்கள் பதில் என்ன?

********************************************************************************























ஞாயிறு, 19 ஜூன், 2011

கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]



                                      கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]

                   இந்த மண்ணுலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இறைவனும் இறைவியும் பிரபஞ்சத்தின் மையத்திலிருந்த தங்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண் டிருந்தார்கள்.

“இன்னும் கொஞ்ச வருசத்தில் பூலோகம் அழியப் போறதா மக்கள்
பேசிட்டாங்களே, கேட்டீங்களா?” என்று கேட்டார் இறைவி.

“கேட்டேன்; எல்லாரும் உயிர் இருந்தும் நடைப் பிணமா அலையறதையும்
கவனிச்சேன்” என்றார் இறைவன்.

“இப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டது யாராயிருக்கும்?” சந்தேகம்
எழுப்பினார் இறைவி.

“வேறு யார்? ஜோதிடர்கள்தான். அவர்களை உசுப்பிவிட்டதே நான்தான்” என்று
சொன்ன இறைவன், விரிந்து பரந்த ‘வெளி’யே அதிரும்படியாக, ஊழிக்
காலத்தில் சிரிப்பது போன்ற அதி பயங்கரச் சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினார்!

அதிர்ச்சிக்குள்ளான இறைவி,”ஏன் அப்படிச் செய்தீங்க?” என்றார்.

“நான் படைச்ச மத்த உயிரினங்கள் எல்லாம் குணம் மாறாம அப்படியே இருக்க,
மனிதன் மட்டும் ரொம்பவே மாறிட்டான். வக்கிற புத்தி அதிகமாயிடிச்சி.
எதிரியை உயிரோட தீயிட்டுக் கொளுத்தி, அவன் துடிதுடிச்சிச் சாகிறதைப் பார்த்துக் குதூகளிக்கிறான். சின்னஞ் சிறுசுகளை முடமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கி றான். பருவத்துக்கு வராத பச்சைப் புள்ளைகளைக் கற்பழிச்சி, சித்திரவதை செஞ்சி கொல்றான். இன்னும் இவன் செய்யற அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..................................”

நீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்ட இறைவன், “இவன் செய்யற அக்கிறமங்களை என்னால் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியல. மண்ணுலகத்தையே அழிச்சிடறதா முடிவு பண்ணிட்டேன்.” என்றார்.

“உடனே அழிச்சிட வேண்டியதுதானே. எதுக்காகப் புரளியைக் கிளப்பி விட்டீங்க?”

“எல்லோரும் ஒட்டு மொத்தமா அழியப் போறாங்கன்னு தெரிஞ்ச அப்புறமாவது மனுசன் திருந்துறானா பார்ப்போம்”.

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க”.

இறைவனின் கரம் பற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார் இறைவி.

*********************************************************************************




வியாழன், 9 ஜூன், 2011

'ஏதோ'வும் கடவுளும்!

உயிர்களுக்குப் ‘புலன்கள்’ உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், அவற்றால் உருவாக்கப்படும் ஒலிகளை உள் வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும்[மெய்] உதவு கின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ ஓர் உயிரினத்தைப் பொறுத் தவரை மூளைதான் எல்லாமே.

உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிரினங்களின் அனைத்துச் செயல் களுக்கும்  மூளையே ஆதாரம்.

மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு புதியனவற்றைப் படைப் பதற்குப் பயன்படுவதும் இந்த மூளையே.

ஆக, அறிவதற்கும் உணர்வதற்கும் படைப்பதற்கும் மூளை ஓர் இன்றியமையா தேவை ஆகிறது.

அனைத்தையும் அறிந்து வைத்து, படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைச் செய்கின்ற தீராத விளையாட்டுப் பிள்ளையான கடவுளுக்கும் இந்த மூளை இருக்கும்தானே?

இம்மாதிரி, அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் பொத்தாம் பொதுவாகக் கடவுளை நம்புவது அறிவீனம்.

கடவுளின் மூளை எத்தன்மையது?

உயிர்களின் மூளையைவிட, ஆறாவது அறிவு படைத்த மனிதனின் அபார மூளையைக் காட்டிலும் அவருடைய மூளை மிக மிக மிக.......................................
நுட்பமான, அதி அற்புதமான, அளவிட முடியாத சக்தி படைத்ததாகத்தானே இருக்கும்!

மூளை என்று ஒன்று இல்லாமல்,அதைவிட சக்தி வாய்ந்த நுட்பம் மிகுந்த
'ஏதோ' ஒன்றைப் பயன்படுத்துகிறாரா அவர்?

அந்த 'ஏதோ' எப்படி இருக்கும்?
----------------------------------------------------------------------------------------------------------------------