அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 29 ஜனவரி, 2015

பெருமாள் முருகன் பாணியில்[Style] ஒரு சிறுகதை!

‘பெருமாள் முருகன் பாணி’ என்பதைத் தவறாக அர்த்தம் பண்ணிக்கொண்டால் கதை முடிவில் ஏமாற்றத்திற்கு உள்ளாவீர்கள். நன்கு யோசித்து வாசிப்பைத் தொடருங்கள்!

                                                              அடகு

லைச் சுமையாய்க் கொண்டுபோன தக்காளியை நகரத்துத் தெருக்களில் கூவி விற்றுவிட்டு, வெற்றுக் கூடையைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய்க் கருப்பாயி வீடு வந்து சேர்ந்தபோது நேரம் நண்பகலை நெருங்கிவிட்டிருந்தது.

“மாடு கன்னெல்லாம் கட்டிக் கெடக்குது. பண்ணயக்காரன் எங்க போய்த் தொலைஞ்சுது?” என்ற அங்கலாய்ப்புடன் வாய்க்கால் வரப்பில் நடந்த கருப்பாயி, “தாக்கோலிக்குத் தண்ணி கட்டுன்னு சொல்லிபுட்டுப் போனன். செய்யல. இந்தக் கவண்டனுக்குச் சுத்தமா கூரு கெட்டுப் போச்சு” என்று முணுமுணுத்தவாறே தாய்மை உணர்வு சுரக்க, வாடிக் கிடந்த செடிகளை வருடிக் கொடுத்தாள்.

கூடையை ஒரு புறம் கடாசிவிட்டு, மம்மட்டி எடுத்து வாய்க்கால் சீவி, மோட்டார் போட்டு நிமிர்ந்த போது, பத்துப் பதினைந்து பேர் அடங்கிய சேரிக் கும்பல், குடமும் கையுமாய்த் தண்ணீர் பிடிக்கக் காத்திருப்பது கண்டு கடுங் கோபத்துக்கு ஆளானாள் கருப்பாயி.

“தண்ணிக்கி வராதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது? உங்களுக்குச் சூடு சொரணையே இல்லியா? எனக்குக் கெட்ட கோவம் வருது. மருவாதையாப் போயிருங்க” என்றாள்.

“பண்ணயக்காரன் சொல்லித்தான் வந்தோம்” -கும்பலில் ஒரு குரல்.

“நல்ல பண்ணயக்காரன். பொளைக்கத் தெரியாத பண்ணாடி. மாட்டுக்கு ஒரு கட்டுத் தீவனம் இல்ல. பன ஓலையைக் கிழிச்சிப் போடுறம். நட்ட பயிரெல்லாம் சருவா காயுது. இருக்கிற கொஞ்சம் தண்ணியில தாக்கோலி நாலு செரவு நனையுது. இது பொறுக்கிலியா உங்களுக்கு. எங்க பொழப்புல மண்ணைப் போடுறீங்களே, நீங்கெல்லாம் உருப்படுவீங்களா?.......”

குறுக்கிட்டது ஒரு குரல். “விசயம் தெரியாம அவங்களைக் கரிச்சிக் கொட்டாத. தம்பான் பொண்டாட்டி பொடவையில் தீப் புடிச்சிக் கருகிச் செத்துப் போய்ட்டா. பொணத்தைக் குளிப்பாட்டக்கூடத் தண்ணி இல்ல. நாந்தான் அவங்கள வரச் சொன்னேன்.” குரலுக்குரியவன் கருப்பாயியின் புருஷன் மாரப்பன். “என்ன நடந்துதுன்னு வெசாரிக்கத்தான் சேரிக்குப் போயிருந்தேன்.”

சினம் தலைக்கேறிய கருப்பாயி சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

சேரிவாசிகள் தண்ணீர்க் குடங்களுடன் நகர்ந்ததும் அவள் வெடித்தாள். “நீயெல்லாம் ஒரு குடியானவனா? செரீத்த பங்காளி டவுனுக்கு வண்டி வண்டியா தண்ணி வித்தே அம்பது அறுவதாயிரம் சம்பாதிச்சிபுட்டான். சேரிக்காரங்களுக்குத் தண்ணி உடுறதை நிறுத்தினா நாம்பளும் நாலு காசு பார்க்கலாம். தாக்கோலி இப்பப் பவுன் வெல விக்குது. பெரிய பொன்னான் நாலு வயலு நட்டுது. நல்ல காசு. அதும் பொண்டாட்டி ஆறு பவுன்ல செயினு பண்ணிப் போட்டுகிட்டு மினுக்குறா. நீ மட்டுந்தான் துப்பத்த பொளப்பு பொளைக்கிறே.”

“இப்ப என்னய என்னதான் பண்ணச் சொல்றே?” பொறுமை இழந்ததாகக் காட்டிக் கொண்டான் மாரப்பன்.

“கர்ண மகாராசாங்கிற நெனப்ப வுட்டுத் தொலை. வழக்கமா சேரிக்காரங்களுக்குத் தண்ணியைத் தானம் பண்றதை நிறுத்து.”

”மத்த தோட்டத்துக்காரங்க அவங்களுக்குத் தண்ணி தர்றதில்ல. அரசாங்கம் அவங்களுக்காக ரெண்டு மூனு போர் போட்டுக் குடுத்துது. காய்ச்சகாலம்கிறதால எல்லாமே வறண்டு போச்சு. ஏழைப்பட்ட ஜனங்க. நாமளும் விரட்டியடிச்சா அவங்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணி இல்ல.”

“உனக்கு ரொம்பத்தான் கூரு கெட்டுப் போச்சி. நாளைக்கு மழை பேஞ்சா ஏர் பூட்டக்கூட எருது இல்ல. விதை, நடவுக் கூலி, உரம், உப்புன்னு எத்தனை செலவு இருக்குது. கெணறு அடிவெட்டுக்காவ, இருந்த ரெண்டு நகையையும் அடமானம் வெச்சாச்சு. என்னதான் பண்ணப் போறமோ.” இறக்கி வைக்க முடியாத மன பாரத்துடன், பனங்கருக்கில் கட்டியிருந்த பசு மாட்டை நோக்கி நடந்தாள் கருப்பாயி.

து மழைக்காலம்.

போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு, சொக்கன்பட்டியைக் குளிப்பாட்டிவிட்டான்  வருணபகவான்.

உழவர்கள் புத்துணர்ச்சி பெற்று உழவுப் பணியில் ஈடுபட்டார்கள். பத்தோடு பதினொன்றாக மாரப்பன்.

றுவடைக் காலம்.
அறுவடையை ஆரம்பித்திருந்த சொக்கன்பட்டி விவசாயிகளை வானிலை அறிக்கை கலக்கமடையச் செய்தது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல், கடலூரில் கரை கடந்து, வட மாவட்டங்களில் கடும் சேதம் விளைவிக்கும் என்பது அந்த அறிக்கை தந்த எச்சரிக்கை.

பண்ணைக்காரர்கள், சேரிக்குப் படை எடுத்தார்கள். அறுவடைக்கு ஆள் பிடிப்பதில் கடுமையான போட்டி.

மாமூல் கூலிக்கு மேல் ஐம்பது சேர்த்துத் தருவதாகச் சொன்னார் பெரிய தோட்டத்துப் பெரியண்ணன்.

கூலியை இரண்டு மடங்கு ஆக்குவதாக அறிவித்தார் பச்சக்காட்டுக் கொமரசாமி.

அவர்களோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட மாரப்பன் சோகம் சுமந்து வீடு திரும்பினான்.

“நீ ரொம்பத்தான் ஏழைபாழைன்னு பாகா உருகினே. அந்த ஏழைபாழைங்க நீ செஞ்ச உதவியை நினைச்சிப் பார்த்தாங்களா? கூலி அதிகம் தர்றவங்க பின்னாடிதானே போயிருக்காங்க.” கருக்கரிவாளுடன் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த கருப்பாயி மாரப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். மாரப்பன் வாய் திறக்கவில்லை.

காலடி ஓசை கேட்டு இருவரும் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தார்கள்.

ஆண்களும் பெண்களும் பெரியவர்களும் சிறியவர்களுமாக நூறு பேருக்கும் குறையாத சேரிவாசிகள் , அரிவாளும் கையுமாக அவர்களை நெருங்கினார்கள்.

அவர்களில் வயதில் மூத்த முனியப்பன் சொன்னார்: “உங்ககிட்ட நாங்க கூலி பேச விரும்பல. முடிஞ்சதைக் குடுங்க. அதுவும் முடியலேன்னா, மதியம் பசியாறக் கொஞ்சம் கஞ்சி ஊத்துங்க போதும்.” என்றார்.

அவர் சொல்லி முடித்த மறு வினாடியே, அந்த ஏழைப்பட்ட மக்கள், முழு அர்ப்பணிப்புடன், மும்முரமாய் அறுவடைப் பணியில் தம்மை ஈடுபடுத்தலானார்கள்.

*****************************************************************************************************************************************************










புதன், 28 ஜனவரி, 2015

இது ‘குங்குமம்’ கதை! ‘தற்கொலை’ செய்யவிருந்த ஒரு காதல் ஜோடியின் அனுபவம்!!

‘ஒரு பக்கக் கதை’ என்பது, பளீரிடும் மின்னல் போல. இது, வாசகனுக்குப் பாடம் கற்பிக்கும்; அவனை முட்டாளாக்கும்; எதிர்பாராத முடிவைத் தந்து வியப்பில் ஆழ்த்தும்; பொழுது போக்கவும் உதவும்.

இந்தக் கதை இவற்றில் எதைச் செய்கிறது? படியுங்கள்.


கதை:                                         பைத்தியக்காரி

வெளியான இதழ்:               குங்குமம்[02.02.2015]

“குகன், நம்ம கல்யாணம் நடந்தாலோ, நான் ஓடிப்போய்ட்டாலோ, என் ரெண்டு தங்கைகளோட வாழ்க்கை பாதிக்குமாம். எங்க வீட்ல ஒரே பிரச்சினை.” - கைபேசியில் கலங்கினாள் கவிதா.

“பெத்தவங்க பயப்படுறதிலும் அர்த்தமிருக்கு. என்னை மறந்துடு கவிதா.”

“முடியாது. நீ இல்லாட்டி நான் விஷம் குடிச்சிச் செத்துடுவேன்டா.” - கவிதாவின் குரலில் உறுதி.
“நீ போனப்புறம் நான் மட்டும் உயிரோடு இருப்பேனா என்ன?” - தழுதழுத்தான் குகன்.

“ஓக்கேடா...நாளைக்கு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நான் விஷம் குடிச்சிடுவேன். நீயும் அதே நேரத்தில் தற்கொலை பண்ணி...”

அவள் பேசி முடிப்பதற்குள் அவசரமாகக் குறுக்கிட்டான் குகன். “ஆனா, கவிதா...அதுக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கங்கா லாட்ஜில் ரூம் போட்டு வைக்கிறேன்...நாளை மாலை வந்துடு.”

“எதுக்குடா?”
“சாகறதுக்கு முந்தி உன்னை ஒரு தடவை அனுபவிக்கணும்!”

“சின்ன இடைவெளிக்குப் பின் கவிதா பேசினாள்...“இவ்ளோ சீப்பான ஆளாடா நீ? உனக்காக உயிரைவிட நினைச்ச நான் பைத்தியக்காரி. வைடா போனை.”

‘என்னை மன்னிச்சுடு கவிதா...உன் முடிவை மாத்த எனக்கு வேற வழியே தெரியல.’ - மனதுக்குள் சொல்லிக் கொண்டான் குகன்.

===============================================================================

திங்கள், 26 ஜனவரி, 2015

ஆண் பெண் இணைப்பில் இத்தனை சுகமா?!

இது இளவட்டங்களுக்கானது. வயோதிகர்களும் வாசிக்கலாம். இதன்மூலம், இழந்த தங்கள் வாலிபத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்; இன்பசாகரத்தில் மூழ்கித் திளைக்கலாம் என்பதற்கு உத்தரவாதம் உண்டு! 

புதிய கட்டடம். அகன்ற பெரிய அறை. அதன் நடுவே ராஜாக்களின் ஹம்ச தூளிகா மஞ்சம் போல படுக்கை. அது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அறையெங்கும் மனதைக் கிறங்கடிக்கும் வாசனைத் திரவியங்களின் நறுமணம்.

கதவு திறந்து மூடப்படும் சப்தம்.

எதிரே, அழகிய சிற்பம் போல சர்வ அலங்காரங்களுடன் அவள்.

அவள் என்னவள்; எனக்கு மட்டுமே உரிமையாக்கப்பட்டவள்.

பால்பழத் தட்டுடன், வண்ண மயிலாக ஒயிலாக நடை பயின்று என்னை நெருங்கினாள்; தட்டை வைத்துவிட்டுச் சட்டெனக் குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

“ஏன் இந்த மூடப் பழக்கம்?” என்று கேட்டு, அவள் தோள் பற்றித் தூக்கி நிறுத்தினேன்.

மெலிதாக அவள் தேகம் நடுங்குவது தெரிந்தது. முகம் முழுக்க வியர்வை முத்துகள்.

அவளின் அழகு மேனியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை நோட்டம் விட்டு, “என்னைத் தவிர வேறு யாரும் உன் அழகை ரசித்துவிடாமல் இருக்கவா அங்கங்களை மறைக்கும் இந்த  அலங்காரம்?” என்று நான் கேட்க, அவள் வதனத்தில் வெட்கம் பரவியது; தலை கவிழ்ந்தாள். அந்த அழகுக் கோலம் என் ஆண்மையைக் கிளர்ந்தெழச் செய்தது.
அவளைப் பஞ்சணையில் அமர வைத்து அவள் அணிந்திருந்த தாலி தவிர, காதணி, மூக்குத்தி உட்பட அத்தனை நகைகளையும் கழற்றினேன்; அவள் அழகை மறைத்திருந்த ஆடைகள் மூலைக்கொன்றாய்ப் பறந்தன.

எதை மறைப்பது, எதைத் தவிர்ப்பது என்று திகைத்து மயங்கி, “என்னங்க இதெல்லாம்?” என்று  முணுமுணுத்தாள் அவள். அந்த முணுமுணுப்பின் பின்னணியில் கட்டுக்கடங்காத தாபம் கரைபுரண்டுகொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

“ எதுக்குங்க......” என்று இன்னுமொரு கேள்வியை அவள் எழுப்ப முயன்றபோது, “உன் உடம்பில் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் அத்தனை இடங்களிலும் முத்தம் பதிக்க வேண்டும். அதுக்குத்தான்” என்றேன்.

அவளின் ஒட்டுமொத்த உடம்பும் ஒரு முறை சிலிர்த்து ஓய்ந்தது.

அவளை இதமாகத் தழுவிப் படுக்கையில் கிடத்தியபோது, வான வெளியிலிருந்து வண்ண மலர்களை யாரோ தூவினார்கள். எங்கும் மதுரகீதங்கள் ஒலித்தன. வகை வகையான வாச மலர்கள் நேசமுடன் என் நாசியில் உறவாடின.

ஈருடம்பு என்ற நிலை மாறி ஓருடம்பாய் இருவரும் பிணைந்து கிடந்தோம்.

காற்றுப் புகக்கூட இடைவெளி இல்லை.

அவளிடம்தான் எத்தனை மலர்கள்! எத்தனை கனிகள்!!

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை ஐம்புல இன்பங்களும் பெண்ணிடத்தில் உண்டு என்று பெரியவர்கள் சொன்னது எத்தனை உண்மை. அதை அனுபவபூர்வமாக அறிந்து அனுபவித்துப் பூரித்தேன்.

“நன்றி...நன்றி இறைவா!” என்று ஓசைப்படாமல் என் உள்மனம் முழக்கமிட்டது.

எல்லாம் முடிந்தபோது எங்கள் உடம்புகள் குளிர்ந்திருந்தன.

இப்போது என் சிந்தனை வேறுபுறம் திரும்பியது.

உடலுக்கும் மனதுக்கும் அற்புத சுகம் அளிக்கும் இந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்கிறார்களே, ஏன்?

“பேரின்பம் என்று ஒன்று இருப்பதால்” என்கிறார்கள்.

இருந்துவிட்டுப் போகட்டுமே. இன்னொரு பேரின்பம் இருப்பதால் இது சிற்றின்பம் ஆகிவிடுமா?

ஓர் ஆணும் பெண்ணும் மனம் ஒத்து இணைகிற போது பெறும் இன்பம் பேரின்பம்தான். அனுபவித்து அறிய வேண்டிய உண்மையல்லவா இது?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

சேலத்தைச் சேர்ந்த , அரிமா ச. மாதவன்[M.A] எழுதிய, ‘கடவுளிடம் நூறு கேள்விகள்’[பாலாஜி பதிப்பகம், சேலம், முதல் பதிப்பு:2005] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது இப்பதிவு.


கட்டுரை வடிவில் இருந்த நூலின் ஒரு சிறு பகுதியை, எனக்குக் கைவந்த நடையில் மெருகூட்டிக் கதையாக்கித் தந்திருக்கிறேன். 

எழுதி முடித்துத் திரும்ப வாசித்தபோது, விரசமான வாசகங்களும் வர்ணனைகளும் தென்பட்டன. அவற்றை நீக்கிப் பதிவிட்டபோது கதை வெகுவாகச் சுருங்கிவிட்டது தெரிந்தது. கதையைப் பெரிதாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

நூலாசிரியருக்கு என் மனம் நிறைந்த நன்றி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000











சனி, 24 ஜனவரி, 2015

'முற்போக்கு மாதர் சங்கம்’.....ஓர் அதிரடி புரட்சிக் கதை! [100% கற்பனை]

எழுத்துரிமை குறித்தும், கருத்துச் சுதந்திரம் பற்றியும் கடந்த ஒருவார காலமாக அனல் தெறிக்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் முற்போக்கு அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும். அளவு கடந்த எழுத்துச் சுதந்திரத்துடன் படைக்கப்படும் கதைகளின் போக்கைக் காட்சிப்படுத்தவே இந்தக் கதை.

“என்னடி.....நானும் பார்க்கிறேன், ஆம்பிளை சுகத்துக்கு ஏங்கித் தவிக்கிற அரைக் கிழவி மாதிரி ஒரு வாரம் போல எதையோ மனசுக்குள்ள புதைச்சி வெச்சிகிட்டுப் பட்டும் படாம பேசிட்டிருக்கிறே, என்ன நடந்துது? பூசி மெழுகாம போட்டு உடை.” தன் உயிர்த் தோழியான சவிதாவிடம் கவிதா சொன்னாள்.

“உடைச்சுடுறேன்” என்று அந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு புங்க மர நிழலுக்குக் கவிதாவை அழைத்துப் போனாள் சவிதா.

“நமக்குக் கல்யாணம் ஆகி வருசம் நாலு ஆகிப் போச்சு. நீ ஒரு மலடின்னு என் வீட்டில் எல்லாரும் நினைக்கிறாங்க. இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்துறாங்க. நான் மறுத்தா தற்கொலை பண்ணிக்கவும் என் அப்பாவும் அம்மாவும் தயாரா இருக்காங்க. எனக்கும் வேற வழியில்ல. இன்னும் ஆறு மாசம் பார்க்கலாம். நீ கருத்தரிக்கலேன்னா இன்னொரு கல்யாணம்தான்கிறான் என் புருஷன்”என்றாள் சவிதா, கலங்கிய அவள் கண்களில் கனத்த சோகம் திரண்டிருந்தது.

“டாக்டரைப் பார்த்தீங்களா?”

“அவன் சம்மதிக்கல. நான் ஆண்மையுள்ளவன். உன்னை மாதிரி இன்னும் பத்து பொம்பளைகளைக் கட்டிகிட்டு நூறு பிள்ளைகளைப் பெத்துக்க முடியும்னு சொல்றான்.” நெஞ்சில் தேக்கி வைத்திருந்த வேதனையில் ஒரு சிறு துளியை வார்த்தைகளால் வெளியேற்றினாள் சவிதா.

“அதுவா விஷயம்......” என்று சிறிது நேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்த கவிதா, “கவலைப் படாதடி. ஆறு மாசம் என்ன, ஒரே மாசத்தில் நீ கருத்தரிக்க ஏற்பாடு பண்றேன்” என்றதோடு, சவிதாவின் கன்னம் வருடிக் கண் சிமிட்டவும் செய்தாள்.

ஆச்சரியம் பொங்க அவளைப் பார்த்த சவிதா, “ஒரு மாசத்திலா? எப்படி? சொல்லு...சொல்லுடி” என்று கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் கவிதாவின் தோள்களைப் பற்றி உலுக்கினாள்.

“சொல்லுறேன். நீ என் யோசனைக்குக் கட்டுப்படணும். கற்பு, கட்டுப்பாடு, கௌரவம் அது இதுன்னு சொல்லிப் பின்வாங்கக் கூடாது. சம்மதமா?”

சவிதாவின் வதனத்தில் லேசான அதிர்ச்சி படர்ந்தது. கவிதாவின் மை தீட்டிய கண்களில் எதையோ தேடினாள். அந்தத் தேடல் பயனற்றது என்பதைப் புரிந்துகொண்டு சொன்னாள்: “அது வந்து......வந்து.....”

குறுக்கிட்ட கவிதா, “என்னடி வந்து போயி. குழந்தை இல்லேன்னா, இந்த அறிவியல் யுகத்திலும் பொண்டாட்டி மேலயே பழி போடுறானுக பொட்டப் பயலுக. மறு கல்யாணமும் பண்றானுக. பொம்பளை ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு புருஷனோட வாழ முடியுமா? கல்யாணம் கட்டிக்க முடியாது. கண்டவனோட போயிப் பிள்ளை பெத்துக்கவும் முடியாதபடி காவல் காக்குறானுக. இது ஆணாதிக்க சமுதாயம். அவங்களை வெளிப்படையா எதிர்த்து நிற்கப் பொம்பளைகளால் முடியாது. தந்திரத்தாலதான் அவனுகள ஜெயிக்க முடியும்.”

விழிகளில் வியப்புத் தேக்கிக் கவிதாவையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் சவிதா.

“எனக்குத் தெரிஞ்சி ‘முற்போக்கு மாதர் சங்கம்’[இது 100% கற்பனை; எந்தவொரு அமைப்பையும் குறிப்பதல்ல]னு ஒன்னு இருக்கு. மத்த மாதர் சங்கங்கள் மாதிரி, வெத்து அரட்டை அடிக்கிறதும் வெங்காயச் சாம்பார் வைக்கச் சொல்லித் தர்றதும், பொதுத் தொண்டு செய்யறதும் இதனோட வேலை அல்ல. புகுந்த வீட்டாரால் பழிவாங்கப்படுற, குழந்தைப் பேறில்லாத பெண்களுக்கு உதவுவது மட்டுமே இந்தச் சங்கத்தின் நோக்கம்........”

கொஞ்சம் இடைவெளியில் குரலைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்தாள் கவிதா. “யார் வேணுன்னாலும் இதில் உறுப்பினர் ஆயிட முடியாது. பல சோதனைகளுக்கு அப்புறம்தான் சேர்த்துக்குவாங்க. இதுல உறுப்பினராச் சேர்ந்தவர் தனக்குத் தெரிஞ்சவங்களுக்குச் சிபாரிசு பண்ணலாம். என் சிபாரிசுல இன்னிக்கே இதில் நீ மெம்பர் ஆயிடுறே.”

“ம்ம்ம்” வெறுமனே தலையை மட்டும் அசைத்தாள் சவிதா.

“முன்கூட்டியே அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு, நீ கருத்தரிக்கத் தோதான நாள்ல நாம் அங்க மறுபடியும் போவோம். நம்மை எதிர்பார்த்து, திடகாத்திரமான ஏழெட்டு ஆண்மையுள்ள ஆம்பிளைங்க காத்திருப்பாங்க. அவங்கள்ல ஒருத்தனைத் தேர்ந்தெடுத்து அவனோட நீ சேர்க்கை வெச்சிக்கலாம். இதற்கான ஏற்பட்டைச் சங்க நிர்வாகிகள் செய்துடுவாங்க. இதுக்காகக் கட்டணமும் வசூலிப்பாங்க.”

வேறு யாரும் இப்படிச் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டாள் சவிதா. கவிதா இது மாதிரி விசயங்களில் பொய் சொல்லுகிறவள் அல்ல. தயக்கத்துடன் கேட்டாள் சவிதா: “என்னதான் ரகசியமா செயல்பட்டாலும் போலீசுக்குத் தெரியாம போயிடுமா?”

குவிந்து நிமிர்ந்த மார்புகள் குலுங்கச்  சிரித்தாள் கவிதா. “இந்தச் சங்க நிர்வாகிகள் எல்லாம் வி.வி.வி ஐ.பிகளோடு பெண்டாட்டிகள்தான். அவங்கள்ல பல பேர் இங்க வந்து கர்ப்பம் தரிச்சவங்க.”

“அப்படியா?!” அந்தக் குளு குளு புங்க மர நிழலில் அரை நிமிடம் போல வாய் பிளந்து நின்றாள் சவிதா.

தொடர்ந்தாள் கவிதா. “இன்னிக்கும் ராப்பகலா நடக்கிற திருவிழாக்களில் சர்வ சுதந்திரமான ஆண் பெண் சேர்க்கை நடக்கிறதா பிரபல எழுத்தாளர்களே எழுதறாங்க; பேசுறாங்க. அங்க போயி, பிடிச்ச ஆம்பிளையோட கூடி மலடிகள் பிள்ளை பெத்துக்கிறதாகவும் சொல்றாங்க. அது உண்மையாகவே இருந்தாலும், கண்ட கண்ட கழுதைகளோடவும் நாய்களோடவும் இணைஞ்சா எயிட்ஸ் நோய் வர்றதுக்கு நிறையவே வாய்ப்பிருக்கு. ஒருத்தனோட போனா, கார்த்திகை மாதத்து வெறி நாய்கள் மாதிரி பின்னாடியே ஏழெட்டு பேர் துரத்திட்டு வருவான். அவனுககிட்டே இருந்து தப்பிப் பிழைக்கிறது சுலபமில்ல.”

“நிஜம்தான்” என்றாள் சவிதா.

“இங்க அம்மாதிரி பயத்துக்கெல்லாம் இடமில்ல. எல்லாமே சுத்தம். சங்கத்துக்குப் போகலாமா?” என்றாள் கவிதா.

“எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றாள் சவிதா.

“பயப்படாதடி. மூனு வருஷம் குழந்தை இல்லாம இருந்த நான் இங்க போய்த்தான் குழந்தை பெத்துகிட்டேன்னு சொன்னா நம்புவதானே? மனசைத் திடப்படுத்திகிட்டு என்னோட வா” என்று நடந்தாள் கவிதா. கைகோத்து அவளைப் பின்தொடர்ந்தாள் சவிதா.

=============================================================================================

மிக முக்கிய குறிப்பு:

வரம்பு கடந்த எழுத்துரிமையும் கருத்துச் சுதந்திரமும் எப்படியெல்லாம் எழுத்தாளனைக் கதை படைக்கத் தூண்டும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்தவே இந்தக் கதை.


100% கற்பனை என்றாலும், இம்மாதிரி எழுதுவதைக் கடுமையாக எதிர்ப்பவன் நான்.


இப்படைப்பை வெளியிட்டதற்காக மிக மிக வருந்துகிறேன்.


வருகை புரிந்தோருக்கு என் நன்றி.

=============================================================================================







செவ்வாய், 20 ஜனவரி, 2015

பெருமாள் முருகனுக்கு ஒரு மனம் திறந்த மடல்!

அன்புள்ள பெருமாள் முருகன்,

மாதொருபாகன் சர்ச்சை தொடர்பாக ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சூட்டோடு, “அவனை விட்டுவிடுங்கள்” என்று உருக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டீர்களே நினைவிருக்கிறதா? உங்கள் வேண்டுகோளை ஏற்று, போராட்டக்காரர்கள் அமைதி காக்கிறார்கள். ஆனால், உங்களை ஆதரிப்பதாகச் சொல்லி, அரசியல்வாதிகளும் சில பிரபல எழுத்தாளர்களும் அறிக்கை மேல் அறிக்கை  விடுகிறார்கள்.

‘தமிழ்நாடு அரசைக் கண்டித்து, டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்’ -இது இன்றைய செய்தி.

சமரசக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இவை பற்றிய உங்கள் விருப்பமின்மையை ஊடகங்கள் மூலம் நீங்கள் அறியச் செய்ததாகத் தெரியவில்லை. இக்காரணத்தால், இவர்களின் செயல்பாடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாகிறது.

இந்தவொரு சூழலே இப்பதிவு எழுதக் காரணமாக அமைந்தது

உங்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப மாதொருபாகனில் நீங்கள் காட்சிப்படுத்திய நிகழ்வுகளால் மனம் நோகடிக்கப்பட்ட மக்கள், குறிப்பாகக் கவுண்டச் சாதிக்காரர்கள் நிறைய.

சுய சாதியைப் பற்றி அதிகம் அக்கறை காட்டாதவர்களைக்கூட, ஜாதி மீது அனுதாபம் கொள்ள வைத்திருக்கிறது உங்களின் மிகையான கற்பனைக் கதை.

நீங்கள் திருச்செங்கோட்டை ஒட்டியுள்ள கூட்டப்பள்ளி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தி. கோட்டிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்.

உங்களைப் போலவே எனக்கும் தி.கோடு டவுனின் சந்துபொந்தெல்லாம் பரிச்சயம்தான்.

நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் தேர்த்திருவிழாவுக்கு[குறிப்பாக நாலாம் திருவிழா] வந்து போவது வழக்கம்.

பழைய நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு கதை புனைந்ததாக நீங்கள் சொல்லிக்கொண்டாலும் கதையைப் படிக்கும் மேற்கண்ட ஜாதிக்காரர்கள் இவற்றை அண்மைக்காலச் சம்பவங்கள் என்றே நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையின் விளைவாக, அவர்களின் உள்மனதில் வேண்டத்தகாத சில சந்தேகங்கள் முளைக்கும் என்பது நீங்கள் அறியாததல்ல.

நீங்கள் குறிப்பிடும் அந்தச் ‘சாமி குழந்தை’ அவர்களை எப்படியெல்லாமோ யோசிக்க வைக்கும்; விதம் விதமான கற்பனைகளில் மிதக்கச் செய்யும். அவர்களின்  மூதாதையர் பிறப்பு பற்றியே சந்தேகம் கொள்ள வைக்கும்.

நீங்கள் கவுண்டர் ஜாதியையைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு இந்தப் பாதிப்புகள் நேர்ந்திருக்காது. ஏனென்றால், இது முழுக்க முழுக்கக் கற்பனையானது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்குத் தெரியாது. அது மட்டுமன்றி, கலப்பு மணம் புரிந்த நீங்கள்[பாராட்டுகள்] ஜாதிப்பற்றே இல்லாதவர் என்பதும் நம்பத்தக்க ஒன்றுதான்.

மிகப் பல ஆண்டுகளாக, இந்தக் கோவிலுக்கு வந்து போன கவுண்டர் ஜாதிக் குடும்பங்களில் எத்தனை எத்தனை ‘சாமி குழந்தைகள்’ இருப்பார்களோ என்று வரலாற்று ரீதியாகப் புள்ளி விவரம்  சேகரிக்கும் பிற ஜாதிக்காரர்கள் முன்னிலையில் கவுண்டனைக் கூனிக் குறுகி நடக்க வைக்கிற தவற்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். [எவ்வளவு பெரிய மனிதரும் இதற்கு விதிவிலக்கல்ல. காந்தியே ‘இமாலயத் தவறு’ செய்துவிட்டதாக வருத்தப்பட்டிருக்கிறார்].

என் வாலிப வயதில், ’சந்தை’ மூலம் பிரபலம் ஆன அந்தக் கோயிலைப் பற்றி இப்படியொரு வதந்தி[மலட்டுப் பெண்கள் கண்டவனோடு கூடிக் கர்ப்பம் தரிப்பது] உலவியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்தக் கோயில் என்பது உங்களுக்குத் தெரியும். வெளிப்படையாகச் சொன்னால், இன்னொரு பெரிய பிரச்சினைக்கு அது வழி வகுத்துவிடும்.

உங்கள் கதையில் குறிப்பிடுவதுபோல், மாட்டு வண்டி கட்டிக்கொண்டு எங்கள் கிராமமே திரண்டு போகும். பலதடவை அந்தக் கோயிலுக்குச் சென்றுள்ள என் பார்வையில் குழந்தைக்காக ஆம்பிளை தேடித் திரியும் மலடிகள் தென்பட்டதே இல்லை. தி.கோடு கோயிலிலும் அம்மாதிரிப் பொம்மணாட்டிகளை நான் சந்தித்ததே இல்லை. தொழில் ரீதியாக அலையும் ‘இரவு ராணி’களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

அனைத்துச் சாதியாருக்கும் பொதுவாகக் கிளப்பப்பட்ட ஒரு வதந்தியைக் கவுண்டர் ஜாதிக்குரியதாக இட்டுக்கட்டிவிட்டீர்கள். இதை உங்கள் மனசாட்சி அறியும்.

கவுண்டச் சாதியின் பழக்க வழக்கங்களைக் களமாக வைத்தே கதை எழுதிப் பிரபலம் ஆனவர் நீங்கள். கதைதானே என்று எழுதப்போய், உங்களை அறியாமல் அவர்களை இழிவுபடுத்தி விட்டீர்கள்.

இது நம் ஜாதி. இதைப் பற்றி எதையும் எழுதலாம் என்று நினைத்திருப்பீர்கள் போல. பிற ஜாதிக்காரர்கள் செய்யத் தயங்கும் காரியத்தை நீங்கள் துணிந்து செய்துவிட்டீர்கள். அதோடுகூட, கவனப் பிசகாக, இன்னொரு  பெரும் தவற்றையும் செய்துவிட்டீர்கள்.

“இந்த ஊரில் இன்னிக்கி எல்லாரும் தேவடியாதான். நம்மை எவனும் தேடி வரமாட்டான்” என்று விலைமகளிர் சொல்வதாக எழுதியதைத்தான் சொல்கிறேன். இதன் மூலம் அனைத்து ஜாதிக்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டீர்கள்.

முருகன்,

இந்தத் தவறுகளால் விளையவிருந்த தொல்லைகளிலிருந்து  விடுபடுவதற்கு,  நீங்கள் மன்னிப்புக் கேட்டது ஏற்றதொரு நல்ல  வழிதான். இதனால் உண்டான மனக் காயத்துக்குக் காலமே உரிய மருந்தாகும். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு, மனம் தேறி எழுத்துப் பயணத்தை உங்களால் தொடர முடியும். மேலும் மேலும் புகழ் ஈட்ட முடியும். இப்படியொரு நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு மாறாக, எழுத்தாளனின் உரிமை பறிக்கப்படுவதாகச் சொல்லிக்கொண்டு உங்களைக் கொம்பு சீவிவிடும் ஆரவாரக் கும்பலின் பின்னால் நீங்கள் சென்றால்......

அது உங்களுக்கு நன்மையாக அமையலாம்;  தீமையாகவும் முடியலாம். 

மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.                       அன்புடன்,
                                                                                                            ‘பசி’பரமசிவம்.

=============================================================================================

பெருமாள் முருகன் மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோரும் அறிந்துகொள்வதற் காகவே இந்தப் பதிவு.

அந்தப் பிரபலங்கள்’ இதைப் படிப்பார்களா என்பது சந்தேகமே. ஏதோ ஒருவகை விருப்பம் காரணமாக இதை வெளியிடுகிறேன்.

============================================================================================

                                                                                 







  

செவ்வாய், 13 ஜனவரி, 2015

வைரமுத்து கதைக்கு விமர்சனமா? ஊஹூம்.....ஆளை விடுங்க!

குமுதத்தில் வெளியான, வைரமுத்துவின் [http://kadavulinkadavul.blogspot.com/2015/01/blog-post_7.html] ஓட்டை உடைசலான முதல் கதை நம்மைக் கடுமையாக விமர்சிக்க வைத்தது. 19.01.2015 குமுதம் இதழில் வெளியாகியிருக்கும், ‘எல்லா மழையும் நின்றே தீரும்’ என்னும் கதை, “இதுவல்லவோ சிறுகதை!” என்று முழக்கமிடத் தூண்டுகிறது! “வைரமுத்து ஒரு பிறவி எழுத்தாளன்!!” என்று மலைக்க வைக்கிறது!!

ஒரு ஒருதலைக் காதலையும், அது விளைவித்த மனக் காயத்தையும், எதிர்பாராத ஒரு காலக்கட்டத்தில் அது ஆற்றப்படும் விந்தையையும் கதையாக்கி மனம் கலங்க வைக்கும் வார்த்தை விளையாட்டு இவனுக்குக் கைவந்த கலை!

“அவள் அப்படியொன்றும் சிற்பமுமில்லை; பார்க்க முடியாத அற்பமுமில்லை. பளீர்ச் சிரிப்பு; பன்னீர் வார்த்தைகள்; ஆள் விழுங்கும் கண்கள்; சுரிதார் போட்ட சூரிய காந்தி. என்னை மோசமான கவிஞன் ஆக்கியவள் அவள்தான்” என்கிறான் அமிர்தமீனாவை ஒருதலையாய்க் காதலிக்கும் ராஜேந்திரன்.....இல்லை, வைரமுத்து என்கிற எழுத்தாளன்.
ஓர் அழகிய பெண்ணின் அங்க லாவண்யங்களையும் கவர்ச்சிப் பிரதேசங்களையும்  அணுஅணுவாய் ரசித்துச் சுகிக்கும் குணம் ஆண்மகனாய்ப் பிறந்த அத்தனை பேருக்குமே உண்டுதான். ஆனால், அந்த சுகானுபவத் தைச் சுருதி சுத்தமான  வார்த்தைகளால் வடித்தெடுப் பது எத்தனை பேருக்குச் சாத்தியப்படும்? அது இந்த வைரமுத்துவுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது!

“அவளைப் பார்ப்பதற்கென்றே நான் பிறந்தேன்.”

“நன் புத்தகம் தருவேன்; அவள் புன்னகை தருவாள். நூலகத்தில் நுழையும்போதோ விடைபெறும்போதோ  நூலகரான என்னிடம், அவள் ‘வணக்கம்’ சொல்லத் தவற மாட்டாள். என் வார நாட்களில் சனி, ஞாயிறு சலிப்பாயிற்று. திங்கள் சுவையாயிற்று.”

“அவள் எலும்புக்கூட்டைக் காட்டினாலும் அடையாளம் சொல்வேன்.”

இப்படியான கவிஞனின் விவரிப்புகள், ராஜேந்திரன் அமிர்தமீனாள் மீது கொண்ட காதலின் வீரியத்தை அற்புதமாய்க் காட்சிப்படுத்துகின்றன.

இவன் அவள் மீது கொண்டிருந்தது ஒருதலைக் காதல் என்பதை அடுத்து வரும் மிகச் சில வரிகளில் வைரமுத்து புரிய வைக்கும் பாங்கு சிலாகிக்க வைக்கிறது.

‘நூலைத்[டி.எஸ்.எலியட்டின் ‘தி வேஸ்ட் லேண்ட்’] திருப்பிக் கொடுத்து அவள் ‘மிக்க நன்றி’ சொல்லிப் புறப்பட்டபோது என் உடலை மீறி மனமும் மனதை மீறி உடலும் செயல்பட்டன.

சட்டென்று திரும்பி அவள் உள்ளங்கை பற்றி அழுத்தினேன்; இடுக்குகளில் விரல் கோத்தேன்.

மிரண்டு திரும்பி விலகினாள்.

என் பிடி இன்னும் இறுகியது.

“விடுங்கள்..”

“ம்...ஹூம்.”

“எடு.”

“மாட்டேன்...”

“எடுடா...”

அழுத்திய என் கையை உதறி எறிந்துவிட்டுத் தும்பறுத்த இளம் கன்றாய்த் திசை தெரியாமல் ஓடி மறைந்தாள் அமிர்தமீனாள்.

இப்படிக் கதை நிகழ்வுகளை நம் மனத்திரையில் ஓடவிட்டுவிட்டு, கதாசிரியன் வைரமுத்து காணாமல் போய்விடுகிறான்.

அமிர்தமீனாவின் உறவினனான, முன் மண்டை வழுக்கை இளைஞனும் இன்னும் சிலரும், ராஜேந்திரனை அடித்து உதைத்து, சைக்கிள் கேரியரில் கட்டி ஊர்வலம் நடத்துகிறார்கள்; அவன் வீட்டில் எறிந்துவிட்டுப் போகிறார்கள்.

வேதனையின் உச்சத்தில், மாறுதல் பெற்று வேறு ஊருக்கு இடம்பெயர்கிறான் ராஜேந்திரன்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, மழை பொழியும் ஓர் அதிகாலைப் பொழுதில், கோவையில், ஒரு மருந்துக் கடையின் தகடு வேய்ந்த தாழ்வாரத்தின் கீழ்  ராஜேந்திரனையும் அமிர்தமீனாவையும் மீண்டும் சந்திக்க வைக்கிறான் கதாசிரியன். இருவருமே விடியற்காலை நடைப்பயிற்சியின் போது மழைக்கு ஒதுங்கியவர்கள்.

மீனாவை அடையாளம் கண்டுகொண்ட ராஜேந்திரனின் மனப்போராட்டத்தைக் கதாசிரியன் எப்படியெல்லாம் காட்சிப்படுத்துகிறான் பாருங்கள்.

‘நான் எதிர்பார்க்கவே இல்லை, என் சந்தோசத்தைக் கெடுக்க அவள் வருவாளென்று; மழையை ரசித்துக்கொண்டிருந்த என்னருகே இரண்டடி தூரத்தில் இடியாய் வந்து விழுவாள் என்று.....

.....என் வாழ்வைத் தொலைத்தவளும் தொலைந்து போனவளும் இவளேதான். என் வாழ்வின் வளர்சிதை மாற்றம் இவள். பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அதிகாலையில், ஆளற்ற நெடுந்தொலைவில் அவளும் நானும் மட்டும் அருகருகே. என் பழைய காதலின் தூரம் இதோ இந்த இரண்டடி; என் அவமானத்தின் தூரமும் அதுவேதான்........

.....இவளைப் பார்க்கத்தானே பிறந்தேன் என்று ஏங்கிய காலம் ஒன்று உண்டு, இறக்கும் வரையில் இவளைப் பார்க்கவே கூடாது என்று வெறுத்துப்போனதும் ஒரு காலம். இவளை இப்போது பார்ப்பதா? தவிர்ப்பதா? பேசுவதா? மௌனம் காப்பதா? காற்று திரட்டிக்கொண்டு வந்து அவள் முகத்திலடித்த மழைத்தாரையின் மிச்சம் என் முகத்தில் தெறித்தது.

கதை படைப்பது பலரும் அறிந்த ஒரு கலைதான். கதை மாந்தர்களைத் தத்ரூபமாய்க் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதும் கலைதான். அந்தக் கலைக்கடலின் கரை தொட்டவர்கள் மிகச் சிலரே. அந்தச் சிலரில் ஒருவனாக அல்ல, அவர்களுக்கெல்லாம் முதல்வனாகத் தலை நிமிர்ந்து நிற்கிறான் இந்த வைரமுத்து!

கதையின் உச்சக்கட்டத்தை இப்போது நெருங்குகிறோம்.

........சற்று நேரத்தில், குடையோடு ஓர் ஆள் வந்தார். அவள்[அமிர்தமீனாள்] சட்டென்று குடைக்குள் புகுந்தாள்.

அவர்கள் பார்வையில் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றேன் [ராஜேந்திரன் என்னும் கதைமாந்தனே கதை சொல்வதான உத்தி கையாளப்பட்டிருக்கிறது].

‘அப்பா! அவள் அறியவில்லை என்னை. அது போதும். ஆழமாய் இழுத்து நீளமாய் ஒரு மூச்சு விட்டேன்.

எது நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சினேனோ அது நிகழவில்லை. ஒருவேளை என்னை அவள் அடையாளம் கண்டிருந்தால் யார் தொடங்குவது? எதில் முடிப்பது? அந்த அவமானத்தை எந்த அமிலத்தில் கரைப்பது? நல்ல வேளை! தப்பித்தேன்.’

இவ்வாறான எண்ணங்களில் ராஜேந்திரன் மூழ்கியிருக்கும்போது, அமிர்தமீனாவை அழைத்துப்போன அந்த ஆள் திரும்பி வருகிறார். அன்று தன்னைத் தாக்கிய அந்த முன்வழுக்கைக்காரன்தான்[இப்போது முழு வழுக்கை] அவன் என்பது ராஜேந்திரனுக்குப் புரிகிறது.

ராஜேந்திரனிடம், “மீனா உங்களை வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுப் போகச் சொல்லிச்சு. நான் மீனாவோட புருஷன்தான்” என்று சொன்னதோடு, அவன் சம்மதத்தை எதிர்பாராமல் அழைத்துப்போகிறான். எதிரே காத்திருந்த மீனா அவர்களுடன் இணைந்துகொள்கிறாள்.

“....குடையை அவளுக்கே கொடுத்துவிட்டு நனைந்துகொண்டே நடந்தோம் நாங்கள் இருவரும். சாயங்காலம் வரை விடாது என்று நினைத்த மழை மெல்ல உள்வாங்கியது.”

என்றிவ்வாறு கதையை முடித்திருக்கிறான் கதாசிரியன். இந்த முடிவின் மூலம்...........

‘காலம் வழங்கிய மன முதிர்ச்சி காரணமாக, அன்று ராஜேந்திரனுக்கு வழங்கிய தண்டனை கொடூரமானது என்பதை உணர்ந்து, அதற்குப் பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள் அமிர்தமீனா தம்பதியர்’ என்று வாசகனுக்கு உணர்த்தவும் செய்கிறான்.

‘என்றும் தீராதது என்று நாம் நினைக்கும் எந்தவொரு வேதனைக்கும் ஒரு நாள் தீர்வு வரும்’ என்பதை, ‘எல்லா மழையும் நின்றே தீரும்’ என்னும் கதைத் தலைப்பின் மூலம் வாசகனை உணரவும் வைக்கிறான் படைப்பாளன்.

வைரமுத்து ஒரு சிறுகதை எழுத்தாளன் மட்டுமல்ல, அவன் தேர்ந்த ஒரு ‘சிறுகதைச் சிற்பி’யும் ஆவான்!

****************************************************************************************************************************************************

என் விமர்சனங்களால் பெரிதாகப் பயன் விளைவதில்லை என்பதால், வைரமுத்துவின் கதைகள் பற்றிய விமர்சனங்கள் இனி இடம்பெறா.

****************************************************************************************************************************************************








ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வாழ்க...வாழ்க! ஜாதிச் சங்கங்கள் வாழ்க!!

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, அப்படியொருவர் இருப்பதாக மனிதர்கள் நம்ப ஆரம்பித்து ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவரை இவர்கள் 100% நல்லவர் என்றே நினைத்தார்கள். அவரை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை என்றும் எண்ணினார்கள். ஆனாலும், அந்த நல்லவரும் வல்லவருமான கடவுளை இவர்கள் ஒருபோதும் முழுமையாக நம்பியதில்லை.

நம்பாத காரணத்தால்தான், கடவுளுக்கே உரிய சில செயல்பாடுகளை இவர்கள் தமக்குரியவையாய் ஆக்கிக்கொண்டார்கள்.

தம்மை நிந்திப்பவர்களைத் தண்டிக்க வேண்டியவர் கடவுள் மட்டுமே. தண்டிப்பதா, மன்னிப்பதா என்று முடிவெடுக்க வேண்டியவரும் அவரே.

இந்த உண்மை, மத வெறி பிடித்த மனித மிருகங்களுக்கு மறந்துபோனதன் விளைவாகக் கடவுள் மறுப்பாளர்கள் அல்லது, மாற்று மதத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அரங்கேறின; சித்ரவதைகள் தொடர்ந்தன; இவற்றின் விளைவு ஏராள உயிர்ப்பலிகள்.

கடவுள் மறுப்பாளர்களைச் சாடுவது அல்லது அவர்களுக்கு எதிராகப் போராடுவது போன்ற காரியங்களில் மதவாதிகளும் பக்தகோடிகளுமே ஈடுபட்டு வந்தார்கள். இன்று நிலைமை மாறியிருக்கிறது. எப்படி?

’மாதொரு பாகன்’ என்னும் நூலின் ஆசிரியரான பெருமாள் முருகன், திருச்செங்கோடு அர்த்தனாரி ஈஸ்வரரின் மாண்பையும், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா 14-ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களின் கற்பையும் கொச்சைப்படுத்திவிட்டதாக நாமக்கல் மாட்டத்தில் போராட்டங்கள் தலையெடுத்திருக்கின்றன.

நூலாசிரியர் பெருமாள் முருகன், வருத்தம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மறுபிரசுரம் செய்வதாக, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் கடிதமும் கொடுத்திருக்கிறார். திருப்தி அடையாத போராட்டக் குழுவினர், எழுத்தாளர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்; அவர் கைது செய்யப்பட வேண்டும்; விற்பனையான புத்தகங்களைப் பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து உண்ணா நோன்பு இருக்கப் போகிறார்களாம். இது இன்றைய செய்தி.

இந்தப் போராட்டத்தில், பக்தகோடிகளும் பொது மக்களும் மதவாதிகளும் கலந்துகொள்வதாகச் செய்திகள் வருகின்றன.

இதில் ஜாதிச் சங்கங்களும் பங்கு பெற்றுள்ளன!

கொங்கு வேளாளர், செங்குந்த முதலியார், விஸ்வகர்மா, நாட்டு வேளாளர்கள், நாடார் உள்ளிட்ட ஜாதிகள்!

பெருமாள் முருகன், கல்லூரிப் பேராசிரியர்; இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர்; “நான் பிறந்து வளர்ந்த ஊர் திருச்செங்கோடு. அந்த ஊர் மக்களையும் கடவுளையும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கில்லை; என் எழுத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

இவர் எந்தவொரு அமைப்பையும் சாராதவர். ஒரு குடும்பத்தலைவர்; எளியவர்; உயர் பண்புகள் கொண்டவர்.

இவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றால், மாதொருபாகனே அந்தத் தண்டனையை வழங்கட்டும்.

விரும்பினால் போராட்டக்காரர்கள் அவரிடமே ‘முறையீடு’ வைக்கட்டும். முறையீடு வைப்பது இந்த வட்டார மக்களிடம் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம்தான்.

அதைவிடுத்து, புத்தக எரிப்பு; கண்டன ஊர்வலம்; உண்ணாநோன்பு; அரசிடம் கோரிக்கை என்பவை எல்லாம் தேவைதானா?

“ஆம்” என்றால், மாதொருபாகனை வழிபடும் போராட்டக்காரர்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை இல்லை என்றாகிறது.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo








சனி, 10 ஜனவரி, 2015

எஸ். ராமகிருஷ்ணன் என்னும் நட்சத்திர எழுத்தாளரும், ‘நட்டு’ கழன்ற வாசகனும்!!!

கதை, கவிதை, கட்டுரையெல்லாம் எழுதுகிறவர் எழுத்தாளர் ஆவார். வாசகர் பலராலும் அறியப்பட்டிருந்தால் அவர் பிரபல எழுத்தாளர். அது யாருங்க நட்சத்திர எழுத்தாளர்? “உன்னை மாதிரி முட்டாள்களால்தான் எங்க மாதிரி ஆட்கள் பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்க முடிஞ்சது”ன்னு வாசகனைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறவரா?!

14.01.15 விகடனில் ‘கொஞ்சம் அதிகம் இனிப்பு’ என்னும் சிறுகதையை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

‘கன்னையா’ரியல் எஸ்டேட் தொழிலில் ஏழு வருட அனுபவம் உள்ளவன்; ரெக்கார்டுகளை மாற்றி, போலி டாக்குமெண்ட்ஸ் தயார் செய்யவும் தயங்காதவன்; “நம்ம தொழிலில் யாராயிருந்தாலும் பாவம் பார்க்கக் கூடாது” என்ற ‘தொழில் தர்மம்’ தெரிந்தவன்.

இப்படிப்பட்ட ஒரு பணம் பொறுக்கி எப்படித் திருந்தினான், அல்லது ராமகிருஷ்ணன் அவனை எப்படித் திருத்தினார் என்பதுதான் விகடனின் ஆறு பக்கக் கதை. என்னைப் போன்ற கத்துக்குட்டி எழுத்தாளர்[???]களுக்கு விகடனில் அரைப் பக்கம் போதும்.

அருள்செல்வம், பிறவியிலேயே பார்வை இல்லாதவன்; காலேஜ் வாத்தியார். அவன் மனைவி சியாமளாவுக்கும் பார்வை கிடையாது. வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பவர்.

வீட்டுமனை வாங்கும் ஆசையில் கன்னையாவை இவர்கள் அணுகுகிறார்கள்.

‘இப்படிப்பட்ட ஏமாளி நம்மிடம் வந்து சிக்கினானே’ என நினைத்தான் கன்னையா. தான் தயாரித்த டூப்ளிகேட் டாக்குமெண்ட்களைத் தன் உதவியாளன் மூலம் அருள்செல்வனிடம் சேர்த்தான்.

‘இதை யார் சரி பார்த்தாலும் இந்த நிலத்தின் மீது[இது ஷெட்டி என்பவருக்குச் சொந்தமானது. கன்னையாவுக்கு மூன்று லட்சம் கமிஷன் தருவதாகப் பேச்சு] கேஸ் உள்ள விஷயம் யாருக்கும் தெரியாது’ என்று நம்புகிறான்.

கதை சொல்வதில், இந்த ஒரு ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்கி விழுகிறார் ராமகிருஷ்ணன்.

இம்மாதிரி தயாரிக்கப்பட்ட போலிகளைக் கண்டுபிடிக்க முடியாதென்று எந்த நம்பிக்கையில் புரோக்கரைச் சொல்ல வைத்தார் ராமகிருஷ்ணன்? எத்தனையோ போலி ரெக்கார்டுகள் நிலப் பதிவு அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவே!

கதையின் ஆரம்பப் பகுதியில் இடம்பெறும் வாசகங்களைப் பாருங்கள.....

‘இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய்க் காட்டிவிட்டான் கன்னையா. கோர்ட் கேஸ் காரணமாக வில்லங்கம் இருக்கிறது என்று யாருமே வாங்க முன்வரவில்லை’.

எழுத்தாளருக்கு, கதையின் தொடக்கப் பக்கத்தில் சொன்னது இடையே மறந்துபோனது எப்படி என்று தெரியவில்லை.

இந்தக் கதையில், நம்மைப் பேராச்சரியத்தில் மூழ்கடிப்பது எது என்றால், “எங்களுக்குக் கண் தெரியாது. ஈஸியா ஏமாத்திடலாம்னு நினைக்கிறாங்க.” என்று சொல்கிற பார்வையற்ற, மெத்தப் படித்த கல்லூரி ஆசிரியரும் அவர் மனைவியும், ஒரு உதவியாளர்கூட வைத்துக்கொள்ளாமல், கன்னையாவுடன் சென்று வீட்டுமனையைப் பார்வையிடுவதும், அவனை முழுமையாக நம்பி, பதிவு அலுவலகத்தில் ‘வில்லங்கம்’ சான்றிதழுக்குக்கூட விண்ணப்பிக்காததும்தான். “டாக்குமெண்ட் செக் பண்ணிட்டேன். ஒண்ணும் பிரச்சினை இல்லை” என்கிறான் அருள்செல்வம்.

யாருடைய உதவியுடன் எப்படிச் செக் பண்ணினான் என்ற விவரம் கதையில் இடம்பெறவே இல்லை!

அது மட்டுமல்ல, “ஏன்னு தெரியல. உங்க மேல நம்பிக்கை வந்திருச்சி. யார்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கல” என்று வேறு தம்பதியர் சொல்கிறார்கள்.

என்னதான் இனிக்க இனிக்கப் பேசினாலும் முன்பின் அறிமுகமில்லாத ஒரு புரோக்கர் மீது இவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது எப்படி என்று நமக்குப் புரியவே இல்லை. ராமசிருஷ்ணருக்குத்தான் வெளிச்சம்.

இதற்கு மேல் கதையில் சொல்ல ஒன்றுமில்லை. விகடனின் பெரிய சைஸில் ஆறு பக்கம் தேத்துவதற்காகத் தேவையற்ற உரையாடல்களையும் சம்பவங்களையும் சேர்த்திருக்கிறார் கதாசிரியர்.

இனி, கன்னையா மனம் திருந்திய அந்த சஸ்பென்ஸை உடைத்துவிடலாம்.

பேரம் பேசி முடித்து, விலை படிந்து, உரிய பணத்துடன் பத்திரப்பதிவுக்கு அருள்செல்வன் தயாராயிருந்த நிலையில், கன்னையாவை இவர்களின் வீட்டுக்கு உணவருந்த அழைக்கிறார்கள் அருள்செல்வன் தம்பதியர்.

தான் தயாரித்த கேசரியைக் கன்னையனுக்குக் கொடுத்த சியாமளா, “இனிப்பு அதிகமா?” என்கிறாள். “ஆமா” என்கிறான் கன்னையன்.

“நான்தான் வேணும்னே நாலு கரண்டி சர்க்கரை கூடப் போட்டேன். அப்போதான் நீங்க எங்களை மறக்க மாட்டீங்க” என்கிறாள். 

“நமக்கு யாராவது பிடிச்சவங்களா இருந்தா சர்க்கரையைக் கூடப் போட்டுக் கொடுக்கணும்” என்று இறந்து போன தன் அம்மா சொன்னது கன்னையாவுக்கு நினைவு வர நெகிழ்ந்து போகிறான்; மனம் திருந்தி, தனித்துப் போய், செல்போனில் பேசிவிட்டு வந்து, “செட்டி அதிக விலைக்கு வேற பார்ட்டிக்குக் கொடுக்கிறதா முடிவு பண்ணிட்டார். உங்களுக்கு வேறே இடம் பார்த்துத் தர்றேன்” என்கிறான்.

கதைக்குச் சம்பந்தமே இல்லாமல், காசுக்குத் தொழில் செய்கிற, இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத ஒரு புரோக்கரிடம், “நீங்க எங்களை மறக்காமல் இருக்க சர்க்கரை கூடப் போட்டேன்” என்று சியாமளா சொல்வது எத்தனை செயற்கையானது என்பதைப் புகழ் பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

இந்தப் பிழையும் கதையில் உள்ள மற்ற பிழைகளும், இவர் போன்ற பிரபலங்கள் மீது நம்பிக்கை வைத்து, இவர்களின் படைப்புகளைப் படிக்கும் வாசகனை முட்டாள் ஆக்குகின்றனவே என்பதுதான் நம் வருத்தம்.

=============================================================================================















  

புதன், 7 ஜனவரி, 2015

குமுதத்தில்[12.01.2015] வைரமுத்துவின் ‘பூனை வளர்த்த’ ஒரு கிழவியின் கதை!

ஒரு கதையைப் படிக்க வைப்பதில் அதன் தலைப்புக்கு முக்கிய பங்குண்டு என்பார்கள். கவிஞரின் ‘மனிதர்களால் ஆனது வாழ்வு’ என்ற, எளிதில் புரியாததொரு தத்துவத்தை உள்ளடக்கிய தலைப்பு கதையைப் படிக்கவிடாமல் நம்மை விரட்டியடிக்கிறது!

கதைத் தலைப்பு:         மனிதர்களால் ஆனது வாழ்வு

‘மரியா’ என்னும் பெயர் கொண்ட ஆஸ்திரேலிய நாட்டுக் கிழவிதான் இந்தச் சிறுகதையின் நாயகி.

‘ஏதோ அற்ப காரணத்துக்காக இவளைத் துரத்திவிடுகிறான் முதல் கணவன். பத்தொன்பது வயது மகளோடு தனித்து விடப்பட்டவள், நாற்பது வயதில் இன்னொருவனை மணக்கிறாள். அவன், இவளின் மகளோடு சிட்னிக்கு ஓடிப்போனது இவளின் இதயத் தசையைக் கிழித்துப் போட்டது; மனிதர்களை வெறுக்கச் செய்தது’ என்கிறார் வைரமுத்து.

அனாதரவான நிலையில், பிரிஸ்பன் நகருக்குச் சற்றுத் தொலைவில் இருந்த, மூத்த குடிமக்கள் வாழ்ந்த ‘ஏரிவனம்’ என்னும் குடியிருப்புக்கு இடம் பெயர்கிறாள் மரியா.

தனிமையைப் போக்க ஒரு பூனை வளர்க்கிறாள்; அதை மிகவும் நேசிக்கிறாள்.

‘என்னுடையது பெர்ஷியன் ஜாதிப் பூனை. உடம்பெங்கும் பொன்னை இழைத்த ரோமம். என்னுடைய பால்ய காலத் தொடையைவிட அது மென்மையானது. நிறையவே செலவழிக்கிறேன். என் படுக்கையில் என் கணவர்களைவிட அதிகம் படுத்தது இந்தப் பூனைதான்” என்று சொல்லிச் சுருங்கிய தோல்களில் வெட்கம் தேக்குவாள் மரியா’..... அவள் நேசிப்பின் ஆழத்தை இப்படிப் புரிய வைக்கிறார் வைரமுத்து.

பூனையுடன் இவள் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே அமைகிறது.

‘அழகிய வீடு மரியாவுடையது. அவள் வீடும் அவளும் ஒப்பனை கலைந்ததில்லை; தேவாலய மணியோசை போன்றவள்; பேச்சில் உற்சாகம் குறைய மாட்டாள். அவள் தோல் சுருங்கியதுண்டு; மகிழ்ச்சி சுருங்கியதில்லை’ என்கிறார் கவிஞர்.

இப்படியாக, 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவளின் செல்லப் பூனை செத்துப் போகிறது.


உண்மை நிகழ்வை[பூனை இறந்தது] மூடி மறைத்து, கிழவிக்கு மிகவும் வேண்டப்பட்ட யாரோ மரணமடைந்தது போல, கதையைத் தொடங்குகிறார் கவிஞர். சில நிமிட வாசிப்பிற்குப் பிறகு உண்மை வெளிப்படுகிறது[இது, தரமான கதைக் கருவோ, செறிவான உள்ளடக்கமோ இல்லாத கதைகளில் கதையில் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காகக் கதாசிரியர்கள் கையாளுகிற ஒரு தந்திர உத்தி]

“அய்யோ...கிழவி தாங்க மாட்டாளே!”, “மூதாட்டிக்கிருந்த ஒரே துணையும் போய்விட்டதா?” என்று ஏரிவனவாசிகள் அனுதாபப்படுகிறார்கள். பெரும் எண்ணிக்கையில் கிழவியின் வீடு தேடி வருவதாகக் குறிப்பிடுகிறார் கவிப்பேரரசு.

இந்த நிகழ்ச்சி நடைமுறை சாத்தியமானதா?

ஒரு பூனையின் சாவுக்கு ஆஸ்திரேலிய மக்கள் இத்தனை மரியாதை செலுத்துகிறார்களா? [இங்குள்ள கிராமங்களில், மாடுகள் இறந்து போனால் இழவு காணச் செல்வது வழக்கத்தில் இருந்தது. இப்போது இல்லை என்றே சொல்லலாம்]].

‘பூனையின் சடலம் ஒரு தொட்டிலில் கிடந்தது. அதன் மீது ஒரு செர்ரி வெல்வெட் போர்த்தப்பட்டிருந்தது. அந்தத் தொட்டில், ஒரு கண்ணாடிப் பேழையிட்டுக் காற்றுப் புகாவண்ணம் கட்டமைக்கப்பட்டிருந்தது. மரியா பிறந்தபோது அவளை அவள் தாய் இட்ட தொட்டிலாம் அது...... பின்னர் தொட்டிலோடு அது அடக்கம் செய்யப்படுகிறது.’

இதெல்லாம் சரி. செல்லப் பிராணிகள் மீது பாசத்தைப் பொழிவதும், அவை இறந்தால் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்தது போல் துக்கம் அனுசரிப்பதும் எங்கோ சில குடும்பங்களில் நடப்பதுதான்.

இதற்கும் மேலாக, ஊரே திரண்டு வந்து அனுதாபம் தெரிவிப்பது; ஈமச் சடங்கில் கலந்துகொள்வது என்பதாகச் சித்திரிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

கவிஞர் தொடர்ந்து எழுதுவதைக் கவனியுங்கள்.

‘சற்று நேரத்தில், பூக்களும் பூங்கொத்துகளுமாய் அந்த அறை நிறைந்தது.

சிலர் அவள்[மரியா] தலைமீது கை வைத்தார்கள். சிலர் அவள் கரம் பற்றி அழுத்தினார்கள்.........

........புல்வெளியில் நிற்பதற்கு இடமில்லை; அத்துணை கூட்டம்.’

இப்படிக் கற்பனையாக, மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களை இணைத்துக் கதை பின்ன வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது?

கதாசிரியர் வைரமுத்து எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

கதை இத்துடன் முடியவில்லை. நீளுகிறது.

‘குளிர்காலத் தொடக்கம்.........

.....சில நாட்களாகவே மரியாவின் வீடு திறக்கப்படவே இல்லை. அவள் தனிமை விரும்பி என்பதால், அண்டை அயலார் அவளின் நிலை அறிய முயலவில்லை’ என்கிறார் கதாசிரியர்.

பழுதடைந்த அவளின் வீட்டுக் கதவைப் பழுது பார்க்க, பதிவு செய்யப்பட்ட  தச்சன் மரியாவின் வீடு தேடி வருகிறார், உள்ளேயிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து வீதிக்கு ஓடி வருகிறார்.

போலீஸ் வந்து மரியாவின் சவத்தை எடுத்துச் செல்கிறது.

ஏரிவனம் எங்கும் தெரிந்துபோயிற்று மரியாவின் மரணம். யாரும் வரவில்லை; மருத்துவமனைக்குச் செல்ல நாதியில்லை. எங்கே சென்று அஞ்சலி செலுத்துவது? எவரிடம் துக்கம் கேட்பது?.......

..........பூனையின் மரணம் கொண்டாடப் படுகிறது; மனிதரின் மரணம் அனாதையாகிறது’ என்று தத்துவார்த்தமாகக் கதையை முடிக்கிறார் வைரமுத்து.

கிழவியின் வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து  மூச்சிறைக்க ஓடி வந்த தச்சர், அப்பகுதி மக்களிடம் சொன்னதாகவும், மக்கள் மரியா வீட்டின் முன்பு திரண்டதாகவும் நிகழ்ச்சியை அமைப்பதுதானே எதார்த்தம்? 

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், ஊர் மக்கள் சவத்தைப் பெற்று, நல்லடக்கம் செய்து, விரும்பினால் பிரார்த்தனை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதுதானே?

இவ்வாறு, இயல்பான நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காமல், போலீஸ்காரர்கள் ஆம்புலன்ஸோடு மரியாவின் வீட்டை முற்றுகையிட்டு, சவத்தை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்; ‘பூனையின் மரணம் கொண்டாடப்படுகிறது; மனிதரின் மரணம் அனாதையாகிறது’ என்று முடிக்கிறார், 

வைரமுத்து, மிகச் சிறந்த படைப்பாளர் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. என்ன காரணத்தாலோ இந்தச் சிறுகதையை மனம் ஒன்றாமல் படைத்திருக்கிறார்.

இவரின் அடுத்த சிறுகதை ஒரு முழுமையான படைப்பாக  அமைய எமது வாழ்த்துகள்.

==========================================================================================










வெள்ளி, 2 ஜனவரி, 2015

வாசல் இங்கே! சொர்க்கம் எங்கே? [ஓர் ஆன்மிகப் பகுத்தாய்வுப் பதிவு]

'வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் நேற்று[01.01.2015] ‘சொர்க்க வாசல்’ திறக்கப்பட்டது’ - இந்தச் செய்தி, நாளிதழ்கள் அனைத்திலும், இன்று வெளியாகியுள்ளது.

‘ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், “ரெங்கா...ரெங்கா...” கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.’ - இதுவும் பத்திரிகைச் செய்திதான்.

திருச்சிராப்பள்ளி ஸ்ரீரெங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசலை மிதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் லட்சக்கணக்கில். நாடு முழுவதும் இவர்கள் கோடிக்கணக்கானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவர்கள் அத்தனை பேரும் சொர்க்கம் புகுவது சர்வ நிச்சயமா?

இவர்களில் நற்செயல்கள் புரிந்து புண்ணியம் சேர்த்தவர்கள் எத்தனை பேர்? பாவ மூட்டைகளைச் சுமந்து திரிபவர்களின் எண்ணிக்கை என்ன?

‘பாவம் செய்தால் நரகம்; புண்ணியம் செய்தால் சொர்க்கம்’ என்று முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனதெல்லாம் பொய்யா? வெறும் கற்பனையா?

100% மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களின் வாசல்படியை மிதித்தால் சொர்க்கம் புகலாம் என்று யாரோ சிலர் சொல்லிப் போக, கோடானு கோடிப் பேர் அதை நம்பி, இரவெல்லாம், கால்கடுக்க வரிசையில் நிற்பது நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது.

எல்லையில்லாமல் விரிந்து பரந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளியில் எங்கோ ஒரு புள்ளியில் அது இடம்பெற்றிருக்கலாம் எனினும்.....

அதை நம்புகிறவர்கள், ஆயுளில் ஒரு முறை சொர்க்க வாசலை மிதித்தால் போதாதா? ஆண்டுதோறும் மிதித்து வருகிறார்களே, அது ஏன்? அவர்கள் யோசிக்கத் தயாராய் இல்லை.

ஸ்ரீரெங்கம் ரெங்கநாதரைத் தரிசனம் செய்த பக்தகோடிகளே,  ஒன்று கவனித்தீர்களா?

‘நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ரத்தினக் கற்களால் ஆன திரு ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டு ரத்தின அங்கியில் புறப்பட்டு வருவது கண்கொள்ளாக் காட்சி....’ என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள..... ரத்தின அங்கியில் ஸ்ரீரெங்கநாதர்!!!

‘கடவுளைப் புலன்களால் அறிய முடியாது; உணரத்தான் முடியும். அவன், அவனாக, அவளாக, அதுவாக, எதுவாகவும் இருப்பான்; அவனாக, அவளாக, அதுவாக, எதுவாகவும் இல்லை. எனவே, கடவுள் இருப்பதை உணர்வதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. உணர முடியாதவர்கள், உருவ வழிபாட்டின் மூலம் அவனின் அருளைப் பெற முயல்வதில் தவறில்லை’ என்றெல்லாம் ஆன்மிகவாதிகள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் உண்மை இருப்பதாக நம்புகிறவர்கள். சிலை வடிவில் ரெங்கநாதர் போன்ற கடவுள்களை வணங்குகிறார்கள்.

ஆனால், இந்த ரெங்கநாதர்களின் சிலைகளைக் கோடிகோடியாய்ப் பணம் செலவு செய்து அலங்கரிப்பது அறிவுடைமை ஆகுமா?

கடவுள்களை இம்மாதிரி ஆடம்பரப் பிரியர்களாக ஆக்கியவர்கள் யார்?

அவர்களின் உள்நோக்கம் என்ன? அடைந்த பயன்கள் என்ன?

சொர்க்கம் புக ஆசைப்படும் பக்த கோடிகள் இவை பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை. இவர்களை முழு மூடர்கள் என்றோ, செம்மறியாட்டுக் கும்பல் என்றோ நான் ஒருபோதும் இழித்துரைக்க மாட்டேன். மிக்க பணிவுடன் நான் சொல்ல விரும்புவது..........

“கடவுளை நம்புவது உங்கள் விருப்பம். சுய சிந்தனையுடன் வழிபடுவது உங்கள் கடமை.”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++