அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 28 அக்டோபர், 2013

‘சுப்புடுவும் நாய்களும்’ அனுமதிக்கப்படமாட்டார்கள்!!!

‘குமுதம்’ இலவச இணைப்பாக[30.09.2002 இல்], கர்னாடக இசை விமர்சகர் சுப்பிரமணியம் என்கிற ‘சுப்புடு’, ‘வெற்றிக்கு வயது தடையில்லை’ என்ற தலைப்பில் ஓர் அனுபவக் கட்டுரை வழங்கியிருந்தார். அதில்.....

துணிவுதான் விமர்சனத் துறையில் தன்னை முன்னுக்குக் கொண்டு வந்ததாகக் குறிப்பிடும் சுப்புடு.........., “என் விமர்சனப் பாதையில், சொல்லொணாத துன்பங்கள்...வக்கீல் நோட்டீஸ்...அடி உதை...தொலைபேசி வசவுகள்...‘சுப்புடுவும் நாய்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்ற அட்டை விளம்பரங்கள்... திருவையாற்றில், ‘சுப்புடு திரும்பிப் போ’ என்று சைமன் கமிஷன் மாதிரி வரவேற்பு...இவற்றையெல்லாம் சகித்து, தாண்டி, இந்த 86 வயதில் [சுப்புடு 2007 இல் காலமானார்] நான் துள்ளு நடை போடுகின்றேனே... சாதனைக்கு வயது ஒரு குறுக்கீடு அல்ல என்பதற்கு என்னைவிட வேறு சாட்சி என்ன வேண்டும்?” என்று கேட்டு நம்மை மலைக்க வைக்கிறார்!

கர்னாடக இசையை வெறுத்தவர்கள்கூட சுப்புடுவின் விமர்சன எழுத்து நடைக்குத் தம் மனதைப் பறி கொடுத்தார்கள்; அவர் விமர்சனங்களைத் தொடர்ந்து படித்தார்கள்.

கீழே இடம்பெறுவது அவருடைய இசை விமர்சனம் அல்ல; 1942 ஆம் ஆண்டில், ஜப்பான்காரனின் குண்டுவீச்சுக்கு அஞ்சி, பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளில் ஒருவராக இருந்த சுப்புடுவின் அனுபவப் பகிர்வு இது [இலவச இணைப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி]...........

எந்தவொரு இடத்திலும் கை வைக்காமல் [பெரிய பத்திகளை மட்டும் சிறு சிறு பத்திகளாகப் பிரித்திருக்கிறேன்], வரிக்கு வரி அப்படியே தந்திருக்கிறேன்:


‘நான் ஜப்பானியரால் விரட்டப்பட்டு, 1942 ஆம் வருஷம் இந்தியாவுக்குப் பாதயாத்திரை செய்தேன். நான் மட்டுமல்ல; இன்னும் 4,00,000 [நான்கு லட்சம்] அகதிகள்; 480 மைல் கால்நடைப் பயணம்.

ஆறு நதிகள்; ஏழு மலைகள் தாண்ட வேண்டும். நீங்களே யோசித்துப் பாருங்கள்...நடக்க முடியுமா? அதில் ஒரு லட்சம் பேர் மாண்டு போனார்கள். அது கிட்டத்தட்ட ஒரு பிரளயம்.

1942, ஜூன் மாதம் 2ஆம் தேதி என்று ஞாபகம். அந்தத் தேதி நள்ளிரவில் நாங்கள் சிரபுஞ்சி மலையின் உச்சியில் இருக்கிறோம். எட்டு நாளாகக் கொட்டும் மழை! இடி மின்னல்...நான்கு நாட்களாக அன்ன ஆகாரம் கிடையாது. கொலைப் பட்டினி!

‘போதாததுக்குப் பொன்னியம்மா குறை’ என்பது போல அந்த மலைப் பிரதேசத்தில் அட்டைகள் உறிஞ்சி உறிஞ்சி கால்கள் எல்லாம் சூம்பிப் போய்விட்டன.

அப்போது அந்த மழையில் மின்னல் தாக்கி ஒரு மரமே எரிந்துவிட்டது. இப்போது நினைத்துப் பார்த்தாலும் தேகம் நடுங்குகிறது. அந்தக் கொட்டும் மழையில் மின்னல் தாக்கி ஒரு மரம் எரிய வேண்டும் என்றால் அந்தப் பயங்கரத்தை உங்களால் நினைத்துப் பார்க்க முடியாது.

மரங்கள் வேரோடு பெயர்க்கப்பட்டு மலைச் சரிவில் கீழே போய்க்கொண்டிருந்தன.

எங்களுக்கு வழித்துணையாக ஒரு நாகா கூலி ஆள் இருந்தான். எங்களுடன் வந்த பாபு ஐயர் என்பவருக்கு அட்டை உறிஞ்சி கால்கள் செயலற்றுப் போய்விட்டன! அவரைக் கூடையில் வைத்து முதுகில் கட்டிக்கொண்டு அந்த நாகா எங்களுக்குத் துணையாய் வந்தான்.

அவன் பாஷை எங்களுக்குத் தெரியாது. எங்கள் மொழி அவனுக்குத் தெரியாது. எல்லாம் சைகை பாஷைதான். அவன் சொன்னான்: “இனி இங்கு இருப்பது ஆபத்து. எந்த நிமிஷமும் நாமெல்லாம் அடித்துச் செல்லப்படலாம். அதோ தெரிகிறதே ஒரு மலை, அதில் ஒரு விளக்குத் தெரிகிறது பாருங்கள்...அங்கே போய்விடலாம்” என்று அவன் ஜாடையில் சொன்னதை நாங்கள் சிரமப்பட்டுப் புரிந்துகொண்டோம்.

எங்களுக்கெல்லாம் பயம். ஏனெனில், நாகாக்கள் நரமாமிசப் பட்சிகள் என்று எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இவனை நம்பிப் போனால் ஸ்வாஹாதான் என்று என் சகாக்கள் அனைவருமே வர மறுத்துவிட்டார்கள்.

நான் அந்த நாகாவிடம் சைகை பாஷையில் சொன்னேன்: “நாங்கள் வரத் தயார். நீ எங்களைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?”

அப்போதுதான் அது நடந்தது. அந்த நாகன், தன் பனியனுக்குள் கைவிட்டு, ஏசுநாதரின் சிலுவையை எடுத்துக் காட்டினான்.

அசந்து போனோம். அவனைத் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் தள்ளாடி நடந்தோம்.

அங்கே ஒரு கிறிஸ்தவ தேவாலயம்; மரத்தூண்களால் வேயப்பட்டது. அங்கு சென்றதும், தன் கைகளைக் கூப்பி நாக மொழியில் ஏதோ உரக்கச் சொன்னான்.

அப்போது நள்ளிரவு.

அந்த ஆலயத்திலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பாதிரியார் கையில் அரிக்கேன் விளக்குடன் குடை பிடித்துக்கொண்டு வந்து கேட்டைத் திறந்து, “கமான் ஜெண்டில்மேன்” என்று அகமும் முகமும் மலர அன்புடன் எங்களை வரவேற்றார்.

நான் அங்கு தெய்வத்தைக் கண்டேன். நாங்கள் என்ன ஜாதி...என்ன மதம்...மூச்!...ஒரு கேள்வி கிடையாது. அங்கு மனிதநேயம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.

எங்களை அமரச் சொல்லிவிட்டு, ஒரு 40 கஜம் கைத்தறித் துணியை எங்கள் முன் வைத்து, “உங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு இதை அணியுங்கள்” என்று கூறிய கையோடு தேனீர் தயாரித்துக் கொடுத்தார்.

முழுப் பட்டினி. கேட்கவா வேண்டும்? தேனீரை அண்டா அண்டாவாகக் குடித்தோம்.

அவர் சொன்ன செய்தி எங்களைத் திகைக்க வைத்தது. “எனக்கு முன் இங்கு வந்த சாமியாரை யாரோ சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்கள். நான் வந்து 40 - 50 வருடங்கள் போல் ஆகிறது. எங்கும் போவதில்லை. நாகா மொழியைக் கற்று பைபிளை மொழிபெயர்த்து இவர்களை நல்வழிக்குத் திருப்பியிருக்கிறேன். அருகிலேயே ஒரு மருத்துவமனை, ஒரு பள்ளி, ஒரு கைத்தறி ஆலை எல்லாம் அமைத்து இவர்களுக்கு இசையும் பயிற்றுவித்து வருகிறேன்.”

வயதான நிலையிலும், அடர்ந்த காட்டில், மனிதக் கறி தின்னும் மலைவாசிகளுக்குச் சேவை செய்கிறார் பாதிரியார் என்பதை யோசித்த போது.....

சேவைக்கும் சாதனைக்கும் வயது ஒரு தடையில்லை என்பது புரிந்தது.’

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo







சனி, 26 அக்டோபர், 2013

பெண் வதை!.....மனம் பதற வைக்கும் வரலாற்று நிகழ்வுகள்.

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. இந்திய வரலாற்றின் ‘ரத்தக்கறை படிந்த  பக்கங்களை’ அவர் படித்ததில்லை போலும்!

‘மன்னர்கள் புரிந்த மாபெரும் குற்றங்களும், அவர்களின் மூடத்தனமான வெறிச் செயல்களும், அவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களும் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணைதான் வரலாறு'என்கிறார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர்.

இந்திய அரசியல் வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட சில நிகழ்வுகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படியுங்கள். பிறகு சொல்லுங்கள்..........

“கவிமணி அவர்களின் கூற்று ஏற்கத்தக்கதா?”

                       *                       *                     *

நாடெங்கும், நீண்ட நெடுஞ்சாலைகள் அமைத்து  நிழல் தரும் மரங்கள் நட்ட அசோகச் சக்ரவர்த்தியை நம் எல்லோருக்கும் தெரியும்.

இவர் கலிங்கப் போருக்குப் பிறகு மனம் திருந்திய மாமனிதர்.

போருக்கு முந்தைய அசோகர்?

இவர், பிந்துசாரரின் 101 புதல்வர்களில் ஒருவர்; சகோதரர்களைக் கொன்று குவித்து ஆட்சியைக் கைப்பற்றியவர்; அதனால், ‘சண்ட அசோகன்’ எனப் பெயர் பெற்றதோடு குற்றம் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியவர்; எதிரிகள் பலரையும் வென்ற மாபெரும் வீரர். ஆனால்............

இந்த அசோகனின் தோற்றம் மட்டும் விகாரமானது!

இவரின் அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிகள் இருந்தார்கள். அவர்களில் யாரோ சிலர் இவரது தோற்றத்தைப் பழித்தார்களாம். அந்தச் சிலரை அடையாளம் காண முடியாததாலோ என்னவோ அங்கிருந்த அத்தனை பெண்களையும் யமனுலகுக்கு அனுப்பினாராம் அசோகச் சக்ரவர்த்தி!

இவரிடம், பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்தது. அந்த விழா வெகு வமரிசையாகக் கொண்டாடப்படும். விமரிசையாக என்றால் எப்படி?

பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பது!

இவனா[ரா] கலிங்கப் போருக்குப் பிறகு அஹிம்சாவாதியாக மாறினான்[ர்]? நம்ப முடியவில்லைதானே?

எதற்கும்  ‘பாகைநாடன்’ எழுதிய ‘கறை படிந்த காலச் சுவடுகள்’ [மூவேந்தர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2004]  ஆய்வு நூலை உடனே வாங்கிப் படித்துவிடுங்கள்.

                                *                      *                          *                                     


அடுத்து வரும் செய்தி உங்களைக் குலை நடுங்க வைக்கும் என்பது 100% உறுதி!

கி.பி.937 இல் காஷ்மீரை ஆண்டவன் ‘வந்தி’ என்னும் பெயர் கொண்டவன். கொடியருள் கொடியனான இவனிடம் இருந்த கொடூரமான ஒரு பழக்கம்.....

கர்ப்பினிப் பெண்களின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை ரசிப்பது; வேதனையில் தாய் துடிப்பதையும் குழந்தை உயிருக்குப் போராடுவதையும் கண்டு ஆனந்தத்தில் மிதப்பது!


                                *                      *                        *

அடுத்து, தமிழ் மன்னன் ராசராசன் காலத்தில் [கி.பி.1008] நடந்த ஒரு நிகழ்வு.

ராசராசனுக்கும் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நடந்தது. சோழன் வென்றான். சாளுக்கியன் தலைநகர் எரியூட்டி அழிக்கப்பட்டது.

அந்தப்புரத்துப் பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். [போர் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றி ஈட்டிய மன்னர்கள் அ.பு. பெண்களைக் கடத்துவதும், அழகிகளைத் தம் அந்தப்புரத்தில் சேர்ப்பதும் வழக்கமாக இருந்தது]

அப்புறம் நடந்ததுதான் நம் நெஞ்சைப் பதற வைக்கிறது!

சாளுக்கியத் தளபதியின் மகளைப் பிடித்து வந்து அவளின் மூக்கைத் துண்டிக்கிறான் ராசராச சோழன். [ராமாயணம் படித்திருப்பானோ?]

எதிரியைப் பழிவாங்க வேண்டும் என்னும் உச்சக்கட்ட வெறி, எதிரி இனத்துப் பெண்களை இப்படி வதை செய்தால்தான் அடங்கும்போல் தெரிகிறது.

இவனின் பழி வாங்கும் வெறி இத்துடன் முற்றுப் பெறவில்லை. எதிரி நாட்டுப் பெண்களின் மார்க்கச்சுகளை அவிழ்த்து ஓடவிட்டிருக்கிறான்.

                                   *                       *                         *

இந்த ராசராசனை ரொம்ப நல்ல பிள்ளை ஆக்குகிறார்கள், 15 ஆம் நூற்றாண்டு வாக்கில், பாண்டிய மன்னர்களுடன் போர் புரிந்த ஆந்திர நாயக்க மன்னர்கள்.

தோற்றுப் போன மன்னனின் கண் முன்னால், பொது இடங்களில் வைத்து, பலபேர் முன்னிலையில், அவனின் குடும்பப் பெண்களை நிர்வாணமாக்கிக் குண்டர்களை ஏவி கற்பழிக்கச் செய்திருக்கிறார்கள்! [‘நாயக்கர் வரலாறு’ படியுங்கள்]

குடும்பப் பெண்களின் கண் முன்னால், தோற்ற மன்னனின் தோலை உரித்ததெல்லாம் [உயிரோடு] சர்வ சாதாரணமான அன்றைய  நிகழ்ச்சிகள்.

                                 *                       *                        *

கி.பி.1341 இல் மதுரையை ஆண்டவன் கியாஸ் உதீன் என்பவன்.

இவனின் சகலையும், இஸ்லாமிய வரலாற்றாசிரியருமான ‘இபின் பதூதா’ இவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித உருவில் வந்த பேய்’ என்கிறார்.

‘இவன் , பெண் கைதிகளை அவர்களின்  தலை முடியினால் கழுமரத்துடன் கட்டுவான். அவர்களின் குழந்தைகளை அந்தத் தாய்மார்களின் மார்பின்மீது வைத்துச் சித்திரவதை செய்வான்; வெட்டிக் கொல்லுவான்’ என்கிறார் இபின் பதூதா.

இப்படிப் பெண்ணினம் வதைக்கப்பட்டதற்கான ஏராள ஆதாரங்கள் வரலாற்று நூல்களில் உள்ளன.

இன்றளவும், இனக்கலவரம் மதக்கலவரம் என்னும் தீ, இம்மண்ணில் கொழுந்துவிட்டு எரிந்த...எரிகிற போதெல்லாம் கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு இணையாகப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் சாசுவதமான ஒன்றாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்...........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்ற கவிமணியின் கூற்று ஏற்கத்தக்கதா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வெள்ளி, 18 அக்டோபர், 2013

அப்பாவி 60% + பாவி 11% + இரண்டும் கெட்டான் 20% + நல்லவர்கள் 9% >>> 72138999 தமிழர்கள்!!!

உலக நாடுகளில், இனப்பற்று மிகுந்த மக்கள் : ஸ்வீடன் 97%; அயர்லாந்து 97%; கிரேக்கம் 97%; டென்மார்க் 96%; பிரான்சு 92%; இத்தாலி 91%; ஸ்பெயின்  90; பிரிட்டன் 87; ஜெர்மனி 86; ஆலந்து  79%; ---இப்புள்ளிவிவரப் பட்டியலை அளித்தவர், s.sachchithanantham-La France et Les Francais, p. 376.

[இந்தியர்களில், மலையாளி 100%; கன்னடன் 100%; தமிழன்...???]

ரூத் பெனடிக் [Ruth Benedict] என்னும் மானுட இயல் அறிஞர், Pattern of Culture [pp. 57, 131, 123, 173] என்னும் நூலில் உலகில் உள்ள பல்வேறு இனத்தவரின் போர்க் குணங்களை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

அவற்றில் சிலவற்றை, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் தம் நூலில் மேற்கோள் காட்டிய தமிழறிஞர், டாக்டர் க.ப.அறவாணன் அவர்கள், தமிழன் தன்மானம் குன்றி வாழ்ந்ததற்கான காரணங்கள் பலவற்றையும் விவரித்திருக்கிறார்.

குணங்களின் அடிப்படையில் அவன் வேறு வேறாகப் பிரிந்து கிடந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். அவை?

மேலே படியுங்கள்.

ஒன்று:

அப்பாவித் தமிழர்கள் - தண்ணீர்ப் பாம்பு வகையினர் [60%]

இவர்கள் களிமண்ணைப் போன்றவர்கள். திரைப்படம், மேடைப்பேச்சு முதலான கவர்ச்சிகள் மூலம் இவர்களை மிக எளிதாக அடிமை ஆக்க முடியும். தமக்கென்று நிலையான எந்தவொரு கொள்கையும் இல்லாதவர்கள்.  கடவுளையும் கர்மாவையும் முன்னிறுத்தி இவர்களை முட்டாள்களாக்கிப் பின்பற்றச் செய்வது எளிது. இவர்கள் எப்போதும் திரைப்பட / அரசியல் / மத / சாதித் தலைவர்களைச் சார்ந்தே வாழ்வார்கள்.

இரண்டு:

பாவித் தமிழர்கள் [அயோக்கியர்கள்] - நாகப் பாம்பு வகையினர் [11%]

தமிழ்ச் சமுதாயத்தில் 11 விழுக்காட்டினர் என்ற சிறுபான்மை எண்ணிக்கையினர் என்றாலும், மற்றவர்களை அழித்து வாழும் கொடிய குணமுடையவர்கள் இவர்கள்; பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள்; திருவள்ளுவர், ‘கயமை’ அதிகாரத்தில் வடித்துக் காட்டும் அனைத்துத் தீய குணங்களும் உடையவர்கள்; இவர்கள் கையிலேயே செல்வமும் செல்வாக்கும் அதிகாரமும் இருக்குமாறு எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள்.

மூன்று:

இரண்டும் கெட்டான் தமிழர்கள் - தவளை வகையினர் [20%].

தவளை, நீரிலும் நிலத்திலும் வாழ்வது போல இவர்கள் சூழ்நிலைக்கேற்ப நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வாழத் தெரிந்தவர்கள்; நிலையான கொள்கையினர் அல்லர்; அங்கும் இங்குமாகத் தாவிக் கொண்டிருப்பவர்கள்; நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்.

நான்கு:

நல்ல தமிழர்கள் [யோக்கியர்கள்] - கோயில் யானை வகையினர் [09%].

தமிழரிடையே மிகச் சிறுபான்மையினராக இவர்கள் உள்ளனர்; தன்னிடம் வலிமை வாய்ந்த இரு தந்தங்கள், ஆற்றல் மிக்க நீண்ட துதிக்கை, மிகப் பெரிய நான்கு கால்கள், பருத்த உடல், கூரிய இரு கண்கள் இருந்தும், தன்னைவிடப் பன்மடங்கு சிறிய பாகனுக்கும், அவன் கையில் உள்ள சிறு குச்சிக்கும் [அங்குசம்] கோயில் யானை அடங்கிக் கிடக்கிறது; தன்னுடைய பேராற்றலை அறியாமல் இருக்கிறது. அதைப் போலவே, இந்த நல்லவர்களும் தங்களிடமுள்ள பேராற்றலை அறியாமல் இருக்கிறவர்கள்; பதவிப் பாகனுக்கும் அதிகார அங்குசத்துக்கும் அடங்கிக் கிடப்பவர்கள்.

தமிழனை இவ்வாறு வகைப்படுத்திய அறிஞர் அறவாணன், தமிழரிடையே ‘மிக நல்லவர்கள்’ என்னும் பிரிவு சுத்தமாக இல்லை என்கிறார்.

சிறுபான்மையினராக நலிந்திருக்கும்  நல்லவர்கள், தம்மைப் போலவே சிறுபான்மையினராக உள்ள அயோக்கியர்களுக்கு அடங்கிக் கிடப்பது வெட்கக் கேடானது என்று வருந்துகிறார் முன்னாள் துணைவேந்தர்.

தமிழன், தன் அடிமைக் குணத்திலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகளையும் ஆராய்கிறார். அவர் ஆரய்ந்து சொல்லும் வழிகளில் சில..........

சினிமா, மது, சாதி, மதம், கட்சி, கிரிக்கெட் போன்ற நேரத்தையும் உத்வேகத்தையும் வீணடிக்கும் விளையாட்டு, தொலைக்காட்சி, நுகர்வுப் பொருள்கள் போன்றவற்றின் மீது கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

ஓர் இனம் வளர்வதற்கும், உயர்வதற்கும், தளர்வதற்கும், தாழ்வதற்கும் முதன்மைக் காரணம், அவ்வினத்துக்கு அவ்வப்போது அமையும் தலைமை ஆகும்.

முகமது நபி தலையெடுப்பதற்கு முன்பு அரேபியரிடையே ஓயாத போர்கள் நடை பெற்றன. அவர்களை நபி மனம் மாற்றினார்; ஒன்றுபடுத்தினார். உலகத்தின் சரிபாதி நபி நாயகத்தின் பக்கம் சேர்ந்தது.

சிறந்த போர் வீரர்களாக இருந்தும் தமக்குள்ளே சண்டையிட்டு மடிந்ததால், மங்கோலியரால் அரசு எதையும் நிறுவ முடியவில்லை. செங்கிஸ்கான் தலையெடுத்து, உலகின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டினார். அவர் வழி வந்த தைமூர் மன்னனின் கொள்ளுப் பேரனே பாபர்.

அலெக்ஸாண்டரால் கிரேக்க இனம் பெருமை பெற்றது. அசோகனால் மௌரிய இனமும், அக்பரால் இசுலாமிய இனமும், மாசேதுங்கால் சீன இனமும், ஹோ-சி-மின் ஆல் வியட்நாமிய இனமும் பெருமை பெற்றன.

சிங்கப்பூர், சீனா முதலான நாடுகளின் வேகமான வளர்ச்சிக்கு அந்நாட்டுத் தலைவர்களும் அந்நாட்டு அரசியல் சாசனங்களுமே காரணம் ஆகும்.

நம் மாநிலத்தில் வாழும் தமிழினம் முன்னேற வேண்டுமானால், இங்கே மிகச் சிறந்த தன்னலம் கருதாத தலைமை தேவை.

அரசியல் தலைவர்களையும் தலைவிகளையும் மிதமிஞ்சிய வழிபாட்டு வார்த்தைகளால் அர்ச்சித்தும் பூசித்தும் வெட்டுருவங்களை [cut out] நிறுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டியும் பக்தி பாவம் வளர்ப்பதை இங்கு உடனடியாக நிறுத்த வேண்டும்.

சுருங்கச் சொன்னால்...........

சிறந்ததொரு  தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் தமிழனின் அறிவுக்கூர்மை வெளிப்பட வேண்டும். அப்போதுதான்,  தமிழன் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பான்.

******************************************************************************************************************

நூலாசிரியரைத் தொடர்பு கொள்ள இயலாததால், அவர் அனுமதியின்றியே கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளன. நூல்: ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’- தாயறம் பதிப்பகம், திருச்சி. முதல் பதிப்பு: 2002]

தமிழறிஞர், டாக்டர் க. ப. அறவாணன் அவர்களுக்கு நன்றி.

****************************************************************************************************************





















புதன், 16 அக்டோபர், 2013

தமிழன் போல் ‘தன்மானம் கெட்ட’ இனம் இந்தத் தரணியில் இல்லை!!!

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பேசி... வாழ்ந்த...வாழும் தமிழ் மன்னர்களோ மக்களோ, ‘தமிழன்’ என்னும் உணர்வுடன் ஓர் இனத்தவராக ஒரு போதும் ஒன்றுபட்டு வாழ்ந்ததில்லை!!!

மாறாக, சேரர் குடியினர், சோழர் குடியினர், பாண்டியர் குடியினர், வேளிர் குடியினர் என வேறு வேறு குடியினராகப் பிரிந்தும், பிளந்தும், பகைத்தும் நின்றனர். தமக்குள்ளே போரிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர்.

இவர்கள் வாழ்வில் சமயங்கள் ஊடுருவிய பிறகு சைன மதத்தார் எனவும், பௌத்த மதத்தார் எனவும், சைவ மதத்தார் எனவும், வைணவ மதத்தார் எனவும் மத அடிப்படையில் பிரிந்து நின்றனர்.

பிற்காலத்தில், இவர்களே இசுலாமியர், கிறித்தவர் என மாறுபட்டு வாழ்ந்தனர்.

பல்லவர் காலம்  தொடங்கிச் சாதிப் பிரிவுகள் வலுப் பெற்றன. தமிழ் மக்கள் அனைவரும் பல்வேறு சாதிப் பாகுபாடுகளில் புதையுண்டனர்.

ஐரோப்பியரின் வரவும் உறவும் ஏற்பட்ட பிறகு காரல் மார்க்ஸ் கருத்து இங்கு பரவியது. சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய பொதுவுடைமை நாடுகளின் செல்வாக்கும் இணைந்து கொண்டது. இதன் விளைவாக, வர்க்க அடிப்படையில் மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என்று மக்கள் பிரிந்தனர்.

வெள்ளைக்காரனிடமிருந்து காப்பியடித்துக் கற்றுக்கொண்ட கட்சிவழி அரசியல் ஒன்றிப் பரவிய பிறகு அதே தமிழ் மக்கள் வேறு வேறு கட்சியினாராய்ப் பிரிந்தனர்.

இப்படிப் பிரிந்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்ட இவர்கள், தமிழர் என எக்காலத்தும் ஒன்று திரண்டு, தமிழினத்தின் தன்மானம் காக்கப் போராடியதில்லை என்பது என்றும் நீங்காத வேதனை தரும் உண்மை.

ஒரு மதத்தார் மறு மதத்தார்க்கும், ஒரு சாதியார் மறு சாதியார்க்கும், ஒரு கட்சியார் மறு கட்சியாருக்கும் குழி தோண்டிக் கொள்கின்றனர். அவர்கள் தோண்டிய குழியில் இவர்களும், இவர்கள் தோண்டிய குழியில் அவர்களும் என அனைத்துப் பிரிவுத் தமிழருமே விழுந்து மடிகின்றனர்.

புறச்சக்திகளின் தலையீடு இல்லாமலே தமக்குள் அடித்துக்கொண்டு அழிகின்றனர்.

தமிழினத்திற்கு இழிவு நேரும்போது ஒன்று பட்டுப் போராடும் போர்க்குணம் இல்லாததால்தான், தமிழன் பல்வேறு வந்தேறிகளுக்கும் அடிமையாக வாழ்ந்திருக்கிறான்; வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள் [1801-1947] ஆகும்.

330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.

விஜய நகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.

{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்]

தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].

ஆர்க்காட்டைத் [சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].

இவ்வாறாக, ஒரு காலத்தில், இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று  [இது சோழர் காலம். அப்போதும் அந்தத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத...நம்மால் மறக்க இயலாத கசப்பான வரலாற்று உண்மை........


..........தமிழனின் ‘அடிமைப் புத்திக்கு’க் காரணங்களாய் அமைந்தவை பல. அவற்றுள் தலையாயது ‘மத நம்பிக்கை’.

தமிழன் பின்பற்றிய மதங்கள் அனைத்தும் [புத்த மதம் விதிவிலக்கு] விதியையும் அடுத்தடுத்த பிறவிகளையும் நம்பியவை. நிகழ்கால வாழ்வில் தாம் படும் துன்பங்களுக்குக் கர்மாவும் கடவுளுமே [சமணம், கடவுளை மறுத்து ஆன்மாவை முதன்மைப்படுத்துகிறது. புத்தர், கடவுள் பற்றி ஏதும் சொல்லவில்லை] காரணம் என்று எண்ணியவை.

‘மனிதப் பிறப்பின் இலக்கு, இறைவன் திருவடியைச் சேர்தலே’ என்று வலியுறுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை.

இவை, தமிழ், தமிழர் என்ற எல்லைகளைக் கடந்து, மதத்தை அவன் மனதில் புதைத்து  தமிழ் உணர்வையும் தமிழன் என்னும் இன உணர்வையும்  மழுங்கடித்துவிட்டன.

இவ்வாறு, இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டதாலேயே மிக எளிதாக மற்ற இனத்தவர்க்குத் தமிழன் அடிமை ஆகிப்போனான்.

கல்விக் கூடங்கள் நிறுவுவதையும் கல்வியின் மீதான பற்றுதலை வளர்ப்பதையும் விடுத்து, கோயில்களை எழுப்புவதிலும், பக்தியை வளர்ப்பதிலும் தமிழ் மன்னர்கள் காட்டிய அக்கறையும் கூட அவர்களின்...அவர்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் இனப்பற்று மழுங்குவதற்குக் காரணமாய் அமைந்துவிட்டது.

3ஆம் நூற்றாண்டு தொடங்கித் தமிழகத்தின் மீது பிற இனத்தவரால் பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்த போதெல்லாம், தமிழ் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களிடமிருந்து போதிய எதிர்ப்பு இல்லாத காரணத்தால், போருக்குச் சற்றும் தொடர்பில்லாத பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

மிகக் கடுமையான மதமாற்றங்கள் வாள் முனையில் நிகழ்த்தப்பட்டன.

குழந்தைகளைக் கடத்திச் சென்று மதமாற்றம் செய்வதும், கோயில் சிலைகள் உடைக்கப்படுவதும், சிலைகள் கடத்தப்படுவதும் நிகழ்ந்தன.

இத்தனை கொடுமைகளையும், ஆயிரக்கணக்கில் மக்கள் மடியும் வகையில் பஞ்சங்கள் ஏற்பட்டதையும், உயிரைக் கொள்ளை கொள்ளும் நோய்களின் தாக்குதல்களையும் தாம் நம்பும் மதங்களும் கடவுளும் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர் தமிழ் மக்கள்.

எல்லாவற்றிற்கும் தம் கர்ம வினையே காரணம் என்பதை நம்பிய அவர்கள் எல்லை கடந்த பக்தி என்னும் சகதியிலிருந்து மீண்டெழும் முயற்சியில் ஈடுபடவே இல்லை.

ஆக, எல்லாம் மதங்கள் பார்த்துக் கொள்ளும்; கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற அபிரிதமான நம்பிக்கையே தமிழினம் தொடர்ந்து அடிமைப்பட்டுக் கிடந்ததற்கான...கிடப்பதற்கான காரணமாய் அமைந்துவிட்டது.

‘நம்மைப் போல், ஆசியாக் கண்டத்தில் அரிசிச் சோற்றை உண்டு வாழும் ஜப்பானியரும், தாய்லாந்தினரும், சீனரும் தொலை நோக்குடன் ஐரோப்பிய வணிக, மத, ஆட்சியாளர்களை தம் நாட்டுக்குள் அனுமதிக்கவே இல்லை’ என்பதையும், உலகில் தமிழனைப் போல் இத்தனை சொரணை கெட்ட இனம் உண்டா என்பதையும் உலக வரலாறு அறிந்த தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

                     *                                          *                                           *

சுருக்கம் கருதி இத்துடன் இப்பதிவுக்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்.

தமிழறிஞர், டாக்டர் க.ப. அறவாணன் [மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்] அவர்கள் எழுதிய, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் நூலிலிருந்து [தாயறம் பதிப்பகம், திருச்சி. முதல் பதிப்பு:டிசம்பர் 2002] தொகுக்கப்பட்டது இப்பதிவு.

அறிஞர் அறவாணன் அவர்களுக்கு நன்றி.

அறவாணன் அவர்கள், தமிழர்களை நான்கு வகையினராகப் பாகுபாடு செய்திருக்கிறார்கள். அதைப் படித்த போது அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. அப்பகுதி அடுத்து வரும் பதிவில் இடம்பெறும்.

திங்கள், 14 அக்டோபர், 2013

இத்தனை கடுமையானதா இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டம்!?!?!?

கற்பழித்தவனைக் கல்லால் அடித்துக் கொல்வது; களவு செய்தவனின் கை கால் வெட்டுவது; கொலை செய்தவனை நாற்சந்தியில் தூக்கில் போடுவது...இவை, இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டத்தை அமல்படுத்தும் நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் என்பது நீங்கள் அறிந்ததே. நீங்கள் அறியாத ஓரிரு “ஐயய்யய்யோ...”க்கள் கீழே.....


இந்திய நாட்டை வெள்ளையர் ஆளத் தொடங்கிய காலக்கட்டத்தில், கி.பி.1771இல்தான் உரிமையியல், குற்றவியல் தொடர்பான வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதுவரை குற்றச் செயல்களுக்கு, இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.

குற்றவாளிகளுக்கு, கைகால் துண்டித்தல்; கல்லால் அடித்தல்; சவுக்கால் விளாசுதல் முதலானவை தவிரக் குலை நடுங்க வைக்கும் தண்டனைகளும் வழங்கப்பட்டன.

உதாரணத்துக்கு, கல்கத்தா கிரானிக்கில்’ [Calcutta Chronicle] என்னும் இதழ், 19.02.1789இல் ஒரு வழிப்பறிக் கொள்ளைக் கூட்டத்தினர்க்குத் தண்டனை விதிக்கப்பட்ட முறை பற்றி  விவரித்திருப்பதைக் கீழே படியுங்கள். [சிந்தனையாளர் வே. ஆனைமுத்து அவர்கள் எழுதிய ‘தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி’{பெரியார் நூல் வெளியீட்டகம், இராயப்பேட்டை, சென்னை}என்னும் நூலிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டன]

‘வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 14 பேரும் அன்று மதியம் ஒரு மணிக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்ட முறை, காணப் பொறுக்காத கொடுமை[என்கிறது கல்கத்தா கிரானிக்கில்].

அவர்களில் ஒருவனை மல்லாத்திப் படுக்க வைத்தனர். அவனது வாயை இறுகக் கட்டிவிட்டனர். உறுப்புகளை வெட்டும்போது திமிராமல் இருப்பதற்காக, அவனது வலது கையையும் இடது காலையும் விட்டுவிட்டு, மற்ற உறுப்புகளை நீண்ட பெரிய ஊசிகளால் நிலத்தோடு இறுகத் தைத்தனர். அவ்வாறு செய்த பின் அவனது இடது கை வெட்டப்பட்டது. அவ்வாறு வெட்டுவதற்கு வளைவான கத்தி பயன்படுத்தப்பட்டது. ஒரே வெட்டாக அவன் கை வெட்டப்படவில்லை. அதற்குப் பதிலாக....

[வாசக நண்பரே, உடம்பெல்லாம் வேர்த்து வெடவெடக்கிறதா? வேர்வையைத் துடைத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே படியுங்கள்]

.....முதலில் மணிக்கட்டு வெட்டப்பட்டது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அவன் கை துண்டிக்கப்பட்டது. அவனது வலது கணுக்காலும் காலும் இதே போல் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுக்கப்பட்டது. ......

.....இவ்வாறு கையும் காலும் வெட்டப்பட்ட பிறகு, வெட்டுக் காயங்கள் உள்ள உடல் பகுதிகள் கொதிக்கும் நெய்யில் தோய்க்கப்பட்டன. அந்நிலையில் அவன் சாக அனுமதிக்கப்பட்டான்.

மீதியிருந்த பதின்மூன்று பேரும் அவ்வாறே கைகால்கள் துண்டிக்கப்பட்டனர். காயங்கள் கொதி நெய்யில் தோய்க்கப்பட்டன......

.....இதில் வியப்பூட்டக் கூடியது என்னவென்றால், அவர்களுள் ஒருவரும் உடனே சாகவில்லை என்பதுதான்.

அப்புறம், வெட்டப்பட்ட கைகளும் கால்களும் ஆற்றில் எறியப்பட்டன. வெய்யிலின் கொடுமை தாங்க மாட்டாமல் அவர்களுள் நால்வர் இறந்தனர்.’

கிரானிக்கில் விவரித்த இந்தக் கொடூர நிகழ்ச்சி ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி, குற்றவாளிகளை மட்டுமல்லாமல், காண்போரையும் துடிதுடிக்க வைக்கும் வகையில் வழங்கப்பட்ட தண்டனைகள் எத்தனை எத்தனையோ!

'இம்மாதிரி, கொடூரமான தண்டனைகளைக் காணச் சகிக்காத வெள்ளையர்கள், 1793இல், ஒழுங்குமுறைச் சட்டம் என்ற பெயரால் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்தார்கள்' என்கிறார் நூலாசிரியர்.

குற்றவாளிகளுக்கு, இ.கு சட்டங்கள் வழங்கிய தண்டனைகளையெல்லாம் ‘ஜுஜுபி’ ஆக்கும் வகையில் தனி மனிதர்கள் சிலர் வழங்கும் தண்டனைகள் அமைந்துவிடுவதுண்டு.

தன் மனைவியைக் கற்பழித்துக் கொன்றவனைக் கட்டிப் போட்டு, அவனின் பிறப்புறுப்பைச் சித்திரவதை செய்து செய்து செய்து, துண்டித்து அவன் வாயில் திணித்து...அப்புறமும் வெறி தணியாமல், துண்டித்த தலையுடன் ஊர்வலம் சென்று காவல் நிலையத்தில் சரணடையும் ஆண்மகன்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் எந்தவொரு குற்றவியல் சட்டத்தையும் அறியாதவர்கள். தன்மானத்துடன் வாழ மட்டுமே ஆசைப்படுபவர்கள்.

####################################################################################

இன்று காலைதான் இந்நூலைப் படிக்க நேர்ந்தது. அரிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இன்றிரவு, கைகால் வெட்டுதல்; கொதிக்கும் நெய்யில் தோய்த்தல் போன்ற பயங்கரக் கனவுகளால் உங்கள் உறக்கம் கெட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!

#####################################################################################











வெள்ளி, 11 அக்டோபர், 2013

நம்பர்: 1 குமுதம் இதழுக்கு நம் வாழ்த்துகளும் வேண்டுகோளும்!

“இறைவா, பாவி ஆத்மா ஒன்னு தவறிடிச்சி. சொர்க்கத்துக்குத்தான் அது வந்துகிட்டிருக்கு. கதவைக் கொஞ்சம் திறந்து வைன்னு சொல்றதுக்குத்தான் நாங்க இந்தச் சங்கை ஊதுறோம். சங்கு விஷ்ணு பகவானுக்குச் சொந்தமானது. சேமகலம் [சேகண்டி] சிவபெருமானுக்குச் சொந்தம். இதைப் போயிக் கேவலமா நினைச்சிக் கிண்டலடிக்கிறாங்களேன்னுதான் வருத்தமா இருக்கு.”

இப்படிச் சொல்வது யார் தெரியுங்களா?

திருவண்ணாமலையைச் சேர்ந்த இரு பள்ளிச் சிறுவர்கள்! சகோதரர்களும்கூட.

இழவு வீடுகளில் சங்கு ஊதும் இவர்களில் ஒருவனுக்கு வக்கீலாக ஆசை. ஏன் இந்த ஆசை? மக்களுக்குச் சேவை செய்யணுமாம்.

இன்னொருத்தன் ஆசைப்படுவது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய.

இத்தனை பெரிய ஆசைகளைச் சுமந்துகொண்டு இவர்கள் இழவு வாசல்களில் சங்கு ஊதுகிறார்களே, இது ஏன்?

ஏழ்மை.

கதிர்வேலுவும் பார்த்தசாரதியுமான இந்தச் சிறுவர்கள், யாரும் இறந்துபோனால், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சங்கு ஊதப் போவார்களாம். “ஒரு நாள் காரியத்துக்குப் போனா இருநூறு ரூபா குடுப்பாங்க. அதைக் கொண்டுவந்து அப்பாகிட்டே குடுத்துடுவேன். அந்தப் பணத்தில் ஒன்னு ரெண்டு டிரஸ் எடுத்துக்குவேன். பள்ளிக்கூட ஃபீஸ் கட்டுறதுக்குப் பயன்படுத்திக்குவேன்” என்கிறான் கதிர்வேலு.

கதிர்வேலுக்குப் பதினான்கு வயதுதான். ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறான். பார்த்தசாரதிக்குப் பதினொரு வயது. ஆறாவது படிக்கிறான். இந்தச் சின்ன வயதில் இழவுக்குச் சங்கு ஊதிச் சம்பாதித்துப் படிக்கிறார்கள் இவர்கள்.

இவர்களின் அப்பாவுக்குப் பூ வியாபாரம். அண்ணன் ஆட்டோ ஓட்டுகிறார். சின்ன ஓட்டு வீடு. பக்கத்திலுள்ள அண்ணாமலையார் பள்ளியில் இருவரும் படிக்கிறார்கள்.

“மூனு வருஷமா சங்கு ஊதிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இழவு வீட்டுக்குப் போய்ச் சங்கு ஊதப் பயமா இருந்திச்சி” என்கிறார்கள் இருவரும்.

பார்த்தசாரதிக்குத் துக்கம் என்பது அவ்வளவாகப் புரிவதில்லை. எங்கு அழைத்தாலும் ஜாலியாகப் போய் சங்கு ஊதிவிட்டு வருவான்.

கதிர்வேல் அவனுக்கு நேர் எதிர். குறும்பான பேச்சும் சிரிப்பும் அவனிடமிருந்து எப்போதாவதுதான் வெளிப்படுகிறது. “சாவைப் பார்த்துப் பார்த்து எனக்கு சகஜம் ஆயிடிச்சி. வயசான கெழங்கள் செத்தா அந்த வீட்டில் ஒருவிதமான சந்தோசம் இருக்கும். வயசுக்காரங்க செத்தா எல்லாரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. எதுவும் என்னைப் பாதிக்கிறதில்லை. யார் செத்தாங்க, ஏன் செத்தாங்க என்பதையெல்லாம் நான் விசாரிக்க மாட்டேன். என் வேலையை முடிச்சுட்டு வந்துட்டே இருப்பேன்.” பிதாமகன் விக்ரம் மாதிரி பேசுகிறான் கதிர்வேலு.

“சங்கு ஊதுவதால் உங்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லையா?”

இந்தக் கேள்வியைப் புரிந்துகொண்டு பதில் சொல்கிறான் கதிர்வேலு: “சங்கடந்தான். ஸ்கூல்ல கேலி பண்ணுவாங்க. நான் அதுக்காகக் கவலைப்படுறதில்ல. படிக்கிறப்பவே சம்பாதிக்கிறேன்னு பெருமையா இருக்கு. இதுவும் ஒரு வகையான ஆத்ம சேவைதான். இல்லீங்களா?” என்கிறான்.

                              *                                *                                    *

வணக்கம் அன்பரே. தங்கள் வருகைக்கு நன்றி.

இப்படியொரு பதிவு , சினிமாக்காரிகளின் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் வார இதழ்களில் முதன்மை இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் குமுதம் இதழில் வெளியானது என்றால் நம்ப முடியாதுதான்.

நம்புங்கள். 29.12.2003 குமுதம் [பொங்கல் மலர்-1] இதழில் இது வெளியானது.

குமுதத்துக்கு ஒரு வேண்டுகோள்........................

குமுதத்தில் இக்கட்டுரை வெளியாகிப் பத்து ஆண்டுகள் போல் ஆகிவிட்டன.

இப்போது, கதிர்வேலுக்கு வயது இருபத்தி நான்கு.

வக்கீலாகி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவனுடைய ஆசை நிறைவேறியதா? அல்லது, நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

இருபத்தொரு வயதான பார்த்தசாரதியின், ராணுவத்தில் சேரவேண்டும் என்னும் ஆசை என்ன ஆயிற்று?

இக்கேள்விகளுக்கான விடைகளை அறியும் பேராவல் குமுதத்தின் ஆயுட்கால வாசகர்களாகிய எங்களுக்கு இருக்கிறது.

குமுதம் மனம் வைத்தால், இந்த இரு லட்சிய இளைஞர்களைப் பற்றி விசாரித்து அறிவிக்க முடியும்.

குமுதத்துக்கு நம் வாழ்த்துகள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@






ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தமிழை அழிக்கலாம் வாங்க!!!

‘கல்வி மாவட்டம்’ என்று போற்றிப் புகழப்படும் நாமக்கல்லில், நீங்கள் தடுக்கி விழுந்தால் ஏதேனுமொரு ஆங்கிலவழிப் [English Medium]பள்ளி வாசலில்தான் விழுவீர்கள்!

அத்தனை பள்ளிகள்!

தமிழ்நாடு அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்கிய போது, “ஏழை எளிய மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியைக் கொடுக்க முடியலையே”ன்னு பல ஆங்கிலப் பள்ளித் தாளாளர்களும் கண்ணீர் விட்டு அழுததாகச் சொல்வார்கள்!!!

அப்புறம் மனம் தேறி, CBSE [Central Board of Secondary Education] க்கு மாறினார்கள்.

அதிலும் திருப்தி அடையாமல், International School எல்லாம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதென்ன, International Schoolனா ஐ. நா.சபையில் அங்கீகாரம் வாங்கணுமான்னு கூமுட்டத்தனமா கேட்டு வைக்காதீர்கள். CBSE க்குத்தான் இப்படியொரு 'உலகத்தரம்’கிற போர்வை போர்த்து எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டிருக்காங்க.

இந்த மாதிரி பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துட்டு, “என் புள்ள நாமக்கல் International School ல படிக்கிறானாக்கும்”னு சொல்லிக்கொண்டு திரிபவர்களை நீங்கள் இன்னும் சந்தித்ததில்லையா?!

இந்த மாவட்டத்தில், ஆங்கிலம் வளர்க்கிற...ஆங்கிலக் கல்வி வளர்க்கிற, ‘கல்வித் தந்தைகள்’...மன்னிக்கணும், ‘கல்விக் கடவுள்கள்’ நிறையவே இருக்கிறார்கள்.

இவர்கள், ஆங்கிலத்தை மட்டுமல்ல, இந்த நாட்டின் தேசிய மொழியாக ஆக்கப்பட்ட இந்தியையும் வளர்க்கிறார்கள்.

இந்தி மொழியைக் கற்றுத் தருவதோடு, ‘இந்தி தினம்’ எல்லாம் கொண்டாடி, மாணவர்கள் மனதில் இந்திப் பற்றை ஆழமாகத் திணிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.

ராசிபுரம், ’எஸ்.ஆர்.வி.எக்ஸெல்’ என்னும் பள்ளி, முந்தைய தினத்தில் ‘இந்தி தின விழா’ கொண்டாடியிருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாமக்கல் சப்-கலெக்டர் அஜய் யாதவ், “நம் தேசிய மொழியான இந்தியைத் திறம்படக் கற்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இச்செய்தியைத் தினத்தந்தியில்[06.10.2013] படிக்க நேர்ந்தது.

இந்தப் பள்ளிகள், ’ஆங்கில தினம்’, கொண்டாடுவதோடு ‘இந்தி தினமும்’ தவறாமல் கொண்டாடுகின்றன. [என்ன காரணமோ, முன்பெல்லாம்  இவர்கள் தினசரிகளுக்குச் செய்தி தருவதில்லை. இப்போது, துணிவு பிறந்துவிட்டது!]

‘ஆங்கில தினம்’, ‘இந்தி தினம்’ கொண்டாடுவது போல், ‘தமிழ் தினம்’ கொண்டாடும் ஆங்கிலவழிப் பள்ளியை [தமிழ்ப் பள்ளிகளே கொண்டாடுவதில்லை என்பது வேறு விசயம்] நான் இன்றுவரை கண்டதில்லை; கேள்விப்பட்டதுமில்லை. நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இல்லை என்றால், அதற்காக வருத்தப்பட்டதுண்டா?

“ஆம்” என்றால் பொது அறிவில்லாத அப்பாவி நீங்கள்!

“இல்லை” என்றால் புத்திசாலி.

தமிழர்களில், மிகப் பெரும்பாலோருக்கு [999/1000] மொழிப் பற்றோ இனப் பற்றோ இல்லை; மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தால் மட்டுமே கை தட்டுபவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழர்களில் பலரும், ஆங்கிலம் தெரிந்தால் [ஒரு மொழியைக் கற்பதற்கும் மொழியில் கல்வி கற்பதற்கும் வேறுபாடு அறியாதவர்கள் இவர்கள்] உலகெங்கும் வேலை கிடைக்கும். இந்தி தெரிந்தால் தமிழகம் தவிர்த்த மாநிலங்களில் வேலை தேடலாம் என்று நம்புகிறவர்கள்.

‘நம் பாரம்பரியத்தைக் காப்பதற்காகத் தாய் மொழி கற்போம். தேவைக்கேற்பப் பிற மொழிகளும் கற்போம்’ என்ற உயரிய கொள்கை இல்லாதவர்கள். [இது பற்றியெல்லாம் தமிழுணர்வாளர்கள் நிறையவே பேசிவிட்டார்கள்; எழுதிவிட்டார்கள்]

இவர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதைக்கூட வெறுக்கிறார்கள்.

 தமிழன் என்று சொல்லிக்கொண்டே, “மொழி வெறி கூடாது” என்று மேடையேறிச் சிலர் அஞ்சாமல் பேசுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இம்மாதிரித் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான்.

இவர்களை இப்படிப் பேச இனியும் அனுமதிக்கலாமா?

அனுமதிக்காமல் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

“இப்படிப் பேசிப் பேசித்தான் தமிழை அழியும் நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்கள். தமிழ் அழியும் நிலையில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற மொழி வெறியர்கள் தேவை... தேவை...தேவை” என்று முழக்கமிட வேண்டும். இன்னொரு முறை இப்படிப் பேசினால் நடப்பது வேறு” என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.


தேவை நேர்ந்தால், என்ன நடக்கும் என்பதைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும்


செயல்படும் துணிச்சல் இல்லையென்றால், நாமும் அவர்களோடு இணைந்து ‘தமிழ் அழிப்பு’ வேலையைச் செய்யலாம்.

“ஆங்கிலம் படித்தால் அயல்நாடுகளில் வேலை கிடைக்கும். இந்தி படித்தால் மத்திய அரசில் வேலை கிடைக்கும். தமிழ் படித்தால் என்ன கிடைக்கும்?" என்று அவர்கள் வழியில் மேடை ஏறி முழங்கலாம்.

பிள்ளைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் வைப்பதை அறவே தவிர்க்கலாம். ஏன், வீட்டில் தமிழ் பேசுவதையே தடை செய்துவிடலாம்.

இந்தி படித்து முழு இந்தியனாக மாறிவிடலாம். வாய்ப்புக் கிடைத்தால் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ குடியேறி அந்நாட்டு நிரந்தரக் குடிமகனாக [ஆங்கிலேயனாக] மாறலாம்.

இவற்றில் நாம் ஏற்றுச் செய்ய வேண்டியது எது என்று முடிவு செய்ய வேண்டிய இக்கட்டான தருணம் இதுவாகும்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



























வெள்ளி, 4 அக்டோபர், 2013

"தமிழ்நாடு பிரியும்” ---சுஜாதா அன்று ஏன் இப்படிச் சொன்னார்?!?!

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, 'நீட்' திணிப்பு, மூடநம்பிக்கைத் திணிப்பு, கடைசியாகக் கன்னடன் சூரப்பாவின் துணைவேந்தர் நியமனம்  என்று எதை எதையோ திணி திணி என்று திணித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு. 

அடுத்து வருவது, சற்று முன்னர்[08.09.2020 காலை 07.35 மணி] தினத்தந்தி நாளிதழில் வாசித்த ‘திடு’ செய்தி.

//                                   இந்திப் பிரிவில் தமிழர்களுக்குப் பணி

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தித் திணிப்பு

                 ஜி.எஸ்.டி. உதவி கமிஷணர் பரபரப்புக் குற்றச்சாட்டு                //

தமிழனுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிற இன்றைய சூழலில் எழுத்தாளர் சுஜாதாவின் இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.

“இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட!

கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன்.

ன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் டைப் அடித்தும், கயிறு சுற்றியும், மூடி போட்டும், லேபிள் ஒட்டியும் அற்பத்தனமான வேலைகளில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள், டெக்னாலஜி மூலம்.

இப்போது பல வேலைகள் புதிதாகத் தோன்றிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

ஆஸ்பத்திரிகளில் ஸிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுப்பது; ஃபேக்ஸ் எந்திரம், டெலிபிரிண்டர் ரிப்பேர் செய்வது. கிராமங்களில், சூரிய ஒளி பானல்கள் அமைப்பது; டி.வி க்கு இணைப்புத் தருவது; வீடு வீடாகப் போய் டெலிஃபோனுக்கு செண்ட் அடிப்பது என்று நிறையப் புதுப் புது வேலைகள்.

எல்லாமே சுவாரஸ்யமானவை.

இனி, சுவாரஸ்யமற்ற வேலைகளைக் கணிப்பொறிகள் மட்டுமே செய்யும்.

புதிய வேலைகளுக்குப் புதிய புதிய திறமை கொண்ட மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

இம்மாதிரி தொழில் தெரிந்தவர்களுக்கு மதிப்பு அதிகம்; வருமானமும் அதிகம். ஒரு நாள் டெக்னீஷியன் வரவில்லையென்றால், சில டாக்டர்கள் ஆயிரக் கணக்கில் வருமானம் இழப்பார்கள்.

இனி வருங்காலத்தில், தவிர்க்க இயலாத இந்த டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியால், சில அடிப்படைகள் கலைக்கப்பட்டுவிடும்.

அறுபது, எழுபது வயது முதியவர், டெலிஃபோன் மூலம் ஒரு சிக்கலான சாதனத்தைப் பழுது பார்த்துத் திருத்த முடியும்; தூரத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவார், தன் ஞானத்தை...அனுபவத்தைப் பயன்படுத்தி, ஒரு தாய் தொட்டிலை ஆட்டிக்கொண்டே அவ்வப்போது ஒரு கணிப்பொறித் திரையில் சில தனிப்பட்ட செய்திகளை விரும்பினவர்களுக்குத் தர முடியும். பன்னிரண்டு வயதுச் சிறுமி தன் பன்னிரண்டு வயதுத் திறமைகளை மட்டும் பயன்படுத்தி மாதம் ஐயாயிரம் சம்பாதிக்க முடியும்.

மற்றபடி, வீடு பெருக்குதல், சாணி தெளித்தல், அலம்புதல், கூட்டுதல், இணைத்தல் போன்ற ‘போர்’ அடிக்கும் வேலைகளை இயந்திரங்கள் செய்யும்.
வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைக்கும்

எந்தத் திறமையாக இருந்தாலும் அதற்கேற்ப வேலை கிடைக்கும். 
வேலை எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்

இந்தியாவில் இந்த நிலை எப்போது வரும் என்று கேட்பின் இந்த நாடு முதலில் சில சௌகரியமான அம்சங்களாகப் பிரிய வேண்டும்.


கர்னாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் யாவும் ஜப்பானையும் விட அதிகப் பரப்பளவும் ஜனத்தொகையும் கொண்டவை.
இவை அனைத்தும் தனிப்பட்ட சுதந்திரப் பிரதேசங்களாக நிச்சயம் பிரிந்துவிடும். இந்தப் பிரிவைப் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை. இப்போது, முன்னாள் சோவியத் யூனியன் போல, ஐரோப்பியக் கண்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இதற்கு முகமன் கூறுகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் பிரிந்த பின் அவை கலாச்சாரத்திலும் இனத்திலும் ஒன்றுபட்டு செங்குந்தர், நாடார், ஐயங்கார், கானாடுகாத்தான் செட்டியார் போன்ற பிரிவினைகள் இல்லாமல், ‘ஜப்பானியன்’ என்பது போல, ‘தமிழன்’ என்ற ஒருமை கிடைப்பது இந்த மாறுதல்களுக்கு முதன் முதல் தேவை.

என் கணிப்பில் இது நிகழ இன்னும் முப்பத்தேழு வருஷங்கள் ஆகும்.

 *                                *                               *
சுஜாதாவின் [மறைவு: ஃபிப்ரவரி 27, 2008] இந்தக் கணிப்பு வெளியாகி [கட்டுரை 1993 எழுதப்பட்டது] 24 ஆண்டுகள் முடிந்துவிட்டன.


இன்னும் 13 ஆண்டுகளில் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டும். இது சாத்தியமா?

“சாத்தியமே” என்று நான் சொல்ல மாட்டேன். சொன்னால்.....

அடுத்த என் பதிவு வெளிவருவதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விடும்!!!

நீங்கள் சொல்லலாம்..........

 உங்கள் மனதுக்குள்! எத்தனை முறை வேண்டுமானாலும்!!