ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தமிழை அழிக்கலாம் வாங்க!!!

‘கல்வி மாவட்டம்’ என்று போற்றிப் புகழப்படும் நாமக்கல்லில், நீங்கள் தடுக்கி விழுந்தால் ஏதேனுமொரு ஆங்கிலவழிப் [English Medium]பள்ளி வாசலில்தான் விழுவீர்கள்!

அத்தனை பள்ளிகள்!

தமிழ்நாடு அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்கிய போது, “ஏழை எளிய மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியைக் கொடுக்க முடியலையே”ன்னு பல ஆங்கிலப் பள்ளித் தாளாளர்களும் கண்ணீர் விட்டு அழுததாகச் சொல்வார்கள்!!!

அப்புறம் மனம் தேறி, CBSE [Central Board of Secondary Education] க்கு மாறினார்கள்.

அதிலும் திருப்தி அடையாமல், International School எல்லாம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதென்ன, International Schoolனா ஐ. நா.சபையில் அங்கீகாரம் வாங்கணுமான்னு கூமுட்டத்தனமா கேட்டு வைக்காதீர்கள். CBSE க்குத்தான் இப்படியொரு 'உலகத்தரம்’கிற போர்வை போர்த்து எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டிருக்காங்க.

இந்த மாதிரி பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துட்டு, “என் புள்ள நாமக்கல் International School ல படிக்கிறானாக்கும்”னு சொல்லிக்கொண்டு திரிபவர்களை நீங்கள் இன்னும் சந்தித்ததில்லையா?!

இந்த மாவட்டத்தில், ஆங்கிலம் வளர்க்கிற...ஆங்கிலக் கல்வி வளர்க்கிற, ‘கல்வித் தந்தைகள்’...மன்னிக்கணும், ‘கல்விக் கடவுள்கள்’ நிறையவே இருக்கிறார்கள்.

இவர்கள், ஆங்கிலத்தை மட்டுமல்ல, இந்த நாட்டின் தேசிய மொழியாக ஆக்கப்பட்ட இந்தியையும் வளர்க்கிறார்கள்.

இந்தி மொழியைக் கற்றுத் தருவதோடு, ‘இந்தி தினம்’ எல்லாம் கொண்டாடி, மாணவர்கள் மனதில் இந்திப் பற்றை ஆழமாகத் திணிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.

ராசிபுரம், ’எஸ்.ஆர்.வி.எக்ஸெல்’ என்னும் பள்ளி, முந்தைய தினத்தில் ‘இந்தி தின விழா’ கொண்டாடியிருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாமக்கல் சப்-கலெக்டர் அஜய் யாதவ், “நம் தேசிய மொழியான இந்தியைத் திறம்படக் கற்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இச்செய்தியைத் தினத்தந்தியில்[06.10.2013] படிக்க நேர்ந்தது.

இந்தப் பள்ளிகள், ’ஆங்கில தினம்’, கொண்டாடுவதோடு ‘இந்தி தினமும்’ தவறாமல் கொண்டாடுகின்றன. [என்ன காரணமோ, முன்பெல்லாம்  இவர்கள் தினசரிகளுக்குச் செய்தி தருவதில்லை. இப்போது, துணிவு பிறந்துவிட்டது!]

‘ஆங்கில தினம்’, ‘இந்தி தினம்’ கொண்டாடுவது போல், ‘தமிழ் தினம்’ கொண்டாடும் ஆங்கிலவழிப் பள்ளியை [தமிழ்ப் பள்ளிகளே கொண்டாடுவதில்லை என்பது வேறு விசயம்] நான் இன்றுவரை கண்டதில்லை; கேள்விப்பட்டதுமில்லை. நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இல்லை என்றால், அதற்காக வருத்தப்பட்டதுண்டா?

“ஆம்” என்றால் பொது அறிவில்லாத அப்பாவி நீங்கள்!

“இல்லை” என்றால் புத்திசாலி.

தமிழர்களில், மிகப் பெரும்பாலோருக்கு [999/1000] மொழிப் பற்றோ இனப் பற்றோ இல்லை; மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தால் மட்டுமே கை தட்டுபவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழர்களில் பலரும், ஆங்கிலம் தெரிந்தால் [ஒரு மொழியைக் கற்பதற்கும் மொழியில் கல்வி கற்பதற்கும் வேறுபாடு அறியாதவர்கள் இவர்கள்] உலகெங்கும் வேலை கிடைக்கும். இந்தி தெரிந்தால் தமிழகம் தவிர்த்த மாநிலங்களில் வேலை தேடலாம் என்று நம்புகிறவர்கள்.

‘நம் பாரம்பரியத்தைக் காப்பதற்காகத் தாய் மொழி கற்போம். தேவைக்கேற்பப் பிற மொழிகளும் கற்போம்’ என்ற உயரிய கொள்கை இல்லாதவர்கள். [இது பற்றியெல்லாம் தமிழுணர்வாளர்கள் நிறையவே பேசிவிட்டார்கள்; எழுதிவிட்டார்கள்]

இவர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதைக்கூட வெறுக்கிறார்கள்.

 தமிழன் என்று சொல்லிக்கொண்டே, “மொழி வெறி கூடாது” என்று மேடையேறிச் சிலர் அஞ்சாமல் பேசுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இம்மாதிரித் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான்.

இவர்களை இப்படிப் பேச இனியும் அனுமதிக்கலாமா?

அனுமதிக்காமல் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

“இப்படிப் பேசிப் பேசித்தான் தமிழை அழியும் நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்கள். தமிழ் அழியும் நிலையில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற மொழி வெறியர்கள் தேவை... தேவை...தேவை” என்று முழக்கமிட வேண்டும். இன்னொரு முறை இப்படிப் பேசினால் நடப்பது வேறு” என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.


தேவை நேர்ந்தால், என்ன நடக்கும் என்பதைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும்


செயல்படும் துணிச்சல் இல்லையென்றால், நாமும் அவர்களோடு இணைந்து ‘தமிழ் அழிப்பு’ வேலையைச் செய்யலாம்.

“ஆங்கிலம் படித்தால் அயல்நாடுகளில் வேலை கிடைக்கும். இந்தி படித்தால் மத்திய அரசில் வேலை கிடைக்கும். தமிழ் படித்தால் என்ன கிடைக்கும்?" என்று அவர்கள் வழியில் மேடை ஏறி முழங்கலாம்.

பிள்ளைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் வைப்பதை அறவே தவிர்க்கலாம். ஏன், வீட்டில் தமிழ் பேசுவதையே தடை செய்துவிடலாம்.

இந்தி படித்து முழு இந்தியனாக மாறிவிடலாம். வாய்ப்புக் கிடைத்தால் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ குடியேறி அந்நாட்டு நிரந்தரக் குடிமகனாக [ஆங்கிலேயனாக] மாறலாம்.

இவற்றில் நாம் ஏற்றுச் செய்ய வேண்டியது எது என்று முடிவு செய்ய வேண்டிய இக்கட்டான தருணம் இதுவாகும்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000