எனது படம்
மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான். ஆசை ஐயா ஆசை... பேராசை! தடை எதுவும் இல்லாவிட்டாலோ அது அடங்கவே அடங்காது!

வியாழன், 8 ஜனவரி, 2026

கேளுங்கள் கிடைக்காது[அறுவைத் தத்துவம்]!

பிறப்பெடுத்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி உயிர் வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத பிற உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, அவற்றிற்கு உணவும் ஆகி அழிந்துபோகிறோம்.

பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில் ஆணும் பெண்ணுமாய்ச்  சதையோடு சதை தேய்த்து, உறுப்பினுள் உறுப்பு சேர்த்துப் புணர்ந்து சந்ததிகளை உருவாக்குகிறோம். இதன் காரணமாக நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களும் படும் துன்பங்களும் எண்ணிலடங்காதவை.

ஆழ்ந்து சிந்தித்தால்.....

மிக மிக மிக இழிந்ததொரு உயிரினமாக நாம் இருந்துகொண்டிருப்பது புரியும்.

கடவுள் எனப்படுபவர் கருணை வடிவானவர் என்று பரப்புரை செய்பவர்களிடமும், அதை நம்பி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் நிகழ்த்தி வழிபடுகிறவர்களிடமும் நாம் முன்வைக்கும் கேள்வி.....

மேற்குறிப்பிட்டவாறும், அற்ப ஆயுளுடனும், காலமெல்லாம் அளவிறந்த துயரங்களைச் சுமந்து அலைந்து திரிந்து சோர்ந்து மடியும் வகையிலும் நம்மைப் படைத்த ஒரு நபரையா கருணை வடிவானவன் என்கிறீர்கள்? வேண்டாம். இனியேனும் அவரைப் புறக்கணியுங்கள். மதவாதிகள் திணித்த பொய்க் கதைகளையும் ஒதுக்குங்கள்.

கணக்கில் அடங்காத வகை வகையான பொருள்களையும் உயிர்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதா, படைக்கப்பட்டதா? நேர்ந்தது எதுவாயினும் அது சாத்தியமானது எப்படி? உயிர்களின் தோற்றம் ஏன்? அவற்றிடையேயான போராட்டங்கள் ஏன்?  என்றெல்லாம் கேளுங்கள்; கேட்போம்.

விடை கிடைக்கிறதோ அல்லவோ கேட்டுக்கொண்டே இருப்போம். நம் சந்ததிகளும் கேட்கட்டும். இதனால், சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.