அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 29 ஏப்ரல், 2017

பெரியாரின் ‘பட்டுச்சேலையும் ஜமுக்காளமும்’ -‘சுருக்’ கதை!

#ஒருத்தியிடம் இன்னொருத்தி பட்டுச்சேலை இரவல் கேட்டாள்.

அந்த ஒருத்தியும் கொடுத்தாள்.

கட்டிக்கொண்டு போகிறவள், ‘இது அடுத்தவள் சேலைதானே’ என்று அலட்சியமாய்க் கண்ட கண்ட இடத்தில் உட்கார்ந்தால் சேலை அழுக்காகும்; எண்ணைக்கறை படும் என்றெல்லாம் இரவல் கொடுத்தவள் கவலைப்பட்டாளாம். அதனால்.....

அவள் போகும் இடங்களுக்கெல்லாம் இவளும் ஒரு ஜமுக்காளத்தைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னால் அலைந்தாளாம்; அவள் உட்காரும்போதெல்லாம் இவள் அவள் அமரும் இடங்களில் எல்லாம் அதை விரித்தாளாம்.

மக்களாகிய நம் கதையும் இதுதான். நம்மால் பதவி பெற்ற அமைச்சர்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் கறைபடாமல் காக்கும் பொறுப்பு நம்முடையதாக இருக்கிறதே#
***********************************************************************************************************************

கதை உதவி: முனைவர் அ.ஆறுமுகம்; ‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’, பாவேந்தர் பதிப்பகம், திருமழபாடி, அரியலூர் மாவட்டம். முதல் பதிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2048[2017]






வியாழன், 27 ஏப்ரல், 2017

தலைவா வா! தலைமை ஏற்க நீ வா!!

“மூன்று மணி நேரம் அவரை[ரஜினி] நெருக்கத்தில் பார்த்தபோது நாவல் எழுதும் அளவுக்கு மனதில் ஒரு கதை பொங்கிப் பொங்கி வந்தது” என்கிறார்  எழுத்தாளர் சாரு. 

குமுதத்தில் தொடர் ஆரம்பித்தபோது[‘கனவு கேப்பசினோ...’], “வயாகரா என்றால் கெட்ட வார்த்தை,  அதைப் பற்றி[வயாகரா மேட்டர்] எழுதக் கூடாது என்கிறார்கள். நான் எழுதப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு, இன்றளவும் அதுகுறித்து[உடலுறவில் ‘திருப்தி’ பெறுதல்]  எழுதாமால் மனம்போன போக்கில் கதையளந்துகொண்டிருக்கும் அந்தச் சாருவா என்றுதானே கேட்கிறீர்கள்?

ஆம், அதே சாருதான்.
பாரதிராஜா தொடங்கியிருக்கும் நடிப்புப் பயிற்சிப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட 100 பேரில் தாமும் ஒருவர் என்று பீத்திக்கொள்ளும் சாருதான் மேற்கண்டவாறு ரஜினியை உச்சிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டாடியிருக்கிறார்.

ரஜினி சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சூப்பர் ஸ்டார் என உலகின் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். 

அவ்வப்போது இமயகிரி சென்று தியானம் புரிந்து ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவதாகச் சொல்லும் அவரை, சூப்பர் ஆன்மிகவாதி என்றும் சொல்லலாம். “நடிகன் என்பதைவிடவும் ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று அவர் அறிவித்ததும் இங்கு கருதத்தக்கது.

சூப்பர் ஸ்டாரும் சூப்பர் ஆன்மிகவாதியுமான இந்த ரஜினி குறித்து இந்த வாரக் குமுதத்தில்[03.05.2017].....

‘மொட்டை மாடியில் வந்து அமர்ந்த பிறகும் அவர் எதிரே முப்பது புகைப்படக்காரர்கள் அவரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள்’ என்று பிரமிக்கிறார் சாரு. பிரமிக்கட்டும்.

‘பிறந்த குழந்தையிலிருந்து பல் போன கிழவர் வரைக்கும் ரஜினியைப் பிடிக்கிறது. அதுவும் 40 ஆண்டுகளாக என்றால் அதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் வசீகரம்தானே? இதற்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும்! எப்பேர்ப்பட்ட கர்மா!’ என்றெல்லாம் மெய்சிலிர்க்கிறார். சிலிர்க்கட்டும்.

‘ரஜினியை வைத்து நாவல் எழுதுவேன்’ என்கிறார். எழுதட்டும்.

‘அவருக்கு மராட்டி தாய்மொழி; கன்னடம் பேச்சுமொழி’ என்றும் சொல்லியிருக்கிறார்; ‘தமிழ், அவருக்கு உயிர்மொழி’ என்றும் புகழ் பாடியிருக்கிறார்  நடமாடும் வயாக்கரா[குமுதம் வழங்கிய பட்டம். மேலும்வாசிக்க..... 
http://kadavulinkadavul.blogspot.com/2016/04/transgressive.html... 
http://kadavulinkadavul.blogspot.com/2016/04/blog-post_60.html ]

ரஜினி ஒரு நடிகர்; ஓர் ஆன்மிகவாதி[!]; “கட்சி தொடங்கு”, “கட்சியில் சேர்” என்றெல்லாம் விரிக்கப்படும் எந்தவொரு சூழ்ச்சி வலையிலும் சிக்கிக்கொள்ளாமல், தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்பவர்; யாருடனும் ‘வம்புதும்பு’க்கு இடம் தராதவர்;  தான் நடித்த புதிய படங்கள் வெளியாகும்போது, பஞ்ச் டயலாக்குகள் விட்டு, ரசிகன் மனத்தில் சில எதிர்பார்ப்புகளை விதைத்து வசூல் சாதனை நிகழ்த்தும் வித்தை தெரிந்தவர்.

மற்றபடி, தமிழில் பேசி நடிக்கிறார் என்பதைத் தவிர, இவருக்கும் நம் தாய்மொழியாம் தமிழுக்கும் எந்தவொரு பந்தமுமில்லை.

உண்மை இதுவாக இருக்க.....

தமிழ் ‘ரஜினியின் உயிர்மொழி’ என்கிறார் சாரு. இப்படிச் சொல்ல அவரால் எப்படி முடிந்தது?

“தமிழ் என் உயிர்மொழி” என்று நடிகர் சொல்லியிருக்கிறாரா?  ‘இந்த வகையிலெல்லாம் நான் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறேன்’ என்று பட்டியல் வெளியிட்டிருக்கிறாரா? “செய்வேன்” என்றாவது அறிக்கை விடுத்திருக்கிறாரா?

தமிழ் என்னும்  உயிர்மூச்சுக் காற்றுப் பட்டதால் இவரின் ரசிகர் பட்டாளம், “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்” என்று தெருத் தெருவாய் முழக்கமிட்டுத் தமிழைக் காக்கவும் வளர்க்கவுமான சீரிய பணியைச் செய்திருக்கிறதா?

நடிகரின் திருவுருவப் படங்களுக்குப் பாலாபிஷேகமும் பழ அபிஷேகமும் செய்து குதூகளிக்கும் ரசிகர்கள் ஆண்டு தவறாமல், “நீயின்றித் தமிழகம் இல்லை; தலைவா வா, தலைமை ஏற்க வா” என்று வருந்தி வருந்தி உருகி உருகி அழைக்கிறார்கள்; அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழ், ரஜினியின் உயிர்மொழி’ என்ற சாருவின் வாசகம் அவர்களைப் புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

இனி, தங்களின் தலைவனை, “தமிழே, தமிழன்னையை வாழ வைக்கும் தெய்வமே” என்றெல்லாம் புகழ்மாலை சூட்டி ஆரவாரிப்பார்கள். அவர் தலைமை ஏற்கத் தவறினால் உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்கப்போவதாக அச்சுறுத்திப் பணிய வைப்பார்கள்.

ஆக, தாய்மொழிப் பற்றில்லாத தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவரும் அவல நிலையில், இங்கே எவன் வேண்டுமானாலும் தமிழினத்தின் தலைவனாக  ஆகலாம்.

இதற்குச் சாருவைப் போன்ற பிரபலங்களும் அடித்தளம் அமைக்கப் பாடுபடுவது கண்டிக்கத்தக்கது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







"நடிகர் ரஜினியின் உயிர்மொழி தமிழ்”... பொன்மொழி உபயம்: சாருநிவேதிதா!!!

“மூன்று மணி நேரம் அவரை[ரஜினி] நெருக்கத்தில் பார்த்தபோது நாவல் எழுதும் அளவுக்கு மனதில் ஒரு கதை பொங்கிப் பொங்கி வந்தது” என்றும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் சாரு. .

குமுதத்தில் தொடர் ஆரம்பித்தபோது[‘கனவு கேப்பசினோ...’], “வயாகரா என்றால் கெட்ட வார்த்தை,  அதைப் பற்றி[வயாகரா மேட்டர்] எழுதக் கூடாது என்கிறார்கள். நான் எழுதப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு, இன்றளவும் அதுகுறித்து[உடலுறவில் ‘திருப்தி’ பெறுதல்]  எழுதாமால் மனம்போன போக்கில் கதையளந்துகொண்டிருக்கும் அந்தச் சாருவா என்றுதானே கேட்கிறீர்கள்?

ஆம், அதே சாருதான்.
பாரதிராஜா தொடங்கியிருக்கும் நடிப்புப் பயிற்சிப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட 100 பேரில் தாமும் ஒருவர் என்று பீத்திக்கொள்ளும் சாருதான் மேற்கண்டவாறு ரஜினியை உச்சிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டாடியிருக்கிறார்.

ரஜினி சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சூப்பர் ஸ்டார் என உலகின் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். 

அவ்வப்போது இமயகிரி சென்று தியானம் புரிந்து ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவதாகச் சொல்லும் அவரை, சூப்பர் ஆன்மிகவாதி என்றும் சொல்லலாம். “நடிகன் என்பதைவிடவும் ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று அவர் அறிவித்ததும் இங்கு கருதத்தக்கது.

சூப்பர் ஸ்டாரும் சூப்பர் ஆன்மிகவாதியுமான இந்த ரஜினி குறித்து இந்த வாரக் குமுதம்[03.05.2017] இதழில், ‘ரஜினி வந்தபோது சுமார் 100 புகைப்படக்காரர்கள் அவரை மொய்த்துக்கொண்டார்கள்; மொட்டை மாடியில் வந்து  அமர்ந்தபிறகும் அவர் எதிரே தரையில் முப்பது புகைப்படக்காரர்கள் அவரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள்’ என்று பிரமிக்கிறார் சாரு. பிரமிக்கட்டும்.

‘பிறந்த குழந்தையிலிருந்து பல் போன கிழவர் வரைக்கும் ரஜினியைப் பிடிக்கிறது. அதுவும் 40 ஆண்டுகளாக என்றால் அதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் வசீகரம்தானே? இதற்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும்! எப்பேர்ப்பட்ட கர்மா!’ என்றெல்லாம் மெய்சிலிர்க்கிறார் பிரபல எழுத்தாளர். சிலிர்க்கட்டும்.

‘ரஜினியை வைத்து நாவல் எழுதுவேன்’ என்கிறார். எழுதட்டும்.

‘அவருக்கு மராட்டி தாய்மொழி; கன்னடம் பேச்சுமொழி’ என்றும் சொல்லியிருக்கிறார்; ‘தமிழ், அவருக்கு உயிர்மொழி’ என்றும் புகழ் பாடியிருக்கிறார்  நடமாடும் வயாக்கரா[குமுதம் வழங்கிய பட்டம்].

ரஜினி ஒரு நடிகர்; ஓர் ஆன்மிகவாதி[!]; “கட்சி தொடங்கு”, “கட்சியில் சேர்” என்றெல்லாம் விரிக்கப்படும் எந்தவொரு சூழ்ச்சி வலையிலும் சிக்கிக்கொள்ளாமல், தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்பவர்; யாருடனும் ‘வம்புதும்பு’க்கு இடம் தராதவர்;  தான் நடித்த புதிய படங்கள் வெளியாகும்போது, பஞ்ச் டயலாக்குகள் விட்டு, ரசிகன் மனத்தில் சில எதிர்பார்ப்புகளை விதைத்து வசூல் சாதனை நிகழ்த்தும் வித்தை தெரிந்தவர்.

மற்றபடி, தமிழில் பேசி நடிக்கிறார் என்பதைத் தவிர, இவருக்கும் நம் தாய்மொழியாம் தமிழுக்கும் எந்தவொரு பந்தமுமில்லை.

உண்மை இதுவாக இருக்க.....

தமிழ் ‘ரஜினியின் உயிர்மொழி’ என்கிறார் சாரு. இப்படிச் சொல்ல அவரால் எப்படி முடிந்தது?

“தமிழ் என் உயிர்மொழி” என்று நடிகர் சொல்லியிருக்கிறாரா?  ‘இந்த வகையிலெல்லாம் நான் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறேன்’ என்று பட்டியல் வெளியிட்டிருக்கிறாரா? “செய்வேன்” என்றாவது அறிக்கை விடுத்திருக்கிறாரா?

தமிழ் என்னும்  உயிர்மூச்சுக் காற்றுப் பட்டதால் இவரின் ரசிகர் பட்டாளம், “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்” என்று தெருத் தெருவாய் முழக்கமிட்டுத் தமிழைக் காக்கவும் வளர்க்கவுமான சீரிய பணியைச் செய்திருக்கிறதா?

நடிகரின் திருவுருவப் படங்களுக்குப் பாலாபிஷேகமும் பழ அபிஷேகமும் செய்து குதூகளிக்கும் ரசிகர்கள் ஆண்டு தவறாமல், “நீயின்றித் தமிழகம் இல்லை; தலைவா வா, தலைமை ஏற்க வா” என்று வருந்தி வருந்தி உருகி உருகி அழைக்கிறார்கள்; அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழ், ரஜினியின் உயிர்மொழி’ என்ற சாருவின் வாசகம் அவர்களைப் புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

இனி, தங்களின் தலைவனை, “தமிழே, தமிழன்னையை வாழ வைக்கும் தெய்வமே” என்றெல்லாம் புகழ்மாலை சூட்டி ஆரவாரிப்பார்கள். அவர் தலைமை ஏற்கத் தவறினால் உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்கப்போவதாக அச்சுறுத்திப் பணிய வைப்பார்கள்.

ஆக, தாய்மொழிப் பற்றில்லாத தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவரும் அவல நிலையில், இங்கே எவன் வேண்டுமானாலும் தமிழினத்தின் தலைவனாக  ஆகலாம்.

இதற்குச் சாருவைப் போன்ற பிரபலங்களும் அடித்தளம் அமைக்கப் பாடுபடுவது கண்டிக்கத்தக்கது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






சனி, 22 ஏப்ரல், 2017

‘தீ மிதி’ப்பவன் முட்டாள்! தூண்டுபவன் அடிமுட்டாள்!!

இப்பதிவு, பக்தர்களின் மனங்களைப் புண்படுத்துவதற்காக அல்ல; முட்டாள்களைப் பண்படுத்துவதற்காக.
‘திருவாரூர்: நன்னிலம் அருகே தென்குடி கோயில் ‘தீ மிதி’ விழாவில், நெருப்பில் விழுந்து 36 பக்தர்கள் படுகாயம்’ இன்று காலை, 08.30 மணியளவில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ஒலி/ஒளிபரப்பான செய்தி இது.

தீக்குண்டம் மிதிப்பவர்கள் ஒருவகை மனநோயாளிகள். 

அனல் பறக்கும் தீக்குண்ட நெருப்பில் சில நிமிடங்கள் நிற்பதோ உருண்டு புரண்டு எழுவதோ சாத்தியமில்லை என்பது தீ மிதிப்பவர்களுக்குத் தெரியும். தெரிந்தும், குளித்துமுடித்து ஆடையில் நீர் சொட்டச் சொட்ட,  குழியை ஓடிக் கடப்பது கடவுளின் அருளாசி தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்குப் பக்தர்கள் கையாளும் தந்திரம். [‘தீக்குண்ட{பூக்குழி} நெருப்பு சுடாமலிருப்பது பக்தியினாலா?’ http://kadavulinkadavul.blogspot.com/2017/02/blog-post_52.html என்னும் பதிவைப் படியுங்கள்]

தீண்டினால் சுடுவது நெருப்பின் இயல்பு[சிலவகை மூலிகைச் சாறுகளைப் பூசிக்கொண்டு தொட்டால் சுடுவதில்லை. கொதிக்கும் எண்ணையில் கையை நனைத்து வடை சுடுவதன் சூட்சுமம் இதுதான்].

உண்மை இதுவாக இருக்க, கோயில் திருவிழாக்களில் தீ மிதிக்கும் மூடப்பழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

பக்தகோடிகளின் மனம் புண்படக்கூடாது என்று அறிவுஜீவிகளும் ஆளும் வர்க்கத்தினரும் இந்நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள். விளைவு.....

இதுவும் இதுபோன்ற பல மூடப்பழக்கங்களும் இனியும் நிலைபெறும்; வளர்ச்சியடையும் என்பது திண்ணம்!
===============================================================================




வெள்ளி, 21 ஏப்ரல், 2017

‘V.V.V.I.G’க்களும் நேர்ந்துகொள்ளுதலும்!!!

லகப் பிரசித்தி பெற்ற அந்தக் கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளின் கோயிலுக்குத் தன் மனைவி தேவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அவர்களின் முகங்களில் கனமான சோகத்தின் அழுத்தமான தழும்புகள்.

இந்தத் தம்பதியரின்  ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரே வாரிசான சிவராசன் பைக் விபத்தில் சிக்கி, மண்டையில் அடிபட்டு உடல் சிதைந்து சுய நினைவு இழந்த கோலத்தில்   மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தாலும் கோமா நிலை நீடித்தது. மருத்துவர்கள் கைவிரித்ததோடு சில மாதங்களுக்கு மேல் அவன் உயிர்பிழைத்திருப்பது அத்தனை நிச்சயமில்லை என்றும் சொல்லியிருந்தார்கள். மனித முயற்சி பலனற்றுப்போனதால் செல்வநாயகம் தம்பதியருக்குக் கடவுளின்/கடவுள்களின் நினைப்பு வந்தது.

தினம் தினம் பிரார்த்தனை செய்தார்கள். ஜோதிடர்களின் ஆலோசனைப்படி புகழ்பெற்ற சாமி கோயில்களுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றினார்கள்.

ஒரு V.I.G[Very Important God] கடவுளுக்குத் தங்கத்தில் மார்புக் கவசம் செய்து போட்டார்கள். இன்னொரு V.I.Gக்குத் தங்கக் கிரீடம் அணிவித்தார்கள். லட்சார்ச்சனை கோடியார்ச்சனை என்று எந்தவொரு குறையும் வைக்காமல், தாங்கள் மதித்துத் துதிபாடும் அத்தனை பிரபல சாமிகளையும் மனம் குளிர வைத்தார்கள்.

எதைச் செய்தும் அவர்களின் செல்வ மகன் சிவராசன் கோமா நிலையிலிருந்து விடுபடவில்லை.

மனம் தளராத செல்வநாயகம் தம்பதியர், அன்று V.V.V.I.கடவுளான திருப்பதி ஏழுமலையானைச் சந்தித்து, புத்தம் புதிய ரூபாய் நோட்டுக் கற்றைகளையும் பத்தரைமாற்றுப் பொன் வெள்ளி அணிகலன்களையும் காணிக்கையாகச் செலுத்தி வேண்டுதல் வைக்கப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.

செல்லும் வழியில், ஏழ்மைக் கோலத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இவர்களின் சொகுசு வாகனத்தை வழிமறிப்பதுபோல் நின்று கொண்டிருந்தார்கள்.

காரின் கண்ணாடியை இறக்கினார் செல்வநாயகம்.

அவர்கள் அவரை நெருங்கி ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கீங்க. உழைச்சிப் பிழைக்கலாமே. பிச்சை எடுக்க வெட்கமாயில்லை?” என்று குரலில் சீற்றம் தொனிக்கக் கோபம் காட்டினார் செல்வநாயகம்.

குழந்தையை ஏந்தியிருந்த பெண் பேசினாள்: “சாமி, நாங்க உழைச்சிப் பிழைக்கிறவங்கதான். பிச்சை எடுக்கிற ஜாதியில்ல. உங்ககிட்ட ஒரு உதவிதான் கேட்கிறோம்.”

மௌனம் போர்த்து அவளை வெறித்தார் செல்வநாயகம்.

“வெளியூரிலிருந்து ஏழுமலையானைத் தரிசிக்க வந்தோம். பஸ்ஸில் வரும்போது, என் புருசனின் சட்டைப் பையிலிருந்த பணம் முழுக்கத் திருடு போயிடிச்சி. டிக்கட் எடுக்கப் பணமில்லை. நடு வழியில் கண்டக்டர் இறக்கி விட்டுட்டார். ஊருக்குத் திரும்பிப் போகக் கையில் பைசா இல்ல. ஒரு நூறு ரூபா கொடுத்து உதவுங்க. உங்க முகவரியும் கொடுங்க. ஊருக்குப் போனதும் பணத்தை அனுப்பிடுறோம். எங்களை நம்புங்கய்யா” என்றாள் அவள்.

அவளின் உடல்மொழியும் பேச்சும் நம்பும்படியாகத்தான் இருந்தன. ஆனால், செல்வநாயகம் நம்பவில்லை. “இப்படிப் பொய் சொல்லிப் பிச்சை கேட்க வெட்கமா இல்ல?   போங்கம்மா. விலகிப் போங்க.” -அவர் சீறிவிழ வாகனமும் சீறிப் பாய்ந்து வேகமெடுத்தது.

எடுத்துச்சென்ற பணக் கட்டுகளையும் நகைநட்டுகளையும் உண்டியலில் சேர்த்துவிட்டு, உலகின் நம்பர் 1 பணக்காரக் கடவுள் ஏழுமலையானின் தரிசனத்தையும் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டபோது செல்வநாயகத்தின்  கைபேசி ஒரு சோகச் செய்தியை ஒலிபரப்பியது.

“சிவராசன் செத்துட்டான்.”

பாசமுள்ள பெற்றோராக, செல்வநாயகமும் தேவியும் கண்ணீர்விட்டு அழுதார்கள்; சிறிதுநேரத் தேம்பலுக்குப் பிறகு சற்றே மனம் தேறினார்கள்.

“எத்தனை சாமியை வேண்டிகிட்டோம். எத்தனை நேர்த்திக்கடனை நிறைவேத்தினோம். எந்தச் சாமியும் கண் திறக்கலியே” என்று வீடு போகும்வரை அங்கலாய்த்துக்கொண்டே இருந்தாள் தேவி. அதையே மனத்தளவில் மீண்டும் மீண்டும் சொல்லி வேதனைப்பட்டார் செல்வநாயகம். இடையிடையே, “பாவம் அந்த ஏழைகள். ஒரு நூறுதானே கேட்டாங்க. கொடுத்து உதவியிருக்கலாமோ?” என்று யோசிக்கவும் செய்தார்.
===============================================================================

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

அந்நாள் பிரதமர்[?] ஓமந்தூர் ராமசாமி ‘ரெட்டி’யாரின் ‘இன’ப்பற்று!

சென்னை மாகாணத்தின் பிரதமராக[அன்று, முதல்வர் பிரதமர் என்று அழைக்கப்பட்டார்] இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவரைப் பற்றி யுகபாரதி[குங்குமம் வார இதழ், 21004.2017] எழுதிய கட்டுரையிலிருந்து.....
#ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றே விமர்சிக்கப்பட்டார். அவர் தமிழரல்ல; தமிழ்மொழியைக் காக்கக்கூடியவரல்ல என்னும் கருத்துகள் தமிழ்த் தேசியவாதிகளால் பரப்பப்பட்டன. அவற்றையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காலம் கனியும்போது பதில் சொல்லலாம் என்று காத்திருந்தார்.

காலமும் கனிந்தது.

திருப்பதி மலைக்குச் சென்ற ஓமந்தூரார் பிரார்த்தனை முடிந்து மலையிலிருந்து கீழே இறங்கினார். நகரிலிருந்த ஓலைச்சுவடி நிலையத்தைப் பார்வையிடச் சென்றார்.

கூடியிருந்தவர்கள் அவரைச் சொற்பொழிவாற்றச் சொன்னார்கள். சம்மதித்த அவர், பேசத் தொடங்கினார்.....தமிழில். கூடியிருந்தவர்கள் “தெலுங்கில் பேசுங்கள்” என்று கூச்சலிட்டார்கள்.

“நான் தமிழன். தமிழில் மட்டுமே என்னால் பேச முடியும். தெலுங்கில் சில வார்த்தைகள் தெரியும் என்பதால் நான் தெலுங்கன் ஆகிவிட மாட்டேன். என் அம்மாவுக்கு முன்னூறு அல்லது நானூறு கொச்சையான தெலுங்குச் சொற்கள் தெரியும். அவர் பெற்ற பிள்ளையான நான் என்னுடைய தாய்மொழி தெலுங்கு என்று சொல்ல மாட்டேன். என் மொழி தமிழ்; நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன்” என்றார் ஓமந்தூரார்#

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அரசு சின்னம் ஒன்று வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தபோது தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்வுசெய்தவர் ஓமந்தூரார். ‘சமயச் சார்பற்ற ஒரு அரசாங்கத்தின் சின்னமாக இந்துக் கோயில் கோபுரத்தை எப்படி வைக்கலாம்?’ என்று பிரதமர் நேரு வரை புகார் போனது. ‘கோபுரம் என்பது சமயச் சின்னம் மட்டும் அன்று. அது தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். எங்கள் மாநிலத்தின் தனிச் சிறப்பாக உலகம் போற்றும் திராவிடக் கட்டடக் கலையின் அடையாளம்’ என்று பதில் அளித்தபோது பிரதமரால் அதை மறுக்க முடியவில்லை. அந்தச் சின்னத்தின் கீழே, ‘சத்தியமேவ ஜெயதே’ என்று எழுதியதும் ஓமந்தூரார்தான். அதைத்தான் அண்ணா முதல்வராக இருந்தபோது, ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழ்ப்படுத்தினார். தான் எழுதியதற்குத் தகுந்தமாதிரியே வாய்மையான வாழ்க்கையை ஓமந்தூரார் வாழ்ந்து காட்டினார். இவரது நேர்மையான நடவடிக்கைகள் காங்கிரஸ் காரர்களையே அதிர்ச்சியடைய வைத்தது. இவரை எப்படியாவது அந்த நாற்காலியை விட்டு நீக்கிவிடத் துடித்தனர். தானே பதவி விலகி, அன்றைய தினமே வடலூர் ராமலிங்க அடிகள் மடத்துக்குப் போய் குடியேறியவர் ஓமந்தூரார். அதன்பிறகும் பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்தன. எதையும் அவர் ஏற்கவில்லை' -http://www.noolulagam.com/2013/09/25/167942/

பதவியில் இருக்கும்போது மட்டுமல்ல, பதவியிலிருந்து விலகி, தன் சொந்த ஊரான ஓமந்தூருக்குக் கிளம்பும் கடைசி நொடிவரை நேர்மையின் இலக்கணமாகத் திகழ்ந்தார் ஓமந்தூரார். பதவியை இழந்தவுடனே தான் தங்கியிருந்த கூவம் மாளிகையை அன்று பிற்பகலுக்குள் காலி செய்தார்.

அறவுணர்வு படைத்தவரும், நேர்மையாளரும், சீரிய தமிழ் நெஞ்சினருமான இவரைத் “தமிழ் வாழ்க! தமிழினம் வாழ்க!!” என்று மேடைதோறும் வாய் கிழிய முழங்குகிற, மாய்ந்து மாய்ந்து ஏடுகளில் எழுதுகிற தமிழன் அடியோடு மறந்துபோனான் என்பது மிகப் பெரும் அவலம் ஆகும்.
===============================================================================

கட்டுரை எழுதிய யுகபாரதிக்கும் அதை வெளியிட்ட குங்குமம் இதழுக்கும் நம் நன்றி.

வியாழன், 13 ஏப்ரல், 2017

கடவுளைக் காண்பதற்கு ‘சூஃபி ஞானி’ காட்டும் வழி!!

'தம்மை எந்த வரன்முறைக்கும் உட்படுத்தாத மனோநிலையும் இதன் வெளிவீச்சான சொல்லும் செயலும் கொண்டவர்கள்தான் சூஃபிகள்’ என்கிறார்கள். ‘இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றியதோடு முற்போக்குச் சிந்தனைகளுடன் ஆன்மிகம் வளர்த்தவர்கள் சூஃபி ஞானிகள்’ என்ற கருத்தும் உண்டு.  

சூஃபிகள், சூஃபியிஸம், சூஃபி இயக்கம் என்பன குறித்துப் பலரும் பலவிதமான விளக்கங்கள் தருகிறார்கள். இவை குறித்த ஆய்வு இங்கு தேவையற்றது. படியுங்கள்.
#ந்த சூஃபி ஞானி மலையின்மீது சிறிய குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். மாதம் ஒரு முறை மலை அடிவாரத்தில் இருந்த கிராமத்திற்கு வந்து போவார்.

அன்று அவர் வந்தபோது ஒரு மனிதன் அவரைச் சந்தித்தான்; “ஞானியே, இதுவரை என்னால் கடவுளைக் காணவே முடியவில்லை. உங்களால் காட்ட முடியுமா?” என்றான்.

“நிச்சயமாக. நான் சொல்வதை நீ செய்தால் அது சாத்தியம்” என்றார் சூஃபி.

“சொல்லுங்கள்.”

“நான் மலையிலுள்ள என் வீட்டைச் சுற்றித் தாழ்வாரம் ஒன்றை அமைக்க நினைக்கிறேன். அதற்கு ஒரே அளவு எடையுள்ள ஐந்து சதுரக் கற்கள் தேவை. எடுத்துவந்து எனக்கு உதவுவாயா?” என்றார்.

சம்மதித்தான் அவன்.

சூஃபி மலைமீது ஏற, அவனும் கற்களைச் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தான்

சிறிது தொலைவு சென்றவுடனே களைத்துப் போனான். அதை அறிந்த சூஃபி, “ஒரு கல்லைக் கீழே போட்டுவிடு” என்றார்.

மலைப் பயணம் தொடர்ந்தது.

நான்கு கற்களைச் சுமந்து சென்ற அவன் மீண்டும் உடல் சோர்ந்தான்.

“இன்னொரு கல்லைக் கீழே போடு” என்றார் சூஃபி.

மூன்று கற்களுடன் சென்ற அவனுக்கு மீண்டும் மூச்சு வாங்கியது. “இன்னொரு கல்லையும் கீழே போடு” என்றார் ஞானி.

இரு கற்களுடன் சென்ற அவனுக்கு உடல் சோர்வு நீடீக்கவே, அடுத்தடுத்து எஞ்சியிருந்த கற்களையும் கீழே போட்டுவிட்டுத் தன்னைப் பின்தொடரச் சொன்னார் சூஃபி ஞானி. அவனும் புத்துணர்ச்சியுடன் அவர் பின்னால் சென்றான்.

மலை உச்சியை அடைந்ததும் சூஃபி சொன்னார்: “கடவுளைக் காண்பதும் மலை ஏறுவது போல்தான். கடவுளைக் காண நீ ஐந்து சுமைகளை வீசி எறிய வேண்டும். இந்த ஐந்து கற்களும் ஐந்து சுமைகளைக் குறிக்கின்றன. அவை, உன்னுடைய கோபம், பேராசை, பற்று, அகந்தை, காமம் ஆகியவை. இந்த ஐந்து சுமைகளையும் நீ தூக்கி எறியக் கற்றுக்கொள். அப்புறம் எந்தச் சிரமும் இன்றி நீ கடவுளைக் காணலாம்#

இந்தச் சுவாரசியமான கதையைப் படித்துச் சொக்கிப் போனீர்களா?

“ஆம்” என்றால் நீங்கள் இன்னும் இன்னும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சிந்தித்தல் தேவை.

கோபம், தாபம், பற்று, அகந்தை, காமம் எனப்படும் ஐந்து சுமைகளையும் முற்றிலுமாய்[100%]த் தூக்கி எறிந்துவிட்டு வாழ்தல் என்பது சாத்தியமே இல்லை; இந்த மண்ணில் அவ்வாறு வாழ்ந்து காட்டியவர் எவருமே இல்லை. வாழ்ந்ததாகச் சொல்வது அப்பட்டமான பொய். கற்பனைக் கதைகளிலும் இதிகாச புராணங்களிலும் மட்டுமே அப்படிப்பட்டவர்களைக் காண இயலும்.

ஞானி சொன்னவாறு மேற்குறிப்பிடப்பட்ட ஆசாபாசங்களைத் துறந்தால்.....

கடவுளைக் காண முடியுமா?

முடியும் என்றால், கடவுள் என்ன வடிவத்தில்/ கோலத்தில் காட்சி வழங்கி அருளுவார்? என்ன மொழி பேசுவார்? எட்ட நின்று பேசுவாரா, தொட்டுத் தடவிக் கொஞ்சிக் குலாவுவாரா?

வைக்கும் கோரிக்கைகளை அப்போதே நிறைவேற்றுவாரா, இல்லை, தவணை முறையிலா?

மேற்கண்டவற்றில்,  கொஞ்சமே கொஞ்சம் மிச்சம் வைத்துப் பெருமளவில் துறந்து வாழ்ந்தவர்களுக்கு, தன் திருப்பாதங்களையேனும் காணும் பேற்றை நல்குவாரா எல்லாம்  வல்ல இறைவன்?

“கடவுளைக் காண முடியும்...முயன்றால் முடியும்” என்கிறார்கள். 

நாம் ஏன் முயல வேண்டும். அனைத்தையும் படைத்தவன் அவனே என்றால், கருணை வடிவானவன் என்றால் படைத்த அவனுக்கு உயிர்களின் தேவைகள் எவை என்பது தெரியாதா? அவற்றை நிறைவேற்றுவது அவன் கடமை அல்லவா?

அவனுக்கு உணர்ந்து தெளிவதற்கான புலன்கள் இல்லையா? ஆராய்ந்து அறிவதற்கான பேரறிவு இல்லையா?

அப்புறம் எதற்கு அவனைக் காண முயற்சிப்பது?

கண்டு மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தி விரல் சூப்பி நிற்பதற்கா?!

“கடவுளைக் காட்ட முடியுமா?” என்று கேட்ட அப்பாவி மனிதனை ஆற்று நீரில் அமுக்கி மூச்சுத் திணற வைத்து, “முயன்றால் கடவுளைக் காணலாம்” என்று சொன்ன இந்துமத ஞானியின் கதை[‘கடவுளைக் காட்டிய மகான்?!?! http://kadavulinkadavul.blogspot.com/2012/08/58.html நாடறியும். அந்தக் கதைக்கும் இந்தச் சூஃபியின் கதைக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

ஆக, ஒருதலைப்பட்சமாகக் கதைகள் சொல்லி மக்களை முட்டாள்களாக்கும் அத்தனை மதவாதிகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தாம் என்பதில் எள்முனையளவும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================

கதை இடம்பெற்ற நூல்: ‘சூஃபி கதைகள்’, சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை - 600 049; முதல் பதிப்பு: 2010.

*இந்நூலில் அறிவுபூர்வமான பயனுள்ள கதைகளும் உள்ளன. கடவுள் தொடர்பானது என்பதால் இக்கதையை மட்டும் கையாண்டுள்ளேன்.



கடவுளைக் காண ‘சூஃபி ஞானி’ காட்டும் வழி!!!

'தம்மை எந்த வரன்முறைக்கும் உட்படுத்தாத மனோநிலையும் இதன் வெளிவீச்சான சொல்லும் செயலும் கொண்டவர்கள்தான் சூஃபிகள்’ என்கிறார்கள். ‘இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றியதோடு முற்போக்குச் சிந்தனைகளுடன் ஆன்மிகம் வளர்த்தவர்கள் சூஃபி ஞானிகள்’ என்ற கருத்தும் உண்டு.  

சூஃபிகள், சூஃபியிஸம், சூஃபி இயக்கம் என்பன குறித்துப் பலரும் பலவிதமான விளக்கங்கள் தருகிறார்கள். இவை குறித்த ஆய்வு இங்கு தேவையற்றது. படியுங்கள்.
#ந்த சூஃபி ஞானி மலையின்மீது சிறிய குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். மாதம் ஒரு முறை மலை அடிவாரத்தில் இருந்த கிராமத்திற்கு வந்து போவார்.

அன்று அவர் வந்தபோது ஒரு மனிதன் அவரைச் சந்தித்தான்; “ஞானியே, இதுவரை என்னால் கடவுளைக் காணவே முடியவில்லை. உங்களால் காட்ட முடியுமா?” என்றான்.

“நிச்சயமாக. நான் சொல்வதை நீ செய்தால் அது சாத்தியம்” என்றார் சூஃபி.

“சொல்லுங்கள்.”

“நான் மலையிலுள்ள என் வீட்டைச் சுற்றித் தாழ்வாரம் ஒன்றை அமைக்க நினைக்கிறேன். அதற்கு ஒரே அளவு எடையுள்ள ஐந்து சதுரக் கற்கள் தேவை. எடுத்துவந்து எனக்கு உதவுவாயா?” என்றார்.

சம்மதித்தான் அவன்.

சூஃபி மலைமீது ஏற, அவனும் கற்களைச் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தான்

சிறிது தொலைவு சென்றவுடனே களைத்துப் போனான். அதை அறிந்த சூஃபி, “ஒரு கல்லைக் கீழே போட்டுவிடு” என்றார்.

மலைப் பயணம் தொடர்ந்தது.

நான்கு கற்களைச் சுமந்து சென்ற அவன் மீண்டும் உடல் சோர்ந்தான்.

“இன்னொரு கல்லைக் கீழே போடு” என்றார் சூஃபி.

மூன்று கற்களுடன் சென்ற அவனுக்கு மீண்டும் மூச்சு வாங்கியது. “இன்னொரு கல்லையும் கீழே போடு” என்றார் ஞானி.

இரு கற்களுடன் சென்ற அவனுக்கு உடல் சோர்வு நீடீக்கவே, அடுத்தடுத்து எஞ்சியிருந்த கற்களையும் கீழே போட்டுவிட்டுத் தன்னைப் பின்தொடரச் சொன்னார் சூஃபி ஞானி. அவனும் புத்துணர்ச்சியுடன் அவர் பின்னால் சென்றான்.

மலை உச்சியை அடைந்ததும் சூஃபி சொன்னார்: “கடவுளைக் காண்பதும் மலை ஏறுவது போல்தான். கடவுளைக் காண நீ ஐந்து சுமைகளை வீசி எறிய வேண்டும். இந்த ஐந்து கற்களும் ஐந்து சுமைகளைக் குறிக்கின்றன. அவை, உன்னுடைய கோபம், பேராசை, பற்று, அகந்தை, காமம் ஆகியவை. இந்த ஐந்து சுமைகளையும் நீ தூக்கி எறியக் கற்றுக்கொள். அப்புறம் எந்தச் சிரமும் இன்றி நீ கடவுளைக் காணலாம்#

இந்தச் சுவாரசியமான கதையைப் படித்துச் சொக்கிப் போனீர்களா?

“ஆம்” என்றால் நீங்கள் இன்னும் இன்னும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சிந்தித்தல் தேவை.

கோபம், தாபம், பற்று, அகந்தை, காமம் எனப்படும் ஐந்து சுமைகளையும் முற்றிலுமாய்[100%]த் தூக்கி எறிந்துவிட்டு வாழ்தல் என்பது சாத்தியமே இல்லை; இந்த மண்ணில் அவ்வாறு வாழ்ந்து காட்டியவர் எவருமே இல்லை. வாழ்ந்ததாகச் சொல்வது அப்பட்டமான பொய். கற்பனைக் கதைகளிலும் இதிகாச புராணங்களிலும் மட்டுமே அப்படிப்பட்டவர்களைக் காண இயலும்.

ஞானி சொன்னவாறு மேற்குறிப்பிடப்பட்ட ஆசாபாசங்களைத் துறந்தால்.....

கடவுளைக் காண முடியுமா?

முடியும் என்றால், கடவுள் என்ன வடிவத்தில்/ கோலத்தில் காட்சி வழங்கி அருளுவார்? என்ன மொழி பேசுவார்? எட்ட நின்று பேசுவாரா, தொட்டுத் தடவிக் கொஞ்சிக் குலாவுவாரா?

வைக்கும் கோரிக்கைகளை அப்போதே நிறைவேற்றுவாரா, இல்லை, தவணை முறையிலா?

மேற்கண்டவற்றில்,  கொஞ்சமே கொஞ்சம் மிச்சம் வைத்துப் பெருமளவில் துறந்து வாழ்ந்தவர்களுக்கு, தன் திருப்பாதங்களையேனும் காணும் பேற்றை நல்குவாரா எல்லாம்  வல்ல இறைவன்?

“கடவுளைக் காண முடியும்...முயன்றால் முடியும்” என்கிறார்கள். 

நாம் ஏன் முயல வேண்டும். அனைத்தையும் படைத்தவன் அவனே என்றால், கருணை வடிவானவன் என்றால் படைத்த அவனுக்கு உயிர்களின் தேவைகள் எவை என்பது தெரியாதா? அவற்றை நிறைவேற்றுவது அவன் கடமை அல்லவா?

அவனுக்கு உணர்ந்து தெளிவதற்கான புலன்கள் இல்லையா? ஆராய்ந்து அறிவதற்கான பேரறிவு இல்லையா?

அப்புறம் எதற்கு அவனைக் காண முயற்சிப்பது?

கண்டு மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தி விரல் சூப்பி நிற்பதற்கா?!

“கடவுளைக் காட்ட முடியுமா?” என்று கேட்ட அப்பாவி மனிதனை ஆற்று நீரில் அமுக்கி மூச்சுத் திணற வைத்து, “முயன்றால் கடவுளைக் காணலாம்” என்று சொன்ன இந்துமத ஞானியின் கதை[‘கடவுளைக் காட்டிய மகான்?!?! http://kadavulinkadavul.blogspot.com/2012/08/58.html நாடறியும். அந்தக் கதைக்கும் இந்தச் சூஃபியின் கதைக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

ஆக, ஒருதலைப்பட்சமாகக் கதைகள் சொல்லி மக்களை முட்டாள்களாக்கும் அத்தனை மதவாதிகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தாம் என்பதில் எள்முனையளவும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================

கதை இடம்பெற்ற நூல்: ‘சூஃபி கதைகள்’, சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை - 600 049; முதல் பதிப்பு: 2010.

*இந்நூலில் அறிவுபூர்வமான பயனுள்ள கதைகளும் உள்ளன. கடவுள் தொடர்பானது என்பதால் இக்கதையை மட்டும் கையாண்டுள்ளேன்.


திங்கள், 10 ஏப்ரல், 2017

"விகடன் ஒழிக!”...விகடனின் ஆயுள்கால வாசகன் கதை!!!

ஆனந்த விகடனில் என் படைப்பு வெளியாக வேண்டும் என்பது என் ஆயுள்கால ஆசை. அது நிறைவேறாத விரக்தியில் விகடனில் வெளியான ஒரு கதையை நக்கலடித்து எழுதப்பட்டது இந்தக் கதை. விகடனாருக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் எப்போதோ எழுதிய இந்தப் ‘பழைய சரக்கை’  மீண்டும் பதிவு செய்கிறேன்.
குப்புச்சாமி, சன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறு நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான்.

அவன் கையில் ‘ஆனந்த விகடன்’ இருந்தது.

அவன் ஒரு ‘விகடப்பித்தன்’.

படித்து முடித்த பிறகும் கையில் விகடனோடுதான் அலைவான். அது கையில் இருப்பது ‘அறிவு ஜீவி’களுக்கான அடையாளமாம்!

வெளியே வேடிக்கை பார்த்து வந்தவனின் கவனத்தை, முன் இருக்கையிலிருந்த இரு இளம் பெண்களின் உரையாடல் ஈர்த்தது.

“என்னவோ தெரியல. இப்போ எல்லாம் நான் அடிக்கடி கோபப்படுறேன். உப்புப் பொறாத விசயத்துக்கெல்லாம் அடாவடியாப் பேசி அடுத்தவங்க மனசை நோகடிக்கிறேன். அப்புறம் கொஞ்ச நேரத்துலயே அதுக்காக வருத்தப்படுறேன்” என்று வருத்தத்துடன் சொன்னாள் சன்னலோர இருக்கைக்காரி.

“கோபம்  வர்ற மாதிரி தெரிஞ்சா ஒன்னு ரெண்டு மூனு எண்ண ஆரம்பிச்சுடு. ஐம்பது எண்ணுறதுக்குள்ள அதெல்லாம் இருந்த இடம் தெரியாம போயிடும்” என்றாள் அவளோடு இருந்தவள்.

“அதையும் பார்த்துட்டேன். பலனில்ல.”

அந்த முன்கோபக்காரியின், ‘முக்கால் நிலா’ வடிவத்தில் தெரிந்த அழகிய முதுகையும், வெண் சங்குக் கழுத்தையும், இரு ‘பளீர்’ காதுகளின் பின்புறங்களையும் ஆராய்ந்தான் குப்புச்சாமி.

ஏமாற்றம் அவனை ஆரத் தழுவியது.

அவளின் மேற்சொன்ன அழகுப் பிரதேசங்களில் ஒரு மச்சம், மரு, தழும்பு என்று எதுவுமே இல்லை.

தன் முகத்தைச் சற்றே முன்னுக்கு நகர்த்தி, “கோபத்தை விரட்டியடிக்க நான் வழி சொல்லட்டுமா?” என்றான் குப்புச்சாமி.

சடக்கெனத் திரும்பிய இரு பெண்களும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

முன்கோபக்காரி, “சொல்லுங்க சார்” என்றாள், ஏராள எதிர்பார்ப்புகளுடன்.

“உங்க உடம்பில் மச்சம், மரு, தழும்புன்னு எதுனாச்சும் இருக்கும் இல்லியா? கோபம் வரும்போது அதுல ஒன்னை வருடிக் கொடுங்க. சில நேரம் ரத்தம் வர்ற வரைக்கும்கூடத் தேய்க்க வேண்டியிருக்கும். அப்புறம் பாருங்க, கோபம் மாயமாய் மறைஞ்சுடும்” என்றான் குப்பு. [இனி, ’குப்பு’ என்றே செல்லமாக அழைப்போம்].

“அப்படியா!” என்று வியப்பின் எல்லைவரை சென்று திரும்பிய அவள், “என் உடம்பில் இதுல ஒன்னுகூட இல்லீங்க. என் அம்மாகூட நீ அதிசயப் பிறவியடின்னு அடிக்கடி சொல்வாங்க. சார், ஒரு சந்தேகம். எனக்கு வேண்டப்பட்டவங்களோடதைத் தடவலாமா?”

“அது வந்து.....” என்று குப்பு ஏதோ சொல்ல முயற்சிக்கையில், பின்னாலிருந்து ஒருவர், “கோபத்தைப் போக்க இப்படியொரு வழி இருக்கா? சார், நீங்க மச்ச மரு ஜோதிடரா?” என்று கேட்க, பேருந்து முழுக்கப் பெருத்த சிரிப்பலை பரவி அடங்கியது.

"கவலையை மறக்கவும் இப்படி எதையாவது தடவலாமா?” என்றார் ஒரு பழங்கிழம்.

ஓர் இளவட்டம், “பொண்ணுகளை ‘சைட்’ அடிக்காம இருக்கவும் இது உதவுமா?” என்றான்.

இப்படி, ஆளாளுக்குக் கேள்விக் கணை தொடுக்க, ஒட்டு மொத்த பஸ் பயணிகளும் நக்கலாய்ச் சிரித்தார்கள்; நினைத்து நினைத்துச் சிரித்தார்கள்; குப்புவை ஓரக் கண்ணால் பார்த்துப் பார்த்துச் சிரித்தார்கள்.

அவமானத்தால் தலை குனிந்தான் குப்பு.

அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டான்.

இப்போதும் தலை குனிந்தே நடந்தான்.

எதிர்பாராதவகையில் ஒரு பெண்ணின் மீது மோதிவிட்டான்; அவள் மார்பகத்தின் மீது அழுத்தமாகத் தன் கரம் பதிந்துவிட்டதை அறிந்து அதிர்ந்தான்.

“ஏண்டா பொறுக்கி, என்ன தைரியம் இருந்தா, பட்டப் பகலில், பொது இடத்தில், தாலி கட்டியவன் கண் முன்னால, ஒரு வயசுப் பொண்ணு மேல கை வைப்பே?” என்று அவள் கணவன் சீற, ‘ எதிர்பாராம நடந்த தப்புக்குப் பொறுக்கின்னு சொல்லிட்டானே’ என்ற நினைப்பால் மனதில் கடுங் கோபம் முகிழ்ப்பதை உணர்ந்த குப்பு, அவசரமாக, தன் பின்புறக் கழுத்தில் இருந்த மருவை வருட முற்பட்டான்.

இவன் முயற்சி முழுமை பெறுவதற்குள், இவனைக் கீழே தள்ளி, உருட்டிப் புரட்டி எடுத்துவிட்டான் அவன்.

சுதாரித்து எழுந்த குப்பு, அவன் மீண்டும் தாக்குதலுக்குத் தயாராவதை அறிந்து, “சார், நான் வேணுன்னு செய்யல. நான் சொல்வதைக் கேளுங்க. அதுக்கு முந்தி, உங்க உடம்புல இருக்கிற ஏதாவது ஒரு மருவையோ மச்சத்தையோ தழும்பையோ தடவுங்க. அழுத்தி அழுத்தித் தேய்ங்க” என்றான். அவன் இவனை வினோதப் பிறவியாகப் பார்க்க, “மெண்டல் மாதிரி தெரியுது. வாங்க போகலாம்” என்று அந்தப் பெண் அவனை இழுத்துக்கொண்டு போனாள்.

வேதனையின் உச்சத்தைத் தொட்டிருந்தான் நம் குப்பு.

அந்த வேதனையிலிருந்து விடுபடக் கழுத்து மருவைத் தடவிக்கொண்டே வீடு போய்ச் சேர்ந்தான்.

வேதனை குறையவில்லை. அதற்குச் சற்று நேரம் பிடிக்கும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான்.

“என்னடா உடம்பெல்லாம் வீங்கிக் கிடக்கு? யார் அடிச்சது? டாக்டரிடம் போலாம்” என்றாள் அவன் அம்மா.

“எதுவும் பேசாதே. சும்மா கிட. மருவை ரத்தம் வர்ற வரைக்கும் தேய்ச்சிட்டே இருந்தா எல்லாம் சரியாயிடும்” என்று சொன்ன மகனைக் கவலையோடு பார்த்தாள் அவன் தாய்.

அவனுக்குப் புத்தி பேதலித்துவிட்டதாக நம்பினாள்.

அவனிடம் கெஞ்சிக் கூத்தாடிச் சம்மதிக்க வைத்து, ஒரு மனநோய் மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.

மருத்துவரிடம் மனம் திறந்தான் குப்பு.

“ஆனந்த விகடன் அ.வெண்ணிலா எழுதின ஒரு சிறுகதை படிச்சித்தான் இந்த நிலைக்கு ஆளானேன்” என்றான்.

“சிறுகதை படிச்சா? புரிகிற மாதிரி சொல்லு” என்றார் மருத்துவர்.

தான் எழுதிய கதையில், “எனக்குக் கோபம் வந்தா என்ன செய்யறதுன்னு தெரியாது. வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில், என் காதுக்குப் பின்புறம் இருக்கும் மருவை வருடுவேன்; சொறிவேன். ரத்தம் வரும். என் கோபத்துக்கு நிவாரணம் என் ரத்தம்’னு ஒரு பெண் சொல்லுறதா வெண்ணிலா எழுதியிருக்காங்க.

ஒரு நட்சத்திர எழுத்தாளர் இப்படிச் சொல்லுறது நிஜமாத்தான் இருக்கும்னு நினைச்சேன்; விகடன் ஆசிரியர் குழுக்காரங்களும் இதை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டுத்தான் கதையைப் பிரசுரம் பண்ணியிருப்பாங்கன்னும் நம்பினேன்.....

.....நேத்துத்தான் கதை படிச்சேன். இன்னிக்கே என் வாழ்க்கையில் சோதிச்சிப் பார்த்துட்டேன். பலன்? பட்டது போதும் டாக்டர்” என்று சொல்லி முடித்தான் குப்பு.

“கதையில் பாராட்டிச் சொல்லும்படியா எதுவும் இல்லையா?” என்றார் டாக்டர்.

”பாராட்டுற மன நிலையிலா நான் இருக்கேன்? இருந்தாலும் சொல்றேன்.........

ஒரு பள்ளியில், பத்தாம் வகுப்புப் படிக்கிற பொண்ணுகளுக்கு அங்க அடையாளம் குறிக்கப் போறதா அறிவிச்சதும், அந்த வகுப்புப் பொண்ணுக பண்ணுற அலப்பறையைத்தான் கதை முழுக்க விவரிச்சிருக்காங்க பிரபல கதாசிரியை அ.வெண்ணிலா.

கடைசியில் அஞ்சாறு பத்தியில், கணவருடனான கருத்து வேறுபாட்டில், மனம் வேதனைக்குள்ளானதையும், அதை மறக்க, மருவை வருடிச் சொறிந்து புண்ணாக்கிக் கொள்வதையும் வாசகர் மனதில் பதியும்படி சொல்லியிருக்காங்க.

கதையின் இந்த இறுதிக் கட்டம் மனசில் ஆழமாப் பதிஞ்சிடிச்சி.

பத்தாம் வகுப்புப் பொண்ணுக அடிக்கிற லூட்டியும் ரசிக்கும்படியா இருக்கு.

அப்புறம் வேறென்ன, சொல்ல வேண்டியதைத்தான் சொல்லிட்டேனே? இப்போ எனக்கு வர்ற கோபத்தில் ‘விகடன் ஒழிக. வெண்ணிலா ஒழிக’ன்னு கத்தணும் போல இருக்கு” என்றான் குப்பு.

“வேண்டாம். உன் கழுத்து மருவை லேசா வருடிக் கொடு, போதும்” என்று சொல்லிச் சிரித்தார் மனநல மருத்துவர்.
===============================================================================

சனி, 8 ஏப்ரல், 2017

சிலை வழிபாடும் விவேகானந்தரும் நானும்!

“சிலைகளை[விக்கிரகங்களை] வணங்கும் பக்தர்கள் தங்கள் மனதில் இறைவனுக்கு என்ன வடிவம் கொடுக்கிறார்களோ, அதையேதான் வழிபடுகிறார்கள்” என்கிறார் விவேகானந்தர். இவ்வாறு அவர் சொன்னதன் பின்புலமாக ஒரு நிகழ்வும் சொல்லப்படுகிறது[’விவேகானந்தர் கதைகள்’, ஹர்ஷவர்த்தினி பப்ளிகேஷன்ஸ், மேற்கு மாம்பலம், சென்னை; பதிப்பு: 2010].
‘ஆல்வார்’ என்பது ஒரு சமஸ்தானமாக இருந்தது. அதன் மன்னர் ஒருமுறை விவேகானந்தரைச் சந்தித்தார்; அவரை ‘மகா புருஷர்’ என்றும் கேள்விப்பட்டிருந்தார்.

“விக்கிரக ஆராதனை பற்றி என்ன நினக்கிறீர்கள்” என்று விவேகானந்தரிடம் கேட்டார் அவர்.

“முற்றிலும் சரியே” என்றார் விவேகானந்தர்.

“விக்கிரக ஆராதனை சரியானது என்று நான் நினைக்கவில்லை. காரணம் ஆராதனையின்போது எனக்குப் பக்தி உண்டாவதில்லை” என்றார் மன்னர்.

விவேகானந்தர் யோசித்தார்; சுவரில், மன்னரின் ஓவியம் மாட்டப்பட்டிருப்பது கண்ணில் பட்டது. மன்னருடன் இருந்த திவானை அழைத்து, “நான் ஒன்று சொல்வேன். செய்வீர்களா?” என்றார்.

“கண்டிப்பாக” என்றார் திவான்.

“உங்கள் மன்னருடைய சித்திரத்தின்மீது எச்சில் துப்புங்கள்.” -இது விவேகானந்தர்.

“என்ன காரியம் செய்யச் சொன்னீர்கள்?” என்று பதறினார் திவான்.

“அது வெறும் ஓவியம்தானே? சும்மா துப்புங்கள்” என்றார் ஞானி.

“சுவாமிஜி, அது வெறும் ஓவியம்தான். ஆனால், அது எங்கள் மன்னரின் பிரதிபிம்பம். அவர் மீது எப்படி எச்சில் துப்ப முடியும்?” என்றார் திவான்.

“விக்கிரக ஆராதனையும் இது போல்தான். கடவுளை நம்பும் பக்தர்கள், கடவுளின் பிரதிபிம்பமான சிலையை வணங்குகிறார்கள். இதில் தவறேதும் இல்லை” என்கிறார் சுவாமி.

அவரின் விளக்கத்தைக் கேட்டுப் பரவசப்பட்டு, மன்னரும் பிறரும் மெய் சிலிர்த்தார்களாம். 

இந்தக் கதையை வாசித்தபோது[கதைதான்!] எனக்கு மெய் சிலிர்க்கவில்லை.

காரணம்.....

விவேகானந்தர் செய்த ஒப்பீடு முழுமையானதல்ல; தவறானதும்கூட.

சுவரில் இருந்த சித்திரம், மன்னரைத் தன்  கண்களாலும் பார்த்த ஒருவரால் வரையப்பட்டது. அதை மன்னரின் பிரதிபிம்பம் என உணர்தல் சாத்தியம். ஆனால், கோயில்களில் வடிக்கப்பட்டுப் பக்தர்களால் வணங்கப்படும் சிலைகள் கடவுளை அல்லது கடவுள்களைப் பார்த்துச் செதுக்கப்பட்டவை அல்ல. அவை அத்தனையும் புராண இதிகாசங்களில் இடம்பெற்ற கற்பனைப் பாத்திரங்கள்.

கற்பனையில் வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கடவுளின் பிரதிபிம்பம் என்று சுவாமியவர்கள் சொன்னது ஏற்கத்தத்தக்கதன்று.

ஒப்பீடுகள் மூலமோ அனுமானங்கள் வாயிலாகவோ பலராலும் நம்பப்படும் கடவுளின் ‘இருப்பை’ உறுதிப்படுத்துதல் அத்தனை எளிதல்ல; ஏன்? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகளை முன்வைத்து ஆழ்ந்து  சிந்திப்பதன்  மூலமே அது சாத்தியப்படக்கூடும்.

வெறும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக் கொண்டு, கடவுளின் பிரதிபிம்பங்களை அனுமானிப்பதும், விதம்விதமாய் வகைவகையாச் சிலைகளை வடிவமைத்து வழிபடுவதும் வரையறையற்ற மூடநம்பிக்கைகளின் பெருக்கத்திற்கு வழி வகுக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





வியாழன், 6 ஏப்ரல், 2017

பணி ஓய்வா? ஐய்யய்யோ.....!!! [சிரிப்பூட்டும் உண்மைக் கதை]

ம்பது வயதிற்குப் பிறகு, மனிதனின் முதுமைப் பருவம் ஆரம்பமாகிவிடுகிறது. எனினும், பதவியிலிருந்து ஓய்வு பெறும்போதுதான், தனக்கு வயதாகிவிட்டதையும், அந்திம காலத்தை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டதையும் ஒருவன் முழுமையாக உணர்கிறான்.

ஓய்வுக்குப் பிறகு, எதேச்சையாக எதிர்ப்படும் ஓர் அழகுப் பெண்ணை ‘வெறுமனே’ ரசிக்கும்போதுகூட, உள்மனம் உறுத்தும்! “உன் வயசென்ன?” என்று  கேட்டு மனசாட்சி நகைக்கும்!!

வாலிபப் பருவத்துக் கனவுகள், குறும்புகள், அடித்த கொட்டங்கள் எல்லாம் இனி ‘நினைவு கூர்தலில்’ மட்டுமே சாத்தியம் என்பதை உணரும்போது மனதில் இனம் புரியாத வலி பரவும்.

வயது ஏற ஏற  வாடிக்கையாய் எதிர்கொள்ளும் நோய்கள்;  உறக்கத்தை விரட்டும் மரண பயம்; ஒதுங்கிப் போகும் உறவுகள்; சரிவடையும் குடும்ப மரியாதை என்று எதை எதையோ எண்ணித் தன்னைத்தானே வருத்திக் கொள்ளத் தொடங்குகிறான் ஓய்வு பெற்றவன்.

இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் சொருகும் சொந்தபந்தங்களின் விசாரிப்புகள்.

நான் ஓய்வு பெற்ற போது, என்னையும் இம்மாதிரி 'விசாரிப்புகள்’ பாடாய்ப்படுத்தின. அந்த அனுபவங்களைப் பல முறை அசை போட்டதன் விளைவு இந்தக் கதை. சுவைபடச் சொல்லியிருப்பதாக எண்ணுகிறேன். கதையின் முடிவு  உங்களை ஒரு முறையேனும் புன்னகை செய்யத் தூண்டும் என்று நம்புகிறேன்.

சின்னஞ்சிறு கதைதான். படியுங்கள்.
கதையின் பெயர்:                   அப்புறம்.....

ரசாங்கத்தில் ஓய்வு கொடுத்தாலும் கொடுத்தான், என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.

எனக்குத் தெரிந்தவன், என்னைத் தெரிந்தவன் என்று எதிர்ப்பட்ட அத்தனை பேரும், “அப்புறம்.....” என்று தொடங்கி வாக்கியத்தை முடிக்காமல், என்  ரிட்டையர்மெண்ட் பற்றி என்னைப் புலம்பவிட்டு ரசிக்கக் காத்திருப்பார்கள்.

நான் உஷாராகி, “சொல்லுங்க” என்று சொல்ல, வேறு வழியில்லாமல், “ரிட்டையர் ஆயிட்டீங்க. பொழுது போகாதே. இனி என்ன செய்யப் போறீங்க?” என்று துக்கம் விசாரிப்பதுபோல் ‘கை நீட்டாத’ குறையாகக் கேட்பார்கள்.

“பொழுது அதுவா போகுமா என்ன? நெம்புகோல் போட்டு நாமதான் தள்ளணும்” என்று நான் அடிக்கும் கடி ஜோக்குக்குக் கொஞ்சமும் சிரிக்காமல் அறிவுரை வழங்குவார்கள்.

“மார்க்கெட் போயிக் காய்கறி வாங்கணும். பேரக் குழந்தைகளைக் குளிப்பாட்டி விடணும். அவங்களை ஸ்கூல் பஸ்ஸுக்கு அனுப்பறது; கூட்டிட்டு வர்றது; பாடம் சொல்லித் தர்றது; கதை சொல்றதுன்னு அவங்க தேவைகளை நீங்களே நிறைவேத்தணும். உங்களுக்குப் பொழுதும் போயிடும். வீட்டுப் பொம்மணாட்டிகளுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும். உங்ககிட்டே மரியாதையும் காட்டுவாங்க. அப்புறம்....”

அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல ஏதேனும் பொய்யுரைப்பது எனக்குப் பழக்கமாகிப் போனது.

“ரிட்டையர் ஆனபோது நாலஞ்சி லகரம் கிடைச்சிருக்குமே?  ஏதாவது ஒரு சிறு தொழில் ஆரம்பிச்சுடுங்க. வங்கிகள்ல கடனும் வாங்கிடலாம்” இப்படி ஆலோசனை வழங்கியவர், அரசாங்க உத்தியோகத்தில் நோகாமல் சம்பளம் வாங்குகிறானே என்று என் மீது பொறாமை கொண்டிருந்த என் சொந்தக்காரர்.

ஆறு பெத்தா அரசனும் ஆண்டியாவான்னு சொல்லுவாங்க. நான் நாலு பெத்தேன். ஓய்வுக்காலப் பலன்னு கிடைத்த பணத்தையெல்லாம் இந்த நான்கு புத்திரிகளும் தட்டிப் பறித்தது, நெருங்கிய உறவுக்காரரான இவருக்குத் தெரியாமல் இருக்காது.

“என்ன தொழில் செய்யலாம். சொல்லுங்க” என்ற போது, அப்புறம் சந்திப்பதாகக் கழன்று கொண்டார்.

“நாலு ஆட்டோ வாங்கி விடுங்க. எனக்குத் தெரிஞ்ச டீலர் இருக்கார். அறிமுகப்படுத்தறேன்” என்று பரிந்துரைத்தவர், எங்கள் தெருமுனையில் பெட்டிக்கடை போட்டிருந்த அண்ணாசாமி. போட்டியாய்க் கடை திறந்துவிடுவேனோ என்ற பயம் அவருக்கு.

“பேசாம மணிக்கூண்டுப் பக்கம் ஒரு பெட்டிக்கடை திறந்துடுங்க.நல்லாப் போகும்.” -இது  நான் வேலை பார்த்த அலுவலகத்தில் என்னிடம் திட்டு வாங்கிய தட்டச்சர்.

இப்படியாக, பலரும் என்னை ஓட ஓட விரட்டிப் புத்திமதியும் இலவச ஆலோசனைகளும் வழங்கியதில் நான் நொந்து நூலாகிப் போனேன்.

இந்தத் தொல்லையிலிருந்து விடுதலை பெற வழியே இல்லையா?

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மூளையைக் கசக்கியதில் ஒரு வழி பிறந்தது.

அதற்கப்புறம் நான் யாரைக் கண்டும் ஓடி ஒளிந்ததில்லை.

நானே வலிந்து சென்று, “ஹலோ” சொல்லிக் குசலம் விசாரித்தேன்.

“அப்புறம்.....” என்று அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் நானே பேசலானேன்.

“”நான் ரிட்டையர் ஆயிட்டேங்க. மத்தவங்களைப் போல வீட்டோட முடங்கிக் கிடக்க என்னால் முடியல. நிராதரவான ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு அனாதை விடுதி ஆரம்பிக்கிறேன். உங்க மாதிரி நல்ல மனசுக்காரங்களை நம்பிக் காரியத்தில் இறங்கிட்டேன்.....” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளாக, “அவசர வேலையாய்ப் போய்ட்டிருக்கேன். அப்புறம் சாவகாசமாய்ப் பேசுவோம்” என்று கழன்று கொள்கிறார்கள்.

நான் கிளப்பிவிட்ட இந்தப் பொய் வெகு வேகமாகச் சொந்தபந்தங்களிடையே பரவ, அவர்கள் என்னை எதிர்ப்பட நேரும்போது, கண்டும் காணாதது போல், திசை மாறிப் போய்விடுகிறார்கள்!

அப்புறமென்ன, அதிகாலை நடைப் பயிற்சி;  காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு நண்பர்களோடு சீட்டுக் கச்சேரி; பகலில் குட்டித் தூக்கம்; மாலையில் சம வயதுக் கிழடுகிண்டுகளுடன் பூங்காவில் அரட்டை தர்பார்; முன்னிரவில் தொ.கா.; அப்புறம் உறக்கம் வரும்வரை படிப்பு. அப்புறம்.....

ஓய்வுக்கால வாழ்க்கை ரொம்ப ஜாலிதான் போங்க!

**********************************************************************************************************************
2013இல் எழுதியது.

















செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பொன்மொழி!!!

“இந்தி மட்டுமே தெரிந்த ஓட்டுநர்களுக்காக, தமிழகத்தின் மைல்கற்களில் ஊர்ப் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் எழுதலாம்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன்னர் அவர்கள். 
[முதன்மை பெற்ற இந்தி!]

தமிழ் மட்டுமே தெரிந்த லாரி ஓட்டுநர்களுக்காக இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலையெங்கும் தமிழிலும் ஊர்ப்பெயர்களை எழுதப் பரிந்துரைப்பாரா இந்த இந்தி தேசியவாதி?

உயர உயரமான மைல்கற்களை நட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதலாமே?!  செய்வார்களா? இந்தி வெறியர்கள் செய்ய அனுமதிப்பார்களா?!

‘இந்தி மட்டுமே தெரிந்த ஓட்டுநர்கள்’ என்கிறாரே, வடபுலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு, ஊர்ப் பெயர்களைப் படிக்கிற அளவுக்கு அடிப்படை ஆங்கிலம்கூடத் தெரியாதா?[கற்களில் ஆங்கிலம் இடம்பெறுவதை அனுமதிக்கிறார் அமைச்சர்] குறைந்த பட்சம் அவர்கள் 8 ஆம் வகுப்புத் தேறியிருக்க வேண்டும்தானே? 8 ஆம் வகுப்புப் படித்தவரால் ஆங்கிலத்திலுள்ள பெயர்களைப் படித்திட இயலாதா? வடபுலப் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக்கூட இல்லையா?

இந்தியனாக இருப்பவன் இந்தி படிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் இந்தத் தேசியத் தலைவர், தென் மாநிலம் வருகின்ற வடபுல லாரி ஓட்டுநர்கள், ஊர்ப் பெயர்களைப் படித்தறிவதற்கேனும் தென் மாநில மொழிகளை கற்றிருத்தல் அவசியம் என்று சொல்லத் தவறியது ஏன்?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அமைச்சருக்கு, மொழிகுறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல்போனது வருந்தத் தக்கது; கண்டிக்கத்தக்கதும்கூட.
===============================================================================



திங்கள், 3 ஏப்ரல், 2017

‘பசுவைக் கொன்றால் தூக்குத் தண்டனை’...சட்டம் வருகிறது!!!

“ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? பசுவைக் கோமாதா என்பவர்கள் முட்டாள்கள்” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ  கேள்வி எழுப்பியுள்ளார்.
http://tamil.oneindia.com/news/india/how-can-be-animal-be-mother-human-markandeya-katju-278562.html
நாம் கட்ஜுவைப் போல ஆறறிவு மனிதர்கள். தொடர்ந்து படியுங்கள்.

ந்தியத் திருநாட்டில் ‘சதீஸ்கர்’னு ஒரு மாநிலம் இருக்கில்லையா? அதன் முதல்வர் ‘ரமன்சிங்’காம். “கோமாதாவைக் கொலை செய்பவர்களைத் தூக்கிலிடச் சட்டம் இயற்றப் போகிறேன்” அப்பிடீன்னு அறிவிச்சிருக்காராம். இந்தச் செய்தியை நேற்று[02.04.2017] ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது[இன்றைய செய்தித்தாள்களில்?]. ‘http://tamil.oneindia.com’ செய்தி வெளியிட்டுள்ளது.

மாட்டுக்கறி தின்பவர்கள் இருப்பதால்தானே அதைக் கொல்பவர்கள் இருக்கிறார்கள். எனவே, கொல்பவர்களோடு சேர்த்துத் தின்பவர்களையும் தூக்கிலிடுவதற்கான சட்டத்தையும் ரமன்சிங் நிறைவேற்றுவார் என நம்பலாம்.

மாடு கோமாதான்னா, நமக்குப் பால் தருகிற ஆடு, ஒட்டகம், கழுதையெல்லாமும்கூட நமக்கு மாதாக்கள்தானே?[பதிவின் தொடக்கமாக அமைந்திருப்பது நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜுவின் கண்டனம்]. அவற்றைக் கொன்றாலும் அது தூக்குத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படலாம்.

ரமன்சிங் கொண்டுவர இருக்கும் இந்தச் சட்டம் ஒரு முன்னோட்டம் என்று நம்பலாம். அடுத்து, காவிகளால் ஆளப்படும் பல மாநில அரசுகள் இதைப் பின்பற்றக்கூடும்.

அப்புறம்.....

அப்புறமென்ன, ஆட்டுக்கறி/மாட்டுக்கறி தின்னுகிற நம் போன்ற படுபாவிகள் எல்லோரும் தூக்கிலிடப்படுவது சர்வ நிச்சயம்.

ஆடுமாடுகள் போன்ற விலங்கினங்களைக் கொன்று தின்னாமல் மனித இனம் வாழ முடியுமா[வழிவகைகளைத் தேடுவது அறிவுடைமை] என்ற சிந்தனையே இல்லாமல், பசுவை மட்டும் தெய்வமாக்கி, அசைவம் உண்ணுகிற அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த ரமன்சிங் சுயபுத்தியுள்ள ஆள்தானா?

இந்த ஆளை உடனடியாக நாடு கடத்த வேண்டும் அல்லது மனநல மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். 

சுயபுத்தியுடன் செயல்படுபவர் என்று  நம்பப்படுகிற பிரதமர் மோடி இதைச் செய்வாரா?
===============================================================================