அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஜகஜாலக் கடவுள் ஜக்கி வாசுதேவ்!!!

'யோகா' பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னால் ஜக்கி வாசுதேவின் பெரிய படத்தை வைத்து, அரை மணி நேரம் பூஜை செய்வார்களாம் சீடர்கள்.

முதலில் 8000 ரூபாய் கட்டணமாக வாங்கிக்கொள்வார்கள். இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்துவிட்டு, மூன்றாம் நாளில் ஜக்கி சாமிக்குப் பூஜை செய்து முடித்துவிட்டுத்தான் முக்கிய யோகா பயிற்சியைத் தொடங்குவார்கள்.

மற்ற நேரங்களிலும் கடவுளின் குருவான[சத்குரு] ஜக்கிக்குப் பூஜைகள் நடைபெறுவதுண்டு.

[வெறும் யோகா பயிற்சிகளை மட்டும் சொல்லித் தந்தால், ஜக்கியின் சாம்ராஜ்யம் இப்படி விரிவடைந்திருக்காது அல்லவா?!]

இதற்குப் பிறகு, உருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, "இந்த உருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது" என்று சொல்லுவார்கள்.  வகுப்பு முடிந்ததும் பார்த்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய்வரை விலையுள்ள உருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். 

அதற்கு அடுத்தபடியாக, வகுப்பு முடிந்ததும் சத்துமாவுக் கஞ்சி தயாரித்து அருந்துவதற்குத் தருவார்கள்.  தரும்போதே, இந்தச் சத்துமாவு ஈஷா மையத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்றும் கூறுவார்கள்.  

நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்களிடம் அவர்கள் பெற்ற அனுபவங்களைக் கூறச் சொல்லுவார்கள். 

வகுப்பிற்கு வந்தவர்களும்,  "அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன்; சிகரெட் பிடிப்பதைக் குறைத்திருக்கிறேன்; மனைவியோடு சண்டை போடுவதில்லை" என்றெல்லாம்  ஜக்கியைப் புகழ்ந்துதள்ளுவார்கள்.

ஆனால், பேசுறவன் பூரா கிறிஸ்துவ மதமாற்றப் பேர்வழிகள் போல, செட்டப் செல்லாப்பாக்கள்தான். 

எல்லாவற்றையும் படம் பிடிப்பார்கள். வீடியோ விற்பனை அனல் பறக்கும்.

'ஈஷா மையம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறது' என்று கூறுவார்கள்.  'இலவச மருத்துவமனைகள் நடத்துகிறார் சத்குரு' என்பார்கள். இந்த யோகப் பயிற்சியின் பலன்களை உலகெங்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று மூளைச் சலவை செய்து அடிமைத்தனத்தையும், போதையையும் திணிப்பார்கள். இந்தப் போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வு அதோகதிதான்.

தன்னை  மறக்கும்  ஊக்கமருந்துகள்  அவர்களுக்குத்  தயாராக  இருக்கும்

இங்கு சேர்ந்த  நபர்கள்  பெத்த  அப்பன்  ஆத்தாளைக்கூட  ஓடிப் போய்டுங்கன்னு  சொல்லிட்டு,  சத்குரு  இன்னொரு  விமானம்  வாங்குவதற்காகத்  தேனீக்கள்  போல உழைப்பார்கள், 

அடிமைகூட,  தான்  அடிமை  என்று தெரிந்து  உழைப்பான்.  இவர்கள் தாங்கள் அடிமைகள் ஆக்கப்பட்டது தெரியாமலே ஜக்கிக்காகக் காலமெல்லாம் பாடுபடுவதே புண்ணியம் என்று நம்புபவர்கள்.

ஒரு நாள் உணவைத் தியாகம் செய்து நன்கொடை தாருங்கள் என்று வற்புறுத்தும் ஜக்கி வைத்திருக்கும் ஹம்மர் வாகனத்தின் விலை என்ன தெரியுமா ?  ஒரு கோடியைத் தாண்டும்!  

இவர் சொந்தமாக வைத்திருக்கும் R22 வகை ஹெலிகாப்டரின் விலை என்ன தெரியுமா ?  14 கோடி. இதுக்கு மெயிண்டனன்ஸ் வருசத்துக்கு 15 லட்சம்!!

'ஜகஜாலக் கில்லாடி' என்றால் எல்லோருக்கும் தெரியும். இந்த ஜக்கி அப்படிப்பட்டவர்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?!

                                                  படங்கள் உதவி: கூகுள்

தொடர்புடைய காணொலி:

                  

=============================================================

நன்றி: 

http://periyarkuthoosigurusamy.blogspot.com/2018/05/    -at May 18, 2018 

===============================================================================


புதன், 28 ஏப்ரல், 2021

'கின்னஸ்'இல் இடம் பிடித்த கொலைகாரப் பேரழகி!!!

'யாரேனும் குற்றம் செய்தால் ஒரு குதிரையின் வயிற்றைக் கிழித்து அந்தக் குற்றவாளியை, அதனுள் வைத்துத் தைத்து இறக்கும்வரை வேடிக்கை பார்ப்பார்கள்'

-இப்படியொரு தண்டனை, 16ஆம் நூற்றாண்டில் ஹங்கேரி நாட்டில் வழக்கத்தில் இருந்ததாம்.

'இளம் பெண்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தில் குளித்து வந்தால் என்றென்றும் இளமையாகவே இருக்கலாம்' என்பதானதொரு நம்பிக்கையும் அந்த நாட்டில் இருந்தது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

#'எலிசபெத் பாதோரி(Elizabeth Báthory)'என்னும் இளம் பெண் ஹங்கேரியில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள்.

மேற்குறிப்பிட்ட நம்பிக்கை[ரத்தத்தில் குளித்தல்] இவளின் மனதில் மிக மிக மிக அழுத்தமாகப் பதிந்திருந்தது.

குற்றவாளிகளைக் கிழிக்கப்பட்ட குதிரையின் வயிற்றில் வைத்துத் தைப்பதையும் அடிக்கடி இவள் பார்க்க நேர்ந்தது.

இதன் விளைவாக, தன் பணியாளர்களை மிகவும் துன்புறுத்தி வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டாள்.

15 வயதில் பெரேக் நடாஸ்டி என்பருடன் இவளுக்குத் திருமணம் நடந்தது. தன் கணவனுடன் சேர்ந்து பணியாளர்களைச் சித்திரவதை செய்து இன்புறும் பழக்கமும் தொடர்ந்தது.

கணவன் போருக்குச் செல்லும்போதெல்லாம் இவள் தனியாகவே இருந்தாள்.

இம்மாதிரிச் சூழ்நிலைகளில், வாழ்நாள் முழுவதும் தன் உடல் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இளம் பெண்களைக் கடத்தி, கொலை செய்து அவர்களின் ரத்தத்தில் குளிக்கலானாள்.

இவளால் ஊருக்குள் சென்று பெண்களைக் கொண்டுவர முடியாத சமயங்களில் தனது காவலர்களை அனுப்பி, அவர்களைக் கொண்டுவரும்படி உத்தரவிடுவாள்.

இதனால் ஊரெங்கும் பெண்கள் காணாமல் போகத் தொடங்கினர். கொலை செய்து ரத்தத்தை எடுப்பது மட்டுமன்றி, சித்ரவதை செய்வதிலும் மிகுந்த ஈடுபாடு இவளுக்கு இருந்திருக்கிறது.

பெண்களைக் கூண்டில் அடைத்து வைப்பாள்.

பின்பு, அவர்களைப் பனிக்கட்டியில் வீசி, உறைந்து இறக்கும்வரை பார்த்து ரசிப்பாள்.

கைகளில் நெருப்பு வைப்பது, நெருப்புப் பந்தைப் பெண்களின் முகத்தில் எறிவது, கொதிக்கும் நீரை அவர்கள் மீது ஊற்றித் தோலைத் தனியே பிரித்தெடுப்பது போன்ற குலை நடுங்கச் செய்யும் கொடூரங்களையும் இவள் அஞ்சாமல் செய்திருக்கிறாள்.

பெண்களின் உடலில் தேனை ஊற்றி, தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகளை அவர்களின் மீது கடிக்கவிட்டுச் சித்திரவதை செய்வதையும் இவள் தொடர்ந்திருக்கிறாள்.

நரமாமிசம் உண்ணும்படிக் கட்டாயப்படுத்துவது, கட்டி வைத்து ஊசியால் குத்துவது, உடலின் பாகங்களை வெட்டுவது போன்றவையும் இவளின் சித்திரவதைப் பட்டியலில் அடங்கும்.

இப்படி, இன்னும் பல கொடுமைகள் செய்திருக்கிறாள் இவள்..

இவளின் கொடூரமான குணம் தெரிந்ததால் மக்கள் யாரும் வேலைக்குச் செல்லவே பயந்தார்கள். சிலர் இவளுக்கு அஞ்சி, தம் பெண் பிள்ளைகளை மறைத்துவைக்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில், துர்சோ என்பவர் பாதோரிக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டினார். இவளுக்குரிய கோட்டையை ஆராய்ந்தபோது, கண்ணை இழந்த, கை கால்களை இழந்த நிலையில் பல அடையாளம் தெரியாத பெண் சடலங்கள் கண்டறியப்பட்டன.

அதன் பின் நடந்த விசாரணையில் பாதோரி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டாள். ஆனால் அவள் ஆஜராகாமல் தன் பணியாளர்களைத் தனக்குப் பதிலாகக் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடையும்படிச் செய்தாள்.

இருப்பினும் இவள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இவளை ஒரு தனிக் கோட்டையில் சிறை வைக்கும்படி ஹங்கேரி அரசு உத்தரவிட்டது. இவளுக்கு உதவிய பணியாளர்களுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது.

அந்த மூடப்பட்ட கோட்டையில் இருந்த பாதோரி, தனது 54 ஆவது வயதில் உயிரிழந்தாள் என்று கூறப்படுகிறது#

வாசிப்போரை நெஞ்சு நடுங்கச் செய்யும் மேற்கண்ட தகவல்கள் நம்பும்படியாக இல்லைதான். ஆனாலும்,

650க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்த எலிசபெத் பாதோரி என்னும் இந்தப் பெண், 'உலகிலேயே அதிகக் கொலை செய்த பெண்' என்று கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை!

Elizabeth Báthory

===============================================================================

ஆதாரம்:

Story of Elizabeth Báthory “The Blood Countess”

The Legend of Elizabeth Báthory: The Blood Countess - Medical Bag

 https://ta.quora.com 



செவ்வாய், 27 ஏப்ரல், 2021

'சாதனை'... சிறு குறுங்கதை!

“என்னோட பள்ளித் தோழர் ஒருத்தருக்குக் கலைமாமணி விருது கிடைச்சிருக்கு”- செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த வாசுதேவன் சொன்னார்.

“அப்படியா? உங்ககூட, கல்லூரியில் ஒன்னாப் படிச்ச ஒருத்தருக்கு ஏதோ நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்கிறதாச் சொன்னீங்களே?” என்றார் அவர் மனைவி தேவி.

“அது போன மாசம். அதையும் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சிட்டேன். அது மட்டுமில்ல, என்னோட படிச்ச ஒரு பொண்ணு, இந்த வருசம் செஸ் போட்டியில், ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வாங்கியிருக்கு. இப்படி, இன்னும் யாரெல்லாமோ எதையெல்லாமோ சாதிச்சிருக்காங்க. என்னோட படிச்சவங்க சாதனைகள் நிகழ்த்துறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, அவங்களோட படிச்ச நான் எதுவுமே சாதிக்கல.” -மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் வாசுதேவன்.

"வணிகவரித் துறையில் அதிகாரியா இருக்கீங்க. ஏராளமான வாய்ப்பிருந்தும் லஞ்சமே வாங்காம கடமையைச் செய்யுறீங்க. பாராட்டையும் விருதையும் எதிர்பார்க்காத இந்தச் சாதனைக்கு வேறு எந்தச் சாதனையும் ஈடாகாதுங்க.”- தேவியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

மன வருத்தம் தணிந்தார் வாசுதேவன்.

===============================================================================

பழைய 'குமுதம்' இதழில் வெளியான 'என்' கதை.

திங்கள், 26 ஏப்ரல், 2021

"அதென்ன 'Long Love'?!"[இளம் தம்பதியர்க்கு மட்டும்]


//‘லாங் லவ்’['Long Love'] எனப் பெயரிடப்பட்ட ஆணுறை மேல்நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், உறுப்பை மறத்துப்போகச் செய்யும் மருந்துகள் பூசுவதைத் தவிர்ப்பதற்காக, ஆணுறையின் உட்புறத்தில் மறத்துப்போவதற்கான மருந்தைக் கலந்திருக்கிறார்கள். இதனை அணிவதால் விந்து வெளியேறுவது தாமதப்படும்// என்கிறது ஓர் இணைய இதழ்ச் செய்தி.

இதில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உள்ளது என்பது எனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை[ஹி...ஹி...ஹி!]. 

புதுசாக் கல்யாணம் கட்டிகிட்ட இளம் காளையர்க்குப் பயன்படக்கூடும் என்னும் கருணையுணர்ச்சியே இச்செய்தியைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது!

இதன் தேவை யாருக்கேனும் அவசியமானதும் அவசரமானதும்  என்றால்.....

அமேசானில்[https://www.amazon.com/Erotim-Long-Love-Condom-pack/dp/B00JE2XSDQ] உள்நுழைந்து தேடலாம். தேடினால்.....

'Currently unavailable.
We don't know when or if this item will be back in stock.'

என்னும் அறிவிப்பு அன்னாரை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடும்! ஆதலினால்.....

மனதைத் தேற்றிக்கொண்டு, தளராத தன்னம்பிக்கையுடன் கீழ்க்காணும் முகவரியிலும் தேடினால் அது கிடைக்கக்கூடும்!!

https://www.amazon.com/12-Erotim-Long-Love-Condoms/dp/B0748NPWSV

வாழ்த்துகள்!

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

'கொரோனா'... தப்பிப் பிழைத்த தமிழருவி மணியனின் வேண்டுகோள்!


இன்று[25.04.2021] முற்பகலில், இணையங்கள்[Websites] பலவற்றில் வெளியான, தமிழருவி மணியன் அவர்களின் 'twitter' பதிவு:

#கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளி வராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம் பயனுள்ள முறையில் செலவழிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத முடிவில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றேன். கும்பகர்ணன் போருக்குப் புறப்பட்டபோது ‘விதி பிடர் பிடித்து உந்த நின்றது’ என்பான் கம்பன். என்னையும் விதி ஈரோடு நோக்கிப் பிடர் பிடித்து இழுத்ததை அப்போது நான் அறியவில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த அரங்கில் நான் பேசி முடித்ததும் பலர் என்னுடன் செல்ஃபி எடுத்தனர். நான் முகக் கவசமின்றிக் காட்சி தரவேண்டுமென்று வற்புறுத்தினர். மறுக்க முடியாத நிலையில் நான் அதற்கு மனமின்றி இணங்க நேர்ந்தது. அதற்காக நான் கொடுத்த விலை மிக அதிகம். வீடு திரும்பியதும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை உணர முடிந்தது.

இதய அறுவைச் சிகிச்சையும் வால்வு மாற்றமும் செய்துகொண்ட என் மனைவிக்கும் என்னால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பொருளாதார வசதியற்ற நாங்கள் ஓர் அரசு மருத்துவ மனையைத் தஞ்சமடைந்தோம். பரிசோதனைக்குப் பின்பு எங்களுக்கு ஆரம்ப நிலையில்தான் பாதிப்பு என்று சொல்லி, சில மாத்திரைகளை வழங்கி, வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவர்கள் பரிந்துரையை வேதமாக ஏற்றுப் பத்து நாட்கள் இருந்ததில் நோய் முற்றிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட சித்த மருத்துவர் வீரபாபு என்னை வீட்டிற்கு வந்து சந்தித்தார். அவருடைய உழைப்பாளி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அரை மனதுடன் நான் என் மனைவியுடன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு இசைந்தேன்.

சி.டி. ஸ்கேன் எடுத்ததில் என் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது தெரிந்தது. நிமோனியா காய்ச்சல் என்னை மரணத்தின் விளிம்புவரை கொண்டு சென்றது. உடல் முழுவதும் வெப்பத்தால் பற்றி எரிந்தது. தலையில் நெருப்புச் சட்டியைச் சுமப்பதுபோல் இருந்தது. செவிமடல்களில் தாங்க முடியாத வெப்பம் வீசியது. மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன். நோயில் விழுந்து பாயில் படுத்துச் சாவில் முடிவதுதான் எனக்கான விதி என்றுணர்ந்தேன். மரணம் என் கண் முன்னால் நிதர்சனமாக நிழலாடியது. யாரையும் களப் பலியாக்க விரும்பாமல் தேர்தல் களத்திலிருந்து ரஜினிவிலகி நின்றது எவ்வளவு விவேகமான முடிவு என்பது தெளிவாகப் புரிந்தது. அவர் மீது அன்றுவரை எனக்கிருந்த ஆழ்ந்த வருத்தமும் அகன்றது. நான் பிழைக்கமுடியும் என்ற நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டேன்.

என் மனைவிக்குக் கொரோனா ஆரம்ப நிலையில் இருந்ததால் நான்கு நாட்களில் பூரண நலமடைந்து வீடு திரும்பிவிட்டது ஓரளவு ஆறுதலாய் அமைந்தது. நான் நிச்சயம் கொரோனாவின் கொடிய பிடியிலிருந்து மீண்டுவிடுவேன் என்று நம்பிக்கையளித்த மருத்துவர் வீரபாபு இரவு பகல் பாராமல் எனக்கு உரிய சிகிச்சையை வழங்கி வந்தார். அவருக்கு வாய்த்த செவிலியர் அனைவரும் அற்புதமானவர்கள். நோயுற்ற குழந்தையை ஒரு தாய் பராமரிப்பது போல் என்னை அவர்கள் பராமரித்தனர்.

மருத்துவர் வீரபாபுவும், திருமதி வசந்தாவின் தலைமையில் இயங்கும் செவிலியர்களும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையால் இரண்டு வாரங்களுக்குப் பின்பு நிமோனியா காய்ச்சல் தணிந்தது. அதற்குப்பின் தொடர்ந்த சிகிச்சையால் நான் பூரணமாக நலம் பெற்றேன். என்னைச் சாவின் கொடிய பிடியிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தது சித்த மருத்துவம்தான். ஆனால் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகியவற்றிற்கு அரசின் ஒத்துழைப்பு இல்லை என்பதுதான் அவலம்.  சென்ற ஆண்டு ஆங்கில மருத்துவத்துடன் சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி மருத்துவத்தையும் கொடிய கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற சுகாதாரத் துறை இப்போது வெறும் அலோபதியை மட்டுமே நம்பியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

என்னைப் போன்ற வலிமையான பொருளாதாரப் பின்புலம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து இலட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டியழுவதற்கு இயலுமா? அரசு மருத்துவமனைகளை விட்டால் வேறு போக்கிடம் இல்லாத என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரம் போல் வாய்த்திருப்பதுதான் வீரபாபு போன்றவர்களின் மருத்துவமனைகள். என் மனைவிக்கும் மகளுக்கும் நான்கு நாட்களும், எனக்கு ஒரு மாதமும் சிகிச்சையளித்ததுடன் மூன்று வேளையும் தரமான உணவும் வழங்கிய வீரபாபு என்னிடமிருந்து ஒரேயொரு ரூபாயையும் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். நான் மிகவும் வற்புறுத்தி அற்பமான தொகையை அவரது மேசைமீது வைத்துவிட்டு வீடு திரும்பினேன். எனக்கு ஏற்படும் இழப்புகளையும் வலிகளையும் பிறரிடம் எப்போதும் நான் வெளிப்படுத்துவதில்லை. அதனால்தான் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம்வரை சென்று திரும்பியதைச் செய்தியாக்கவில்லை.

இப்போது ஒரு சமூக நோக்கத்திற்காகவே எனக்கு நேர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்று காட்டுத்தீயைப் போல் கொரோனா பரவிவரும் நிலையில் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் போதிய இடமில்லாத சூழலில் நம் மண் சார்ந்த சிகிச்சைகளின் பக்கம் அரசு முகம் திருப்பவேண்டும். இனி வருங்காலங்களில் சித்த, ஆயுர்வேத மருத்துவம் பல்கிப் பெருக அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி உடனடியாக சித்த மருத்துவமனைகளின் சேவையைப் பெருமளவில் பயன்படுத்த முன் வரவேண்டும். என் உயிரை மீட்டுத் தந்த வீரபாபுவின் சித்த மருத்துவமனைதான் அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகராக விளங்கிய மக்கள் நீதி மையத் துணைத் தலைவர் பொன்ராஜ் அவர்களின் உயிரையும் காப்பாற்றியது.

நிறைவாக நான் கூற விரும்புவது…. ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறினால் கொரோனா நம்மைக் கொன்றுவிடும். வீடு திரும்பி ஒரு மாதமாகியும் நான் இன்னும் பழைய உடல் நிலையைப் பெறவில்லை. தளர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லை. வருமுன் காப்பதே விவேகம். தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயங்காதீர்கள். முகக் கவசம் அணியாமல் எங்கும் போகாதீர்கள். சமூக இடைவெளி மிகவும் முக்கியம். யாரோடும் செல்ஃபி எடுக்க முயலாதீர்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் ஆவி பிடிக்கத் தவறாதீர்கள். அவசியமின்றி வெளியில் செல்லாதீர்கள். இன்று கொரோனா இவ்வளவு வேகமாகப் பரவியதற்கு அரசியல்வாதிகள் நடத்திய தேர்தல் பரப்புரைகளே முக்கிய காரணம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது கொரோனா.

நமக்கு நாமின்றி நல்ல துணை யாருமில்லை.

-தமிழருவி மணியன்#

======================================================================

தமிழருவி மணியன் அவர்களுக்கு நன்றி.


சனி, 24 ஏப்ரல், 2021

கொரோனா தொற்றும் மூச்சுக் காற்றும்!

இப்பதிவில், 'மூச்சுப் பயிற்சி' குறித்து இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் இணையங்களில் சேகரித்தவை. இவற்றில் பலவும் அல்லது முழுதும் ஏற்கனவே நீங்கள் வாசித்தோ கேள்விப்பட்டோ அறிந்தவையாக இருத்தல்கூடும். இருப்பினும், கொரோனாவின் தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் அவற்றை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துவதற்காகவே இந்தப் பதிவு.

ம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. குளுக்கோஸ் பிரத்தியேக முறையில் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது வெளிப்படும் ஆற்றலைத்தான் செல்கள் அவற்றின் இயக்கத்திற்குப் பயன்படுத்துகின்றன. இதுபோல, நமது உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. 

உயிர்க்காற்று[ஆக்சிஜன்]?

உடலின் இந்த ஆக்சிஜன் தேவைக்கு வெளிக்காற்றில் உள்ள ஆக்சிஜனைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். வெளிக்காற்று மூக்குத் துவாரங்களின் வழியாகப் புகுந்து மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களை அடைந்து அங்குள்ள எண்ணற்ற நுண்ணறைகளை நிரப்புகிறது. அந்த நுண்ணறைகளின் சுவர்களில் இரத்தக் குழாய்கள் பின்னிக் கிடக்கின்றன.

அந்த இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் இரத்தச் சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின், காற்றிலுள்ள ஆக்சிஜனைக் கிரகித்துக்கொள்கிறது. பின்னர், இந்த ஹீமோகுளோபின் இரத்த ஓட்டத்தின் மூலம் உடல் செல்கள் அனைத்துக்கும் தேவையான ஆக்சிஜனைக் கொண்டு கொடுக்கிறது.

செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவது மட்டும் மூச்சு மண்டலத்தின் வேலை இல்லை.

வளர்சிதை மாற்றச் செயல்களின்போது ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவது, மூச்சுக் காற்றின் வழியாக உடலுக்குள் புக முயலும் நோய்க் கிருமிகளை வடிகட்டித் தடுத்து நிறுத்துவது, நாம் பேசும்போது ஒலியை எழுப்புவதற்குத் தேவையான காற்றை வழங்குவது போன்ற மற்ற வேலைகளையும் மூச்சு மண்டலம் கவனித்துக்கொள்கிறது.

மூச்சுக் காற்று போலவே நம் உடலுக்குச் சளியும் தேவையானதுதான். அது உடலுக்குப் பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது. சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அவை நுரையீரலில் உள்ள சளியில் சிக்கிக்கொள்ளும். இந்தச் சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது. 

ஓரிரு நிமிடங்களேனும் மூச்சை நன்கு இழுத்து விடுவது, சளியை வெளியேற்றுவதற்கான சிறந்த வழியாகும்.

கொரோனா கிருமிகள் தொண்டைச் சளியில் குடியேறித்தான் நுரையீரலைச் சென்றடைந்து அதைச் சிதைத்து நம் உயிரைப் பலி கொள்கின்றன. மூச்சுப் பயிற்சியானது, கொரோனா தொண்டைச் சளியில் ஒட்டியபோதே அதை வெளியேற்றி நுரையீரலுக்குள் நுழைந்துவிடாமல் 

தடுத்துவிடுகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். 

மூச்சுவிடுவது சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன. சுவாசத்தைச் சரியாகச் செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்தால் சிறந்த பல பலன்களைப் பெற முடியும்.

மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடமும் மாலையில் 5 நிமிடமும் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும் என்பது பொதுவானதொரு கருத்து.

காலை நேரத்தில் இதமான வெயிலில் அமர்ந்து, அரை மணி நேரம் போல[இடைவெளி விட்டு] மூச்சை இழுத்துச் சற்று நேரம் நிறுத்திப் பின்னர் வெளியேற்றுவது மிகுந்த பயனைத் தருவதாக அமையும்['யோகா' பயிற்சி பெற்றவர்கள் அதைத் தொடரலாம்].

நடைப் பயிற்சியில் ஈடுபடும்போதும்கூட அவ்வப்போது மூச்சை இழுத்துவிடலாம்.

இரவில் உறங்கச் செல்லும்போது, நீட்டிப் படுத்த நிலையில் உறக்கம் வரும்வரை மூச்சை இழுத்துவிடுவது ஆழ்ந்த உறக்கத்திற்கு மட்டுமல்லாமல்,  உடல் நலன் பேணவும் வழிகோலுகிறது.

மூச்சுப் பயிற்சியைப் பொருத்தவரை, கொஞ்சமும் சிரமப்படாமல், மன மகிழ்ச்சியுடன் இதனைச் செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.   

மூச்சுப் பயிற்சியால் உடலுக்குள் செல்லும் நச்சுக் கிருமிகள்  அழிக்கப்படுகின்றன.

காய்ச்சல் அல்லது அதிகப்படியான உடற்சூடு மூச்சுப் பயிற்சியால் தணியும்.

கொரோனா மட்டுமல்லாமல் ஏனைய தொற்றுகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.

இளம் வயதிலிருந்தே தொடர்ந்து இப்பயிற்சியை மேற்கொள்வதால், இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

முதுமைப் பருவத்திலும், மூளைச் செல்கள் புதுப்பிக்கப்பட்டுச் சுறுசுறுப்பாகச் செயல்பட இப்பயிற்சி பயன்படுகிறது. 

பெருமூச்செறிவதன் மூலம் மனப் பதட்டத்தைத் தணிக்கலாம்.

ஆக, மூச்சுப் பயிற்சியால்  பெறும் பயன்கள் மிகப் பலவாகும் என்பதை அறிந்துணர்ந்து அனைவரும் செயல்படுதல் வேண்டும் என்பது என் உளப்பூர்வமான வேண்டுகோள் ஆகும்.

நன்றி.

====================================================================================== 


வெள்ளி, 23 ஏப்ரல், 2021

இழந்த சக்தியை மீட்டெடுக்க 'இலவச'ப் பாலுறவுச் சிகிச்சை!!!

[ரோனித் அலோனி]

பணத்துக்காக உடலுறவுக்கு உடன்பட்டால் அது விபச்சாரம். அதையே இலவசமாகச் செய்தால்.....

அது தியாகமாக ஆகிப்போவதும் உண்டு.

எதற்காக இந்தத் தியாகம்? உலகில் எங்கெல்லாம் நடக்கிறது?

'ஒருவரைப் பாலியல் துணைவராக[தொழிலாளி அல்ல]ப் பயன்படுத்தி நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் இந்தப் பணி  பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது' என்பது நமக்குப் பேராச்சரியம் தரும் செய்தி. 

இதில் முன்னணி வகிக்கும் நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றிருப்பது 'இஸ்ரேல்' ஆகும்.

ஆம், இஸ்ரேலிய அரசாங்கம் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக இந்தப் பணியை அனுமதித்திருக்கிறது. 

சுற்றிலும் பகை நாடுகள் இருப்பதால் அடிக்கடி போர் நிகழ்கிறது. பெரும் எண்ணிக்கையிலான படை வீரர்கள் காயம் அடைகிறார்கள். ஒரு வீரர் காயமடைந்து, அவரின் பாலுறவு கொள்ளும் திறன் பாதிக்கப்பட்டால், அரசே அவருக்கு வாடகைத் துணை மூலம் சிகிச்சையளிப்பதற்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது.

இந்தச் சிகிச்சைக்காகத் தனிப்பட்டவர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மனிதாபிமானத்தின் உச்சம்.

'ரோனித் அலோனி' என்பவர் இம்மாதிரியான தியாகத்தைச் செய்துவரும் அதிசயப் பெண் ஆவார்.

டெல் அவிவ் நகரில் பாலியல் சிகிச்சையளிக்கும் இவரின் அறையில்  வாடிக்கையாளர்கள் அமர சொகுசான சோபா, விளக்கமளிப்பதற்கு ஆண், பெண் உறுப்புகளின் வரைபடங்கள் ஆகியவை உள்ளன.

பக்கத்து அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படுக்கை இருக்கும். இங்குதான் வாடகைத் துணைவர்கள், அலோனியின் வாடிக்கையாளர்களுக்குப் பாலியல் பாடம் எடுப்பார்கள். உறவில் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதைக் விவரிப்பார்கள்; இணைசேரக் கற்றுத் தருவார்கள்.

அலோனி. பாலியல் மறுவாழ்வுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

"சிகிச்சை பெறவே இங்கு வருகிறார்கள். இன்பமடைவதற்காக வருவதில்லை. அதனால் இது விபச்சாரம் இல்லை" என்கிறார் அலோனி உறுதியாக தொனியில்.

"இங்கு 85 சதவிகிதம் நெருக்கம், தொடுதல், அளித்தல், பெறுதல், தொடர்புகொள்ளுதல் ஆகியவைதான். இணைசேருவதுடன் சிகிச்சை நிறைவுபெற்றுவிடுகிறது."

அலோனியின் சிகிச்சை மையத்துக்கு வெவ்வேறு வயதுடைய, பலவகைப் பின்னணியைக் கொண்டவர்கள் வருகிறார்கள்.

"என் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு உடல் குறைபாடுகளைக் கொண்டவர்களுடனேயே இருந்து வந்திருக்கிறேன். அவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் மீட்க முடிந்திருக்கிறது. அதனால் நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறேன்" என்கிறார் அலோனி.

நியூயார்க்கில் படித்துக் கொண்டிருந்தபோது வாடகைத் துணைவர் ஒருவரின் அறிமுகம் அலோனிக்குக் கிடைத்தது. 1980-களில் இஸ்ரேலுக்குத் திரும்பி வந்த பிறகு வாடகைத் துணைவர்களைப் பயன்படுத்துவதற்கு மூத்த மதத் தலைவர்களிடம் அனுமதி பெற்றார்.

மதத் தலைவர்கள் ஒரேயொரு கட்டுப்பாட்டை மட்டும் விதித்தார்கள். எந்தவொரு மணமான பெண்ணையோ, ஆணையோ வாடகைத் துணைவராகப் பயன்படுத்தக்கூடாது என்பதே அது. அதை அலோனி கடைபிடித்தார்.

செராபினா ஒரு வாடகைத் துணைவர்[பெண்தான்]. ரோனித் அலோனியின் மையத்தில் பத்தாணடுகளுக்கும் மேலாகப் பணியாற்றுபவர். மிகவும் அழகான, மெலிந்த தேகம் கொண்ட, எதையும் தெளிவாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்.

"சிகிச்சையின் அங்கமாக என் உடல் பயன்படுத்தப்படுவது பற்றி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்று கூறுகிறார் செராபினா.

செராபினா, தான் ஒரு 'பயண வழிகாட்டியை'ப் போன்று செயல்படுவதாக எண்ணுகிறார். தனக்குத் தெரிந்த வழியில் தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதுதான் தனது வேலை என்கிறார்.

40 வாடிக்கையாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார் செராபினா. 

"அது விடுமுறையைக் கழிப்பது போலத்தான். சிகிச்சை பெற்றவரைப் பிரியும்போது. சில நேரங்களில் அழுகை வரும். இருப்பினும் மகிழ்ச்சிதான்" என்கிறார்.

"சிகிச்சை பெற்றவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவோ, குழந்தை பெற்றதாகவோ கேள்விப்பட்டால் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை" என்று நெகிழ்கிறார்

மாலை நேரத்தில் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள பாலியல் நிபுணர்களுக்கு ஆன்லைனில் உரையாற்றுகிறார் அலோனி.

வாடகைத் துணைவர் முறை வழக்கமான முறைகளைவிட அதிகப் பயனளிப்பதாகப் பல்வேறு தகவல்களுடன் விளக்குகிறார்.

மிகவும் தீவிரமான, காயம்பட்ட வீரர்களுக்கு நவீன அறுவைச் சிகிச்சைகளுடன், வாடகைத் துணைவர் முறையும் சேர்ந்து சிறந்த பலன்களைத் தருகிறது என மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கிறார் அலோனி. 

======================================================================================

உதவி: https://www.bbc.com/tamil/global-56770101

புதன், 21 ஏப்ரல், 2021

2ஆவது கொரோனா தடுப்பு ஊசியால் 'பக்க விளைவுகள்' அதிகரிப்பது ஏன்?

முதல் தடுப்பூசி[ஷாட்] மூலம் பக்க விளைவுகளை அனுபவிக்காத பலர், இரண்டாவது ஷாட் மூலம் சில விளைவுகளை அனுபவிக்க நேரிடலாம். அதிக அளவிலும் அது இருக்கக்கூடும். ஆனாலும், கவலைப்பட ஏதுமில்லை.

முதல் தடுப்பு ஊசி, வைரஸை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை உடம்புக்குக் கற்பிக்கிறது.

ஊசி போடும் இடத்தில் வலி, புண், விறைப்பு, லேசான காய்ச்சல் அனைத்தும் முதல் முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் எதிர்பார்க்கப்படும் அறிகுறிகளாக இருக்கலாம். 

2ஆவது தடுப்பூசிக்குப் பிறகு..... 

சோர்வு, குமட்டல்,  தலைவலி போன்றவை அதிகமாக இருக்கலாம். இளம் வயதினருக்கும், பெண்களுக்கும் பாதிப்புகள் அதிகமாக இருந்திட வாய்ப்புகள் அதிகம். அதிகமான பக்க விளைவுகளின்போது செல்கள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்பது அறியத்தக்கது.

பக்க விளைவுகள் நீடிக்கும் கால அளவு:

பக்க விளைவுகள் தடுப்பூசி பெற்ற பிறகு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு இருக்கும். பின்னர் அவை தாமாகவே மறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பக்க விளைவுகள் என்பது அவசியமான ஒன்றல்ல; சிலரை அவை பாதிப்பதில்லை.

பக்க விளைவுகளே இல்லையென்றால், தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று கருத வேண்டியதில்லை. ஊசியின் செயல்பாடுகள் இயல்பானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

பக்க விளைவுகள்:
பக்க விளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையாகத்தான் இருக்கின்றன. இது ஏதோ ஒரு விதமான வலி, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம், மிதமான காய்ச்சல், உடல் வலி, பதற்றம், ஒவ்வாமை, அரிப்பு, சொறி போன்றவையாக வெளிப்படலாம் என்றும் குறிப்பிடுகிறார் டாக்டர் மனோகர் அக்னானி.

ஆனால், சில விளைவுகள் தீவிரமானவையாக இருக்கக்கூடும் என்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு அதிக காய்ச்சல் அல்லது 'என்ஃபைலாக்ஸிஸ்' (கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள்) என்ற நிலையும் உருவாகலாம் என்றும் எச்சரிக்கிறார். இருப்பினும் இது தற்காலிகமானது என்றும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு இருக்காது என்று ஆறுதலளிக்கிறார். 

ஆனால், மிகத் தீவிரமான எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்கிறார். அத்தகைய சந்தர்ப்பத்தில், உயிரிழப்போ வாழ்நாள் முழுமைக்கும் பாதிக்கக்கூடிய ஒரு சிக்கலோகூட ஏற்படலாம் என்று இவர் விளக்குகிறார்.

ஒவ்வொரு தடுப்பூசித் திட்டத்திலும் இதுபோன்ற சில பாதகமான விளைவுகள் காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 5 முதல் 10 சதவிகிதம் பேர்வரை இதுபோன்ற எதிர்மறையான விளைவைப் பெறுவது இயல்புதான் என்று தெரிவிக்கிறார். =https://www.bbc.com/tamil/science-55717357
======================================================================================


செவ்வாய், 20 ஏப்ரல், 2021

"ஒரு மசுரும் புரியல!!!"

பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைகிறோம்.

பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச் சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம். எதனுடனோ எவருடனோ எல்லாமோ போராடி வதைபடுகிறோம். வாழ்நாள் முடிந்ததும் செத்துத் தொலைக்கிறோம்.

அப்புறம் என்ன ஆகிறோம்? 

ஒரு மயிரும் புரியவில்லை.

இந்தப் புரியாத புதிர் குறித்துத் தானும் சிந்தித்துப் பிறரையும் சிந்திக்கத் தூண்டாமல், ஒன்றுக்கும் உதவாத கடவுளைத் துதிபாடும் கிளிப்பிள்ளை மனிதர்களை நினைத்தால் மிஞ்சுவது வேதனை மட்டுமே!


                                                *                                 *                                  *
இப்பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்த ‘ஔவை’யின் பாடலைக் கீழே பதிவு செய்கிறேன். இது நம்மவர் சிந்தனையை விரிவுபடுத்துவதாக அமையும் என்பது என் நம்பிக்கை.

‘வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமென்றால் போகா -இருந்தேங்கி 
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்’                                            [துஞ்சுதல் - இறத்தல்]   
======================================================================================  

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

"துவளாதே தமிழா!"... தெம்பூட்டும் ஏ.ஆர்.ரஹ்மானும் கவிஞர் தாமரையும்!!

'மூப்பில்லா தமிழே தாயே' என்னும் தனிப்பாடல் இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ளது. இது குறித்து, இந்தப் பாடலை எழுதிய கவிஞர் தாமரை பெரு மகிழ்ச்சி பொங்கிடப் பின்வருமாறு கூறுகிறார்:

#'தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில், தமிழ் இனத்தவருக்கு உற்சாகமூட்டி உலகத் தமிழர் அனைவரையும் ஒருங்கிணைக்க வல்ல ஒரு பாடலை உருவாக்கத் திட்டமிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அப்பாடலை நான் எழுதுதல் வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

நானும், 'புயல் தாண்டியே விடியல்' என்னும் வரியைத் தொடக்கமாகக் கொண்ட பாடலை எழுதினேன்.

இப்பாடலைத் தயங்காமல் அள்ளி எடுத்துக்கொண்டார் ரஹ்மான்.

பற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன். பாடல் அழகிய வடிவம் பெற்றது; விரைவில் வெளிவரவுள்ளது.

இதற்கு அவர் தேர்வு செய்த தலைப்பு, 'மூப்பில்லா தமிழே தாயே' என்பதாகும். தமிழ், தமிழர் நலம் குறித்தெல்லாம் நாங்கள் இருவரும் உரையாடியிருக்கிறோம். அவ்வுரையாடலில், தமிழ்த் தேசியம், அரசியல், சமூகவியல் ஆகியவையும் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன.'#

தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் பெரும் பற்றுக்கொண்ட கவிஞர் தாமரையையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் மனமுவந்து பாராட்டுவோம்; போற்றுவோம்!

அறிமுக விளம்பரம்[Teaser]:

https://youtu.be/5DnAaDpWzi0

======================================================================================

https://www.dinamani.com/cinema/cinema-news/2021/apr/15/ar-rahman-moopilla-thamizhe-thaaye-video-teaser-thamarai-3604528.html  [15.04.2021]

சனி, 17 ஏப்ரல், 2021

பகுத்தறிவாளர் 'விவேக்' மறைவு... கலங்கும் நெஞ்சங்களின் கண்ணீர் அஞ்சலி!

'திரைத்துறைக்கு மட்டுமல்ல பகுத்தறிவுத் துறைக்கும் விவேக் மறைவு பேரிழப்பாகும்' -சாலமன் பாப்பையா 

'சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் தம்பி விவேக்' -நடிகர் சத்தியராஜ்

'நடிகர் விவேக்கின் சமூகச் சீர்த்திருத்த விழிப்புணர்வு நகைச்சுவைப் பாணி என்பது திராவிட இயக்கக் கருத்துகளின் தொடர்ச்சியாக இருந்தது. அதனால்தான், கலைஞர் கருணாநிதி நடிகர் விவேக்கைச் சின்னக் கலைவாணர் என்று அழைத்து மகிழ்ந்தார்.' -https://tamil.indianexpress.com/

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் தேக்கி நகைச்சுவையாக அவற்றை வெளிப்படுத்தினார் நடிகர் விவேக்' -மறுமலர்ச்சி தி.மு.க.தலைவர் 'வைகோ'

'மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியதால் பெரியார் விருது பெற்றவர் விவேக்'  -கி.வீரமணி 

'அவர் நட்ட பல லட்சம் மரங்கள்கூட அவரை நினைத்து வாடும்' -நடிகர் நாசர்

'நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக்' -தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

'சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்டவர் நண்பர் விவேக்' -நடிகர் பார்த்திபன்

'சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார்' -டி.டி.வி.தினகரன்

'தனக்குச் செய்த சமூகத்துக்குத் தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர்' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

'நடிப்பைத் தாண்டிய சமூக அக்கறை கொண்டவர். சுற்றுச்சூழல் ஆர்வலர்' -காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

'சமூகச் சேவைகளால், சமூகச் சீர்திருத்தக் கருத்துகளால் என்றும் மக்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வசித்துகொண்டே இருப்பார்' -சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்

'தனது நகைச்சுவையால் சமுதாயச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர்' -https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=671559

'தான் பேசிய பகுத்தறிவைத் தூண்டும் வசனங்கள் மூலம் மக்களைச் சிந்திக்கத் தூண்டியவர் விவேக்' -தினத்தந்தி

'இன்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், "பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்” என்று அறிவித்தார்' -ஊடகச் செய்தி

======================================================================================

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பெரியார் பெயர் மாற்றம்... 'சீண்டல்' தொடரும்!!!


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்பது பெரும்பான்மைக் கருத்துக்கணிப்புகளின் வாயிலாக அறியலாகும் செய்தி.

இச்செய்தி, பெரியார் நெடுஞ்சாலைப் பெயர் மாற்றத்திற்குக் 'காரணமானவர்களை'ப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் முயற்சி ஏறத்தாழத் தோற்றுவிட்ட நிலையில், வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு, அக்கட்சியை ஆள விடாமல் தடுப்பதற்கான அவர்களின் முதல் கட்ட நடவடிக்கையே இந்தப் பெயர் மாற்றம்[பெரியார் பெயர் அழிப்பு] ஆகும்.

தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் ஏமாளிகள். பெயர் மாற்றம் போன்ற 'சீண்டல்' வேலைகளைத் தொடர்ந்தால் அவர்கள் போராட்டக் களத்தில் இறங்குவார்கள்.

சீண்டிக்கொண்டே இருந்தால், மத்திய அரசை எதிர்த்து அடிக்கடி அவர்கள் போராட்டம் நடத்துவார்கள். அடிக்கடி நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, 'அமைதியை நிலைநாட்ட வேறு வழியில்லை' என்று சொல்லி, தி.மு.க. ஆட்சியைப் பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.

அந்த ஆறு மாத காலத்தில், தமிழருக்கான அடையாளங்களில் எதையெதையெல்லாம் அழிக்க முடியுமோ அதையதையெல்லாம் அழித்து முடித்து, அவர்களின் இன உணர்ச்சி, மொழிப்பற்று முதலானவற்றை முற்றிலுமாய் மழுங்கடிக்கும் வேலையைக் கச்சிதமாக 'அவர்கள்' செய்து முடிப்பார்கள் என்பதை நம்மவர்கள் மறந்துவிடவே கூடாது.

                                                *                        *                                *                      

#Oneindia Video Tamil Team Published : April 16, 2021, 10:00 Duration : 01:04 சென்னை: இரவில் மீண்டு(ம்) வந்தார் பெரியார்: மாற்றப்பட்டது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு! சென்னை: இரவில் மீண்டு(ம்) வந்தார் பெரியார்: மாற்றப்பட்டது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு!# -இது இன்று வெளியான செய்தி.

இச்செய்தி உண்மையாக இருப்பின், 'அவர்கள்' திருந்திவிட்டார்கள் என்னும் நம்பிக்கையில், தமிழர்கள் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிடக் கூடாது என்பதே நம் போன்றோர் செய்யும் எச்சரிக்கை!

https://tamil.oneindia.com/videos/sennai-iravil-meendu-m-vanthar-beriyar-marrappattathu-kirand-vesdan-dirang-rodu-dhnt-1495648.html

======================================================================================


வியாழன், 15 ஏப்ரல், 2021

ஆசீர்வதிக்கும் நாயும் ஆறறிவு அறிவிலிகளும்!!!

#மகாராஷ்டிரா மாநிலத்தில்  'சித்தாதேக்' என்று ஓர் ஊர். அந்த ஊரில் சித்திவிநாயகர் கோயில் உள்ளது.

அந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் ஓர் உயரமான மேடை. அதில் ஒரு நாய்  அமர்ந்திருக்கிறது. 

கோயிலில் இருந்து வெளியே வரும் பக்தர் ஒருவர் நாய்க்கு முன்னால் வளைந்தும் தலை குனிந்தும் நிற்கிறார். பதிலுக்கு அந்த நாய் அவரின் தலை மேல் கைவைத்து ஆசிர்வதிப்பது போல் சைகை செய்கிறது. 

கோயிலில் இருந்து வெளியேறும் வேறு சில பக்தர்கள் அந்த நாயிடம் கைகளை நீட்டுகிறார்கள். பதிலுக்கு அந்த நாயும் அவர்களுக்குக் கை கொடுக்கிறது. 

இந்த நிகழ்வுகளை, 'அருண் லிமாடியா' என்னும் நபர், காணொலி[வீடியோ]யாகப் பதிவு செய்து  சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்#

-இவ்வாறானதொரு செய்தியை, ஆன்மிகம் வளர்ப்பதில் அரும்பணி ஆற்றுகிற இரு  நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன[ஜனவரி மாதச் செய்தி].

'கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்: வைரலாகப் பரவும் வீடியோ' -இது தினமலர் தந்துள்ள தலைப்பு.


'கோயிலுக்கு வெளியே.. தலைக்குமேல் கால் வைத்து.. பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஆச்சர்ய நாய்' -இது 'one india' வின் தலைப்பு.

'வெறுமனே செய்திகளை வெளியிடுவதோடு ஊடகங்களின் கடமை முற்றுப்பெறுகிறதா?' என்னும் கேள்வியை இங்கே தவிர்க்க இயலவில்லை.

ஒரு செய்தியைப் பதிவு செய்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையைக் கண்டறிதல் செய்தியாளர்களுக்கான கடமை அல்லவா? இதை அந்தச் செய்தி நிறுவனங்கள் மறந்தது ஏன்?

உயிரினங்களில் மனித இனத்தையடுத்து,   குறிப்பிடத்தக்கப் புத்திசாலித்தனம் வாய்க்கப்பெற்றது நாயினம். முறையான பயிற்சி மூலம்  சில வகை நாய்கள் அரிய செயல்களைச் செய்து நம்மை வியக்க வைப்பது யாவரும் அறிந்ததே.[ஒரு காணொலி கீழே].

காலால் தலையைத் தொடுவதற்குப் பயிற்சி கொடுத்து, கோயிலின் நுழைவாயில் மேடைதனில் இருக்கவைத்து, அதைக் காணொலியாகவும் பதிவு செய்து, பக்தர்களை அது ஆசீர்வதிப்பதாக நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்  இந்த அருண் லிமாடியா.

இத்தனைக் காலமும், விதம் விதமான கடவுள்களும், அவர்களுக்கு இணையாக மதித்துப் போற்றித் துதிபாடப்பட்ட மகான்களும் வழங்கிய ஆசீர்வாதங்களால் முழுத் திருப்தி கிடைக்காமல், நாயிடம் ஆசீர்வாதம் பெறத் தலைப்பட்டுவிட்டார்களா பக்தகோடிகள்?!

குனிந்து கும்பிடுவோரின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்கிற இந்த நாய்.....

பகவானா, மகானா?!

                *                           *                                  *                                      *                              *

காணொலி:

https://www.youtube.com/watch?v=BWiloZnvXJI&authuser=0

======================================================================================

https://tamil.oneindia.com/news/mumbai/viral-video-of-dog-blessing-devotees-and-shakes-hands-outside-temple-in-maharastra/articlecontent-pf514719-408737.html  13 ஜன., 2021 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2688602   Updated : ஜன 12, 2021  20:23 |  Added : ஜன 12, 2021  20:22 |  

புதன், 14 ஏப்ரல், 2021

'குமுதம்' இதழில் ஒரு 'குப்பைமேனி'க் கட்டுரை!!!


முன்னொரு காலத்தில், இருபதுக்கும் மேலான என் ஒ.ப.கதைகளை வெளியிட்ட 'குமுதம்' வார இதழ், எப்போதிருந்து என் கதைகளை நிராகரிக்கத் தொடங்கியதோ அப்போதிருந்தே அதைக் காசு கொடுத்து வாங்குவதை நிறுத்திவிட்டவன் நான். ஓசியில் கிடைத்தால்[ஹி...ஹி...ஹி!] மட்டும் ஒரு முறை வாசிப்பதுண்டு.

சற்று முன்னர், தினமலர் இணையப் பக்கங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, குமுதம் இதழில் வெளியானதொரு[2013இல்] தரமான கட்டுரையை அது எடுத்தாண்டிருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானேன்.[https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17400&ncat=18].

குமுதத்திலா இப்படியொரு அரிய படைப்பு என்று வியந்த நான் உங்களின் வாசிப்புக்காக அதை இங்கே பதிவு செய்கிறேன். குமுதத்துக்கும் தினமலருக்கும் என் நன்றி.

கட்டுரை:

'டெல்லி மருத்துவமனை தொட்டு, எல்.கே.ஜி. மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களுக்குக் காரணம் என்ன? இதுதான் இன்றைக்கு எல்லாத் தரப்பு மக்களாலும் கேட்கப்படும் கேள்வி. அவர்கள் மனதளவில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகிறது. ஆனால் அதை அடக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததுதான் அதற்குக் காரணம் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

சரி, உணர்ச்சி என்றால் அது காமம் மட்டும்தானா?

நாம் எதிர்கொள்ளும்... உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிகள்தான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் என்று உணர்ச்சிகளுக்கு ஒரு பட்டியல் தயாரித்தால் அது நீண்டுகொண்டே போகும்.

இவை எல்லாமே இருந்தால்தான் ஒருவன் முழு மனிதன் ஆகிறான். இந்த உணர்ச்சிகளின் தாக்கம் ஆளாளுக்கு மாறுபடும்.

இவற்றில், நம் மீது பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவது 'காமம்' என்று சொல்லலாம்.

ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. தக்க துணையுடன் இணைவதுதான் அதற்கு ஒரே வடிகால்.

செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்லதுதான். பெரிய பெரிய கற்பழிப்புக் குற்றங்கள் காம உணர்வுகளை அடக்க முடியாதவர்களால்தான் நிகழ்ந்தேறியுள்ளன.

காம உணர்ச்சிகளை அடக்கி ஆண்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

காம உணர்ச்சிகளை அடக்கினால் மன நோய்,  தலைவலி,  திடீர்க் காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், இடுப்பு வலி, உடல் பலவீனம், உடல் இளைப்பு, மயக்கம், நடுக்கம், மார்புவலி,  இதயநோய் என்று ஏராள பாதிப்புகளுக்கு நாம் உள்ளாவோம்.

ஆனால் காமம் என்பது நிலையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் காம உணர்ச்சியிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உண்டால் காம உணர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆய்விலும் இது நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றிற்குக் காம உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதிலும் உண்மை இல்லை.

நம் நாட்டில், உப்பு, காரம் போன்றவை இல்லாத உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்த  துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் எல்லாம் பட்ட பாட்டை... படும் பாட்டை இந்த நாடே அறியும்.

எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாமல் விதவிதமான உணவுகளை வகை தொகை இல்லாமல் உண்பவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாவது உறுதி.

உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதற்கான எளிமையான வழிகள்:

பொதுநலத் தொண்டு: வாரத்தில் ஓரிரு நாட்களில் சில மணி நேரங்களை ஒதுக்கி, பொது மருத்துவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து பாருங்கள். நோயாளிகளின் நிலையைக் கவனித்த எவருக்கும் காம இச்சை தலைதூக்காது. மாறாக, ஒரு மகத்தான சேவை செய்த மனநிறைவு கிட்டும்.

உடற்பயிற்சி: காமத்தை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை அடக்கி, உடலை இலகுவாக்கும் வேலையை உடற்பயிற்சி மூலமே செய்ய முடியும்.

வீட்டுத் தோட்டம் அமையுங்கள். நிலத்தைத் தோண்டுவது, பாத்தி போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள். செடிகள் வளர வளர உங்கள் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

இசை: இசையைக் கேப்டதைவிட, அதை இசைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் காமத்திற்கான பெரும் வடிகாலாக அது அமையும்.

புத்தகம் படித்தல்: ஆன்மிகம் உட்பட நல்ல தரமான எந்த நூலையும் வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் காமம் கரைந்து போகும்.

நண்பர்களிடம் பகிருங்கள்: அடிக்கடி காம வயப்படுபவர்கள் கூச்சப்படாமல் நண்பர்கள், உறவினர்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேளுங்கள். உங்கள் பிரச்னைக்குத் தீர்வு இதில்தான் கிடைக்கும்.

மதுவுக்கு அடிமையாகாதீர்கள்: மது மயக்கம் காம உணர்வாக இருந்தாலும், எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை அதிகப்படுத்தும். 

- இரா. மணிகண்டன்'

===================================================================================

குப்பையில் முளைக்கும் 'குப்பைமேனி' மருத்துவக் குணம் கொண்டது.


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

எழுத்தாளனுக்கு எத்தனைக் கொம்புகள்?!

ஒரு விருது வழங்கும் விழாவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார் எழுத்தாளர் நீதிவாணன்.

அந்த நகரத்தின் முக்கியக் கடைவீதியைக் கடந்தபோது அந்த அசம்பாவிதம் அவர் கண்ணில் பட்டது.

நான்கு ரவுடிகள் ஓர் இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

“ஐயோ... என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க” என்று அவள் அபயக் குரல் எழுப்பி, அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தாள்.

அவளைப் பாதுகாக்க எவருமே முன்வரவில்லை!

அவள் கடத்தப்பட்டாள்!

நீதிவாணன் விழா நடக்கும் இடத்திற்குப் புறப்பட்டார்.

விழா தொடங்கியது.

வரவேற்புரை நிகழ்த்த ஒருவர் முன்வந்தார்.

அவரைக் கையமர்த்திய நீதிவாணன், "என் எழுத்தைப் பாராட்டி எனக்கு விருது வழங்கவே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடத்தும் குழுவினரிடம் என் ஒப்புதலையும் தெரிவித்திருந்தேன். சற்று முன்னர் நடந்த ஒரு அவலம் என் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது. அதை உங்களுக்குத் தெரிவிப்பது என் கடமை. 

மக்கள் நடமாட்டம் மிகுந்த கடை வீதி வழியாக நான் வந்துகொண்டிருந்தபோது, நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆதரவற்ற நிலையில், உதவி கேட்டுக் கூச்சலிட்டு அந்தப் பெண் அலறித் துடித்துக்கொண்டிருந்தாள். சூழ்ந்துநின்ற அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தார்கள். நானும்தான். 

அவளைக் காப்பாற்றுவதற்கான சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை.

'காவல்துறைக்குத் தகவல் போயிருக்குமா? விரைந்து செயல்பட்டு, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பார்களா?' என்று எனக்கு நானே கேள்விகள் கேட்டுக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன்.

விழா மேடையை நெருங்கும்போது புதியதொரு கேள்வி என் நெஞ்சை அரிக்கலாயிற்று.

'சமுதாயத்தைத் திருத்தப் பலரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன். எழுத்துக்களால் விளைந்த பயன் என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி.

எங்களின் எழுத்து ரவுடிகளைத் திருத்தவில்லை; கோழைகளைத் தைரியசாலிகளாக மாற்றவில்லை. நாங்கள் எழுதியதும் எழுதிக்கொண்டிருப்பதும் எங்களைப் பிரபலப்படுத்தவும் பணம் சம்பாதிக்கவும்தானா?

'ஆம்' என்றால், எந்தவொரு எழுத்தாளனும்,  'நான் எழுத்தாளன்' என்று சொல்லித் திரிவதை இனிமேல் தவிர்க்க வேண்டும்; விருதுகளையும், பரிசுகளையும், பாராட்டுகளையும் முற்றிலுமாய்ப் புறக்கணிக்க வேண்டும்" என்று பேசி முடித்த நீதிவாணன், கொஞ்சம் வினாடிகள் கழித்துச் சொன்னார்: 

"நீங்கள் மிக விரும்பி எனக்கு வழங்கவிருந்த விருதை ஏற்க இயலாமைக்கு என்னை மன்னியுங்கள்.

விடை பெறுகிறேன். நன்றி."

அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லி மேடையிலிருந்து இறங்கி நடக்கலானார் நீதிவாணன்.

======================================================================================

திங்கள், 12 ஏப்ரல், 2021

மண்ணுல விஞ்ஞானிகளுக்கு ஒரு சராசரி மனிதனின் கோரிக்கை!!!

மனிதர்களைச் சனி, சந்திரன், செவ்வாய் என்று பிற கோள்களில் குடியேற்றுவதற்கான முயற்சியில் அயராது ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளே, 

உங்களின் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று, அயல் கிரகங்களில் மனிதர்களைக் குடியேற்றுவது சாத்தியமானால்.....

மக்களோடு கலந்து, கடவுள், ஆன்மா, பேய், பூதம், பிசாசு, சொர்க்கம், நரகம் என்றெல்லாம் கற்பனைக் கதைகளைப் பரப்பிப் பிழைப்பு நடத்துகிற போலி ஆன்மிகவாதிகளும் அங்கே குடியேறுவார்கள்; சிந்திக்கத் தெரியாத மக்களைச் சீரழிக்கும் கைங்கரியத்தை அங்கேயும் தொடர்வார்கள்.

அழகழகாய்த் தாடி மீசை வளர்த்து, புரியாத தத்துவம் பேசி, அப்பாவி மக்களைப் பித்தர்கள் ஆக்கி, ஆடிக் கார்களிலும் கோடி கோடி கோடி விலை மதிப்புள்ள ஹெலிக்காப்டர்களிலும் இங்கு பவனி வரும்  நித்தியானந்தாக்களும் 'சத்'யானந்தாக்களும் அங்கே சென்ற பின்னரும் தாம் செய்யும் பித்தலாட்டங்களைக் கைவிட மாட்டார்கள்.

பொய் வாக்குறுதிகளை வாரி வழங்கிப் பதவி பெற்றுக் கோடி கோடியாய்ச் கொள்ளையடிக்கத் தெரிந்த கில்லாடிகள் அங்கு சென்றாலும் நல்லவர்களாய் மாறப்போவதில்லை.

'போதும்' என்னும் மனம் இல்லாமல், "இன்னும் வேணும்...இன்னும் வேணும்" என்று வயாக்கராக்களையும் லேகியங்களையும் தேடி அலையும் காமாந்தகர் கூட்டம் அயல் கிரகத்திலும் திருந்தப்போவதில்லை.

ஆகவே விஞ்ஞானிகளே,

இவர்களையெல்லாம் திருத்துவதற்கு எவை எவை தேவையோ அவையவைகளை எல்லாம் கண்டுபிடித்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் முதலில் திருத்த முயலுங்கள்.

'அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலமாக, மனித உடலைத் திருத்தலாம்; மணனித மனங்களைத் திருத்திட வழியே இல்லை' என்பது உங்களின் பதிலாக இருக்குமேயானால்.....

பொறுத்திருங்கள்; மனிதர்கள் பட்டுத் திருந்தும்வரை காத்திருங்கள்.

திருந்தினால் மட்டுமே அயல் கிரகம் செல்லுவதற்கான ஆராய்ச்சிகளைத் தொடரலாம்.

இவர்கள் திருந்துவது சாத்தியமே இல்லையென்றால், அங்கெல்லாம் மனிதர்களைக் குடியேற்றுவதற்கான ஆய்வுகளை அறவே கைவிடுங்கள். 

தயக்கத்திற்கு இடம் தர வேண்டாம்.

இந்த மனிதர்களால் மண்ணுலகம் அசுத்தமடைந்தது போதும். மற்ற உலகங்களாவது மாசுபடாமலே இருக்கட்டும்.

======================================================================================


சனி, 10 ஏப்ரல், 2021

வெளியாகுமா நித்தி[எ]கலியுகக் கண்ணனின் 'ஜலக்கிரீடை'க் காணொலி?!?!

வெங்கடேசப் பெருமாள் போல, சங்கும் சக்கரமும் ஏந்தி, ஏராள நகைகளுடனும் கிரீடத்துடனும் புகைப்படம் வெளியிட்டிருக்கிறார் 'அருள்திரு' நித்தியானந்தா சுவாமிகள். வதனத்தில் கடலளவு கருணாமிர்தம் பொங்கி வழிய, "பக்தகோடிகளே, வாருங்கள் நம் கைலாசாவுக்கு" என்று அழைப்பும் விடுத்துள்ளார் தம் திருவடி தொழுவோருக்கு.

கைலாசா நாட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து விமான சேவை தொடங்கவிருப்பதாகவும்,  இ-கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த 'அவதாரப் புருஷர்' அறிவித்துள்ளார்[ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்களாம். அவர்களில் அடியேனும் ஒருவன்! ஹி...ஹி...ஹி!]. சுவாமிகளின் முகநூல் பக்கத்திலிருந்து நகலெடுத்த படங்களும் வெளியாகியுள்ளன.

கைலாசாவில் ரிசர்வ் வங்கியின் பணியும் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே நாணயங்கள் வெளியிட்டுள்ளார் சுவாமிகள்.

நாள்தோறும், காணொலியில் தம் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கலியுகக் கருணாமூர்த்தி, கொஞ்சம் நாட்களுக்கு முன்பு முழுமுதல் கடவுளான சிவபெருமானாகக் காட்சியளிக்கும் அவர்தம் புகைப்படத்தைத் தம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்போது[08.04.2021], ஏழுமலையானாக அருள்மழை பொழியும் படத்தையும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, பக்தர்களை ஆனந்தப் பரவசத்தில் மூழ்கடித்துள்ளார்.


வெகு விரைவில், கலியுகக் கண்ணனாக, கவர்ச்சிக் கன்னியருடன் 'ஜலக்கிரீடை' செய்யும் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணொலியாகப் பகிர்ந்துகொள்வாரா ராமகிருஷ்ண பரமானந்த நித்தியானந்தா சுவாமிகள்?!

பகிர்வார்.

பார்த்துப் பார்த்துப் பார்த்துப் பரமானந்த சுகம் பெறலாம்.

அந்தப் புனித நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்! ஹி...ஹி...ஹி!

                                 *                              *                                   *                                  *

விடை தெரியாத கேள்வி:

சிறுமியர் தொடர்பான ஆபாசக் காணொலியைப் பதிவிறக்கம் செய்தால், செய்தவனை எங்கிருந்தாலும் ஓடிப்போய்க் கைது செய்கிறது இணையக் குற்றப் புலனாய்வுத் துறை.

இணையத் தொழில்நுட்பம் பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இந்த 'வேடதாரி'யைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முடியவில்லையே, ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

======================================================================================


வெள்ளி, 9 ஏப்ரல், 2021

தமிழ் வளர்க்கும் தமிழ்ச்சரத்திற்கு.....

தமிழ்ச்சரத்தின் உரிமையாளர் அவர்களுக்கு, வணக்கம். 

'தமிழ்ச்சரம்' திரட்டியில் இணைப்புப் பெற்றுள்ள பதிவர்களில் நானும் ஒருவன்.

தமிழ்ச்சரத்தில் என் பதிவுகள் வெளியாவதால் நான் சிறிதளவேனும் பயன் அடைந்திருத்தல்கூடும். ஆனால், என் பதிவுகளால் தமிழ்ச்சரத்தின் தரம் கூடியுள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

உங்களின் நேரத்தை விரயமாக்க விரும்பாததால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்.

நேற்று[08.04.2021] 'ஆதியோகி சிவன்'... அப்பட்டமான கட்டுக்கதை' https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_8.html என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன். அது தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படவில்லை.

அநாகரிகமான வார்த்தைகளை அதில் நான் பயன்படுத்தவில்லை என்பது என் நம்பிக்கை. இருந்தும், அது இணைக்கப்படாததற்கான காரணம் எனக்குத் தெரியாது. அது, ஜக்கி வாசுதேவின் மனதை நோகடிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்; வேறு நிர்ப்பந்தமும் இருக்கலாம்.

ஒட்டுமொத்தத் தமிழர்களையே முட்டாள்கள் என்று நினைக்கும் அந்த மனிதரின் செயல்பாடுகளால் என் போன்றவர்கள் மனம் நோவது பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பதிவை நிராகரிப்பதற்குக் கிஞ்சித்தும் இடம் தராத, 'கதை சொல்லல்'...இளம் கதாசிரியர்களுக்கு மட்டும்' https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_9.html என்னும் தலைப்பிலான பதிவை இன்று[09.04.2021] முற்பகலில் இணைத்தேன். இதுவும் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படவில்லை.

இதற்கான காரணத்தையும் என்னால் அறிய இயலவில்லை. 

அறியத் தருதல் வேண்டும் என்று உங்களை வற்புறுத்தவும் மாட்டேன். [இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமும் இருக்காது].

காரணம், திரட்டியின் உரிமையாளர் நீங்கள். ஒரு பதிவை இணைப்பதும் இணைக்க மறுப்பதும் உங்கள் விருப்பம் சார்ந்தது.

சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்துவிடுகிறேன்.

காரணத்தை அறியும் வாய்ப்பே இல்லாத நிலையில், ஒரு பதிவை நிராகரிப்பது, அதைப் படைத்தவனின் மனதை நோகடிக்கும் செயலாகும்[இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் என் பதிவுகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பல பதிவுகளை இணைத்துக்கொண்டதற்காக நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன்].

என் வேண்டுகோள்:

உடனடியாக என் பதிவுகளுக்கான இணைப்பைத் துண்டியுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும், இணைப்புத் தருமாறு இனியும் வேண்டுகோள் வைக்க மாட்டேன்[இணைப்பை நிரந்தரமாகவே துண்டித்துவிட்டீர்கள் என்றும் நினைக்கிறேன்].

இந்த மடலை, என் தளத்தில் வெளியிடுவதோடு உங்களின் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கும் அனுப்புகிறேன். தமிழ்ச்சரத்தில் இணைக்க மாட்டீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை.

தமிழ் வளர்க்கும் நல்ல நோக்குடன் லாப நோக்கமின்றித் தமிழ்த் திரட்டியைப் பராமரிக்கிற நீங்கள், உங்களின் நேரத்தை வீணடித்ததைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் நன்றி சொல்லி அமைகிறேன்.

நன்றி... மிக்க நன்றி.

======================================================================================




'கதை சொல்லல்'...இளம் கதாசிரியர்களுக்கு மட்டும்!

ஓர் ஆய்வு நூலிலிருந்து சுட்டது இந்தப் பதிவு. நடுநடுவே 'கொட்டாவி' விடுவதைத் தவிர்க்கச் சுடச்சுடத் தேனீர் பருகுங்கள். ஹி...ஹி...ஹி!                                

'கதை இலக்கியத்தைப் பொருத்தவரை, கருப்பொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவம், அதை வெளிப்படுத்துகிற வடிவத்திற்கும் தரப்படுதல் அவசியத் தேவையாகும்.

வாசகனைத் தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் கதை தொடங்கப்படுதல் வேண்டும். கருப்பொருள் முழுமையாக உணரப்படும் வகையில் கதையின் ‘வடிவம்’ அமைவது முக்கியம். கதைக்குத் தொடர்பில்லாத உரையாடல்களோ, சம்பவங்களோ, வர்ணனை போன்ற பிற அம்சங்களோ இடம்பெறுதல் கூடாது.

விறிவிறுப்பான நடையில் காட்சிகளையும் நிகழ்வுகளையும் வாசகனின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை கதாசிரியனுக்குத் தேவை.

கதையை எழுதுவதற்கு முன்னரே, அக்கதை எழுதப்படுவதன் நோக்கம் என்ன என்பதை ஆசிரியன் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருத்தல் இன்றியமையாத் தேவையாகும்.

முனைவர் ‘பசி’பரமசிவத்தைப் பொருத்தவரை, மேற்கண்ட நெறிமுறைகளை மனதில் அழுத்தமாகப் பதிவு செய்தவர் என்பதற்கு அவரின் படைப்புகள் அனைத்துமே சான்று பகர்கின்றன.

தொடக்கம்:

‘வடித்தெடுத்த ஒரே கல்லால் ஆன அந்தச் சிறிய மலையின் ஒரு பக்கத்துச் சரிவில், மதி முகம் வாட, மாந்தளிர் மேனி துவள தாவி ஏறிக்கொண்டிருக்கிறது ஒரு பெண்ணுருவம்!’ -இது, பரமசிவத்தின் ‘சாவைத் தேடி ஒரு பாவை’ என்னும் கதையில் இடம்பெற்றுள்ளது.

“தூ...நீங்களும் ஒரு ஆண்பிள்ளையா? நான் ஊரிலிருந்து வந்ததும் வராததுமா என்கிட்ட இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல?”

-சிக்கல் நிறைந்த ஒரு குடும்பக் கதையின் முன்னோட்டமாக, சூடானதொரு இந்த உரையாடலைத் தொடக்கமாகக் கொண்ட கதை, ‘தம்பிக்குப் பிள்ளை பிறந்தால்....’ [‘பசியோ பசி’-சிறுகதைத் தொகுப்பு] என்பதாகும்.

“நீ இந்த ஊரைவிட்டே ஓடிப் போகணும். அப்போதுதான் மழை பெய்யும்னு மாரியாத்தாவே சொல்லிட்டா. உம்...உம்...புறப்படு. திரும்பிப் பார்க்காம போ. ஊர் எல்லையைத் தாண்டிப் போயிடு.”

மேற்கண்ட உரையாடல், 'அவன் மனிதன்’ என்னும் சிறுகதையின் தொடக்கமாகும்.

“என்ன சொன்னீங்க, போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஃபோன் வந்ததா? நம்ம சுதாவைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?” -சோகம் வேரோடியிருந்த விழிகளில் உற்சாகம் பீறிட வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் சுகுணா. அவள் முகமெங்கும் சந்தோசக் கீற்றுகள். [‘சுகுணா தூங்குகிறாள், பாக்யா, ’பிப் 14-20;1997, ப.62-65]

ஆழ்ந்த மன வருத்தத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்தத் தொடக்கம், மறக்க இயலாதது.

‘மூத்த மகள் ரமா பற்ற வைத்த நெருப்பு, அலுவலகம் வந்து, கிளை மேலாளர் இருக்கையில் அமர்ந்த பின்னரும் சுப்பராமன் நெஞ்சில் கனன்றுகொண்டிருந்தது. இப்படித் தொடங்குகிறது,’முத்தாயி மொபட்டில் போகிறாள்’ [ராணி வார இதழ், 20.04.1986, ப.25-26]என்னும் சிறுகதை.

‘மூடப்பட்ட டிக்கெட்டு கவுண்டரை முறைத்துப் பார்த்துவிட்டு, பிறந்த மேனியாய்ப் பளபளக்கும் பல வண்ணச் சுவரொட்டுகளை ஏக்கத்தோடு வெறித்தபடி அந்தக் குளுகுளு திரயரங்கத்திடம் விடை பெற்றுக்கொண்டிருந்த என்னை அந்தக் காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.' இது ‘அவன் ஒரு.....’ [ஓடிப்போனவள் - சிறுகதைத் தொகுப்பு] என்ற கதையின் சுவாரசியமான தொடக்கமாகும்.

 கீழ்வருவது, ‘பரிசு விழுந்த சீட்டு’ என்ற கதையின்     ஆரம்பமாகும்.

'மாலைப் பத்திரிகையைப் பார்த்துவிட்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானான் சுருளி. அன்றைய குலுக்கலில் அவனிடம் இருந்த சீட்டுக்கு லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருந்தது.

முதல் வேலையாகச் செண்பகத்தைப் பார்த்து அவள் கையில் அடித்துச் சத்தியம் செய்து, திருட்டுத் தொழிலுக்குத் தலை முழுகுவது என்று அவன் முடிவெடுத்தான்.'

பரிசுப் பணத்தை அவன் பெற்றானா, திருட்டுத் தொழிலைக் கைவிட்டானா என்று அறியும் ஆவலைத் தூண்டுகிறது இந்தத் தொடக்கம்.

‘பார்வதிக்கு நாளை கல்யாணம். இந்த ஊமைச்சியைக் கை பிடிக்க எங்கிருந்தோ ஒரு மாப்பிள்ளை வந்து குதித்திருக்கிறான். அவளை அனுபவிக்கக் கன்னி வைத்துக் காத்திருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது’

இப்படி வாசகனுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆரம்பமாகிறது ‘ஊமைச்சியின் எச்சில்’ [சேலம் மாலை முரசு] என்னும் சிறுகதை.

“வேசி...வேசி...வேசி... நீ நூத்துக்கு நூறு ஒரு வேசிதான். இதை எத்தனை தடவை வேணுன்னாலும் எந்தக் கோயிலில் வைத்தும் சத்தியம் செய்வேன்” என்றிப்படித் தாலி கட்டிய ஓர் ஆடவன் தன் மனைவியை அச்சுறுத்துவதாகத் தொடங்குகிறது ‘முடிந்த கதை தொடர்ந்ததம்மா!’ [சேலம் மாலை முரசு] என்னும் கதை.

இப்படி, இன்னும் பல சுவையான தொடக்கத்திற்கான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவை போன்ற பல தொடக்கங்களைப் ‘பசி’பரமசிவத்தின்[குமுதம், குங்குமம், ராணி, ஓம்சக்தி, வாரமலர், தினகரன் மலர், பாக்யா என்று பல முன்னணி இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன] படைப்புகளில் காண முடிகிறது..

நடை:

வாசிப்பின்போது, கதைப் போக்கில் தொய்வு ஏற்படாமல் தடுப்பதில், ‘மொழிநடை’ முக்கியப் பங்கு வகிக்கிறது. எழுத்தாளர் பரமசிவத்தின் மொழிநடை தூய தமிழில் அமைந்துள்ளது; உணர்ச்சி மயமான சொல்லடுக்குகளை உள்ளடக்கியது. வினா, வியப்புக் குறியீடுகளை தன்னகத்தே கொண்டது. சில எடுத்துக்காட்டுகள்:

‘பிறந்த அன்றும் அவன் அழுதான். அவனின் பதினொரு வயதில் குடிகாரத் தந்தையை உதறிவிட்டுத் தாய் ஓடிப்போன அன்றும் அழுதான்; இன்று இருபது வயதுக் காளை ஆகிவிட்ட நிலையிலும் அழுதுகொண்டிருக்கிறான். பட்டைச் சாராயத்துக்கும், பரத்தையர் சுகத்துக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அப்பனை நினைத்தும் அழுதுகொண்டிருக்கிறான்....’ [ஓடிப்போனவள், சிறுகதைத் தொகுப்பு, ப.63]

‘எவ்வளவு மனிதர்கள்! எத்தனை தெய்வங்கள்! அபயம் கேட்டுச் சோர்ந்து போய், “ஐயோ” என்று அலறியவாறு மீண்டும் பாலத்தை நெருங்கி, பக்கப் பாதையில் சரிந்து, நீர் வற்றிக் கிடந்த ஆற்றுக்குள் இறங்கி மணலில் ஓடினான் அவன்.’

‘மணல் மேடுகளில் தடுக்கி விழுந்து உருண்டான். காலிகள் அடித்ததால் மண்டையிலிருந்து வடிந்து உறைந்துபோயிருந்த குருதித் தாரைகளில் மணல் துகள்கள் ஒட்டிக்கொண்டு நறநறத்தன.’

‘வெட்டி எடுக்கலாம் போன்ற மையிருட்டில் அவன் இலக்கின்றி ஓடினான். “மல்லீ” என்று பயங்கரமாக அவன் எழுப்பிய கூக்குரல், பரந்த ஆற்றுப் பரப்பில் தங்குதடை ஏதுமின்றிக் காற்றில் பரவி அடங்கிக்கொண்டிருந்தது.’

‘தோல்வி அவனை நெஞ்சில் அறைந்தது. ஆற்றங்கரைப் புதர் மறைவிலோ மணல் மேடுகளின் சரிவிலோ, வல்லூறுகளின் பிடியில் அந்த மென் புறா படும் மரண வேதனையை மனம் கற்பனை செய்து செய்து அவனின் நாடி நரம்புகள் ஒடுங்கிப் போயின.’

‘அவன் நிலைகுலைந்து போனான். அதர்மம் கொக்கரிக்கும் அந்தகாரத்தில், ஓடியோடி பாலத்தடியில் தேடினான். தூண்களில் மோதிச் சோர்ந்தான்.’

ஓடிப்போனவள் சிறுகதையில் சிறந்த நடைக்கு எடுத்துக்காட்டாக இப்படிப் பல இடங்களைக் காட்டலாம்.

அழகிய நடைக்கு, அவன் மனிதன்’ என்னும் கதையிலிருந்து ஓரிடம்:

‘மழை வலுத்தது. வருணனுடன் வாயு பகவானும் களத்தில் இறங்கினான்.

”சளேர்...சளேர்” எனத் தரையில் அறைந்து மழை கொட்டியது. கோயில் கூரை மீதும், அதை ஒட்டியிருந்த தகரக் கொட்டகை மீதும் தாளமிட்டு அட்டகாசம் புரிந்தது.

பேயாட்டம் ஆடும் மரமட்டைகளை உசுப்பிவிட்டு விசிலடித்தது சூறாவளி. இடித்து முழக்கி டமாரம் தட்டியது மேகக் கூட்டம்.'

’பரம்பரைச் சொத்து’ கதையில் இடம்பெற்றவை கீழ்வரும் வரிகள்:

‘இரண்டு பங்காளிகளும்  பூமி விளைந்தபோதும் அடித்துக்கொண்டார்கள்; காய்ந்தபோதும் கட்டிப்புரண்டு மண்டையைப் பிளந்துகொண்டு வக்கீல் வீட்டுத் திண்ணைகளிலும் நீதிமன்ற வாசல் படிகளிலும் தவம் கிடந்தார்கள்...’

‘தன் எதிரியான சுப்பண்ணன் நிலத்தில் சாணம் போட்டதற்காக, தன் சொந்த மாட்டையே கல்லால் அடித்துக் காலை முறித்தவர் கருப்பண்ணன். இவருடைய பட்டி நாய்க்கு வால் துண்டிக்கப்பட்டிருக்கும். பங்காளியின் பெட்டை நாயைப் பார்த்து வாலாட்டியதற்குக் கிடைத்த தண்டனை அது! இப்படி எத்தனையோ...’

‘கட்டின கோவணத்தோடு கூலி வேலை செஞ்சாலும் இந்தப் போலி கௌரவம் உங்களைவிட்டுப் போகாது. இது உங்களுக்குப் பரம்பரைச் சொத்து. பாடையில் போகும்போதுகூட, கௌரவத்தோடு போகணும்னு நினைக்கிற ஜாதி உங்க ஜாதி. ஒரு சாண் வரப்புக்கும், வெட்டிக் காயப்போட்டா அடுப்பு எரிக்கக்கூட உதவாத தூர்ந்து போன மரத்துக்கும் அடிச்சிகிட்டு ஆயிரக் கணக்கில் நீங்க செலவு பண்ணக் காரணமே இந்த வறட்டுக் கௌரவம்தான், இதைக் கட்டிகிட்டு அழற வரைக்கும் நீங்க உருப்பட மாட்டீங்க.....’

இவ்வாறாக, மிகப் பல எடுத்துக்காட்டுகள் இவர்தம் படைப்புகளில் காணக்கிடக்கின்றன.

வர்ணனை:

கதைகளில், தேவையான இடங்களில் மட்டும் வர்ணனைகளைக் கையாண்டுள்ளார் ஆசிரியர். மனதில் நீங்காத நினைவுகளாகப் பதிந்துவிடுபவை அவை. கதை நிகழ்வுகளுக்கு உரம் சேர்ப்பவையாகவும் அவை அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டாகச் சில:

‘அந்தப் பெரிய அண்டாவைத் தலையில் சுமந்தவாறு, கரும்பு வயல்களுக்கிடையே ‘மெத்’ என்ற பசிய வரப்பின் மீது விரைந்து நடந்தாள் வேலம்மா. குலைகளைச் சுமந்து கோணலாய் வளைந்து எங்கோ எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தென்னைகளின் கூட்டமோ, வெற்றிடமின்றி விளை பொருள்களைத் தாங்கிக் கிடந்த பச்சை வயல்களோ அவள் பார்வையை நிறைக்கவில்லை; பதிலுக்கு, மனதுக்கு இதம் தரும் மருத மலையும், இயற்கை அழகின் சேமிப்புக் கிடங்கான ஊட்டியும்தான் அவள் சிந்தனையில் போட்டியிட்டுச் சுழன்றன. நல்லப்பன் கண் சிமிட்டிவிட்டுப் போன காட்சி, மீண்டும் ஒருமுறை நினைவை முத்தமிட, செழித்துக் கனிந்த கன்னங்கள் குங்குமமாய்ச் சிவந்து ஜொலித்தன. கன்றுக் குட்டியாய் அவள் வரப்புக்கு வரப்பு எம்பிக் குதித்துத் தாவிச் சென்ற காட்சி நெஞ்சை அள்ளியது’ [ஒரு விதவையின் முதலிரவு[சிறுகதை]. 

இங்கு மனமொன்றித் தான் உள்வாங்கிய ஓர் அழகுக் காட்சியைப் படம் பிடித்துள்ளார் பரமசிவம்.

‘பேயாட்டம் ஆடும் நெடிதுயர்ந்த தென்னைகளின் சலசலப்பு. ஆந்தைகளின் அலறல். திட நெஞ்சிலும் திகிலூட்ட வல்ல கோட்டானின் குரல். நடுநிசியின் பிடியிலிருந்து மெல்ல நழுவிக்கொண்டிருக்கிறது நேரம். தோப்பின் நடுவில் தென்னங் கீற்றால் வேயப்பட்டுத் தரையோடு தரையாய்க் கூனிக் குறுகிக் கிடக்கிறது ஒரு குடிசை.’ [’என்னைத் தழுவிக்கொள்’[சிறுகதை]

இவ்வருணனை, ‘என்னைத் தழுவிக்கொள்’ என்னும் சிறுகதையின் தொடக்கமாகும்.

இப்படி, இன்னும் பல எடுத்துக்காட்டுகள் இவர்தம் படைப்புகளில் இடம்பெற்றுள்ளன.

முடிவு:

கதையின் முடிவு, படித்து முடித்த பின்னரும் சிறியதொரு கால அளவிலேனும் அக்கதை பற்றி வாசகன் சிந்திக்கும் வகையில் அமைதல் விரும்பத்தக்கதாகும்.

‘மௌனமாய்க் கிழவியை அழைத்துப் போய் உள்ளே கட்டிலில் கிடத்தினான்; வாய் திறந்தான். “காடு வா வாங்குது. வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? வெறும் சிராய்ப்போடு போச்சு. எசகு பிசகா விழுந்து காரில் அடிபட்டுச் செத்தா யார் இம்சை படுறது? கருமாதிச் செலவுக்குக்கூட இப்போ கையில் காசு இல்ல. கடன் கேட்டு யார்கிட்டே போய்க் கை நீட்டுவேன்?. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”

பெற்ற மகன் தன் பங்குக்குப் பேசி முடித்துவிட்டுப் போனான். அதோ...மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்! [‘சுமை’ சிறுகதை]

இந்த ‘முடிவு’ மட்டுமே,  தள்ளாத வயதில் தன் வயதுக்கு ஒவ்வாத காரியத்தில் இறங்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறாள் கிழவி என்பதையும், பெற்ற மகனே அவளைச் சுமையாகக் கருதி வெறுக்கிறான் என்பதையும், மருமகளும் தன் பங்குக்கு அவளைத் திட்டித் தீர்க்கப்போகிறாள் என்பதையும் உணர வைக்கிறது. இவளைப் போல இன்னும் எத்தனையோ கிழவிகள் வாரிசுகளால் வெறுக்கப்படும் அவலம் பற்றிச் சிந்திக்கவும் வைக்கிறது.

‘தினம் தினம் தனிமையில் கிடந்து அழுகிறேன். மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய் எங்களை மகிழ்வித்த என் செல்ல மகள், கயவர்களின் பிடியில் என்ன பாடு படுகிறாளோ என்று எண்ணி எண்ணி மனம் பேதலித்துக்கொண்டிருக்கிறேன். இடது காலில் ஆறு விரலுடன் ஓர் அனாதைப் பெண் பிணம் இருப்பதாக உறவுக்கார டாக்டரிடமிருந்து தகவல் கிடைத்து, ஒரு ஒப்பனைக்காரரைக் கொண்டு அதன் மணிக்கட்டில் தழும்பும் ஈடுப்பில் மச்சமும் உருவாக்கி டாக்டரின் உதவியோடு அருமையாய் ஒரு நாடகம் நடத்தி என் சுகுணாவை நம்ப வைத்துத் தேற்றினேனே, அது போல என்னைத் தேற்ற யாரிருக்கிறார்கள்?’ [’சுகுணா தூங்குகிறாள்’ சிறுகதை, பாக்யா, பிப்.14-20,1997]

“சுந்தரமூர்த்தி சொன்னார்: “பசி பட்டினின்னு பரிதவிச்சுக் கிடப்பவன் முன்னால, வகை வகையா உணவுப் பண்டங்களைக் குவிச்சி வைச்சா அவன் கவனமெல்லாம் பண்டங்கள் மேல்தான் இருக்குமே தவிர, அவற்றை வழங்கியவர் மேல் இருக்காது. நன்றி, விசுவாசம், பாராட்டு எல்லாம் பசி தணிஞ்சதுக்கு அப்புறம்தான்.” இந்த அரிய கருத்தை முடிவாகக் கொண்ட கதை, ‘வயிறார்ந்த நன்றி’[’ஓம் சக்தி’ மாத இதழ், மார்ச்1997, பக்.52]

‘வித்தியாசமான ஒருவித உணர்ச்சிக்கு ஆளானார் சுப்பராமன். தமது பத்தாண்டுக் கால வங்கிக் கிளை மேலாளர் அனுபவத்தில், கடன் கேட்டு வரும் எத்தனையோ அனுதாபத்திற்கு உரியவர்களைச் சந்தித்திருக்கிறார். இப்படியொரு முத்தாயி அவர் கண்களில் பட்டதே இல்லை...’ [முத்தாயி மொபெட்டில் போகிறாள்]. 

‘மீனாட்சி சொன்னாள்: “ஆன மாதம் ஆகாத மாதம், கெட்ட நேரம் நல்ல நேரம், வேண்டிய நாள், வேண்டாத நாள் இதெல்லாம் உழைச்சிச் சாப்பிடுற நமக்கு ஏதய்யா. நேரம் காலம் பார்த்தா உழைக்கிறோம், சாப்பிடுறோம்?.....

.....வேலை கிடைச்சா தட்டிக் கழிச்சுடக் கூடாது.செஞ்சி முடிச்சி நாலு காசு பார்த்துக்கணும். சந்தோசம் தேடி வரும்போது அதை நழுவ விடாம அனுபவிச்சிடணும்.’ இப்படி மிகவும் வித்தியாசமாக, உழைக்கும் வர்க்கத்துப் பெண்ணொருத்தி பேசுவதாக முடிகிறது ‘முதலிரவில் ஒரு தாலாட்டு’ என்னும் கதை.

“ஏம்ப்பா, ஏதோ வயசுப் புள்ள...பிழைச்சுட்டுப் போகட்டுமேன்னு இல்லாம, வாங்கிப் போட்ட கொலுசைப் பிடுங்கிட்டியே, இதை வைச்சிக் கோட்டையா கட்டிடப் போறே?” என்று செல்லப்பனைப் பார்த்து ஒரு பெரியவர் கேட்டார்.

“கோட்டை கட்டப் போறதில்ல. நாளைக்கி இன்னொருத்தியைக் கூட்டியாறதுக்கு ஆகுமில்லீங்களா?” என்றான் செல்லப்பன்.

இப்படியொரு நெஞ்சை நெருடும் உரையாடலுடன் முடிகிறது ‘தொடுப்பு’ என்னும் சிறுகதை.

இவை போலவே, பேராசிரியர் பரமசிவத்தின் பெரும்பாலான கதை முடிவுகள் வாசகரின் நெஞ்சைவிட்டு அகலாத தன்மை கொண்டவை ஆகும்.
======================================================================================
இந்தப் பதிவு நான் எழுதியது அல்ல[எனக்குத் தற்புகழ்ச்சி அறவே பிடிக்காது என்பது நீங்கள் அறிந்ததுதானே. ஹி...ஹி...ஹி!].

டாக்டர் சி. சுப்பிரமணியன் என்னும் என் மாணவர் எழுதிய, 'எழுத்தாளர் பசி.ப.பரமசிவம்' என்னும் நூலிலிருந்து எடுத்தாண்ட ஒரு சிறு பகுதி இது.