எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 25 மார்ச், 2019

'கிலி' ஜோதிடம்!!

''ஜோதிட சிம்மம் சுந்தரேசன்தானே?[பெயர் மாற்றப்பட்டுள்ளது]''

''ஆமா. நீங்க யாரு?''

''நான் சேலத்திலிருந்து குப்புசாமி பேசுறேன்.''

''சொல்லுங்க.''

''உங்களண்ட ஜோசியம் பார்க்க வரணும். நேரம் ஒதுக்க முடியுமா?''

''மன்னிக்கணும். இன்னும் ஆறு மாசத்துக்கு என்னால அப்பாய்ன்மெண்ட் தரமுடியாது.''

''தயவு பண்ணுங்கய்யா. நாங்க பத்துப்பேர் சேர்ந்து பத்து வருசத்துக்கு முந்தி 'சமதர்ம ஜனநாயக் கட்சி'[ஏதேனும் கட்சி இருந்தால் மன்னித்திடுக] ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சோம். இன்னிக்கும் பத்துப்பேர்தான் உறுப்பினரா இருக்கோம். ரொம்பக் கவலையா இருக்கு. அதனாலதான் இதோட எதிர்காலத்தை நீங்க கணிச்சிச் சொல்லணும்னு வேண்டிக்கிறேன்.''

''பத்துப்பேர் உள்ள ஒரு அரசியல் கட்சிக்குப் பலன் சொல்லணுமா? விளையாடாதீங்க. ஃபோனை வையுங்க.''

''கொஞ்சம் பொறுங்க ஜோதிடரே. பா.ஜ.க., காங்கிரஸ்னு பெத்த பெரிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் ஜோசியம் சொல்லுற நீங்க எங்க சின்னக் கட்சிக்கெல்லாம் சொல்ல மாட்டீங்களா?''

''என்ன சொல்லுறீங்க?''

''ராகுலின் ஜாதகப்படி அவருக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு இல்லேன்னாலும், அவர் சார்ந்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு இப்போ நல்ல நேரம்கிறதால அவர் ஆட்சியைக் கைப்பற்றுவார்னு சொல்லியிருக்கீங்க. பா.ஜ.க.வுக்கு இப்போ நல்ல நேரம் இல்லேன்னும் சொல்லியிருக்கீங்க. இது முந்தா நாள் பத்திரிகைச் செய்தி.''

''அது வந்து... அந்தக் கட்சிகளோட ராசியை வைத்துக் கணிச்சிச் சொன்னேன்.''

''மனுசங்களுக்குப் பிறந்த நேரத்தைக்கொண்டு ராசி, நட்சத்திரம்னு கணக்குப் போட்டு, நல்ல நேரம் கெட்ட நேரம்னு அடிச்சி விடுறீங்க. கட்சிகளுக்கெல்லாமும் பிறந்த நேரம் இருக்கா? கட்சியை ஆரம்பிச்சவங்க அது ஆரம்பிக்கப்பட்ட நேரத்தைப் பதிவு பண்ணியிருக்காங்களா? அப்படியே பதிவு பண்ணியிருந்தாலும் அதுதான் கட்சி பிறந்த நேரம்னு சொல்லிப் படிச்சவன் படிக்காதவன்னு அத்தனை பேரையும் முட்டாள் ஆக்குறீங்களே, உங்களைக் கண்டிப்பாரில்லையா? தண்டிப்பாரில்லையா?''

பேசி முடித்து ஜோதிடரின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் குப்புசாமி.

பேசிகளுக்கிடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது!




நாட்டுக்குத் தேவை நடமாடும் சாமிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டப் பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவத் திட்டமிடப்பட்டது. இதற்காக 64  அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை ராட்சத லாரியில் பயணிக்கத் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

வழியில் பல்வேறு தடைகள் காரணமாக அதன் பயணம் இடைவெளிவிட்டு விட்டுத் தொடர்ந்த நிலையில்.....

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் இச்சிலை  சுமார் 2 மாதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் தற்காலிகப் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் சிலையின் பயணம் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமாள் சிலையின் இந்தப் பயணத்திற்காக நிறையப் பணமும் மனித உழைப்பும் செலவழிக்கப்பட்டுள்ளன எனினும், இதன் மூலம் பக்தியுள்ளம் கொண்ட பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. அதாவது.....

நடமாடும் மருத்துவமனைகள், நடமாடும் வணிக வாகனங்கள், நடமாடும் உணவுக்கூடங்கள் போல நடமாடும் சாமிகளும் இந்நாட்டுக்குத் தேவை!

பெருமாளை வழிபட்டுப் பாவம் போக்கிப் புண்ணியம் சேர்ப்பதற்காக, திருப்பதி, திருவரங்கம் என்றெல்லாம் நிறையப் பணம் செலவழித்து நெடும்பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட்டது.

இதைக் கருத்தில்கொண்டு சிந்திக்கும்போது, கருணைக்கடலான பெருமாளை[கோதண்டராமர்] ஒரு நடமாடும் கடவுளாகவே ஆக்கி, நாட்டில் ஏழை மக்கள் வாழும் கிராமங்களில் நடமாடவிடுவது அவர்களுக்குச் செய்யும் ஆகச் சிறந்த தொண்டாக அமைந்திடும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். 

இந்த எளியேனின் அடிமனதில் இவ்வெண்ணம் உருவாவதற்கு, நாட்டில் நடமாடும் மருத்துவமனைகள், நடமாடும் வணிக வாகனங்கள், நடமாடும் உணவுக்கூடங்கள் போன்றவை தூண்டுதலாக அமைந்தன எனலாம்.

இது சாத்தியமானால், காலப்போக்கில் பல்வேறு மதம் சார்ந்த சாமிகளும் ஊர்தோறும் பயணித்து ஏழை எளிய மக்களுக்கு அருள்பாலித்திட வாய்ப்பு அமையும் என்பது திண்ணம்.
கோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவு