எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 20 நவம்பர், 2022

கருவில் இருக்கும் குழந்தைக்குப் பக்கவாதமா? அடக் கடவுளே!!!


கருவில் இருக்கும் குழந்தைக்குத் தாயின் ஆரோக்கியம்தான் ஆதாரச் சக்தி.

தாய்க்கு ரத்தச்சோகை, தைராய்டுக் குறைபாடு இருப்பது, குழந்தையின் இதயக் குழாய் அல்லது இதயத்தின் வடிவமைப்பு சரியாக அமையாமல் போவது, தொப்புள்கொடியானது குழந்தையின் கழுத்துப் பகுதியைச் சுற்றி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் கருவில் இருக்கும் குழந்தைக்குப் பக்கவாதம் ஏற்படும்.

சில சமயங்களில், கருவுற்ற தாய் ஒரு விபத்தைச் சந்தித்தாலோ காயமடைந்தாலோ, அவைகூடக் காரணமாக அமையும்.


தாய்க்கு ‘இதயக் குழாய்ப் பாதிப்பு’ ஏற்பட்டிருப்பதும், கருவிலிருக்கும் குழந்தையைப் பக்கவாதம் தாக்குவதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.


மேற்கண்ட குறைபாடுகளின் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கான இந்தப் பக்கவாதப் பாதிப்பைக் கண்டறியலாம்.


ஆனால்,


அதனை முழுமையாகக் குணப்படுத்துவது என்பது தற்போது சாத்தியமில்லை.


காரணம், ஒரு சில நேரங்களில், குழந்தை பிறந்த சில மாதங்கள் கழித்துத்தான் பக்கவாதம் இருப்பதையே அறியமுடியும் என்பதுதான்.


ஆனாலும், பேறுகாலத்தில் தாயின் உடல்நலம் பேணுவதன் மூலம், கருவில் இருக்கும் குழந்தைக்குப் பக்கவாதம் ஏற்படாமல் தடுத்திட முடியும் என்பது ஆறுதல் அளிக்கும் நல்ல தகவலாகும்.

========================================================================

 https://www.bbc.com/tamil/science-63427204

ஆங்கிலம் தெரியாதவர்போல் நடித்த உச்ச நீதிமன்ற ‘இந்தி’ய வழக்குரைஞர்!!!

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம். ஜோசப், ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக 18.11.2022இல் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மனுதாரராக வாதாடிய முதியவர் சங்கர் லால் சர்மா என்பவர், பல நீதிமன்றப் படிகளேறிவிட்டதாகவும் எங்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்பதாகவும் சொன்னதோடு தமது வாதங்களையும் இந்தியில் முன்வைத்தார். 

உச்சநீதிமன்றத்தில் இந்தியில் வாதாடிய அந்த நபரிடம், வழக்காடு மொழி ஆங்கிலம்தான் என அழுத்தம் திருத்தமாக நீதிபதிகள் சொன்னார்கள்.

நீதிபதிகள் ஆங்கிலத்தில் சொன்னதுகூடத் தமக்குப் புரியாததுபோல் பாவனை செய்தார் அந்த வக்கீல்.

அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான், நீதிபதிகள் இந்தியில் புரியவில்லை என்று கூறியதை மொழிபெயர்த்துச் சங்கர் லால் சர்மாவிடம் தெரிவிக்க வேண்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியில் வாதாடிய மனுதாரருக்கு உதவ வழக்கறிஞரை நியமித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். 


இங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால்.....


உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் தொழிலைச் செய்கிற ஒரு வழக்குரைஞருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதுதான்.


ஒருவேளை, ஆங்கிலத்தில் சரளமாக் உரையாடும் ஆற்றல் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், “இந்தி புரியவில்லை” என்று நீதிபதிகள் சொன்னதுகூட அவருக்குப் புரியவில்லை என்பதுதான் நம்மைச் சந்தேகப்பட வைக்கிறது.

ஆங்கிலம் தெரியாமல், சட்டப் படிப்புப் படித்து, உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கறிஞராகப் பணியாற்றுவது என்பது சாத்தியமே இல்ல.

இவர் ’இந்தி’க்காரர், அல்ல, இந்தி வெறியர். “நான் இந்தியில்தான் பேசுவேன்” என்பதுபோல் இவர் நடித்திருப்பது, ‘உச்ச நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழி ஆக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

இவரைக் கண்டிப்பதைவிடவும், நம் வழக்கறிஞர்களும்[தமிழர்கள்], இனி உச்ச நீதிமன்றத்திலாகட்டும், தமிழ்நாட்டிலுள்ள நீதி மன்றங்களிலாகட்டும் தமிழில் மட்டுமே பேசுவது என்று முடிவெடுக்கலாம்.

இச்செயல், மேற்கண்ட நீதிமன்றங்களில் விரைவில் நம் தமிழ் வழக்கு மொழியாக அறிவிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்பது உறுதி.
========================================================================

https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-judges-told-language-of-court-is-english-only/articlecontent-pf808777-485949.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom