எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 18 நவம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமும் அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் பேட்டியும்!

“கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும் மருத்துவர்களின் சிகிச்சையாலும் முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்.....” என்று முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் அப்போலோ டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்[பாலிமர் தொலைக்காட்சி; 17.11.2016, பிற்பகல் 02.15] கூறியிருக்கிறார்.

நம் முதல்வர் அவர்கள் முழுமையாகக் குணமடைந்ததில் மெத்த மகிழ்ச்சி.
நன்றி:Oneindia Tami
இப்பதிவின் நோக்கம், மருத்துவர் பிரதாப் சி. ரெட்டியின் பேட்டியில் இடம்பெற்றுள்ள தவற்றினைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே.

பொது மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர், ஜாதி, மதம், இனம், மொழி, கடவுள் நம்பிக்கை, நாத்திகம் என எந்தவொரு வரையறைக்கும் கட்டுப்படாதவர் ஆவார்[தனிப்பட்ட வாழ்க்கையில் இது பொருந்தாமலிருக்கலாம்]. 

தம்மிடம் சிகிச்சை பெறும் நோயாளியின் நிலை குறித்து அறிவிப்புச் செய்யும்போது, முந்தைய பத்தியில் குறிப்பிட்டவாறு தாம்  சார்பும் அற்றவர் என்பதை மறத்தல் கூடாது. ஆனால் ரெட்டியோ.....

தாம் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும்...” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சொந்தபந்தம் என்று எந்தவொரு நாதியும் இல்லாத அனாதை நோயாளிகளுக்கு எவரும் பிரார்த்தனை செய்வதில்லை; செய்யப்போவதும் இல்லை. அத்தகையவர்களைக் குணப்படுத்த மருத்துவர்களின் சிகிச்சை மட்டும் போதாது என்று நினைக்கிறாரா ரெட்டி?

பணம் படைத்தவர்கள் எப்படியோ, அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடுகிற ஏழை எளியவர்கள்,  நோயைக் குணப்படுத்த அல்லும் பகலும் ஆண்டவனைப் பிரார்த்தித்துப் பலன் கிடைக்காத நிலையில்தான் மருத்துவர்களை நாடுகிறார்கள் என்பதை பிரதாப் சி .ரெட்டி போன்ற மருத்துவர்கள் மறந்துவிடக் கூடாது.
===============================================================================