எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 20 மே, 2021

கொரோனா 2ஆம் அலையும் மனம் திருந்தாத மதவாதிகளும்!!!

"இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. முதல் அலையில் கருணை காட்டிய கொரோனா 2-ஆவது அலையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கட்டுப்பாடற்ற மதக் கூட்டங்களே இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவக் காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் ஆய்வு கூறியதாவது: இரண்டாவது அலைக்குக் காரணம் என்று நம்பப்படும் மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் வெளிநாட்டுப் பயணிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மதக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களால் நாட்டிற்குள் பரப்பப்பட்டது."
{இது, இன்று முன்னிரவில் வெளியான காட்சி ஊடகச் செய்தி -Thursday, May 20, 2021, 11:38 [IST]}



மேற்கண்ட செய்தியின் மூலம் தெள்ளத் தெளிவாக நாம் புரிந்துகொள்ளும் உண்மைகள்.....

ஓன்று:
'திருத்தப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, திருத்த வேண்டியவர்களும் திருந்தவில்லை!'

இரண்டு:
மூடர்களை முயன்றால் திருத்தலாம். முழு மூடர்களைத் திருத்துவது
சாத்தியமே இல்லை!!!

===============================================



'கொரோனா விருப்பம்' பட்டியலில் 'சோம்பேறி'களுக்கு 2ஆம் இடம்!!!

இது, ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்திதான். இதன் 'இன்றியமையாமை' கருதி இன்று இங்குப் பதிவு செய்கிறேன்.

நோய்த் தாக்குதலுக்கு முன்பு குறைந்தது 2 ஆண்டுகள்வரை உடற்பயிற்சி செய்யாதவர்களைக் குறி வைத்துத் தாக்குகிறதாம் கொரோனா.

'மாற்று உறுப்பு அறுவை செய்துகொண்டவர்களும், கடுமையான இணை நோய் உள்ளவர்களும் கொரோனா கொடுந்தொற்றின் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகிறார்கள். அவர்களையடுத்து, அதி தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் உடற்பயிற்சியே இல்லாத சோம்பேறிகள்தான்' என்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த 'ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன்' என்னும் இதழ், 

2020 ஜனவரி முதல் அக்டோபர் வரை கொரோனா பாதித்த 48,440 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் சராசரி வயது 47. 5 ல் 3 பேர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு, நீரழிவு, நுரையிரல் பாதிப்பு, இதயம் அல்லது சிறுநீரக நோய் அல்லது புற்றுநோய் போன்றவற்றின் பாதிப்பு இல்லை. 20 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 சதவீதம் பேர் 2 அல்லது 3 நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது: கொரோனா தொற்று பாதிப்பதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் வரை உடற்பயிற்சி செய்யாதவர்கள் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. 

ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவீதம் பேர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

======================================================================