எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 6 பிப்ரவரி, 2017

தீக்குண்ட[பூக்குழி] நெருப்பு சுடாமலிருப்பது பக்தியினாலா?!

கோயில் திருவிழாக்களில், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்றவை இன்றளவும் பரவலாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள். இவற்றைச் சாதிக்கக் கடவுள் பக்தியும் விரதமும் இன்றியமையாத் தேவைகள் என்று நம்புவது மூடத்தனத்தின் உச்சமாகும்.

தண்ணீரில் குளித்து, நீர் சொட்டும் ஈரமான ஆடையுடன் நெருப்பின் மீது நடக்கும்போது காலில் உள்ள ஈரமானது நெருப்பில் பட்டு ஆவியாவதால், காலுக்கும் நெருப்புக்கும் இடையே ‘ஆவித்திரை’ உருவாகிறது. இந்த ஆவித்திரையைக் கடந்துதான் வெப்பம் தீ மிதிப்பவரின் காலைச் சுட முடியும். இதற்குச் சிறிது அவகாசம் தேவை. அவசர அவசரமாக உரிய தூரத்தை நடந்து முடித்துவிடுவதால் பாதங்களில் தீக் காயங்கள் ஏற்படுவதில்லை. சூடு தாக்காமல் இருப்பதற்கு, நெருப்பின்மீது படிந்திருக்கும் சாம்பலும் ஒரு காரணம்.

மற்றபடி, விரதம் இருந்து பெறும் கடவுள் சக்தியால் இது சாத்தியமாகிறது என்பது வெறும் குருட்டு நம்பிக்கைதான்.

பூக்குழி மிதிப்போர், ஐந்தே ஐந்து நிமிடம் நெருப்பின் மீது அசையாமல் நிற்பார்களா? குழியில் உருண்டு எழுந்து வருவார்களா?

தீச்சட்டி தூக்குவதும் இதைப் போன்றதுதான்.

சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு, நெருப்பை எரியச் செய்து தூக்கினால், பொறுக்க முடியாத அளவுக்குச் சட்டி சுடாது. மண் பானைக்குள் நெருப்பிட்டுத் ‘தீச்சட்டு’ தூக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன செம்பு அல்லது, எவர்சில்வர் குடத்தில் நெருப்பிட்டுக் கோயிலை வலம் வருவார்களா?

மேற்கண்டவை போலவே, கூரிய அரிவாள் மீது ஏறி நிற்பதற்கும் பக்திக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வித்தையை எவர் வேண்டுமானாலும் செய்து காட்டலாம்.

அரிவாள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் வெட்டும் முனை நீளமாக இருப்பதும், உடலின் எடை வெட்டும் முனையில் சமமாகப் பரவியிருப்பதும் முக்கியம். அரிவாள் மீது ஏறும்போது, கவனமாக இருபுறமும் கைகளை ஊன்றிக்கொண்டு, முழு எடையையும் ஏற்றி நிற்றல் வேண்டும்.

அரிவாளைச் சாய்த்துப் பிடித்து ஏறுவதோ, குதித்து ஏறுவதோ கூடாது. ஒரு வெட்டும் கருவி எந்தவொரு பொருளையும் வெட்டுவதற்கு , வெட்டும் கோணம், வெட்டும் வேகம், அழுத்தம் ஆகியவை காரணமாக அமைகின்றன.

அரிவாள் மீது ஏறி நிற்கும் பக்தர்கள், நீண்ட பெரிய ஊசிகளை நட்டு வைத்து அவற்றின் மீது ஏறி நின்று, தம் பக்தியின் மேன்மையைப் பறைசாற்றுவார்களா?

அலகு குத்துவதிலும் சில நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும். பக்தி விரதம் என்று எதுவும் தேவையில்லை.
‘கூர்மை’யான கொக்கியைத் தோலில் குத்துவதால் தாங்கிக்கொள்ளும் அளவுக்குத்தான் வலி இருக்கும். சில குறிப்பிட்ட காரணங்களால் ரத்தம் கசிவதில்லை. கொக்கி தாங்கக்கூடிய அளவுக்கு எடை இருத்தல் அவசியம். எடைக்கு ஏற்பவே கொக்கிகளின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு கொக்கி ஐந்து கிலோகிராம் எடையைத் தாங்கும் என்றால், 100 கிலோகிராம் எடையைச் சுமப்பதற்கு அல்லது, இழுப்பதற்கு 20 கொக்கிகளை மாட்டிக்கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க விரதமோ பக்தியோ தேவையில்லை.

===============================================================================

ரமண மகரிஷியும் நம்ம ஊர் நம்பர் 1 ஆன்மிகவாதியும்!

"நான் யார்?”...சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் யாவரும் தமக்குத்தாமே கேட்டுக்கொண்ட கேள்வி இது; இன்றளவும் கேட்கப்படுவதும்கூட. விடை மட்டும் கிடைத்தபாடில்லை. 
சென்னையில் நடந்த[’தி இந்து’, 05.02.2017], ‘தெய்வீகக் காதல்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில்.....

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் பணம், புகழ், குடும்பம், ஆசை என்று ஒரு குறுகிய வட்டத்தில் முடங்கிவிடுகிறோம்.

ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் புண்ணியவான்கள். நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறந்த பிறகு எங்கு செல்வேன்? ஆத்மா என்பது என்ன? என்பன போன்ற ஆன்மிகத் தேடலில் இறங்கியவர்கள். அக்கேள்விகளுக்கான விடை சொல்லும் குருவையும் பெற்றவர்கள். மிகப் பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார் என்பவற்றைவிட நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். ஏனெனில், ஆன்மிகத்துக்கு அவ்வளவு பவர் உள்ளது. பவர் எனக்குப் பிடித்தமானது..... என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ஆன்மிகத்தில் என் முதல் குரு என் அண்னன் சத்தியநாரயணா. அவர்தான் என்னை ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் என் இரண்டாவது குரு. அவரிடம் ஒழுக்கத்தையும் சம்பிரதாயங்களையும் கற்றேன். ராகவேந்திரர் என் மூன்றாவது குரு. அவரிடம் பக்தியையும் சடங்குகளையும் கற்றேன்” என்கிறார்.

இரண்டு ஆன்மிகக் கதைகளையும் சொல்லியிருக்கிறார்.

இவை அனைத்திற்கும் மேலாக, “என் மூன்றாவது குருவான ரமண மகரிஷியிடம் ‘நான் யார்?’ என்பதையும் அறிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் [இந்த ‘நான்’ ஐ அறிந்திருப்பதாக ஏற்கனவே மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள்].

நான்...ஆத்மா...உயிர் எனப்படும் இவையெல்லாம் வெவ்வேறானவையா, ஒன்றா? வெவ்வேறு எனின் அவற்றுக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எவை? எல்லாம் ஒன்றெனின், அந்த ஒன்று உடம்புக்குள் எங்கு ஒளிந்திருக்கிறது? உடம்பு அழிந்த பின்னர் அதிலிருந்து வெளியேறுகிறதா? அப்புறம் அது என்ன ஆகிறது?...இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகள் உள்ளன. அத்தனைக்கும் விடை சொன்னவர் எவருமில்லை. தருகிற விடைகளிலும்  தெளிவில்லை.

இந்நிலையில், ரமண  மகரிஷி மூலம் ‘தான்[நான்] யார்?’ என்பதைப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அவர் தன் உரையில், ‘நான் யார்?’....., ‘ஆத்மா என்பது என்ன?’ என்று குறிப்பிடுவதன்  மூலம், இரண்டும் ஒன்றல்ல என்று  நினைப்பது புரிகிறது.

இரண்டும் ஒன்றா வேறா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ‘நான்’ என்பதற்கு மட்டுமேனும் ரஜினி விளக்கம் தர இயலுமா? நிச்சயமாக இல்லை.

இனியேனும் ஆன்மிகத்தின் பெயரால் கண்ட கண்ட பொய்களை அள்ளித் தெளித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.
*********************************************************************************************
ஏற்கனவே வெளியான ‘ரஜினி யார்?’ என்னும் பதிவு தமிழ்மணத்தில் உரிய முறையில் இணைக்கப்படாததால், தலைப்பு மாற்றப்பட்டு மீண்டும் தமிழ்ணத்தில் இணைக்கப்பட்டது.

ஏற்கனவே வாசித்தவர்கள் என்னை மன்னித்திடுக.