எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

சூரசம்ஹாரமும் கொசு ஒழிப்பும்!!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 'சூரன் வதை[சூரசம்ஹாரம்]' நடைபெறவுள்ள நவம்பர் 9ஆம் தேதியன்று, அரசு நிறுவனங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் 'உள்ளூர் விடுமுறை' அறிவித்துள்ளது[தொ.கா. & நாளிதழ்] என்பது இன்றையச் செய்தி.

சூரனை இந்த நாளில்தான் முருகன் வதம் செய்தாரென்று பக்தர்கள் நம்புகிறார்கள். அதை ஒரு விழாவாகவும் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அதைக் குதூகலமாகக் கொண்டாடுவதற்கு வசதியாகத்தான் இந்த விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

முருகன் தமிழ்க் கடவுள் என்று போற்றப்பட்டாலும், 'சூரன் என்று ஒருவன் இருந்தான்; அவனை முருகன் வதம் செய்தார் என்று சொல்லப்படுவதை நம்புவது[மிகப் பலருக்குக் கதையே தெரியாது என்பது மிகப் பெரிய சோகம்] பகுத்தறிவுக்கு ஏற்ற செயலல்லவே' என்று நாம் சொல்ல நினைக்கும் அதே வேளையில், 'தீபாவளி, தலையாடி போன்ற பண்டிகைகள் கொண்டாடக் காரணமான நிகழ்வுகளும் கட்டுக்கதைகள்தானே?' என்னும் கேள்விகள் ஒருபுறம் எழுந்தாலும்.....

அவற்றுக்காக எடுக்கப்படும் விழாக்களில்  பட்டாசு வெடித்து மகிழ்தல், சுவையான தின்பண்டங்களைச் சுவைத்து இன்புறுதல்; [சின்னஞ் சிறுசுகள்] தேங்காய் சுட்டுப் பரவசமடைதல் என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் ஆண்டுதோறும் இவ்வகைப் பண்டிகைகள் அனுமதிக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே.

திருச்செந்தூர்க் கோயிலில், சூரன் வதை செய்யப்படும் நிகழ்வும் வழக்கப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.

இவையெல்லாம் கதைகளே என்று எத்தனைதான் வலியுறுத்திச் சொன்னாலும், இவை பற்றிச் சிந்தித்து, விழாக்கள் கொண்டாடுவதை மக்கள் இப்போதைக்குக் கைவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

பழக்கவழக்கம் காரணமாகத் தொடர்ந்து கொண்டாடப்படும் இவற்றை எவ்வகையிலேனும் இயல்பு வாழ்க்கைக்குப் பயன் தருபவையாகவும் கொஞ்சம் மாறியமைத்தால், அது பெரும் வரவேற்புக்கு உரியதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனலாம்.

"மேற்கண்ட அரக்கர்கள் எல்லாம் செத்தழிந்து ஒழிந்துவிடவில்லை; இன்றளவும் மிகப் பல நோய்களுக்குக் காரணமாக உள்ள, கண்ணுக்குத் தெரியும் கொசுக்கள், தெரியாத நச்சுக் கிருமிகள் போன்றவற்றின்  உருவில் வாழ்கிறார்கள்" என்று மக்களிடம் எடுத்துச் சொல்லி, நம்ப வைத்து[பிற கதைகளை நம்புவது போலவே இதையும் நம்புவார்கள்], விழா நாட்களில் அவை உற்பத்தியாகும் சாக்கடை போன்ற இடங்களைத் தூய்மைப்படுத்தல், மருந்து தெளித்தல் என்று பயனுள்ள பணிகளைச் செய்து முடித்த பின்னர், பட்டாசு வெடித்தல், தின்பண்டங்கள் சுவைத்தல், திரைப்படம் பார்த்தல் என்றிவற்றையும் செய்திட அவர்களைப் பழக்கப்படுத்தினால், அது சமுதாயத்திற்குப் பெரும் நன்மைகளை அளிப்பதாக அமையும் என்பது நம் எண்ணம்.

இதை, உரிய முறையிலான அறிவிப்புகள் மூலமும், ஊடகப் பரப்புரைகள் வாயிலாகவும் அரசு சாதித்துக் காட்டுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.

==========================================================================

இருக்கும்வரை 'இப்படியெல்லாம்' சிந்திக்கலாமே![சிறப்பு அறுவை]

பிரபஞ்சம் தோன்றி எவ்வளவு காலம் ஆயிற்று என்பது பற்றியோ, அது எப்போதும் இருந்துகொண்டே இருந்திருக்கிறது என்றால் அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று என்பது குறித்தோ  எவருக்கும் தெரியாது.

மனிதர்கள் வாழும் இந்த மண்ணுலகம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பன பற்றியெல்லாம் அறிவியலாளர்கள் ஆராய்ந்து கணித்திருக்கிறார்கள். 

பிரபஞ்சத்தின் ஆயுளோடு[அது எக்காலத்தும் இருந்துகொண்டிருப்பது என்றால் அதற்கு 'ஆயுள்' என்று சொல்வதற்கு ஏதுமில்லை] ஒப்பிட்டால் பூமியின் ஆயுள் என்பது மிகவும் அற்பம். 

மனித இனத்தின் ஆயுளோ மிக மிக மிக..... அற்பம்.

கடவுள் இருப்பதாக இவன் நம்ப ஆரம்பித்தது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான்.

இம்மண்ணில் வாழும் ஏராள உயிரினங்களுக்கிடையே இவன் மட்டுமே கடவுளைத் துதிபாடி ஆனந்தக் கூத்தாடுகிறான்.

ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் மனித இனம் பூண்டோடு அழிந்துவிடுவது நிச்சயம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அறிவியலின் துணையுடன் இவன் தன் ஆயுளை நீட்டித்துக்கொண்டே போவது சாத்தியம் என்றாலும், இம்மண்ணுலகம்[இவன் பின்னொரு காலத்தில் குடியேற வாய்ப்புள்ள கோள், அல்லது கோள்கள் உட்பட] ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் அழியும். அதனோடு இவனும் அழிந்தொழிவது 100% உறுதி.

இந்த இனம் அழிந்தொழிந்த பின்னர்.....

"அப்பனே... ஐயனே... ஒப்பிலானே... எல்லாம் வல்லவனே... எங்கும் நிறைந்த பரம்பொருளே... கருணைக் கடலே" என்றெல்லாம் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாட எந்தவொரு நாதியும் இல்லை. ஆக.....

மனிதன் இருக்கும்வரைதான் கடவுளும் இருக்கக்கூடும். அப்புறம்....

'பிரபஞ்சம் மட்டுமே இருந்துகொண்டிருக்குமா? அது மட்டும் சாத்தியம் ஆவது எப்படி?' என்பன போன்ற இப்போது கேட்கும் கேள்விகளைக்கூட மனித இனம் உள்ளவரைதான் கேட்க முடியும். அப்புறம்?

அப்புறம்... அப்புறம்... அப்புறம்... !!!... !!!... !!!...

==========================================================================

அமேசான் கிண்டிலில் என் புதிய நூல்:

நரகவாசல்!!!: [விழிப்புணர்வுக் கட்டுரைகளும் கதைகளும்] (Tamil Edition)