எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

‘கட்டுப்படுத்தாத பாலியல் இச்சை’... கண்டிக்கும் உயர் நீதிமன்றம்! அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம்!!

க்டோபர் மாதத்தில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குள்ளான வழக்கொன்றில், “இளம் பெண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட இன்பத்திற்காகச் சமூகத்தில் அவமானப்பட்டுத் தலைகுனிந்து நிற்கக் கூடாது” என்று நீதிபதிகள்[இருவர்] அறிவுரை[தீர்ப்பு] வழங்கியுள்ளார்கள்.

அவர்களின் தீர்ப்புக்கு  உச்ச நீதிமன்ற நீதிபதிகள்[இருவர் > அமர்வு] கடும் கண்டனம் தெரிவித்தார்கள் என்பது 08.12.2023 ஊடகச் செய்தி. https://www.dinamani.com/india/2023/dec/08/sexual-desires-sc-condemns-calcutta-high-court-4119083.html.

எவரும் புகார் செய்யாமலே, உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாய் மூக்கை நுழைத்திருப்பது நம்மைப் புருவம் நெறிக்க வைக்கிறது.

“உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் சொந்த அபிப்ராயத்தைப் பரப்புரை செய்திருக்கிறார்கள்; இவர்களின் அறிவுரைகள் தேவையற்றவை; ஆட்சேபணைக்குரியவை; அரசியல் அமைப்பின் 21ஆவது பிரிவின் கீழ் இது இளம் பருவத்தினரின் உரிமைகளை மீறுவதாகும்" என்று கண்டித்ததற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இங்கே நம் மனதை உறுத்துகிற கேள்வி என்னவென்றால்.....

எந்த வயதினராயினும் ‘அது’ விசயத்தில் மனம்போனபடி அனுபவிக்க ஆசைப்பட்டால் அவமானப்பட நேரிடும் என்பதில் 0% சந்தேகத்திற்கும் இடமில்லை. .

வளரிளம் பருவத்தினர்[டீன் ஏஜ்] என்றால், அவர்கள் காம உணர்வைக் கட்டுப்படுத்தத் தவறினால், அவமானப்படுவது மட்டுமல்ல,  தற்கொலை புரியும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படுவார்கள் என்பது உறுதி.

மேலும்.....

பாலியல் இச்சையைக் கட்டுப்படுத்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதே தவிர, அது அந்த இச்சையை முற்றிலுமாய்த் துறந்துவிடச் சொல்லவில்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அறியாமல் போனது நம்மைப் பெரு வியப்புக்கும் கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது.

கண்டித்ததற்கு மாறாக.....

“மற்ற விசயங்களில் எப்படியோ, பாலியலைப் பொருத்தவரை வளர் இளம் பருவத்தினருக்கு முழு உரிமை வழங்கப்படுதல் கூடாது; கூடவே கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை மனதாரப் பாராட்டுகிறோம்” என்று அவர்கள் சொல்லியிருந்தால், அது உச்ச நீதிமன்றத்தின் மீதான மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கும் என்பது நம் எண்ணம்.