தலைப்பை வாசித்தாலே போதும், ஊடகச் செய்தியின் முழு உள்ளடக்கத்தையும் அறிந்துகொள்ளலாம்.
திருவாரூர் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில், எவ்வளவுதான் பராமரிப்புச் செய்தாலும் அடிக்கடி அவை பழுதடைவதும், விபத்துக்கு உள்ளாவதும் நிகழ்கின்றனவாம். அதனால், அவை பழுதடைவதைத் தடுக்கவும், விபத்துகள் நேராமலிருக்கவும் சிறப்பு யாகம் செய்திருக்கிறார்கள்[யாகம் செய்து மண்டைக் களிமண்ணையும் மூளையாக மாற்றலாம் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்]பணிமனை நிர்வாகிகள்.
வரவேற்கலாம்.
யாகம் செய்தால் வாகனங்களில் பழுதே ஏற்படாது; விபத்துகளும் நிகழாது என்பதை நம் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசே அறியாமலிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
இனி.....
அரசுப் பேருந்துகள் மட்டுமல்ல, அரசுத் துறைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும்[முதலமைச்சர் பயணிப்பது உட்பட] பழுதே ஏற்படாமலிருக்கவும், ஆண்டுகள் பல கழிந்தாலும் பளபளப்பு மங்காமலும் அழுக்குப்படியாமலும் இருக்கவும், தலைமைச் செயலகத்தில் மிகப் பெரியதொரு ‘யாகம்’ செய்தல் உடனடித் தேவை.
இது குறித்த அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிடுவதோடு, திருவாரூர் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகிகளுக்கு, முதலமைச்சர் தலைமையில் பெரும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது நம் வேண்டுகோள்[ஹி... ஹி... ஹி!!!]; நம் மக்களின் விருப்பமும் அதுவே.
