எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 19 நவம்பர், 2019

விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் மதுரை ஆதீனம்!!!

“ஷீரடி சாயிபாபாவின் அவதாரம்தான் மோடி” என்று மதுரை ஆதீனம் அருணகிரி பேசியிருப்பதாக, ‘இந்து தமிழ்’[19.11.2019] வெளியிட்டுள்ள ‘கருத்திச் சித்திரத்தின் மூலம் அறிந்தேன்.
ஷீரடி சாய்பாபாவின் வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தால் அவர் ‘அவதாரம்’ அல்ல என்பதை மதுரை ஆதீனம் உணர்ந்துகொண்டிருப்பார்.

அது மட்டுமல்ல, மனிதர்களாகப் பிறந்தவர்களை அவதாரம் ஆக்குவது அறிவுடைமை ஆகுமா என்பது குறித்தும் அவர் சிந்தித்ததில்லை என்பதை நம்மால் அறிய முடிகிறது.

அவரின் நம்பிக்கையின்படி, சாயிபாபா அவதாரம்தான் எனின், ஒரு எளிய மனிதரான, பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்த அவதாரப் புருசனை ஒப்பிடுவது எத்தனை பெரிய தவறு என்பது ஆன்மிகத்தில் மிகப் பல ஆண்டுகளாக ஊறித் திளைத்த மதுரை ஆதீனமான அருணகிரி அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

மோடி அவர்களையும் ஷீரடி சாய்பாபா அவர்களையும் ஒப்பிட்டதன் மூலம், சைவ நெறி பரப்புவதையே தம் முழு நேரப் பணியாகக் கொண்ட அருணகிரி அவர்கள் ஒரு மடாதிபதிக்குரிய கவுரவத்தை இழந்துவிட்டிருக்கிறார்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட இவரின் இந்த, மோடி குறித்த துதிபாடலை எண்ணி நகைக்கவே செய்வார்கள்.

இனியேனும், ஒரு கருத்துரையை மக்களின் முன்னர் வைப்பதற்கு முன்பாக மதுரை மடாதிபதி அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
===========================================================================