எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

காவிகளின் கனவும் தமிழன் என்றொரு இனமும்!!

சில நாட்களுக்கு முன்பு "ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியப் பிரதமராக ஆவார்" என்று 'ஓவைசி' பேசினார். அதை எவரும் கண்டித்ததாகத் தெரியவில்லை.

பேசியவர் இந்தியக் குடிமகன். அவர் விருப்பத்திற்கிணங்க இந்தியப் பிரதமர் ஆகவிருக்கும் 'ஹிஜாப்' அணிந்த பெண்ணும் இந்தியக் குடிமகளாகவே இருப்பாள் என்பதால்,  அவ்வாறு பேசுவதில் தவறேதும் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.

சற்று முன்னர், தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் கர்னாடகா அமைச்சர் 'ஈஸ்வரப்பா' என்பவர், "இந்தியத் தேசியக் கொடியான மூவர்ணக் கொடிக்குப் பதிலாக என்றேனும் ஒரு நாள் 'காவிக் கொடி' பறக்கக்கூடும்" என்று அறிவித்ததை அறிய முடிந்தது.

இச்செய்தி ஏற்கனவே  நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது.

#கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று மாலை பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம் தேசியக் கொடிக் கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சர்ச்சை தொடர்பாகப் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,  "இது சர்ச்சைக்குரிய விஷயம் கிடையாது" என்று பதில் கூறினார். "கொடிக்கம்பம் என்பது பொதுவானது. அதில் எப்பொழுதும் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படுவது கிடையாது"[தேசியக் கொடியை இறக்கிவிட்டுக் காவிக் கொடி ஏற்றுவது தப்பில்லையா?] என்று பதிலளித்த நிலையில், கன்னட நாடு பிறந்த தினத்தில் கொடிக் கம்பத்தில் கர்நாடகக் கொடியும் ஏற்றப்படுவது வாடிக்கையான ஒன்று. அதேபோல் நேற்று காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது" என்றார்.

"என்றாவது ஒருநாள் 200 வருடங்கள் கழித்து அல்லது 500 வருடங்கள் கழித்து நிச்சயம் காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம்"[https://www.malaimurasu.com/posts/india/The-saffron-flag-will-one-day-definitely-become-the-national-flag] என்றும் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்#

இதைச் சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்; யாரும் அவர் தண்டிக்கப்படுதற்குரியவர் என்று சொன்னதாகத் தெரியவில்லை['பஜக' கட்சிக்காரர் என்பதால்?].

இந்த நிலையில் நம் அடிமனதிலும் இம்மாதிரியான ஆசை கிளர்ந்தெழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அது.....

"தமிழர்களாகிய எங்களுக்கென்று ஒரு கொடி இருக்கிறது. அது, 'தமிழ்' பேசும் இனத்தவரான எங்களின் கொடி. என்றாவது ஒரு நாள், ஒரு மதத்தின் சின்னமான காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம் என்றால், எங்கள் இனத்தின் சின்னமான கொடியும் தேசியக் கொடியாக மாறக்கூடும்" என்று சொல்வதற்குத் தமிழர்களுக்கு உரிமை உண்டு" என்பதே.

ஆனால்.....

நாம் அவ்வாறெல்லாம் சொல்ல விரும்பவில்லை; "இனியும் சொல்லத் தூண்டாதீர்கள்" என்று மட்டுமே ஈஸ்வரப்பா போன்ற காவிக் கட்சிக்காரர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

==========================================================================


'கூட்டு நுண்ணறிவு'?!... சூடான சுவையான புதிய செய்தி!

35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொல் மனித உயிரியின் மூளை அளவு சுமார் 450 மி.லி.; 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் 500 மி.லி. அளவாக மூளை இருந்தது. 5 லட்சம் ஆண்டுகள் சீரான வேகத்தில் மூளையின் அளவு அதிகரித்துக்கொண்டே சென்றது.10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மூளையின் அளவு 1,000 மி.லி.யை எட்டியது. நவீன மனிதனான ஹோமோ ஸேப்பியன் மூளை 1,350 மி.லி. ஆனது. 

அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளில் மனித மூளையின் அளவு ஏற்ற, இறக்கம் இல்லாமல் நிலையாக இருந்தது. 

ஆனால், இங்கே கவனிக்கத்தக்க முக்கிய மாற்றம் என்னவென்றால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மனித மூளையின் அளவு, சில ஆயிரம் ஆண்டுகளாகக் குறைய ஆரம்பித்ததுதான். விளைவு.....

இப்போதைய மனிதனின் சராசரி மூளையின் அளவு 1,090 -1,175 மி.லி.; கடந்த காலங்களில் மனித மூளை விரிவடைந்த வேகத்தைக் காட்டிலும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் மூளை சுருங்கும் வேகம் ஐம்பது மடங்காக ஆனது.

விலங்கு உலகில் அவற்றின் உடல் எடையுடன் ஒப்பிடுகையில், எடை அதிகமான மூளை கொண்ட விலங்கு மனிதனே. 

திமிங்கிலத்துக்கு 9 கிலோ மூளையும் யானைக்கு 6 கிலோ மூளையும் உள்ளன. மனித மூளையின் எடையோ சுமார் 1.5 கிலோதான்.  

உடல் எடையோடு ஒப்பிட்டால் திமிங்கிலத்தின் உடல் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அதன் மூளையின் எடை. யானையின் எடையில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் அதன் மூளையின் எடை. மனிதனுக்கு மட்டும் அவன் எடையில் ஐம்பதில் ஒரு பங்காக மூளை இருக்கிறது.

மனித உடலில், ஆற்றலை அதிக அளவில் செலவு செய்யும் உறுப்பு மூளைதான். உடலின் எடையில் வெறும் இரண்டு சதவீதமே இருந்தாலும் மூளை மட்டும் இருபது சதவீத ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. எனவே, உடல் எடையில் மூளையின் அளவு அதிகரித்தால், அதற்கு ஏற்ப ஆற்றலும் அதிகரிக்க வேண்டும். இல்லை என்றால் மற்ற உறுப்புகள் பழுதாகிவிடும்.

பரிணாமத்தில் நேராக நிமிர்ந்து நடந்த ஹோமினின் வகை உயிரினங்களின் மூளை அளவு விரிவடைந்தது. கைகளைப் பயன்படுத்திக் கற்கருவிகளைத் தயாரித்து, உழைப்பைச் செலுத்தி, உணவு உற்பத்தியில் ஈடுபட்டதால், அதிக உணவைப் பெற முடிந்தது. மூளையின் வளர்ச்சிக்குத் தீனியும் போட முடிந்தது. மூளையின் அளவு அதிகரித்தாலும் தாக்குப்பிடிக்க முடிந்தது. 

குழுவாக வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதன் கருவிகளை மட்டுமல்ல, நெருப்பையும் கண்டுபிடித்துப் பயன்படுத்தினான். அதன் மூலம் அதிக உணவு கிடைத்து; ஆற்றலையும் பெற முடிந்தது. 

காலங்காலமாக வளர்ச்சி நிலையிலிருந்த மனித மூளை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவிலிருந்து குறைய ஆரம்பித்தது.

ஆற்றலை அதிகம் எடுத்துக்கொள்ளும் மூளையின் அளவு கூடினால், உடலின் மற்ற உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. மூளையின் அளவு சிறியது என்றால் தேவையான திறன் இருக்காது. எனவே, மூளை செலவிடும் ஆற்றலையும் திறனையும் சமன் செய்யும் வகையில் பரிணாமம் அமைகிறது.

நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, மனிதன் தனிமரமாக இல்லாமல், சமூகம் எனும் தோப்பில் ஓர் அங்கம் ஆனான்.

தனித்தனியாக வாழ்ந்தால் ஒருவருக்குத் தேவைப்படும் அதே அளவு மூளை, சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் தேவைப்படாது. சமூகத்தில் உள்ள வேலைப் பிரிவினை காரணமாக ஒவ்வொருவரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் பணிகளில் நிபுணத்துவம் பெற்று, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம். எனவே தனித்துக் காட்டில் வாழும்போது தேவைப்படும் அதே அளவு மூளை, நவீன மனிதனுக்குத் தேவையில்லை என்றாகிறது.

சமூக வாழ்க்கை முறை உருவானதன் தொடர்ச்சியாக, எந்தெந்தச் சூழலில் எல்லாம் மூளையின் அளவு அதிகரிக்கும், அல்லது குறையும் என்பதை எறும்புகளின் உலகத்தை ஆராய்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் 'ஜெர்மி டிசில்வா' போன்ற ஆராய்ச்சியாளர்கள்.

எறும்புகள் உலகத்தில் ஒவ்வோர் எறும்பும் குறிப்பிட்ட பணியைச் செய்கிறது. மனிதன் விவசாயம் செய்வது போலவே, சில வகை எறும்புகள் தமது புற்றில் பூஞ்சைகளை வளர்த்துச் சாப்பிடுகின்றன. எறும்புகளின் சமூகத்தில் வேலைப் பிரிவினை காரணமாக அறிவு பகிரப்படுகிறது. ஒவ்வோர் எறும்பும் ஏதோ ஒரு வேலையைச் செய்வதற்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே, எறும்பின் மூளை இந்தச் சூழலுக்கு ஏற்ற வகையில், அளவில் சற்றே குறைந்திருக்கிறது. வேலைப் பிரிவினை, கூட்டு முடிவுகளை எடுத்தல் போன்றவை எறும்புகள் உலகத்துக்கும் மனித சமூகத்துக்கும் பொதுவானவை.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய நதிக்கரை நாகரிகம் போன்ற பண்பாட்டு வளர்ச்சியின் காரணமாகத் தனி மனிதர்களின் சராசரி மூளையின் அளவு சிறுத்துவிட்டது. ஆனாலும் அறிவு குறைந்துவிடவில்லை.

காட்டில் வாழ்ந்தபோது ஒவ்வொருவரும் தகவல்களைத் திரட்டி, நினைவில் தக்கவைக்கும் அளவுக்குத் தேவைப்பட்ட பெரிய மூளை இப்போது தேவையில்லை. சமூக அறிவு இருப்பதால் சற்றே சிறிய மூளைகூடப் போதுமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

*****கருத்துப் பிறழ்வு நேராத வகையில், மூலக் கட்டுரையில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

==========================================================================

கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

நன்றி:

https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/740425-why-is-the-human-brain-shrinking-4.html  - வியாழன், பிப்ரவரி 17 2022