எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 23 டிசம்பர், 2023

வைகுண்ட ஏகாதசி! பக்தர்களைப் பித்துக்குளிகள் ஆக்கும் ஊடகங்கள்!!

வைகுண்ட ஏகாதசி நாளில் வைணவக் கோயில்களில் அரங்கநாதன் சிலையை அலங்கரித்துச் சடங்குகள் செய்வதும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்வதும் வழக்கமாக இடம்பெறும் நிகழ்வுகளாகும்.

சாமி சிலைக்கு அணிகலன்கள் பூட்டுவது, முத்தங்கி போன்ற ஆடைகள் அணிவிப்பது, ஓரிடத்திலிருந்து தூக்கிச் சென்று இன்னோரிடத்தில் இருத்துவது போன்ற செயல்களைச் செய்பவர்கள் பூசாரிகளே[பட்டர்கள்].


சிலையை வழிபடுவதால் துன்பங்கள் தீரும், கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையே தவிர, சிலை உயிர்பெற்று எழாது; தங்களைக் கண் திறந்து பார்த்து ஆசீர்வதிப்பதோ, இடம்விட்டு இடம் பெயர்வதோ செய்யாது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.


பூசாரிகளும் இதை அறிவார்கள்.


உண்மை நிலை இதுவாக இருக்க, சிலை கடவுளாக மாறி அருள்மழை பொழிவதாகவும் நடமாடுவதாகவும் வர்ணித்து, பக்தர்களைப் பித்துக்குளிகள் ஆக்குவதை வழக்கமாக்கியுள்ளன செய்தி ஊடகங்கள்.


ஓர் எடுத்துக்காட்டு:


//வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளில், மூலவரான சயனக் கோலப் பெருமாள்[சயனத்திலிருக்கும் அரங்கநாதன்] முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். எப்போதும் யோக நித்திரையிலேயே காட்சியளிக்கும் அவர், இந்த நாளில் மட்டும் அமர்ந்த நிலையில் ஓய்வில்லாமல்[அடுத்த ஏகாதசியில், “ரொம்பக் களைப்பா இருக்கு. ஒரு காபி வாங்கித் தாங்கோ” என்று பக்தர்களிடம் கடவுள் கேட்டதாக எழுதுவார்களோ?] தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தைச் சென்றடைவார்//


கடவுள் சிலையைக் காண்பதிலும், வழிபடுவதிலும் முழு மனநிறைவைப் பெற்றுவிடும் பக்தர் மனங்களில், கடவுள் உயிர்பெற்று இயங்குவது போன்ற பொய்யானதொரு பிம்பத்தை நிறுவ முயல்கிறார்கள் ஊடகர்கள்.


அப்பாவிப் பக்தர்களின் புத்தியை இப்படியெல்லாமும் பேதலிக்கச் செய்கிறார்கள் இவர்கள்!


கடவுள்கள் குறித்த, ஆபாசம் கலந்த கற்பனைக் கதைகளை ஆன்மிக இணைப்பிதழ்களில் வெளியிட்டு மூடநம்பிக்கைகளை வளர்ப்பது போதாதென்று, கோயில் நிகழ்வுகளைப் பொய்யான வர்ணனைகள் மூலம் இவர்கள் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.


* * * * *

https://www.maalaimalar.com/aanmiga-kalanjiyam/oyvillaamal-tharisanam-tharum-ranganadhar-694562


‘சொர்க்கவாசல் திறப்பு’ம் திராவிட மாடல் அரசும்!!!

‘திருவரங்கம்[ஸ்ரீரங்கம்] அரங்கநாதர் கோயில் ‘சொர்க்கவாசல்’ திறப்பை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அரசு நிறுவனங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை’ -இன்று காலை [07.30] வெளியான[‘சன்’ தொலைக்காட்சி] செய்தி இது.

நாடெங்கிலுமுள்ள வைணவத்தலங்களில் இன்று[23.12.2023] சொர்க்கவாசல்கள் திறக்கப்படுகின்றன.

அவற்றில் திருச்சிராப்பள்ளியிலுள்ள அரங்கநாதர்[ஸ்ரீரங்கம்] கோயிலும் ஒன்று.

‘சொர்க்கம் என்று ஒன்று உண்டா? அது எங்கே இருக்கிறது? எப்படியிருக்கும்?’ என்னும் கேள்விகளுக்கு இன்றளவும் விளக்கம் தந்தவர் இல்லை.

சொர்க்கம் இருப்பதே நிரூபிக்கப்படாத நிலையில், புழுத்து நாறவிருக்கும் ஊத்தை உடம்புடன் வாசலில் நுழைந்தால் சொர்க்கம் சேரலாம்(ஆன்மாவாக?) என்று நம்புவதும், மந்தை மந்தையாய்க் கால்கடுக்கக் காத்திருப்பதும் அடிமுட்டாள்தனம் அல்லவா?

தமிழ்நாட்டை ஆண்ட கட்சி எதுவும் இந்நாள்வரை சொர்க்கம் நாடுவோரைத் திருத்த முற்படவில்லை.

இப்போது ஆளும் ‘திமுக’வும் இதற்கு விதிவிலக்காக இல்லை. 

அரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு நிறுவனங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் திமுக அரசு வழக்கம்போல் விடுமுறை அறிவித்திருக்கிறது.

ஒரு மாவட்டத்திற்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை?

தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோர் இதை ரத்து செய்திருக்கலாம். செய்யவில்லை.

காரணம், தேர்தல்களில் பக்தக்கோடிகளின் வாக்கு பறிபோகும் என்னும் பயம்தானே?

“ஆம்” என்றால்.....

திருச்சி மாவட்டம் என்றில்லாமல், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்தால், திருச்சி மாவட்டப் பக்தர்கள் என்றில்லாமல், தமிழ்நாட்டில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பக்தக்கோடிகள் மனம் பூரித்து இந்த அரசை வாழ்த்துவார்கள்; நடபெறும் தேர்தல்களில் மறவாமல் வாக்களிப்பார்கள்.

செய்யத் தவறிவிட்டது திராவிட மாடல் அரசு.

ஆயினும் என்ன, இது காலை நேரம். இப்போதுகூட விடுமுறையை அறிவித்துப் பக்தர்களின் பாராட்டை மட்டுமல்லாமல், அரங்கநாதனின் அருளையும் பெறலாம்.

செய்வார்களா?!