எனது படம்
உடல் நலம் குறித்தோ, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியோ எழுதினால், அவை வாசிப்போருக்குப் பயன்படக்கூடும். படைப்புத் தத்துவம், நிரந்தரம், நிலையாமை பற்றியெல்லாம் எழுதுவதால் பயன் என்ன? விரிவாகவும் வெகு ஆழமாகவும் இவை சிந்திக்கத் தூண்டுவதால் பயன் உண்டு என்று உறுதிபடச் சொல்லலாம்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கடவுளுக்கும் ‘அது’வோ அதுபோல் வேறு ‘எது’வோ தேவைதானே?!

அவ்வப்போது, எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. 

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதன், விலங்கு, பறவை என்று எந்தவொரு உயிரினமாக இருப்பினும் அந்த உயிரினத்தைப் பொருத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவன் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............[இந்த ’மிக’வுக்கு நம்மால் வரம்பு கட்ட இயலாது] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது?
அது உருவம் உள்ளதா, அருவமானதா?

மூளையைத் தவிர்த்து வேறு ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?
அந்த ‘ஏதோ’ எப்படியிருக்கும்?!

கடவுளின் ‘இருப்பு’ உறுதிப்படுத்தப்படவில்லை; இந்தக் கேள்விக்கு விடையில்லை; பயனேதும் இல்லை[?] என்பவை தெரிந்திருந்தும், கடவுள் குறித்துச் சிந்திக்கும்போதெல்லாம், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்!!!

நீங்கள் எப்படி?