எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 26 மார்ச், 2015

காந்தியும் காமமும்!

##காந்தி...‘மகாத்மா’ அல்ல; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சாதனைகள் புரிந்த ‘மிகச் சிறந்த’ ஒரு ‘மனிதர்’ மட்டுமே!##


"இளமையில், மிகையான காம உணர்ச்சி உள்ளவர்கள், அதைக் கட்டுப்படுத்தி ஒரு நெறியில் செலுத்தினால், பிற்காலத்தில் சிறந்த சாதனையாளர்களாப் புகழ் பெறக்கூடும்” என்பார் தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசன் [‘கரித்துண்டு’, நாவல்].

இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக, ‘மஹாத்மா’ என்று அழைக்கப்பட்ட காந்தியைச் சொல்லலாம்.
‘மஹா...ஆத்மா’ என்று சொல்லி அவரைக் கடவுளின் அம்சமாக்கி, தீபம் ஏற்றி வழிபடத் தக்கவர் ஆக்கிவிட்டார்கள் கடவுள் பற்றாளர்கள்.

“அவரைப் போல எல்லாம் நம்மால் வாழ முடியாது” என்ற எண்ணத்தை மக்களின் மனதில் ஆழப் பதித்துவிட்டார்கள்.

காந்தி கடவுள் நம்பிக்கை உள்ளவரே தவிர, ஒருபோதும் தன்னைக் கடவுளின் அம்சமாகக் கருதியதில்லை. மிகச் சாதாரண மனிதப் பிறவியென்றே நினைத்தார்; மற்ற மனிதர்களுக்கு உள்ள பலவீனங்கள் தனக்கும் உள்ளன என்றே சொல்லி வந்தார். தன்னுடைய சுய வரலாறான ‘சத்திய சோதனை’யில் தனக்கிருந்த குறை நிறைகளை அப்பட்டமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக, இளமையில் தன்னைப் பாடாய்ப்படுத்திய மிகையான காம உணர்ச்சி பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அசாதாரண முயற்சிகள் பற்றியும் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்.

மோக உணர்ச்சி தன்னை ஆட்டிப்படைத்த போதெல்லாம் மணல் மூட்டை சுமந்து உடம்பு சோர்வடையும்வரை ஓடுவாராம்!

குளிர்ந்த நீரில் நேரம்போவது தெரியாமல் அமர்ந்திருப்பாராம்.

'காமம் பொல்லாதது. அதை அடக்கி ஆள்வது அவ்வளவு எளிதல்ல’ என்பதை அவர் எப்போதும் உணர்ந்தே இருந்தார்.

அதனால்தான், தெனாப்பிரிக்கா புறப்படும் போது, “மதுவையும் மங்கையரையும் தீண்ட மாட்டேன்” என்று தன் அன்னையிடம் சத்தியம் செய்துவிட்டுப் போனார்.

சத்தியம் செய்யும் அளவுக்குப் பெண்ணாசை அவரை மருள வைத்திருந்தது!

ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பும் நேரம் வரை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.

ஆனால், திரும்பும் வழியில், அவர் பயணித்த கப்பல், ஒரு தீவை அடைந்த போது, கப்பல் கேப்டன் ஒரு விடுதிக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு விலை மகளிடம் அனுப்பி வைக்க, அவர் மனம் சஞ்சலப்படுகிறது.

ஆசையைக் கட்டுப்படுத்த இயலாமல் தாயிடம் செய்த சத்தியத்தையும் மீற இயலாமல் அவர் மனம் நிலை தடுமாற, சினம் கொண்ட விலைமகள் அவர் கன்னத்தில் அறைகிறாள்! அறையைப் பெற்றுக்கொண்ட அதிர்ச்சியுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கப்பலுக்குத் திரும்புகிறார் காந்தி.

கஸ்தூரிபாயை மணந்த பிறகும்கூட, பொல்லாத இந்தக் காம இச்சையைத் தன் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவர அவரால் இயலவில்லை.

தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்திலும்கூட, தன் மனைவியை மருவிச் சுகம் கண்ட ஒரு சதைப் பித்தராகவே அவர் இருந்திருக்கிறார்.

இந்தத் தன் பலவீனம் குறித்துப் பின்னர் வெகுவாக வருத்தப்பட்டிருக்கிறார் அவர். [‘சத்திய சோதனை’படியுங்கள்]

உலகமே வியந்து போற்றும் அளவுக்கு உன்னதமான தலைவராக உருவெடுத்த நிலையில், இது போன்ற தன் பலவீனங்களைச் சுயசரிதம் மூலம் உலகுக்கு அறிவித்த ஒரு ’மாமனிதர்’ காந்தியாகத்தான் இருக்க முடியும்.

அதனால்தான், மிகச் சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான கவியரசு கண்ணதாசன்,  ‘வனவாசம்’ என்னும் தன் சுய வரலாற்றின் முன்னுரையில், ‘எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள காந்தியடிகளின் சத்திய சோதனை படியுங்கள். எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள என் சுயசரிதை படியுங்கள்’ என்பார்.
காந்தியைப் போலவே, தான் செய்த தவறுகளை மறைக்காமல் சொன்னவர் கண்ணதாசன்.

‘மனித நாகரிகம் கருதி, நான் செய்த அசிங்கங்கள் அவ்வளவையும் எழுத இயலவில்லை’ என்கிறார்.

‘இளம் பருவத்தில், அழகும் கவர்ச்சியும் மிக்க பெண்களைப் பார்த்துவிட்டால், கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் விரகதாபத்துடன் அவர்கள் பின்னாலேயே அலைந்திருக்கிறேன்’ என்று தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

இத்தனை பெண் பித்துக் கொண்டவராக இருந்தும் எழுத்துத் துறையில் இவர் நிகழ்த்திய சாதனை பிரமிக்க வைப்பது பேராச்சரியம்!

நாற்பது வயதுக்குள்ளாக, உடலுறவு ஆசையை முற்றிலுமாய்க் கட்டுப்படுத்தி, மனைவி கஸ்தூரிபாயின் சம்மதத்துடன் துறவு மேற்கொண்டு நாட்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார் காந்தி.

துறவு மேற்கொள்வது சாத்தியப்படாது என்பது புரிந்த நிலையில், ஒரு வரம்புக்கு உட்பட்டு, மது மங்கையர் சுகத்தை அனுபவித்துக் கொண்டே எழுத்துலகில் சாதனைகள் நிகழ்த்தியவர் கண்ணதாசன்.

வரம்பு கடந்த காமம், கால நேரம் கருதாமல் அலைக்கழித்த போதும், மனம் தளராமல் அதனுடன் போராடிக் கட்டுப்படுத்தி, கொண்ட குறிக்கோளை நிறைவேற்றிப் புகழ் ஈட்டியவர்கள் இவர்கள்.

காந்தியின் சத்திய சோதனையையும் கண்ணதாசனின் மனவாசத்தையும் படித்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட அனைத்துத் தகவல்களும் தெரிந்தே இருக்கும்.

தெரிந்தவர்களுக்கும் இனிப் படித்துத் தெரிந்துகொள்ள இருப்பவர்களுக்கும் இப்பதிவின் மூலம் நான் முன் வைக்கும் வேண்டுகோள்..........

‘பலவீனங்களுடன் பிறந்து, சாதனைகள் நிகழ்த்திய ஒரு சாதாரண மனிதர் இவர்’ என்று கண்ணதாசனை நம் வருங்காலச் சந்ததியருக்கு அறிமுகப்படுத்துவது போலவே, காந்தியையும், ‘ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து செயற்கரிய செயல்கள் செய்த ஒரு மாமனிதர் இவர்’ என்றே அறிமுகப்படுத்துங்கள்.

மறந்தும் அவரை ‘மஹாத்மா’ என்று போற்றிப் புகழாதீர்கள்.

அவ்வாறு செய்தால், வருங்காலச் சந்ததியினர், அவரைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தீபம் ஏற்றி வழிபட மட்டுமே செய்வார்கள்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:
வரைவில் உள்ள அனைத்துப்  பதிவுகளும்[பழைய வலைப்பதிவுகளில் வெளியானவை] உரிய கால இடைவெளிகளில் பதிவிடப்படும்.




















வதைபட்ட தாய்க்குலமும், வரலாற்றின் கறை படிந்த பக்கங்களும்!

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. இந்திய வரலாற்றின் ‘ரத்தக்கறை படிந்த  பக்கங்களை’ அவர் படித்ததில்லை போலும்!

‘மன்னர்கள் புரிந்த மாபெரும் குற்றங்களும், அவர்களின் மூடத்தனமான வெறிச் செயல்களும், அவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களும் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணைதான் வரலாறு'என்கிறார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர்.

இந்திய அரசியல் வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட சில நிகழ்வுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.
நாடெங்கும், நீண்ட நெடுஞ்சாலைகள் அமைத்து  நிழல் தரும் மரங்கள் நட்ட அசோகச் சக்ரவர்த்தியை நம் எல்லோருக்கும் தெரியும்.

இவர் கலிங்கப் போருக்குப் பிறகு மனம் திருந்திய மாமனிதர்.

போருக்கு முந்தைய அசோகர்?

இவர், பிந்துசாரரின் 101 புதல்வர்களில் ஒருவர்; சகோதரர்களைக் கொன்று குவித்து ஆட்சியைக் கைப்பற்றியவர்; அதனால், ‘சண்ட அசோகன்’ எனப் பெயர் பெற்றதோடு குற்றம் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியவர்; எதிரிகள் பலரையும் வென்ற மாபெரும் வீரர். ஆனால்............

இந்த அசோகனின் தோற்றம் மட்டும் விகாரமானது!

இவரின் அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிகள் இருந்தார்கள். அவர்களில் யாரோ சிலர் இவரது தோற்றத்தைப் பழித்தார்களாம். அந்தச் சிலரை அடையாளம் காண முடியாததாலோ என்னவோ அங்கிருந்த அத்தனை பெண்களையும் யமனுலகுக்கு அனுப்பினாராம் அசோகச் சக்ரவர்த்தி!

இவரிடம், பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்தது. அந்த விழா வெகு வமரிசையாகக் கொண்டாடப்படும். விமரிசையாக என்றால் எப்படி?

பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பது!

இவனா[ரா] கலிங்கப் போருக்குப் பிறகு அஹிம்சாவாதியாக மாறினான்[ர்]? நம்ப முடியவில்லைதானே?

எதற்கும்  ‘பாகைநாடன்’ எழுதிய ‘கறை படிந்த காலச் சுவடுகள்’ [மூவேந்தர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2004]  ஆய்வு நூலை உடனே வாங்கிப் படித்துவிடுங்கள்.
                     *                      *                          *                                     
அடுத்து வரும் செய்தி உங்களைக் குலை நடுங்க வைக்கும் என்பது 100% உறுதி!

கி.பி.937 இல் காஷ்மீரை ஆண்டவன் ‘வந்தி’ என்னும் பெயர் கொண்டவன். கொடியருள் கொடியனான இவனிடம் இருந்த கொடூரமான ஒரு பழக்கம்.....

கருவுற்ற பெண்களின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை ரசிப்பது; வேதனையில் தாய் துடிப்பதையும் குழந்தை உயிருக்குப் போராடுவதையும் கண்டு ஆனந்தத்தில் மிதப்பது.               

                      *                      *                        *
அடுத்து, தமிழ் மன்னன் ராசராசன் காலத்தில் [கி.பி.1008] நடந்த ஒரு நிகழ்வு.

ராசராசனுக்கும் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நடந்தது. சோழன் வென்றான். சாளுக்கியன் தலைநகர் எரியூட்டி அழிக்கப்பட்டது.

அந்தப்புரத்துப் பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். [போர் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றி ஈட்டிய மன்னர்கள் அ.பு. பெண்களைக் கடத்துவதும், அழகிகளைத் தம் அந்தப்புரத்தில் சேர்ப்பதும் வழக்கமாக இருந்தது]

அப்புறம் நடந்ததுதான் நம் நெஞ்சைப் பதற வைக்கிறது!

சாளுக்கியத் தளபதியின் மகளைப் பிடித்து வந்து அவளின் மூக்கைத் துண்டிக்கிறான் ராசராச சோழன். [ராமாயணம் படித்திருப்பானோ?]

எதிரியைப் பழிவாங்க வேண்டும் என்னும் உச்சக்கட்ட வெறி, எதிரி இனத்துப் பெண்களை இப்படி வதை செய்தால்தான் அடங்கும்போல் தெரிகிறது.

இவனின் பழி வாங்கும் வெறி இத்துடன் முற்றுப் பெறவில்லை. எதிரி நாட்டுப் பெண்களின் மார்க்கச்சுகளை அவிழ்த்து ஓடவிட்டிருக்கிறான்.  
                   *                       *                         *
இந்த ராசராசனை ரொம்ப நல்ல பிள்ளை ஆக்குகிறார்கள், 15 ஆம் நூற்றாண்டு வாக்கில், பாண்டிய மன்னர்களுடன் போர் புரிந்த ஆந்திர நாயக்க மன்னர்கள்.

தோற்றுப் போன மன்னனின் கண் முன்னால், பொது இடங்களில் வைத்து, பலபேர் முன்னிலையில், அவனின் குடும்பப் பெண்களை நிர்வாணமாக்கிக் குண்டர்களை ஏவி கற்பழிக்கச் செய்திருக்கிறார்கள்! [‘நாயக்கர் வரலாறு’ படியுங்கள்]

குடும்பப் பெண்களின் கண் முன்னால், தோற்ற மன்னனின் தோலை உரித்ததெல்லாம் [உயிரோடு] சர்வ சாதாரணமான அன்றைய  நிகழ்ச்சிகள்.
                        *                       *                        *
கி.பி.1341 இல் மதுரையை ஆண்டவன் கியாஸ் உதீன் என்பவன்.

இவனின் சகலையும், இஸ்லாமிய வரலாற்றாசிரியருமான ‘இபின் பதூதா’ இவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித உருவில் வந்த பேய்’ என்கிறார்.

‘இவன் , பெண் கைதிகளை அவர்களின்  தலை முடியினால் கழுமரத்துடன் கட்டுவான். அவர்களின் குழந்தைகளை அந்தத் தாய்மார்களின் மார்பின்மீது வைத்துச் சித்திரவதை செய்வான்; வெட்டிக் கொல்லுவான்’ என்கிறார் இபின் பதூதா.

இப்படிப் பெண்ணினம் வதைக்கப்பட்டதற்கான ஏராள ஆதாரங்கள் வரலாற்று நூல்களில் உள்ளன.

இன்றளவும், இனக்கலவரம் மதக்கலவரம் என்னும் தீ, இம்மண்ணில் கொழுந்துவிட்டு எரிந்த...எரிகிற போதெல்லாம் கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு இணையாகப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் சாசுவதமான ஒன்றாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்...........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்ற கவிமணியின் கூற்று ஏற்கத்தக்கதா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு:
வரைவில் உள்ள அனைத்துப்  பதிவுகளும்[பழைய வலைப்பதிவுகளில் வெளியானவை] உரிய கால இடைவெளிகளில் பதிவிடப்படும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++