எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 8 செப்டம்பர், 2018

ஐயோ பாவம் இந்தக் குலசாமி!!!

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குலதெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது'' என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். வர்ற ஞாயிறு அன்னிக்கிப் போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. போன மாசமே போறதா இருந்தேன். முடியாம போச்சு..

“எதுக்குப் போறே? சாமிக்குத் தங்கக்கிரீடம் காணிக்கை செலுத்தப் போறியா?  உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப் போறியா?” -மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காச்சிகளுக்கு வசதி இல்லீங்க.”

“வேறென்ன, உன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் மொட்டை போடப் போறீங்களோ? இதுக்குச் செலவும் குறைவுதான்.”

“எங்க குலசாமியும் எங்கள மாதிரியே  ஏழைதான் மேஸ்திரி. வசதியுள்ள எங்க ஜாதிக்காரங்களே இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்திக் கண்ட கண்ட செடியெல்லாம் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குதுன்னு கோயில் பூசாரி சொன்னாரு. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும். ஒரு ஏழைச் சாமிக்கு ஒரு பரம ஏழை செய்யுற சேவை இது'' என்றான் பழனி.
 =======================================================================