ஒரு சிந்தனையாளரின் பாராட்டு
<> <> <> <>
எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோடிகோடி கோடானுகோடி உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு வாய்த்திருக் கிறது. இந்த அறிவைப் பயன்படுத்தி, எண்ணற்ற சாதனங்களை உருவாக்கி யிருக்கிறான்.அச்சாதனங்களால் விளைந்த நன்மைகள் ஏராளம் எனினும், விளைந்த தீமைகளும் அளவிறந்தவை.
இந்த மனிதன் வகைவகையான சாதனங்களைப் படைத்ததோடு நிற்கவில்லை; தன்னை மட்டுமல்லாமல், இந்தப் பிரபஞ்சத்தையே கட்டி ஆளுவதற்கு ஒருவரைப் படைத்து, அவரைப் போற்றியும் வழிபட்டும் வருகிறான்! அவர்?
கடவுள்!
கடவுளைப் படைத்ததால் நன்மைகள் விளைவதோடு தீமைகளும் விளைகின்றன என்பது நடுநிலை ஆராய்ச்சி அறிஞர்களால் உணரப்பட்ட ஒன்றாகும்.
‘கடவுள்’ எனப்படும் ஒருவரின் உருவாக்கத்தால் அதிகம் விளைவது நன்மையா, தீமையா என ஆராய்வதோடு, கடவுள் ஏன், எப்படி, எப்போது, எங்குத்தோன்றினார்? இந்தப் பிரபஞ்சத்தை ஏன், எப்படி, எப்போது, எங்குப் படைத்தார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை தேடும் பொருட்டு இவ்வலைப் பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடவுள்... சொல்...பொருள்... வினாக்கள்:
கடவுள் என்று சொல்லப்படுபவர், இறைவன்,ஆண்டவன்,ஒப்பிலான் என்று வேறுவேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், இந்த ஆய்வுரையில் அவர் ‘கடவுள்’என்றே குறிப்பிடப்படுவார்.
மேற் சொன்ன பெயர்கள் எல்லாம் [இங்கு மதம் சார்ந்த பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன] ‘கடவுள்’பற்றிய சிந்தனையின் வெளிப்பாடுதான். இவற்றிற்கு அரும்பாடுபட்டுத் தரப்படும் விளக்கங்களை ஆராய்வோம்.
கடவுள்=கட+உள். கடந்து உள்ளே இருப்பது என்று பொருள். அதாவது, அனைத்தையும் ஊடுருவி, அவற்றின் உள்ளே தங்கியிருப்பவர் கடவுள் ஆவார். இறை என்பதற்கும்’ தங்குதல்’ அல்லது இடம் ’பெற்றிருத்தல்’என்பதுபொருள்.எளிதாகச் சொன்னால், பிரபஞ்சத்தில் உள்ள அணு முதலான அனைத்துப் பொருள்களிலும் இரண்டறக் கலந்திருப்பவர் கடவுள். சுருங்கச் சொன்னால், ‘அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’.
இங்குதான் நம் பகுத்தறிவு நம்மைத் தட்டி எழுப்புகிறது. பொருள்கள் தத்தமக்குரிய இயல்புகளோடு தோன்றி, இருந்து மறைகின்றன. உயிர்களும் தோன்றி, வாழ்ந்து, இல்லாமல் போகின்றன; அல்லது, அழிகின்றன. இங்கே கடவுள் என்ற ஒருவரின் ‘கலப்பு’ அல்லது, ‘ஊடுருவலி’ன் அவசியம் என்ன?கடவுளால்தான் உயிர்கள் இயங்குகின்றன என்பதற்கு அறிவியல் ஆதாரம் ஏது?
அவர் உயிர்களுக்குள் கலந்திருப்பதன் பயன் என்ன?
உயிர்களுக்குத் துன்பம் நேராது தடுக்கப்படுகிறதா? பிற உயிர்களால் உண்டாகும் அழிவிலிருந்து அவை காப்பாற்றப்படுகின்றனவா?அழிவிற்குப் பின்னர் கடவுளின் திருவடிகளை அடையும் பேறு கிட்டுகிறதா?அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் பெரும்பேறு வாய்க்கிறதா? தங்கிவிடுவதால் என்றென்றும் பேரின்பத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலை வருமா என்ன?
ஆம் எனில், அதை நிரூபித்தது யார்? எவருமில்லை.
கடவுளாகப்பட்டவர் நமக்கு இன்பத்தை வாரி வழங்க வேண்டாம். துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்தால் போதுமே. செய்கிறாரா? இல்லையே.
துன்பம் தேவை. அவை இருந்தால்தான் இன்பத்தை உணரமுடியும் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். துன்பம் தேவையே என்பது இருக்கட்டும். சில நேரங்களில் [பலருக்குப் பல நேரங்களில்] தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அடுக்கடுக்காய்த் துன்பங்கள் வந்து தாக்குகின்றனவே! கடவுளும் கண்டுகொள்வதில்லையே! துன்பத்தில் அழுந்தித் தேய்ந்து உருக்குலைந்து அழிந்துபோகவா நம்மைப் படைத்தார்?
நம்மைப் படைக்கும்படி நாம் கேட்டோமா என்ன?
‘எல்லா உலகங்களையும்[உயிர்களையும்] தாமே படைத்துக் காத்து அழிக்கின்ற எல்லையற்ற விளையாட்டைச் செய்கின்றார் கடவுள்’ என்கிறார் ஒப்பற்ற காவியம் படைத்த ஒரு புலவர்.
கடவுள் விளையாடுகிறாரா? அவரென்ன விளையாட்டுப் பிள்ளையா?கடவுளுக்கு விளையாட்டு; உயிர்களுக்கு? பட்டாம்பூச்சியின் இறகைப் பிய்த்துப்போட்டுச் சிறுவன் விளையாடுகிறான். சிறுவனுக்கு அது விளையாட்டு; பட் டாம்பூச்சிக்கு?
கடவுள் அன்பு மயமானவர்; அருள் வடிவானவர்; தாயாக இருப்பவர்; தந்தையும் அவரே. அவரா இப்படி விளையாடுகிறார்?!
விளையாடுவது யார்? கடவுளா, கடவுளைப் படைத்த மதவாதிகளா?
இந்த மதவாதிகள்தான் கடவுளுக்கு ‘ஆண்டவன்’ என்றும் ஒரு காரணப் பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.
பிரபஞ்சத்தை ஆளுபவர் யார்?
ஆண்டவர்...ஆளுகிறவர்...ஆளுபவர்! கடவுள் காலம் கடந்து நிற்பவர் அல்லவா? எதை ஆளுகிறார்?
பிரபஞ்சத்தை ஆளுகிறார்; அதில் வாழும் உயிர்களை ஆளுகிறார். உயிர்களிடத்தில் கலந்துள்ள நல்ல குணங்களை மட்டுமல்ல, தீய குணங்களையும் அவர்தான் ஆளுகிறார். அவற்றைப் படைத்தவரும் அவர்தான்.
சிலந்திக்கு வலை பின்னக் கற்றுக் கொடுத்தவர் யார்?
குல்லானுக்கு[வட் டார வழக்கு. குள்ளானா,குழ்ழானா?] சின்னக் குழி பறித்து, தலை கீழ் கூம்பு வடிவில் சன்ன மணல் தூவி, சின்னஞ்சிறு உயிர்களை அதில் சறுக்கி விழ வைத்து இரையாக்கிக்கொள்ளக் கற்றுக் கொடுத்தவர் யார்? ஓணான் இனத்துக்கு நாக்கில் ‘பசை’ தடவியவர் யார்? தேளுக்குக் கொடுக்கிலும் பாம்புக்குப் பல்லிலும் நஞ்சு வைத்தவர் யார்? நரிக்குத் தந்திரம் கற்றுத் தந்தவர் யார்?
இத்தனையும் போதாது என்று அழுக்காறு, கபடு, சூது, வஞ்சகம் என்று எண்ணற்ற தீய குணங்களை மனிதனுக்கு வாரி வழங்கியவர் யார்? இப்படி ஓராயிரம் வினாக்கள் எழுப்பலாம்.
இந்த வினாக்களுக்கான விடை ‘கடவுள்’ என்பதுதானே?
கடவுள் நற்குணங்களின் வடிவானவர்; தீய குணங்கள் அவரால் உண்டாக்கப்பட்டவையல்ல. இது ஒரு தீய சக்தியின் திருவிளையாடல் என்று சொல்பவர்களும் மதவாதிகளே.
அவ்வாறாயின், தீய சக்தி இருப்பது கடவுளுக்குத் தெரியும்தானே. தன் இயல்புக்கு எதிராகச் சதி செய்யும் அந்தத் தீய சக்தியைக்கடவுள் ஏன் துவம்சம் செய்யவில்லை?
அதை அழிக்கும் ஆற்றல் கடவுளுக்கு இல்லை போலும்!
ஓருயிரை அழித்துத் தனக்கு இரையாக்குவதன் மூலம்தான் இன்னோருயிர் வாழ முடியும் எனும் அதி பயங்கரத் தீமை நிலவுலகில் நிலைத்திருப்பதைக் காணும்போது, தீய குணங்களின் வடிவமான அந்தத் தீய சக்தி கடவுளைக் காட்டிலும் வலிமை பெற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது உண் மையாயின், இப்பிரபஞ்சத்தை ஆள்வது கடவுளல்ல; தீய சக்தியே என்று சொல்லலாம்தானே?
கடவுள் எப்படி இருப்பார்?
”கடவுள் எப்படி இருப்பார் என்று சொல்லுங்கள் நான் அவரை நம்புகிறேன்” என்றார் ஓர் அறிஞர்.
ஆம், கடவுள் எப்படி இருப்பார்?
கடவுள் எப்படியும் இருப்பார்; அவனாக இருப்பார்; அவளாக இருப்பார்;அவராக இருப்பார்; அதுவாக இருப்பார்; எதுவாகவும் இருப்பார் என்பார்கள் கடவுளைக் கண்டதாகச் சொன்னவர்கள்.
அவனாக அவர் இருப்பார் என்றால், “அவனுக்கும் கடவுளுக்கும் என்ன வேறுபாடு?” என்றிப்படிக் கேள்விகள் எழும்பிய போது, ‘அவனாக இருப்பார்; அவனாக இல்லாமலும் இருப்பார்; எதுவாகவும் இருப்பார்; எதுவாகஇல்லாமலும் இருப்பார்’ என்றெல்லாம் குழம்பினார்கள்; குழப்பினார்கள்!
அவன் அன்பு வடிவானவன்; அருளின் திருவுரு என்றெல்லாம் விளக்கங்கள் தந்தார்கள்.
அன்பு என்பது ஓர் உணர்ச்சி. அதை ஏன் கடவுளாக்குகிறார்கள்?அருள், அன்பினும் மேலான உன்னதப் பண்பு. அதை ஏன் கடவுளோடு தொடர்புபடுத்த வேண்டும்?
இப்படியெல்லாம் வினாக்கள் எழுப்பப் பட்டதன் விளைவு.....
கடவுளைக் காட்டவெல்லாம் முடியாது; உணரத்தான் முடியும் என்று சமாளித்தார்கள்!அதற்கு உதாரணங்களும் சொன்னார்கள்.
“கம்பியில் மின்சாரம் பாய்வதைப் பார்த்திருக்கிறாயா?” -அவர்களின் கேள்வி.
“இல்லை” நம்மைப் போன்றவரின் பதில்.
“பார்த்ததில்லை; ஆனால் உணர்கிறாய். வெளியில் காற்று இருப்பதைப் பார்த்ததில்லை; உணர்கிறாய். இதே போல்தான், கடவுளையும் உணர முடியுமே தவிர, பார்க்க முடியாது.”
இப்படி அவர்கள் வாதிடுவதை நாம் அறிவோம். அவர்களுக்கு நாம் தரும்பதில்: “மின்சாரத்தையோ காற்றையோ நாம்பார்த்ததில்லை. ஆனால்,தொடு உணர்ச்சி மூலம் உணர்கிறோமே தவிர, வெறுமனே உணர்தல்என்று சொல்வது தவறு. கடவுளை நாம் தொட்டு உணர முடியுமா என்ன?
“நம்பிக்கை இருந்தால்தான் கடவுளை அறிய முடியும். நீ உன் தந்தை என்று நினைத்துக்கொண்டிருப்பவர்தான் உண்மையில் உன் தந்தைஎன்பது உனக்கு எப்படித் தெரியும்? நம்புகிறாய்தானே? அது மாதிரி கடவுளையும் நம்பு” என்று மடக்குவார்கள். அதற்கும் நாம் பதில் தர முடியும்.
“பெற்ற தாய் சொன்னதால் ஒருவரைத் தந்தை நம்புகிறோம். அவ்வளவுதான். அதை ‘உண்மை’ என்று நம்மால் நிரூபிக்க முடியாது[அதற்கும் இன்று ‘மரபணு சோதனை’ வந்துவிட்டது] எனவே, நம்பிக்கையின் அடிப்படையில்கடவுளை ஏற்கச் சொல்வது அறிவுடைமை ஆகாது.
உண்மையில் நடந்ததாக ஒரு கதை சொல்வார்கள்...
ஒரு நாத்திகன் கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு துறவியைச் சந்தித்தான். “கடவுளை உம்மால் காட்டமுடியுமா?” என்றான்.
“முடியும்” என்ற துறவி, சற்றும் எதிர்பாராதவகையில் நாத்திகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
“ஐயோ அம்மா” என்று அலறினான் நாத்திகன்.
“ஏன் அலறினாய்?” என்றார் துறவி.
“வலித்தது” என்றான் நாத்திகன்.
“வலியா? அதை எனக்குக் காட்டு” என்றார் துறவி.
வேதனையிலும் சிரித்தான் நாத்திகன். “வலியை எப்படிக் காட்ட முடியும்?” என்றான்.
“காட்ட முடியாது. உணரத்தான் முடியும். அது மாதிரி கடவுளை உணரலாமே தவிர காட்ட முடியாது” என்றார் துறவி.
நாத்திகன் வாயடைத்துப் போனான்.
புத்திசாலிகள் இதோடு முடித்து விட்டார்கள் கதையை. கதையை நாம் தொடர்வோம்.....
“கடவுளைக் காட்ட முடியுமா?” என்றான் குதர்க்கவாதி.
“காட்ட முடியாது” என்றார் துறவி.
அடுத்த வினாடியே துறவியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான் நாத்திகன்.
“ஐயோ கடவுளே!” என்று அலறினார் துறவி.
“ஏன் அலறினீர்கள்?” என்றான் நாத்திகன்.
”வலித்தது.”
“அதைக் காட்ட முடியுமா?”
“காட்ட முடியாது. உணரத்தான் முடியும்” -அவரின் குரலில் கடுகடுப்பு.
“உணர்ந்தது எப்படித் தெரியுமா? என் கை அடித்ததால். அதாவது, ‘தொடுதல்’ என்னும் செயலால். இப்படி ஒரு செயல் மூலம் உம்மால் அவரை உணர்த்த முடியுமா?” என்றான் நாத்திகன்.
துறவி வாயடைத்துப் போனார்!
இன்னொரு கதையுண்டு.
அவர் புகழ் பெற்ற கடவுள் பக்தர்; மிகப் பெரிய ஞானி எனப் பெயர் பெற்றவர்.
கடவுளை நேரில் பார்த்தவர் என்று இவரைப் பற்றிச் சொல்லுவார்கள்.ஒரு முறை, இவர் தியானத்தில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நாத்திகரோ, வேறு யாரோ இவரது பக்தியைச் சோதிப்பதற்காக, இவர் தொடை மீதுஒரு நெருப்புத் துண்டை வைக்க, இவர் சிறிது நேரங்கழித்தே விழித்துப் பார்த்தாராம்! அந்த அளவுக்கு அவர் இறைவனோடு ஒன்றிவிட்டதாகச் சொல்வார்கள்.
இது ஒன்றும் இயற்கையிறந்த, அதாவது, இயல்பு நிலை கடந்த நிகழ்ச்சியல்ல. கடவுள் என்றில்லை, எந்தவொரு பொருளாயினும், அதன்மீது அளவு கடந்தஈடுபாடு கொண்டு, அது பற்றிய நினைப்பில் ஒன்றிவிடும்போது இவ்வாறு நிகழ்தல் உண்டு. அவ்வாறு ஒன்றிவிட்ட ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்தாலோ, தீண்டினாலோ அவர் சுய நினைவு பெறச் சிறிது நேரமாகும். இதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.
மேற் சொல்லப்பட்ட இந்த ஞானியை அணுகிய ஒரு பகுத்தறிவாளன், “நீங்கள் கடவுளைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தக் கடவுளை எனக்குக் காட்ட முடியுமா?” என்று கேட்டானாம்.
“காட்டுகிறேன்.”-அவர்.
“இப்போதே காட்டுவீர்களா?”
“என்னோடு வா”.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற ஓர் ஆற்றுக்குப் போனார்கள்.
“ஆற்றிலா கடவுள் இருக்கிறார்?” பகுத்தறிவாளன்.
“ஆம்”.
இருவரும் ஆற்றில் இறங்கினார்கள்.
வெள்ளம் இடுப்பு மட்டத்திற்கு வந்ததும், “உள்ளே முழுகிப் பார். கடவுள் தெரிவார்” என்றார் ஞானி எனப்பட்டவர்.
உள்லே முழுகினான் பகுத்தறிவாளன்.
மேலிருந்து அவன் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டார் ஞானி.
அவனுக்கு மூச்சு முட்டும் வரை அவர் விடவில்லை. இனியும் விடாவிட்டால் செத்துப் போவான் என்ற நிலையில் அவனை விடுவித்தார் ஞானி.
குபீரென்று மேல் எழுந்து மூச்சிறைக்க நின்ற பகுத்தறிவாளன், “கடவுளைக் காணவில்லை. என்னைக் கொன்றுவிடைப் பார்த்தீரா?” என்றான்.
அவன் கேள்விக்குப் பதில் தராத ஞானி, “நான் உன்னை விடுவித்ததும் அசுர வேகத்தில் எழுந்தாயே, ஏன் அப்படிச் செய்தாய்?’என்றார்.
“இல்லாவிட்டால் என் உயிர் போயிருக்கும்”
“உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இத்தனை வேகம் காட்டினாய் அல்லவா? இதே வேகத்தை நீ கடவுளைக் காணும் முயற்சியில் காட்டினால் கடவுளைக் காணலாம்” என்றார் ஞானி.
ஞானியின் செயல் எண்ணற்றோரை மெய் சிலிர்க்க வைத்திருக்கும். காரணம், நம்மில் பலருக்கும் பகுத்தறியும் பக்குவம் இல்லாததே.
கடவுளைக் காட்டுகிறேன் என்று சொன்னவர் காட்டியிருக்கவேண்டும். அதை விடுத்து, அதி தீவிர முயற்சிசெய்தால் காணலாம் என்று சொல்ல ஒரு ஞானி வேண்டுமா?! சராசரி அறிவு கொண்டஎல்லாருக்கும் தெரியும்தானே?
“காட்டுக்குள் தனியே போகிறாய். ஒரு சிங்கம் விரட்டுகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறாய்........” இப்படிக் கதைகதையாய்ச் சொல்லி முயற்சியின் வலிமை பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம், ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தால் போதும்.
ஆழ்ந்து சிந்திப்பதா? அது எப்படி?
வெட்ட வெளியில், தன்னந்தனியாக, வானத்தைப் பார்த்தவாறு மல்லாந்து படுத்திருக்கிறீர்கள்.
மேகச் சிதறல்கள் கிஞ்சித்தும் இல்லாத நீல நிற வானம். நிலவும் இல்லை. கண் சிமிட்டும் பெரிதும் சிறிதுமான விண்மீன்கள் நீக்கமற இறைந்து கிடக்கினறன. “அடடா, என்ன அழகு!’ என்று உங்களுக்கு நீங்களே சொல்லி்க் கொள்கிறீர்கள். இது ரசனை.
“இவ்வளவு நட்சத்திரங்களையும் எண்ண முடியுமா?” இது நமக்குள்ள ஆறாவது அறிவு எழுப்பும் கேள்வி.
“இவை ஏன் தோன்றின? யாராவது தோற்றுவித்திருப்பார்களா?” இவ்வாறு எண்ண ஆரம்பித்தால், இது சிந்தனையின் தொடக்கம்.
உறங்கிவிடுகிறோம். மீண்டும் இரவுப் பொழுதில் வானத்தை நோக்கும்போதெல்லாம், இவ்வினாக்கள் மீண்டும் மீண்டும் எழுந்தால் அது தீவிரச் சிந்தனை.
விடை இல்லை எனினும் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். “இவை தாமாகத் தோன்ற முடியுமா? அதெப்படி முடியும்? யாரோ ஒருவர் தோற்றுவித்தார் என்றால் அவரால் மட்டும் எப்படி முடிந்தது? எதற்காக இதைச் செய்கிறார்? எப்படிச் செய்கிறார்? இதன் பயன்தான் என்ன?”
இவ்வாறெல்லாம் வினாக்களை எழுப்பிக்கொண்டே போனால், அதற்குப் பெயர்தான் ஆழமான சிந்தனை.
எண்ணில் அடங்காத இந்த விண்மீன் குவியல்கள் அவ்வளவையும் மிச்சம் மீதியில்லாமல் அழித்துவிட்டால் வானத்தில் என்ன இருக்கும்? வெறும் நீல நிறம்தானே? அதையும் அழித்துவிட்டால்......?
கறுமை வண்ணம் இருக்கும்தானே? அதையும் முற்றிலுமாய் நீக்கிவிட்டால் வெறுமையா, அதாவது, ஒன்றுமே இல்லாத நிலையா? அதெப்படி? வானத்தில் உள்ள சூரியனையும் அளவிறந்த கோள்களையும் மறந்துவிட்டோமே!
சூரியன் முதலான சந்திரன் போன்ற அவ்வளவு கோள்களையும் ஒன்றுவிடாமல் மறையச் செய்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். வானத்தில் இனி மிஞ்சுவது என்ன?
எங்கும் இருள் மயமாக இருக்குமா?
அந்த இருளையும் சுத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டால்[முடியுமா என்ற கேள்வி இப்போது வேண்டாம்]......?
ஒன்றும் இல்லாத நிலை! வெறுமை! வெறுமை! வெறுமை!
’வெறுமை’என்பது எப்படி இருக்கும்? விடை கிடைக்குமா? எப்போது?
தெரியாது. ஆனால், நம்மாலும் இப்படி ஆழமாகச் சிந்திக்க முடியும் என்பது சந்தேகமறத் தெரிகிறது.சரிதானே?
அடிப்படை அறிவு
‘வெறுமை’ என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு இப்போது விடை இல்லை என்று நாம் சொல்லலாமே தவிர, அதற்கு எப்போதும் விடை இல்லை என்று நம்மால் சொல்ல இயலாது; சொல்லவும் கூடாது.
வான வெளி ஒரு போதும் வெறுமையாக இருக்க முடியாது என்ற கருத்தும் உண்டு[இதைப் படித்து வருவோர்க்கு ஓர் அன்பான வேண்டுகோள்: தத்துப் பித்தென்று என்னவெல்லாமோ சொல்லிக் குழப்புவதாக எண்ண வேண்டாம். அடங்காத பேரார்வத்துடன் ஆழமாகச் சிந்தித்தால் மட்டுமே புரிந்துகொண்டு பின் தொடரத் தக்க ஆய்வுப் பொருள் இது. அமைதியான மன நிலையில் பொறுமையுடன் பின் தொடருமாறு வேண்டுகிறோம்]
தனிமையில், கண் மூடிய நிலையில் மீண்டும், முன்பு கூறிய ஒன்றை நினைவுகூருங்கள். சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், இந்தப் பூமி, நாம், நீங்கள், அறிவியலார் ஆய்வுகள் மூலம் நிரூபித்த அணுக்கள் முதலான எதுவுமே வான வெளியில் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெறுமை நிலை எப்படியிருக்கும்?
எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்?
வெறுமை என்று ஒன்று இருக்க முடியாது. அணுப் போல ஏதாவது ஒன்று [பலவாகவும் இருக்கலாம்] இருந்துதான் தீரும் என்று அறிவியலார் கூறுவர்.
நம் கேள்வி இதுதான்: ‘இருத்தல்’ என்று வரும்போது அது இல்லாமல் போவதும் சாத்தியம்தானே? வெளியில் உள்ள அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டால் ‘வெறுமை’ என்ற ஒரு நிலை இருந்துதானே தீரும். ஆனால், அந்த வெறுமையைப் புரிந்து கொள்ள நம்மால் இயலவில்லையே, ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
’இதெல்லாம் அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்; மனித அறிவுக்கு எட்டாது’ என்று மனித அறிவு வளர்ச்சிக்கு/சிந்தனை ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டாம்.
இதே போல, நாம் கடவுளைப் பற்றிச் சிந்திப்பதற்கு, எல்லை இல்லாத ‘பிரபஞ்சம்’பற்றிப் புரிந்து கொள்வதும் இன்றியமையாத் தேவையாகும்.
ஒரு சூரியனும் அதைச் சுற்றிப் பல கோள்களும், எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரக் கூட்டங்களும் உள்ளடங்கிய கற்பனைக்கு எட்டாத பெரும் பரப்புக்கு அண்டம் என்று பெயர்[இதை விளக்கும் முறை மாறுபடலாம்] இப்படிக் கோடானுகோடி அண்டங்கள உள்ளடக்கியது பேரண்டம்[‘எண்ணிக்கையில் அடங்காத’ என்பதைக் கற்பனையில் மூழ்கிப் புரிந்துகொள்ள முயல்வது மிக இன்றியமையாதது] அளவிறந்த பேரண்டங்களைத் தன்னுள் கொண்டது பிரபஞ்சம்.
இந்தப் பிரபஞ்சம் எல்லை இல்லாதது என்பதை புரிந்து கொள்ள ஒரே ஒரு சிறு விளக்கம்.
ஓர் ஏவுகணை. அதன் நீளம், அகலம், சுற்றளவு போன்றவை உங்கள் கற்பனைக்கு ஏற்ப.
எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் அது பழுதடையாது.[உண்மையைப் புரிந்துகொள்ள இம்மாதிரி மிகைப்படுத்தல் தேவை] அதன் வேகம், வினாடிக்கு ஒரு கோடி கிலோ மீட்டர்![இந்தக் கட்டுரை முழுக்கக் கோடிகள் வந்துகொண்டேயிருக்கும்!]
வேகமும் உங்கள் விருப்பப்படியே. மேல் கீழ் வலம் இடம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வடகிழக்கு..... என்றிப்படித் திசைகள் ஏதுமற்ற வான் பரப்பில் ஏதோ ஒரு மையத்திலிருந்து இப்போது ஏவிவிடத் தயாராயிருங்கள்.
நம் ஏவுகணை, தன் பயணத்தைத் தொடங்கிவிட்டால், சென்றுகொண்டே இருக்கும். எதுவும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. பெரும் தீப் பரப்பு, அதீத கன பரிமாணம் கொண்ட உருக்குத் தகடு, அதி பிரமாண்ட மலை என்று எது குறுக்கிட்டாலும் அதை ஊடுருவிச் சென்றுகொண்டேயிருக்கும்!
இப்போது இந்த ஏவுகணையை ஏவி விடுகிறோம்.
இது என்றேனும் ஒரு நாள் தன் பயணத்தை நிறுத்துமா?
பொறுமையுடன், சற்றும் நிதானம் இழக்காமல், அயராமல் சிந்தியுங்கள். இது ஒரு போதும் தன் பயணத்தை நிறுத்தப் போவதில்லைதானே?
இது வானவெளியின் ஒரு மையப் புள்ளியிலிருந்து ஏதோ ஒரு கோணத்தில் தொடங்கிய பயணம். இப்படி எத்தனை எத்தனைக் கோணங்கள் உள்ளன! எந்தக் கோணத்தில் பயணம் செய்தாலும் முடிவு இதுதானே?
இப்போது புரிந்திருக்கும் பிரபஞ்சத்தின் பரப்பளவை அளவிடுவது எத்தனைக் கடினம் என்று!
மனிதனின் இந்த இயலாமையை ஆழமாக மனதில் பதிய வைத்திடுங்கள். இந்த அனுபவ அறிவுதான் கடவுளைப் பற்றிச் சிந்திப்பதற்குத் தேவையான அடிப்படை அறிவாகும்.
8/5/10 - Sweatha Sanjana