எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

[இனி எப்போதும்] வேண்டாம் கூட்டு வழிபாடு[பிரார்த்தனை]!!!

தனிமனிதப் பிரார்த்தனையைக் காட்டிலும் பலர் ஒன்றுகூடிச் செய்யும் பிரார்த்தனைக்குப் பலன் அதிகம் என்பதாகக் காலங்காலமாகப் பல மதங்களைச் சார்ந்த ஆன்மிகவாதிகள் பரப்புரை செய்துவருகிறார்கள்.

பலர் இணைந்து குரல் எழுப்பும்போது ஒலி அதிர்வு அதிகமாகிறது. மெலிதான ஒலியோ வலிதான ஒலியோ, அது எதுவாக இருப்பினும் வான்வெளியிலுள்ள காற்றோடு அவ்வொலி கலந்துவிடும் என்பதே உண்மை. கூட்டுப் பிரார்த்தனையால், எழுப்பப்படும் ஒலி மாபெரும் சக்தியாக மாற்றம் பெற்று வழிபடு கடவுளைச் சென்றடைகிறது என்பதெல்லாம் பச்சைப் பொய்; வெறும் புருடா.

மக்கள் குறிப்பிட்ட இடங்களில் குவிகிறபோது தொற்று நோய்கள் பரவும் என்பதே உண்மை. கிருமிநாசினிகள் தெளிக்கப்படுவதால் நோய்க்கிருமிகள் அழிகின்றனவே தவிர பிரார்த்திக்கப்பட்ட கடவுள்களால் அல்ல.

இதனை இத்தனை காலமும் உணர மறுத்ததால் இப்போது கொரோனா நோக்கிருமிகளின் கோர தாண்டவம் கண்டு குலை நடுங்குகிறார்கள் நம் மக்கள்.

இப்போதும்கூட, இவர்களில் சில பிரிவினர் கூட்டுப் பிரார்த்தனையைக் கைவிடத் தயாராக இல்லை.  

கும்பல் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு, அதனால் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாவதை ஊடகங்கள் மூலம் அறியும்போது, இவர்களெல்லாம் ஆறறிவு மனிதர்கள்தானா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி ...
இன்று[03.04.2020]  பிற்பகல் 02.45 மணிக்கு, கூட்டு வழிபாட்டுக்காகத் தம் வழிபாட்டுத் தலத்திற்குள் ஒரு குழுவினர் நுழைய முயன்றதாகவும், அரசு அதிகாரிகள் அவர்களைத் தடுத்ததாகவும் ‘புதிய தலைமுறை’த் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைப் பார்க்கும்போது நம் சந்தேகம் உறுதிப்படுகிறது.

இவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள்; தம்மைச் சார்ந்தவர்களையும் திருந்தி வாழ அனுமதிக்க மாட்டார்கள்.
=====================================================================