எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 30 மே, 2018

தமிழனுக்குப் புத்தி கற்பிக்கும் கன்னடச் சிறுவன்!

தமிழ் தம் தாய்மொழியாக இருந்தும் அதை மதிக்காத பெற்றோரும், தப்பும் தவறுமாகப் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இளைஞர்களும் மாணவர்களும் நிறைந்து காணப்படும் மாநிலம் தமிழ்நாடு.

இம்மாநிலத்திலுள்ள கரூர் மாவட்டம் தளவாபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மனைவி தீபா. இவர்களின் 3 மகன்களில் இளையவர் பிரவீன்.
                                               நன்றி: தி இந்து[நாளிதழ்]
இக்குடும்பத்தாரின் தாய்மொழி கன்னடம். 

7ஆம் வகுப்பில் படிக்கும் பிரவீன், தமிழின் மீதான ஆர்வம் காரணமாகவும், தலைமை ஆசிரியை பவுனு அவர்களின் ஊக்குவிப்பு காரணமாகவும் தமிழைப் பிழையின்றிக் கற்றதோடு, 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.

அதிகார எண்ணையும் குறளின் எண்ணையும் சொன்னால் போதும், அதை அடிபிறழாமல் பிழை சிறிதுமின்றிப் பொருள் புரியும் வகையில் ஒப்பிக்கிறார். இவருடைய தமிழ் மீதான ஆர்வத்தையும் சாதனையையும் பாராட்டிப் பலரும் மகிழ்கிறார்கள்.

பிரவீனின் அறிவாற்றல் கண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அவர்கள் பெரிதும் அகமகிழ்ந்து இவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்திருக்கிறார்[தி இந்து, 30.05.2018].

''இனியும் தமிழ் வழியில் படிப்பதோடு[ஏற்கனவே தமிழ் வழியில்தான் கல்வி கற்கிறார்] எதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியராக ஆவதே என் லட்சியம்'' என்றும் பிரவீன் அறிவித்திருக்கிறார்.

பிரவீனின் செயல்பாடு, தமிழின் பெருமையை ஒரு படி உயர்த்தியிருக்கிறது; தாய்மொழியாம் தமிழைப் புறக்கணிக்கும் மிக மிகப் பெரும்பான்மைத் தமிழருக்குப் புத்தி கற்பித்திருக்கிறது.

பிழைப்புக்காக வேற்று மொழிகளைக் கற்றாலும் தாய்மொழியை அவமதித்தல் கூடாது என்பதை இனியேனும் தமிழர்கள் உணர்வார்களா?

காத்திருப்போம்.

பிரவீனுக்கு ஒரு வேண்டுகோள்:

#தமிழாசிரியர் ஆவது தங்களின் குறிக்கோள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால்.....

தமிழாசிரியரை மதிக்கும் நல்ல மனம் தமிழர்களுக்கு இல்லை; ''தமிழைப் போற்றுங்கள்'' என்று ஒரு தமிழாசிரியர் சொன்னால் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஆகையினால்.....

தமிழாசிரியர் ஆவது என்னும் கொள்கையைக் கைவிடுங்கள். தமிழ் வழியில் கல்வி கற்று, ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ உயருங்கள். இவர்களில் ஒருவராக இருந்து, ''நான் தமிழ் வழியில் கல்வி கற்றுத்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எய்தியிருக்கிறேன். உங்கள் பிள்ளைகளையும் தமிழ் வழியில் கற்க வையுங்கள்; ஆங்கில அறிவையும் வளர்த்துவிடுங்கள்'' என்று அறிவுறுத்தினால், அதற்குத் தமிழ்ப் பெற்றோர்கள் மதிப்பளிக்கக்கூடும்#

கரூர்ப் பகுதியைச் சார்ந்த வலைப்பதிவர்கள்  என்னுடைய இந்த வேண்டுகோளைப் பிரவீனின் கவனத்திற்குக் கொண்டுசென்றால் நான் மிகவும் நன்றி பாராட்டுவேன்.

நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------------