அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 30 மே, 2018

தமிழனுக்குப் புத்தி கற்பிக்கும் கன்னடச் சிறுவன்!

தமிழ் தம் தாய்மொழியாக இருந்தும் அதை மதிக்காத பெற்றோரும், தப்பும் தவறுமாகப் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இளைஞர்களும் மாணவர்களும் நிறைந்து காணப்படும் மாநிலம் தமிழ்நாடு.

இம்மாநிலத்திலுள்ள கரூர் மாவட்டம் தளவாபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மனைவி தீபா. இவர்களின் 3 மகன்களில் இளையவர் பிரவீன்.
                                               நன்றி: தி இந்து[நாளிதழ்]
இக்குடும்பத்தாரின் தாய்மொழி கன்னடம். 

7ஆம் வகுப்பில் படிக்கும் பிரவீன், தமிழின் மீதான ஆர்வம் காரணமாகவும், தலைமை ஆசிரியை பவுனு அவர்களின் ஊக்குவிப்பு காரணமாகவும் தமிழைப் பிழையின்றிக் கற்றதோடு, 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.

அதிகார எண்ணையும் குறளின் எண்ணையும் சொன்னால் போதும், அதை அடிபிறழாமல் பிழை சிறிதுமின்றிப் பொருள் புரியும் வகையில் ஒப்பிக்கிறார். இவருடைய தமிழ் மீதான ஆர்வத்தையும் சாதனையையும் பாராட்டிப் பலரும் மகிழ்கிறார்கள்.

பிரவீனின் அறிவாற்றல் கண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அவர்கள் பெரிதும் அகமகிழ்ந்து இவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்திருக்கிறார்[தி இந்து, 30.05.2018].

''இனியும் தமிழ் வழியில் படிப்பதோடு[ஏற்கனவே தமிழ் வழியில்தான் கல்வி கற்கிறார்] எதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியராக ஆவதே என் லட்சியம்'' என்றும் பிரவீன் அறிவித்திருக்கிறார்.

பிரவீனின் செயல்பாடு, தமிழின் பெருமையை ஒரு படி உயர்த்தியிருக்கிறது; தாய்மொழியாம் தமிழைப் புறக்கணிக்கும் மிக மிகப் பெரும்பான்மைத் தமிழருக்குப் புத்தி கற்பித்திருக்கிறது.

பிழைப்புக்காக வேற்று மொழிகளைக் கற்றாலும் தாய்மொழியை அவமதித்தல் கூடாது என்பதை இனியேனும் தமிழர்கள் உணர்வார்களா?

காத்திருப்போம்.

பிரவீனுக்கு ஒரு வேண்டுகோள்:

#தமிழாசிரியர் ஆவது தங்களின் குறிக்கோள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால்.....

தமிழாசிரியரை மதிக்கும் நல்ல மனம் தமிழர்களுக்கு இல்லை; ''தமிழைப் போற்றுங்கள்'' என்று ஒரு தமிழாசிரியர் சொன்னால் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஆகையினால்.....

தமிழாசிரியர் ஆவது என்னும் கொள்கையைக் கைவிடுங்கள். தமிழ் வழியில் கல்வி கற்று, ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ உயருங்கள். இவர்களில் ஒருவராக இருந்து, ''நான் தமிழ் வழியில் கல்வி கற்றுத்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எய்தியிருக்கிறேன். உங்கள் பிள்ளைகளையும் தமிழ் வழியில் கற்க வையுங்கள்; ஆங்கில அறிவையும் வளர்த்துவிடுங்கள்'' என்று அறிவுறுத்தினால், அதற்குத் தமிழ்ப் பெற்றோர்கள் மதிப்பளிக்கக்கூடும்#

கரூர்ப் பகுதியைச் சார்ந்த வலைப்பதிவர்கள்  என்னுடைய இந்த வேண்டுகோளைப் பிரவீனின் கவனத்திற்குக் கொண்டுசென்றால் நான் மிகவும் நன்றி பாராட்டுவேன்.

நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------------





12 கருத்துகள்:

  1. பிரவீணுக்கு எமது வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது கோரிக்கையிலும் நியாயம் இருக்கிறது நண்பரே

      நீக்கு
    2. பிரவீனை வாழ்த்திய தங்களின் நல் மனதிற்கும் என் கோரிக்கையில் நியாயம் இருப்பதை ஏற்றமைக்கும் என் நன்றி நண்பரே.

      நீக்கு
  2. கவனக்குறைவு காரணமாக, பிரவீனை வாழ்த்தி, நண்பர் துளசிதரன் அவர்களும் சகோதரி கீதா அவர்களும் வழங்கியிருந்த கருத்துரை நீக்கப்பட்டுவிட்டது.

    வாழ்த்திய அந்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி.

    தவறு நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பிரவீனுக்குப் பாராட்டுகள். உங்களுக்கும்தான்.

    பதிலளிநீக்கு
  4. குட்டித் தம்பி பிரவீனுக்கு வாழ்த்துக்கள்.. இது சிம்பிளான விசயம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரவீனின் சாதனை மிக அரியது என்பதை உணர்ந்து பாராட்டிய அதிராவுக்கு என் நன்றி.

      நீக்கு
  5. நல்ல அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அந்த தம்பி நல்ல குறிக்கோளை தான் வைத்துள்ளார். நல்ல தமிழாசிரியராக அவர் வந்தால் இன்னும் அவரைப்போல பல நூறு மாணாக்கர்களையும் மேதைகளையும் உருவாக்க முடியும்.

    உங்களது கடைசி ஆலோசனையை வரவேட்கிறேன். விஞ்ஞானியை வருவதன் மூலம் தமிழில் தமிழை வெறும் இலக்கிய சார்ந்த அம்சங்களில் மட்டுமே பார்ப்பதை விட்டு பழைய நூல்களில் உள்ள விஞ்ஞான கூறுகளை ஆய்வு செய்து தனித்த தமிழ் விஞ்ஞான மரபை உருவாக்க முடியும். பௌதிகம் , கணிதம் போன்ற துறை களில் தமிழார்வம் மிக அறிஞர்கள் தான் அவசியம் தேவை.

    விஞ்ஞான துறையில் இருந்து தொழில்நுட்பத்துறைக்கு மாறியவன் என்ற முறையில் உங்களுடைய முதல் இரண்டு ஆலோசனைகளை நான் ஆதரிக்கவில்லை. எந்த சுதேசியான சிந்தனையும் , சமூக பங்களிப்பும் இல்லாமல், மேற்கத்திய பொருளாதார துக்கு மட்டுமே கூலியாய் உழைத்து சுயநலமே வாழ்க்கை என்ற போகும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு நமது சமூகத்தில் அசிங்கமான விஷயங்களில் ஒன்று.

    வீட்டில் கன்னடம் பேசினாலும், தமிழ் சமூக சூழலில் தான் அவர் பிறந்து வளர்ந்து உள்ளார் எனவே அவருடைய சமூக தாய் மொழி தமிழே. அவ்வகையில் அவரும் தமிழரே.....

    சிவா , சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விஞ்ஞானியை வருவதன் மூலம் தமிழில் தமிழை வெறும் இலக்கிய சார்ந்த அம்சங்களில் மட்டுமே பார்ப்பதை விட்டு பழைய நூல்களில் உள்ள விஞ்ஞான கூறுகளை ஆய்வு செய்து தனித்த தமிழ் விஞ்ஞான மரபை உருவாக்க முடியும்//

      ஏற்கத்தக்கதும் பலரும் அறியத்தக்கதுமான மிக நல்ல கருத்துரை.

      நன்றி ராமசாமி சிவசுப்ரமணியன்.

      நீக்கு
    2. உங்க கருத்தில் மாற்று கருத்தில்லை எனக்கு.

      நீக்கு
  6. ஆங்கிலம் பேசி பெருமைபடும் ஊரில்....
    அருமையான தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு