புதன், 29 ஜூன், 2022

இத்தனைத் திமிரா இந்தச் சில நூறு தீட்சிதன்களுக்கு?!?!

'சிதம்பரம் நடராசர் கோயில் தனித்துவமானது. தீட்சிதர்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது' என்பதாக அறநிலையத் துறையிடம் 'அவர்கள்' மீண்டும்  முறையீடு செய்திருக்கிறார்கள்' என்பது நேற்றைய[28.06.2022] ஊடகச் செய்தி[தினத்தந்தி காணொலி].

முறையீட்டின் குறிப்பித்தக்க அம்சங்கள்[உரிய விமர்சனங்களுடன்]:

*மத மற்றும் நிர்வாக உரிமையை மதிக்கும் வகையில் ஆய்வு நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

???இவர்கள் வருமானத்திற்காக மணியடித்து மந்திரம்(இது வெறும் தந்திரம்) சொல்பவர்கள். மத உரிமை பற்றிப் பேச இவர்களுக்கு யோக்கியதை ஏது?[கோயில் எழுப்பியதில் ஒரு துரும்பைக்கூட இந்தத் தீட்சிதன்கள் அசைத்தது இல்லை. முன்னாள் பெண் முதலமைச்சரின் ஆதரவோடு பெற்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்].

*சிதம்பரம் நடராசர் கோயிலில் வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத தனித்துவமான வேத சம்பிரதாய முறை பின்பற்றப்படுகிறது.

???தாஙகள் நிறுவிய சிலையில்[அது கல்லாகவோ, களிமண்ணாகவோ, பத்தரை மாற்றுத் தங்கமாகவோ, வேறு எந்தவொரு உலோகத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்] கடவுள் இடம்கொண்டிருப்பதாக மக்கள் நம்பி வழிபடுகிறார்கள்.

சிதைந்து சீரழிந்த ஒரு கோயிலில் இருக்கும் கடவுளுக்கும், பொன் வேய்ந்த கூரையின் கீழிருக்கும் தில்லை நடராசனுக்கும் எந்தவொரு வேற்றுமையும் இல்லை. இதை மக்கள் புரிந்துகொள்ளாத காரணத்தால் இந்தத் தீட்சிதன்கள் இவ்வாறெல்லாம் பொய் சொல்லித் திரிகிறார்களா?

*திருமஞ்சன விழா ஏற்பாடுகளைக் கவனிக்கிறோம். அறநிலையத்துறையின் அறிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் தேவை. *செல்லுபடி ஆகும் வகையில் அமைக்கப்பட்ட குழுவுக்குத்தான் ஒத்துழைப்பு அளிப்போம்.

???எவ்வளவு திமிர் இருந்தால், தமிழின மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை இப்படியெல்லாம் அவமானப்படுத்துவார்கள் இந்தத் தீட்சிதன்கள்?

இதற்கான தைரியத்தை இவர்கள் பெற்றது எப்படி? பின்னணியில் அதிகார வர்க்கமும், இந்து வெறியர்களும் இருப்பதால்தானே?

இந்தப் பின்னணியை அத்துபடியாய்ப் புரிந்துகொண்டுள்ள தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகுதல்[மேல் முறையீடு] போன்ற நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்படுதல் மிக அவசியம். 

இவர்களின் கொட்டங்களை அரசு அடக்கும் காலம் வரும் என்று காத்திராமல் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடுவது தமிழ் மக்களின் கடமையும்கூட!

======================================================================================


செவ்வாய், 28 ஜூன், 2022

'டெம்பரல் லோப்'பும் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளைக் கண்டதும்!!

'காளிதேவி'யின் பரம பக்தரான ராமகிருஷ்ண பரமஹம்சர் என்னும் ஞானி கடவுளை நேரில் கண்டவர் என்பதாக, ஆன்மிகவாதிகளால் காலங்காலமாகச் செய்யப்படும் பரப்புரை நம்மில் பெரும்பாலோர் அறிந்ததே.

மோசஸ், புனித பால் முதலானோர் கடவுளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

அதிசய நிகழ்வாகக் கருதப்படும் அந்நிகழ்வுகள் உண்மையானவையா என்னும் கேள்விக்கு இன்றைய அறிவியலறிஞர்கள் விடை சொல்லியிருக்கிறார்கள்.

'வென் திகே' என்னும் கிறித்தவப் பெண், "நான்தான் ஏசுவைப் பெற்றெடுத்தேன்" என்று சொன்னதாகவும் ஒரு செய்தி உலக அளவில் உலா வந்ததுண்டு.

மேற்கண்ட நிகழ்வுகளை இன்றளவும் நம்புகிறவர்கள் உளர். இதை மறுத்துரைக்கிறது இன்றைய அறிவியல்.

எப்படி?

"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்'[Temporal Lobe] என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. 

மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுமாறாகச் செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான 'ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இறைத்தூதர்கள், தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

ஆன்மிகர்கள் என்றில்லை, இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 'ருடி அபால்டர்' என்ற ஒரு நாத்திகர்கூட, உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானாராம்.

'செவன்த் டே அட்வன்டிஸ்ட்' பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான 'எல்லன் ஒயி' என்ற பெண்ணுக்கு(1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது[இதற்கு ஆதாரமும் உள்ளது]. "இதன் பிறகுதான் ஏசு அவர் முன் 'தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். 

மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீகச் சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.

"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மேற்கண்டவாறான உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

ஒருவேளை மூளையில் கடவுள் குடியிருக்கும்'(God spot) இந்தப் பகுதியை  அறுத்து அகற்றுவோமானால், அந்த அறுவைச் சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? 

அதனை, வாசக்டமி போல 'காடெக்டமி'[Godectomy]  என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாகக் குறிப்பிட்டாராம் இந்த அறிவியலறிஞர்!. .https://134804.activeboard.com/t48934696/topic-48934696/

திங்கள், 27 ஜூன், 2022

"நல்லவனாக வாழ்வது மட்டுமே என் விருப்பம்! விருதுகள் வேண்டாம்!!" -கமல்ஹாசன்!!!

டிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது.

இந்நிலையில் கிஞ்சித்தும் மமதைக்கோ மிதப்புக்கோ இடம் தராமல் தன்னடக்கத்துடன் தன் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அவர்.

அந்தத் தன்னடக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது; அவர் மீதான மதிப்பை மிகவும் உயர்த்தியிருக்கிறது.

ஆங்கில நாளிதழில் வெளியான அந்த அறிக்கை கீழே.

Vikram box office collection: Kamal Haasan film all set to enter Rs 400 crore club worldwide, here’s how much it has earned

Vikram box office collection: Kamal Haasan film all set to enter Rs 400 crore club worldwide, here’s how much it has earned

© Provided by The Indian ExpressVikram box office collection: Kamal Haasan film all set to enter Rs 400 crore club worldwide, here’s how much it has earned

Kamal Haasan's Vikram is on the threshold of earning Rs 400 crore worldwide. In its third week, the Lokesh Kanagaraj-directorial 

The movie is also a hit in Telugu and Karnataka states.  Vikram has already become the biggest ever earner in the history of Tamil cinema, overtaking previous blockbusters like 2.0 and Baahubali: The Conclusion. All the stakeholders have made huge gains from the film’s staggering box office reception. Vikram stands at around Rs 225.03 crore in India.

Vikram has also found takers in international markets, especially in Arab countries, Malaysia, Singapore and North America.

Besides playing the lead role, Kamal Haasan has bankrolled Vikram under his banner Raaj Kamal Films International. The film is a spin-off of Kamal’s character from his 1986 movie Vikram. Earlier, Kamal Haasan commented on the film's success and said,

//"If everyone should progress, you need a leader who doesn’t have to worry about the money. When I said that ‘I can earn Rs 300 crore in a snap’, nobody understood it. They thought that I was beating my chest. You can see now it’s coming (Vikram box office collection). I will repay all my loans, I will eat to my heart’s content and I will give whatever I can to my family and friends. After that if I don’t have anything left, I will say I don’t have any more to give. I don’t have to pretend to help others by taking someone else’s money. I don’t want any grand titles. I just want to be a good//. 

நன்றி: The Indian Express

உதவி: https://www.msn.com/

=================================================================================

ஞாயிறு, 26 ஜூன், 2022

முற்றிய புற்றுநோயாளியின் பிரமிப்பூட்டும் அசுர சாதனை!!!

மூளையிலும், நுரையீரலிலும் புற்றுநோய் பரவிய நோயாளி அவர்; 'இது தேறாத கேஸ்' என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்.


சைக்கிள் பந்தயங்களில் பல பரிசுகள் பெற்றவர்.


"இவருக்கா இந்த நோய்?" என்று உற்றார் உறவினரும் நண்பர்களும் மனம் வருந்தினார்கள்.


ஆயினும் என்ன, இந்த மனிதர் மட்டும் மனம் தளரவே இல்லை. "நான் சாதிக்கப் பிறந்தவன்" என்று அவ்வப்போது அவரின் உள்மனம் முழக்கமிடத் தவறுவதே இல்லை.


மனம் கலங்காமல் தொடர்ந்து சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றார்.


ஃபிரான்ஸ் நாட்டில், பிரபலமானதும், 21 நாட்கள் நடைபெறுவதுமான Tour de France எனப்படும் 2000[சற்றே கூடுதல் தூரம்] மைல் சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். செங்குத்தான மேடு, கிடுகிடு பள்ளம் என்று ஆபத்தான பாதையில் சைக்கிள் ஓட்ட வேண்டிய போட்டி அது. அதில் கலந்துகொண்டு கைகால்களை முறித்துக்கொண்டவர்களும், உயிரிழந்தவர்களும் ஏராளமாம்.


அப்படிப்பட்ட ஆபத்தான போட்டியில்தான் 'அவர்' கலந்துகொள்வதாக அறிவித்தார்.


மருத்துவர்கள் எச்சரித்தபோதும் கலந்துகொள்ளவே செய்தார்.


வென்றார். பரிசை மட்டுமல்ல, புற்றுநோயையும்தான்.


பின்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில்.....


“நான் சைக்கிள் சாம்பியன் ஆவதற்காகவே பிறந்தவன். புற்று நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பலரும் வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள். நான் அஞ்சவில்லை.....

இந்தப் புற்று நோய், என் மன உறுதியைப் பல மடங்கு உயர்த்தியது. நான் வெற்றியாளனாகத் திகழ்வதற்கு இதுதான் காரணம்” என்று உறுதிபடச் சொன்னார்.

புற்று நோய் தாக்குவதற்கு முன்பு, ஒரு முறைகூட இந்தப் போட்டியில் அவர் வென்றதில்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்!

அவர் ?

முதன்முதலாக நிலவில் கால் பதித்துச் சாதனை நிகழ்த்தியவரின் பெயரைத் தாங்கியவர்தான் அவரும்.

அவர் 'நீல் ஆர்ம்ஸ்ட்ராங்'; இவர் 'லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்'

Lance Armstrong

!
======================================================================================

ஆதாரம்:https://www.britannica.com/biography/Lance-Armstrong; விகடன்[பழைய இதழ்].


வெள்ளி, 24 ஜூன், 2022

'இவர்கள் அழுவதில்லை! நம்மை அழ வைப்பார்கள்!!'... உண்மை நிகழ்வு!!!

“நான் தூங்கும்போது என்னைக் குணப்படுத்தும்படி கடவுளை வேண்டிக்கொள். நான் விழித்திருக்கும்போது என்னிடம் பேசிக்கொண்டிரு” என்றாள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த தேவதை போன்ற அந்தப் பெண்.

அவள் இருந்தது  ஒரு புற்றுநோய் மருத்துவமனையில்.  அங்கே இடம்பெற்ற நான்கு நாள் நிகழ்வைக் காட்சிப்படுத்துகிறது கீழ்வரும் கட்டுரை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அத்தையைச் சிறப்புச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த வார்டு முழுவதும் இருந்தனர். ஒன்பது வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டிவரை பலர் அங்கு இருந்தனர். கீமோதெரபியால் உடல் உருக்குலைந்து மிகவும் பலவீனமாக இருந்தாலும், வாழ வேண்டும் என்னும் உறுதி அவர்களுடைய கண்களில் தென்பட்டது.

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பதுபோல் எங்கள் அத்தனைபேரையும் இன்முகத்துடன் அவர்கள் அனைவரும் வரவேற்றனர்.

பலர் தங்கள் பலவீனத்தையும் மீறி, தள்ளாடி நடந்துவந்து என் அத்தையின் கை பற்றித் தைரியமாய் இருக்கும்படி ஊக்கமளித்தனர். “நாலு நாள் கீமோதெரபி இருக்கும். அதை மட்டும் எப்படியாவது சமாளித்துவிடு” என்றனர்.

“முடி கொட்டிடும். கொட்டுனா என்ன மசுரு போனாப்போகுது” என்று ஒரு மூதாட்டி என் அத்தையிடம் சொல்லியதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

என் அத்தையின் பக்கத்துப் படுக்கையில் தேவதை போன்ற சுமார் இருபது வயதுப் பெண் படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப்படும் மருந்து உள்ளே செல்லாததால் அவளின் கால்கள் வீங்கியிருந்தன. அவளின் அம்மா அவளின் வீங்கிய கால்களைத் தடவியபடியே, கையில் புத்தகத்துடன் கண்களில் கண்ணீர் வழிய, தேவதையின் நோயைக் குணப்படுத்தும்படி கடவுளை வேண்டிக்கொண்டிருந்தார்.

“அம்மா, நான் விழிச்சிருக்கும்போது என்னோட பேசிட்டிரு. தூங்குனப்புறம் கடவுளை நினைச்சிக்கோ” என்றாள் அந்தப் பெண்.

கடவுளை நினைத்து முணுமுணுத்துக்கொண்டிருந்த அம்மா இப்போது அழ ஆரம்பித்தாள்.

“ஏன்மா அழறே? அழுவதால் ஏதும் மாறப்போகுதா” என்றாள் மகள், சலனமற்ற குரலில்.

மறுநாள் காலை அத்தையைப் பார்க்கச் சென்றோம். அவருக்கு அருகிலிருந்த தேவதைப் பெண்ணின் படுக்கை காலியாக இருந்தது. அம்மா வைத்திருந்த புத்தகம் மட்டும் படுக்கையில் சீந்துவாரற்றுக் கிடந்தது.

அந்த அறையில் சுமார் 50 படுக்கைகள் இருந்தன. சில நோயாளிகள் துணையுடனும் பலர் துணையற்றும் இருந்தனர்.

வலிகளும் இழப்புகளும் அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. பிறருடைய ஆதரவோ அனுதாபமோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அதை அவர்கள் எதிர்பார்த்ததாகவும் தெரியவில்லை.

மற்ற நோயாளிகள் சொன்னபடி, முதல் ஊசியை ஏற்றுக்கொள்ள அத்தையின் உடம்பு சிரமப்பட்டது. பின்னர், போடப்பட்ட இரண்டு ஊசிகளைச் சற்றே சிரமத்துடன் ஏற்றுக்கொண்டது.

இரண்டு நாட்கள் கழித்து நாங்கள் சென்றபோது பல படுக்கைகளில் புதியவர்கள் நிறைந்திருந்தார்கள். ஏற்கனவே இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று?

மூன்றாம் நாள் சாயங்காலம் அந்த மூதாட்டியின் படுக்கை காலியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. “வெளியே இருக்கிறவங்க எல்லாம் ஆயிரம் வருசமா வாழ்ந்துடப்போறாங்க. இங்க வர்றவங்கள்ல பல பேர் கொடுத்து வச்சவங்க. சீக்கிரமே போய்ச் சேர்ந்துடுறாங்க” என்று யாரிடமோ ஒரு  நர்ஸ் உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது.

அத்தை உற்சாகமாகவே இருந்தார். அவ்வப்போது அழுத மாமாவைத் தேற்றும்படி சொன்னார். வாசிக்கப் புத்தகம் கேட்டார். கொண்டுவந்து கொடுத்தேன். வாசித்தார்.

கைபேசியிலிருந்த அவரின் சிறுவயதுப் படங்களை என்னிடம் காட்டி அந்த வயதில் நடந்த சுவையான சம்பவங்களைக் கதை போலச் சொன்னார். சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென, “இன்னும் ஒரு ஊசிதான் மிச்சம் இருக்கு. நீ கிளம்பு. நாளை காலையில் பார்ப்போம்” என்றார்.

அடுத்த நாள் காலையில் அவரை உயிரோடு பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.

வாழ்க்கை விசித்திரமானது; மர்மங்கள் நிறைந்தது. மனிதர்களின் ஆசைகள் கணக்கில் அடங்காதவை. இந்தப் புற்று நோயாளிகளின் ஒரே ஒரு ஆசை உயிர்வாழ வேண்டும் என்பது மட்டுமே. ஆனால், பாவம், இவர்களில் பெரும்பாலோர் கொடுத்துவைக்காதவர்கள்.
======================================================================================
நன்றி: சாந்தி[திருச்சி] எழுதிய கட்டுரை[‘பெண் இன்று’, ‘தி இந்து’[03.09.2017] நாளிதழ்.

கட்டுரைக்குச் சாந்தி கொடுத்த தலைப்பு: ‘அந்தக் கடைசி நான்கு நாட்கள்’. 

கட்டுரையின் அளவையும் சற்றே குறைத்துப் பதிவாக்கியிருக்கிறேன்[2017இல் வெளியானது]. சாந்தி மன்னிப்பாராக.



வியாழன், 23 ஜூன், 2022

'தில்லை நடராசனே தீட்சிதன்தான்! தீட்சிதனே தில்லை நடராசன்!!

"தில்லை மரங்கள்[மரங்களில் ஒரு வகை] சூழ்ந்த, அடர்ந்த காட்டில்[தில்லை-சிதம்பரம்] எழுந்தருளியிருந்த சிவபெருமான்[பூசாரிகள் தனக்குப் பூஜை செய்வது பிடிக்காமல்], கைலாய மலையிலிருந்து  3000 தீட்சிதர்களை[2999+1... விவரம் கீழே] தனக்குச் சேவை செய்வதற்காக அழைத்து வந்தார்" என்கிறார்கள் சிதம்பரம் தீட்சிதர்கள்[தினகரன் 23.06.2022], பக்கம் 14; கோவைப் பதிப்பு]

தீட்சிதர்கள் என்றால், பூசாரிகளைக் காட்டிலும், கல்வி, ஞானம், வேதாகமப் பயிற்சி என்றிவற்றால் மட்டும் மேம்பட்டவர்கள் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. "அவர்கள் முழுமுதல் கடவுளான சிவபெருமானுக்கு இணையானவர்கள் ஆவார்கள்."

சொல்வது யார்?

சொன்னவர்கள்/சொல்பவர்கள் இன்றும் தில்லையில்[சிதம்பரம்] வாழ்ந்துகொண்டிருக்கும் தீட்சிதர்கள்தான்.

அத்ற்கு ஆதாரமாக ஒரு கதையையும் அவர்களே சொல்கிறார்கள். அது.....

கயிலை மலையிலிருந்து புறப்பட்டுத் தில்லை[சிதம்பரம்] வந்து சேர்ந்த 3000 தீட்சிதர்களில் ஒரு நபர் காணவில்லையாம். கவலை மீதூர 2999 பேரும் அவரைத் தேடிக் கானகமெங்கும் அலைந்தபோது வான் வெளியிலிருந்து அசரீரியாக ஒரு குரல் ஒலித்தததாம். அந்த அசரீரி.....

"பேசுவது தில்லை நடராசனாகிய நான்தான். நீங்கள் தேடும் அந்த ஒரு தீட்சிதரும்[2999+1] நானேதான்[3000ஆவது நபர்] என்பதை அறிவீர்களாக. உடன் வந்த நான் பின்னர் மறைந்தேன்" என்று சொல்லி அவர்களை ஆற்றுப்படுத்தியதாம்!

இந்த நிகழ்வின் மூலம் நம் போன்ற முழு மூடர்கள் அறியத்தக்கது என்னவென்றால்.....

அன்று தீட்சிதன் உருவில்  வந்த சிவபெருமானுடன் வருகை புரிந்த அந்த அந்தக் கால 2999 தீட்சிதர்கள் மட்டுமல்ல, இன்று சிதம்பரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தனைத் தீட்சிதர்களும், கடவுளாம் தில்லை நடராசனின் பரம்பரையினர்[தில்லை நடராசன்களே] என்பதுதான்.

எனவே, சிவபெருமானை நேரில் தரிசிக்கும் பேறு பெறாத பாவிகளாகிய தமிழர்கள், தீட்சிதர்களைத் தரிசித்து, இயலுமெனின், காணுமிடத்திலேயே காணிக்கை செலுத்திப் புண்ணியம் சேர்த்து வீடுபேறு பெறலாம் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது!

======================================================================================

புதன், 22 ஜூன், 2022

ஒரு 'தாசி' தாரம் ஆன கதை!!!


     

"தரகர் முத்தண்ணா பேசுறார்.” -கைபேசியை மகள் ஆனந்தியிடம் நீட்டினாள் மரகதம்.

வாங்க மறுத்த ஆனந்தி, “தொழிலைக் கை கழுவிட்டதா ஏற்கனவே அவர்கிட்டே சொல்லிட்டேன். தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லிடு" என்றாள்.

"நாலு நாளா போன் பண்றவங்களுக்கெல்லாம் இதையே சொல்லச் சொல்லுறே. வீடு தேடி வர்ற வாடிக்கைக்காரங்களையும் இனி வரவேண்டாம்னு சொல்லித் திருப்பி அனுப்புறே. ஏன் இப்படிப் பண்ணுறே?” என்றாள் மரகதம் மிதமிஞ்சிய குழப்பத்துடன்.

"அதான்... தொழிலைக் கைகழுவிட்டதாச் சொன்னேனே, அப்புறம் என்ன?" என்றாள் ஆனந்தி, குரலில் சற்றே சினம் துளிர்க்க.

இனிப் பிழைப்புக்கு வழி?" -கேட்டாள் மரகதம்.

"இங்கிருந்தா வாடிக்கையாளருங்க தொல்லை இப்போதைக்குக் குறையாது. ஓரளவுக்குச் சேமிப்பு இருக்கு. வெளியூர் போயி ஒரு கடைகண்ணி வைச்சிப் பிழைச்சுக்கலாம்.”

புத்தி பேதலிச்சிப் போச்சா?” -கடுகடுத்தாள் மரகதம்.

நல்ல புத்தியோடுதான் பேசுறேன். ஆரம்பத்திலிருந்தே எனக்கு உடம்பை விலை பேசிப் பொழப்பு நடத்துறதில் இஷ்டமில்லை. என்னைப் பத்தாவதோடு நிறுத்திட்டு, நீ இருந்த இந்த நரகத்திலேயே என்னையும் தள்ளி விட்டுட்டேஇப்போ இதிலிருந்து விடுபட்டுக் கவுரவமா பிழைப்பு நடத்தணும்னு முடிவு பண்ணிட்டேன்.....

கொஞ்சம் இடைவேளி கொடுத்துத் தொடர்ந்தாள் ஆனந்தி. “எனக்கு வயசு முப்பது ஆயிடிச்சி. ஒரு புள்ள பெத்துக்கணும். நீ போனதுக்கப்புறம் எனக்கு ஒரு துணை வேணும்" என்றாள் ஆனந்தி.

நீ ஒரு விபச்சாரி. உன்னை எவனும் கட்டிக்க மாட்டான். தொழிலையும் விட்டுட்டேங்கிறே. அப்புறம் எப்படிப் புள்ள பெத்துக்குவே?” -நக்கலடித்தாள் தாயார்க்காரி.

இப்போ ஊரூருக்கு செயற்கைக் கருத்தரிப்பு நிலையங்கள் இருக்கு.”

இதுக்குச் சில லட்சங்கள் செலவாகும். இது நமக்குச் சரிப்பட்டு வராது. ஒழுங்கா நான் சொல்லுறதைக் கேளு. வாடிக்கையாளர் மூலமாவே ஒரு குழந்தையைப் பெத்துக்கோ. அப்புறமா தொழிலை விட்டுட்டு வெளியூர் போயிடலாம்.”

ஆனந்தியிடமிருந்து பதில் இல்லை..

என்ன யோசிக்கிறே?”

மாசம் ஒரு தடவை போல வந்து போவாரே குமரேசன், அவரைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

ரொம்பச் சாதுவானவர். தங்கமான மனுசன். வரும்போதெல்லாம், டாக்டரைப் பார்த்து உடம்பைச் செக்கப் பண்ணினியான்னு கேட்பாரே, அவருக்கு என்ன?” என்றாள் மரகதம்.

அவர் மூலமா குழந்தை பெத்துக்க ஆசைப்படுறேன்.”

நீ ஆசைப்பட்டாப் போதுமா, அவர் சம்மதிப்பாரா?"

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே பெண்டாட்டி இவரை விவாகரத்துப் பண்ணிட்டுப் போய்ட்டாங்க. சின்ன வயசிலேயே அப்பாவை இழந்தவர். போன வருசம் அம்மாவும் இறந்துட்டாங்க. இப்போ தனி ஆளாத்தான் இருக்காரு. கொஞ்ச நாள் அவரோடு மட்டும் இருந்தா அவரைப் போலவே நல்ல குணம் உள்ள குழந்தை பிறக்கும்னு நம்புறேன். போன் பண்ணி வரவழைச்சி என் விருப்பத்தைச் சொல்லலாம்னு இருக்கேன்.”

“இதுதான் உன் முடிவுன்னா நான் குறுக்கே நிற்கல. நேரம் காலம் எதுவும் பார்க்கத் தேவையில்ல. இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணு.”

கைபேசியை எடுத்துக் குமரேசனின் பேசி எண்களைப் பதிவு செய்து அவனின் தொடர்பு கிடைத்ததும், “வாடிக்கையாளரா இல்ல, ஒரு நல்ல நண்பரா உங்ககூடப் பேசணும். புறப்பட்டு வருவீங்களா?” என்றாள் ஆனந்தி.

சம்மதம் சொன்னான் குமரேசன்.

சொன்னபடியே சில நாட்களில் ஆனந்தியின் வீடு தேடி வந்தான் அவன்.

விபச்சாரத் தொழிலுக்குத் தலை முழுகுவதான தன் முடிவை அவனிடம் சொன்னதோடு ஒரு குழந்தைக்குத் தாயாகும் தன் ஆசையையும் வெளிப்படுத்தி, “நான் கருவுறும்வரை அதுக்கு வாய்ப்புள்ள நாட்களில் என்னோடு இருக்க நீங்க சம்மதிக்கணும்.....

.....நீங்கள்தான் இந்தக் குழந்தைக்கு அப்பான்னு சொல்லி உங்க சொத்தைப் பறிக்கும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். இது சத்தியம். என்னை நீங்க நம்பலாம்" என்று குரல் தழு தழுக்கச் சொன்னாள் ஆனந்தி.

வாய்விட்டுச் சிரித்தான் குமரேசன்.

நான் ஒரு மருந்து உற்பத்தி நிறுவன ஊழியன். வழக்குப் போட்டுப் பறிக்கும் அளவுக்கு என்கிட்டப் பெரிதாகச் சொத்து எதுவுமில்லை. அதில்லாம உன் நல்ல குணம் எனக்குத் தெரியும்" என்றான்.

அப்படியானா, என் விருப்பத்தை நிறைவேற்றுவீங்கதானே?” என்று ஆர்வம் பொங்க, குரலில் தாபம் வழிந்திடக் கேட்டாள் ஆனந்தி.

மீண்டும் சிரித்தான் குமரேசன். இந்தச் சிரிப்பில் நிறையவே சோகம் கலந்திருந்தது. சொன்னான்: “என்னை ரொம்பவே சாதுவான ஆள்னு நீ நம்பிட்டிருக்கே. அது தப்பு.....

..கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே என் பெண்டாட்டி என்னிடமிருந்து விவாகரத்து வாங்கிட்டுப் போய்ட்டாள்னு உன்கிட்ட சொல்லியிருக்கேனே தவிர, அதுக்கான காரணத்தைச் சொன்னதில்லை. இப்போ சொல்லுறேன்.....”

கொஞ்ச நேரம் பேசுவதை நிறுத்தித் தொடர்ந்தான். “நான் சந்தேகப் பேர்வழி. அடிக்கடி சந்தேகப்பட்டுக் கேள்விகள் கேட்டு அவளை நோகடிச்சிருக்கேன். சந்தேகப்படும்படியா அவளுடைய நடத்தையும் இருந்தது. அதனால, பிரிவை நினைச்சி ரெண்டு பேருமே வருத்தப்பட்டதில்ல..... 

அதிருக்கட்டும், என் மூலமா ஒரு குழந்தை பெத்துகிட்டா அது நல்ல குணங்கள் உள்ளதா இருக்கும்னு நீ நினைக்கிறே இல்லையா, அதுல எனக்கு முழு நம்பிக்கை இல்ல. ஆனாலும், உன் நல்ல மனசு எனக்குப் பிடிச்சிருக்கு"  என்று சொல்லி ஆனந்தியின் முக பாவனையை ஆராயத் தலைப்பட்டான் குமரேசன்.

மௌனமாக வீட்டு வாசலை வெறித்தவாறு இருந்தாள் அவள்.

அவன் தொடர்ந்தான். "நீ நினைக்கிற மாதிரி குழந்தையின் குணத்துக்கு மரபணு காரணமாக இருந்தாலும், பெற்றோர் அதை வளர்க்கிற முறையும், அது ஆளான பிறகு வளர்கிற சூழ்நிலையும்தான் அதன் குணத்தை உருவாக்குதுன்னு சொல்லலாம். அதனால, வசதி இருந்தா ஒரு மருத்துவரை அணுகிச் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெத்துக்கலாம். வசதி இல்லேன்னா, அனாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம். தீர யோசனை பண்ணி ஒரு முடிவெடு" என்றான் குமரேசன்.

மௌனம் கலைந்தாள் ஆனந்தி.

உடல் சுகத்துக்கு மட்டும் நீங்க என்னைத் தேடி வந்ததில்ல. நோய்வாய்ப்பட்டு ஒரு மாதம் போல மருத்துவமனையில் இருந்தபோது அதுக்கான செலவை நீங்கதான் ஏத்துகிட்டீங்க. உள்ளூர் ரவுடிகள் எனக்குத் தொல்லை கொடுத்தபோது, காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது, அவங்களை எச்சரிக்கை பண்ணுறதுன்னு பல வகையிலும் எனக்கு ஆதரவா இருந்தீங்க. அதனால, உங்க முன்னாள் மனைவிக்கு எப்படியோ, என்னளவில் நீங்க ரொம்ப யோக்கியமானவர்தான். இதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன். என் முடிவிலேயும் எந்த மாற்றமும் இல்லை.....

.....உங்க பதிலுக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பேன். அது எனக்குச் சாதகமானதா இருந்தா ரொம்பவே சந்தோசப்படுவேன்" என்று சொல்லி முடித்தாள்.

எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். அப்புறம் ஒரு நாள் சந்திப்போம்" என்று விடைபெற்றான் குமரேசன்.

ஒரு மாதம் போல் கழிந்த நிலையில் ஆனந்தியைச் சந்தித்தான்.

“நான் வேலை பார்க்குற நிறுவனம் என்னைச் சென்னைக் கிளைக்கு மாறுதல் பண்ணியிருக்கு. உன் அம்மாவை அழைச்சிட்டு என்னோடு வந்துடு. உனக்கு நான் தாலி கட்டினால் ஆணாதிக்கக் குணம் தலைதூக்கும். அதனால, நல்ல நண்பர்களாகவே சேர்ந்து வாழ்வோம். ஒருத்தருக்கொருத்தர் துரோகம் செய்யாம வாழ முயற்சிக்கலாம். பிடிக்கலேன்னா பிரிஞ்சுடலாம்....."

கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்து பேசினான் குமரேசன்.

".....தையல் தொழில் தெரியும்னு சொல்லியிருக்கே. ஒரு மிஷின் வாங்கிடலாம்; கடை நடத்த வசதியா ஒரு வீடு பார்த்துடுவோம். நீயும் உன் சொந்தக் காலில் நிற்கலாம்.

குழந்தை பிறந்தா அதுக்குப் பாசமுள்ள பெற்றோரா இருப்போம்; நல்ல புத்திசாலியா வளர்ப்போம்.

எப்பவும் நல்லதே நடக்கும்னு நம்புவோம். சம்மதம்னா புறப்படுவதற்கான ஏற்பாடுகளைக் கவனி" -சொல்லி முடித்துத் திடமானதொரு பார்வையை ஆனந்தி மீது படரவிட்டான் குமரேசன்.

வாய் திறந்து பேசவில்லை ஆனந்தி; கண்களில் ததும்பும் கண்ணீர்த்துளிகளில் அவளின் சம்மதம் தெரிந்தது.

=======================================================================


செவ்வாய், 21 ஜூன், 2022

'Sound-transmission-through-bones'... காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பதிவு!

பொதுவாக ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக்காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். 'காக்ளியா' என்ற இடத்தில் அது மின்காந்த அலையாக மாறி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். மூளையில் காதுக்கான பிரத்யேகப் பகுதியில், அந்த ஒலி உணரப்படுகிறது.

காற்றுடன் கலந்து செவிக்குள் நுழையும் ஒலியானது, உள்காதில் இருக்கும் காக்ளியா என்னும் நத்தை ஓடு போன்ற பகுதிக்குச் செல்கிறது. அங்கிருந்து செவிப்பறை மூலம் ஒலியானது நரம்புகள் வழியாகக் கடத்தப்பட்டு மூளைக்குத் தகவல் அனுப்பப்படுகிறது.

நாம் பேசும்போது, நம் பேச்சின் ஒரு பகுதி நம் மூளைக்கு எலும்புகள் வழியாகவே சென்று சேர்கிறது[என்பது நாம் அறியாத தகவல்]. இப்படி எலும்புகள் மூலம் ஒலி கடத்தப்படுவதை எலும்பு ஒலிக்கடத்தல் என்கிறார்கள்.

ஒலியை அதிர்வுகளாக மாற்றி தலையில் எலும்புகளுக்குக் கொடுத்து அதிரவைத்தாலும் ஒலி கேட்கும். இந்தத் தொழில்நுட்பத்தில் இசை கேட்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், விலை சற்று அதிகம். காதுக்கு முன்புறம் கீழ்த்தாடை எலும்புகள் வந்து சேருமிடத்தில் அவை பொருத்தப்பட்டு தாடை எலும்பு வழியாக காக்ளியா பகுதிக்குத் தகவல் செல்லும்.

செவிக்குழாயில் குறைபாடு, செவிப்பறையில் குறைபாடு, ஒலியைக் கடத்தும் நரம்புகளில் குறைபாடு என இந்த மூன்று வகையான குறைபாடுகள் இருந்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும்.

செவிக் குழாயிலேயே பாதிப்பு இருந்தால் உட்புகும் ஒலியானது தடுக்கப்பட்டுச் செவிப்பறையை அடைதல் சாத்தியம் இல்லாமல் போகும்.

செவிப்பறையில் பாதிப்பு இருந்தால், காதுக் குழாய் வழியாகச் செலும் ஒலியானது செவிப்பறையில் மோதி அதிர்வுகளை உண்டுபண்ணுவது  நடைபெறாது.

காதுக் குழாயிலும், செவிப்பறையிலும் பழுது ஏதும் இல்லாமலிருந்து, நரம்புகளில் மட்டும் கோளாறு இருந்தாலும்.....

உள்நுழைந்த ஒலி செவிப்பறையில் மோதி அதிர்வுகளை ஏற்படுத்தியபோதும், அவ்வொலியானது நரம்புகளால் கடத்தப்படுவதில்லை; மூளைக்குச் சென்று சேர்வதும் இல்லை. 

இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எலும்புகள் மூலம் ஒலி செலுத்தும் உபகரணங்களைக் கொண்டு கேட்கும் திறனைத் திரும்பப்பெற வைக்கலாம் என்கிறார்கள்  உடல்கூறு மருத்துவர்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் கருவிகள் காதுக்குள் பொருத்தப்படுவதில்லை.

காதுக்குள் இது பொருத்தப்படாததால், கருவியைப் பொருத்திக்கொண்டவரால் சுற்றுப்புற ஒலிகளைக் கேட்க முடியும் என்பதோடு பிறருடன் தொடர்புகொண்டு உரையாடவும் முடியும்.

சமீபகாலமாக மேலை நாடுகளில் மாரத்தான் ஓட்டக்காரர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்கள் ஆகியோரிடையேயும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்கிறார்கள்.

புகழ்பெற்ற இசை மேதை பீத்தோவன், கேட்கும் திறனை இழந்ததும் தன் பியானோவில் ஒரு இரும்புக் கம்பியை இணைத்து அதைப் பல்லில் கடித்துக்கொள்வதன் மூலம் தொடர்ந்து இசையமைத்ததாகச் சொல்லப்படுவதும் ஈண்டு அறியத்தக்கதாகும்.

கேட்புத் திறன் பாதிக்கப்பட்ட எளியவர்களுக்கும்[இவர்களில் நானும் ஒருவன் ஹி... ஹி... ஹி!!!] பயன்படும் வகையில் காதுக் கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வருதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

ஆதாரம்: https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2022/02/22210205/Sound-transmission-through-bones.vpf  

=====================================================================================


திங்கள், 20 ஜூன், 2022

'சாகாவரம்' சாத்தியமா? எப்போது?!

நிறம், ஞாபகத்திறன், பார்வை, எலும்புகளுக்கான ஊட்டச்சத்து என்று உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூலமாக இருப்பவை அணுக்களே. அவை தம்மைப் புதுப்பித்துக் கொள்வதை நிறுத்தினால் ஓர் உறுப்புகூடச் செயல்படாது. 

அந்தப் புதுப்பித்தல் திறன் குறைவதால்தான் முதுமையை எய்துகிறோம். அந்தத் திறனை அதிகரிக்க முடியுமா?

இது குறித்து அயராமல் ஆய்வு நிகழ்த்துபவர்கள் அறிவியல் அறிஞர்கள். அவர்கள் இந்நாள்வரை கண்டறிந்த உண்மைகளின்படி மேற்கண்ட கேள்விக்கான பதில்:

நமது மரபணுக்கள் நீளமான அமைப்புகொண்டவை. 

ஒரு மரபணுவை நுண்ணோக்கி மூலம் உற்றுநோக்கினால், இரண்டு பக்கங்களிலும் வெள்ளையாகவும் பளபளப்பாகவும் ஒன்று தெரியும். அந்த ஒன்றுக்குப் பெயர் டெலோமியர் (Telomere). 

அனைத்து மரபணுக்களிலும் இந்த 'டொலோமியர்கள்' உள்ளன.

மரபணுக்கள் சேதமடையாமல் பாதுகாப்பவை இவைதான்.

உடம்பானது தொடர்ந்து செயல்படுவதால் அனைத்து அணுக்களுமே தேய்வுக்கு உள்ளாகின்றன.

மற்ற அணுக்களைப் போலவே மரபணுக்களும், 'டி என் ஏ'க்களும், குரோமோசோம்களும் தொடர்ந்து செயல்படுவதால் அவையும் தேய்மானம் அடைபவைதான். 

மேற்கண்டவற்றில், மரபுசார்ந்த பல தகவல்கள்  சேமிக்கப்பட்டிருக்கும்.

இவை தேய்மானம்[சேதம்] அடையும்போது அவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும் மரபு சார்ந்த தகவல்கள் சேதம் அடைகின்றன. அடைவதால் முதுமையை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம்.

நமக்கு வயதாகும்போது, இவற்றைப் பாதுகாக்கிற டொலோமியர்களும்கூட அணுக்களைப் போலவே தேய்மானதுக்கு உள்ளாகிப் பலவீனம் அடைகின்றன. பலவீனம் அடைவதோடு இவை அழியவும் செய்யும்.

இந்த இக்கட்டான நிலையில், அதாவது, இவையும் டொலோமியர்களும் பலவீனம் ஆகும் நிலையில், நமக்குத் தக்க சமயத்தில் உதவும் உற்ற துணைவனாக இருப்பது 'டெலோமிரேஸ்'(Telomerase) என்னும் என்ஸைம்[இங்கு, டொலோமியர் வேறு, Telomerase  வேறு என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம்].

இந்த இயக்குநீர்[என்ஸைம்], டி.என்.ஏ அழியும் நிலைக்குத் தள்ளப்படும்போது, அழியாமலிருக்கும் டி.என்.ஏ. வைத் தேர்வு செய்து அதன் ஒரு பக்கத்தில் ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக்கொண்டு, அழியவிருக்கும் 'டி என் ஏ'விலுள்ள தகவல்களைக் கடத்தி ஒரு புதிய 'டி என் ஏ' உருவாக்குகிறது.

ஆக, ஒரு பக்கம் 'டி என் ஏ'வின் அழிவு நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வேளையில் புதிய 'டி என் ஏ' உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இதையே 'அணு புதுப்பித்தல்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

அழியும் டி.என்.ஏ-விலிருக்கும் அனைத்துத் தகவல்களும் புதிய டி.என்.ஏ-வாக மாறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், இது ஆர்.என்.ஏ-விற்குள் கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தப்படுவது முடிவு பெறும்வரை, இரண்டையும் இணைத்துப் பிடித்துக்கொண்டு கச்சிதமாகப் புதிய மரபணுவை உருவாக்கிவிடுகிற இந்த இயக்குநீரின்[டெலோமிரேஸ்] செயல்பாடு வியக்கத்தக்கதாகும். 

இந்த்ச் செயல்பாடு நிகழ்வதால்தான், உடல் இருக்கும்வரை உடலின் டி.என்.ஏ-க்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.

அழிவற்ற இந்த டெலோமிரேஸ்கள், உடலின் அனைத்து அணுக்களிலும் செயல்படுவதில்லை. மரபணுக்கள் மற்றும் இனப்பெருக்கத்திற்கான உயிரணுக்களில் மட்டுமே அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏதோவொரு காரணத்தால் மற்ற சாதாரண அணுக்கள் இந்த டெலோமிரேஸ்களைத் தங்களுக்குள் அனுமதிப்பதில்லை. ஆனால், புற்றுநோய் அணுக்கள் இவற்றை அபரிமிதமாக ஏற்றுக்கொள்வதால் அவை சுலபமாக வளர்ச்சியடைந்து விடுகின்றன.

சிகிச்சையின் மூலமும், மருந்துகளின் மூலமும் டெலோமிரேஸ்கள் புற்றுநோய் அணுக்களோடு சேர்வதைத் தடைசெய்தால், அவற்றின் வளர்ச்சியைத் தடுத்து அழித்துவிடலாம். அதன்மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேலும் எளிமைப்படுத்த முடியும். இதைப்பற்றிய ஆராய்ச்சியின்போது மருத்துவர்கள் மற்றுமொரு பரிசோதனையும் முயற்சி செய்தனர். அதுதான் முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான திறவுகோலாக அமைந்துள்ளது. 'புற்றுநோய் அணுக்களோடு சேராமல் டெலோமிராஸ்களைத் தடுக்க முடியுமானால், மற்ற அணுக்களோடு அவற்றை ஏன் சேர்க்க முடியாது?' என்று கேள்வி எழுப்பினார்கள்; ஆய்வு மேற்கொண்டார்கள்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் 'யினான் சென்' தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகள் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகின. 

அந்த ஆய்வில், டெலோமிராஸ்களைத் சாதாரண அணுக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணித்து ஆய்வுசெய்ததில் அவை அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டன. ஆனால், அது ஏன் தானாக[திணிக்கப்படாமல்] ஏற்றுக்கொள்வதில்லை என்பதைக் கண்டறியாமல் இந்த ஆராய்ச்சி முழுமையடையாது. என்பதை அறிந்தார்கள். அது ஏனென்று தெரிந்தால்தான், அந்தத் தடையை உடைத்துச் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அணுக்களைச் சீரமைக்க முடியும். அப்படிச் செய்துவிட்டால், முதுமையற்ற வாழ்வை மட்டுமல்ல அழிவற்ற வாழ்வை அதாவது சாகாவரம் கூடப் பெறமுடியும் என்று சொல்கிறார்கள்.

டெலோமிரேஸ்கள் மூலம் இளமையைத் தக்க வைக்க முடியும் என்றும், இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்றும் நிரூபித்த அவர்களுடைய ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து மரபணு ஆராய்ச்சித் துறையில் இதுகுறித்த ஆய்வு தீவிரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இதே ஆராய்ச்சியை ஆய்வாளர்கள் எலிகளின் டி.என்.ஏ-க்களில் செலுத்திச் செய்த பரிசோதனையில், எலிகளுடைய அயுட்காலம் 12% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதி 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற ஆய்விதழில் அதுகுறித்த ஆய்வுக்கட்டுரையும் வெளியாகியுள்ளது.

உண்மையில் சாகாவரம் என்பது சாத்தியமா? பொறுத்திருந்து பார்ப்போம். கேள்விகள் உண்டென்றால் விடைகளும் இருக்கத்தானே செய்யும். ஆனால், அந்த விடை நம் எதிர்காலத்திற்கு நல்லதா, என்ற துணைக் கேள்விக்கும் விடை தேடியாக வேண்டும்.

குறிப்பு:

விகடனில் வெளியான இது தொடர்பான கட்டுரை மிகப் பெரியது. அணுக்கள் புதுப்பிக்கப்படுதலுக்கு உரிய தகவல்களை மட்டும் ஒருங்கிணைத்துச் சுருங்கிய வடிவிலான இப்பதிவை உருவாக்கியுள்ளேன். விகடனுக்கு நன்றி.

======================================================================================https://www.vikatan.com/science/inventions/can-we-stay-young-forever

சனி, 18 ஜூன், 2022

ஜக்கி வாசுதேவ் யோகியா, சுகபோகியா, ஞானியா, கடவுள்களின் குருவா?... அடையாளப்படுத்துவது அரசின் கடமை!

வெறும் யோகா மாஸ்டராகக் கோவை வந்த ஜக்கிக்கு இன்று வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அறக்கட்டளையின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்து; சொகுசுக் கார்கள்; கோடிகளில் வாங்கிய ஹெலிகாப்டர். 

யோகா சொல்லிக் கொடுத்தா இவ்வளவு சம்பாதித்தார்?

நன்கொடையில் வசூலானது என்றால், அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள் யாரெல்லாம்? எதற்காகக் கொடுத்தார்கள்? 

மக்கள் நலம் நாடுவோர் கேட்கிறார்கள். ஜக்கியிடமிருந்து நேரடியான பதில் இன்றுவரை இல்லை.

துறவிகள் என்னும் பெயரில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் நிரந்தரமாக அங்கே தங்கியிருப்பதாகத் தெரிகிறது. எல்லோரும் குடு குடு கிழவிகள் அல்ல; வாலிப வயசுக்காரிகள்.

அனைத்திற்கும் அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறாரா ஜக்கி?

அவர் முற்றும் துறந்த முனிவராயினும் அரசின் அனுமதி அவசியம்.

அண்டை அயலில் வாழும் உயிரினங்கள் அஞ்சி ஓட, வெள்ளியங்கிரி மலைத் தொடரே அதிரும் வகையில், 'நவராத்திரி விழா' என்னும் பெயரில் ஆட்டம்பாட்டம், கூத்து, கும்மாளம் எல்லாம் நடக்கிறது ஈஷா மையத்தில். இதற்கெல்லாம் அரசு அனுமதி வழங்கியிருக்கிறதா?

இந்த விழாவில் கவர்ச்சி நடிகைகள்கூடக் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கலாம். ஆனால், வாலிப உள்ளங்களைச் சனப்படுத்துவதால் அவர்களின் வரவு தவிர்க்கப்படுதல் வேண்டும் என்பது நம் எண்ணம்.

ஆக.....

ஈஷா யோகா மையம் பொதுமக்கள் புழங்கும் இடம் என்பதால் அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை முறைப்படி அரசின் பிரதிநிதிகள் கண்காணிப்பது அவசியம்.

உரிய முறையில் கண்காணிக்கிறார்களா?

"இல்லை" என்றால், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிற இந்த மையத்தில் ஜக்கிக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது ஏன்? எப்படி?

கேள்வி கேட்கும் ஊடகக்காரர்களை, "இங்கே அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறது; அதிகாரிகள் இருக்கிறார்கள். நீங்கள் யார் கேள்வி எழுப்ப?" என்று மிரட்டுகிறார் இவர்.

ஆன்மிகம் வளர்க்கிறேன், காடு வளர்க்கிறேன், மண் வளத்தைப் பாதுகாக்கிறேன் என்று உலகறிய விளம்பரம் செய்து உயர் ரக வாகனங்களிலும், ஹெலிகாப்டரிலும் உலகம் சுற்றிவிட்டு வருகிறார். இந்த நாட்டின் பிரதமரே வரவேற்றுப் பாராட்டுகிறார்.

இவரின் அறிவிப்பு எல்லாமே வெறும் வாய்ச் சவடால்தான். பயன் ஏதும் விளைந்தததாக அறியப்படவில்லை.

அழகழகாகவும் ஆடம்பரமாகவும் உடை உடுத்துகிறார்; பிரபல நடிகைகளைத் தன்னுடன் மேடையில் அமர்த்தி, ஜாலியாக உரையாடுகிறார். வெட்கப்பட்டு அந்த நடிகைகள் இவரைப் போலவே குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பது காண்போர் மனங்களை மயக்குகிறது; கெடுக்கிறது.

வெகு வேகமாக இவர் பேசும் ஆங்கிலம், இவர் பெரிதாக ஏதோ தத்துவம் பேசுகிறார் என்று நம்ப வைக்கிறது.

சுருங்கச் சொன்னால்.....

"தனக்குத் தானே 'சத்குரு' என்று வாய்ப்புக் கிடக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டு, மனம்போன போக்கில் பேசுகிற இவர் எப்படி இந்த அளவுக்கு வசதி படைத்தவர் ஆனார்?" என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் மதி மயங்குகிறார்கள் நம் மக்கள். எனவே.....

ஜக்கி பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர் என்பதால், மேற்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதோடு, ஜக்கியை மக்களுக்கு முழுமையாக அடையாளப்படுத்துவது அரசின் கடமையாகும்.

அரசு செய்யுமா? 
             
                                            *   *   *   *   *
ஜக்கி-சமந்தா நேர்காணல்... காணொலி:

வெள்ளி, 17 ஜூன், 2022

கடவுளும் ஒரு காட்டுமிராண்டியே!!!


டவுள் கருணை வடிவானவன் என்கிறார்கள்.

அவனால் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் உயிர்கள் அனைத்தும் பிற உயிர்களை வதை செய்து கொன்று தின்றுதான்  வாழ்கின்றன[புல் பூண்டுகள் அணுக்களால் ஆனவை. அவை உணவாக்கப்படும்போது, அணுக்கள் கொல்லப்படுகின்றன. அவை வலியை உணர்வதும் உணராததும் தனி ஆய்வுக்கு உரியது].

மனிதனுக்கு ஆறாவது அறிவைக்[சிந்திக்கும் அறிவு] கொடுத்தவனும் அந்தக் கருணைக் கடவுள்தான் என்கிறார்கள்.

ஐந்தறிவு விலங்காக வாழ்ந்தவரை, பிற உயிர்களை உணவாக்கிக்கொள்வது, பிற மனிதர்களுடன் உணவுக்காகவும் உடைமைக்காகவும் மோதல்களில் ஈடுபடுவது என்று மிகச் சில குற்றச் செயல்களில் மட்டும் ஈடுபட்ட இவன்.....

ஆறாவது அறிவு வாய்த்த பிறகு, தன் இனத்தவருக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் இழிசெயல்களையும் அழிவு வேலைகளையும்[நற்செயல்கள் குறைவு] செய்வதோடு, பிற உயிரினங்களைத் தனக்குச் சேவகம்[குதிரை, மாடு, ஒட்டகம் முதலானவை] செய்ய வைப்பது, காடுகளை அழித்து அங்கு வாழ்வனவற்றைப் பூண்டோடு அழிப்பது, ஆய்வுக்கூடங்களின் வைத்து[எலி, குரங்கு போன்றவை]ச் சித்ரவதை செய்வது என்றிப்படி ஏராளமான அட்டூழியங்களைச் செய்துகொண்டிருக்கிறான்.

இப்படி, உயிர்கள் அனைத்தையும் கொடூரப் புத்தி கொண்டவையாகவும், மனிதனை அரக்கக் குணம் கொண்டவனாகவும் படைத்த 'அவனை'க் கருணை வடிவானவன் என்று நம்புகிறார்கள் மனிதருள் புத்தி கெட்ட மிகப் பெரும்பாலோர். 

இவனுக்குக் கோயில்கள் எழுப்பி, விழாக்கள் எடுத்துக் கூத்தாடிக் கும்மாளமிடும் இவர்கள் காட்டுமிராண்டிகள்.

உண்மையில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் இவர்களைப் படைத்த அவனே ஒரு காட்டுமிராண்டிதான்!

======================================================================================


வியாழன், 16 ஜூன், 2022

இத்தனைப் பலவீனர்களா இன்றைய 'மெத்தப் படித்த' பெண்கள்?!?!?!

இவன் பெயர் விக்ரம் வேதகிரி.

தினகரன்[16.06.2022] நாளிதழ் இவனை 'இணையதள ஆபாசத் தொடர் கதாநாயகன்' என்கிறது.

'இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் ஆவர்' என்றும் சொல்கிறது இந்த நாளிதழ். ஆனால், அது மிகப் பலவாக இருந்திடவும் வாய்ப்புள்ளது.

இவன் குறி வைப்பது, சமூக வலைத்தளங்களில் தங்களை அடையாளப்படுத்தும் இளம் பெண்களையும், கணவர்களால் கைவிடப்பட்டவர்களையும், மணவிலக்குப் பெற்றவர்களையும்தான். 

முகநூல் வழியாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நண்பனாகப் பழகுவான். அவர்களின் மனப்போக்கை எடைபோட்டு, இணையக் காணொலி உரையாடல்[Video Chat] மூலம் காதலிப்பதாகச் சொல்லிப் பின்னர் அடுத்த கட்டத்துக்கு நகர்வானாம்.

இவன் 'லவ்' சொல்ல, அதை ஏற்றுக்கொள்கிற பெண்களிடம்தான் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசிப் பேசித் தனிமையில் சந்திப்பதும், சுற்றுலாச் செல்வதும், விடுதிகளில் அறையெடுத்துத் தங்கி உடலுறவு கொள்வதும், அதை, மறைத்து வைத்த கருவி மூலம் படம் எடுத்துப் பணம் பறிப்பதுமான செயல்களில் ஈடுபடுகிறான்.

இங்கே நாம் முன்வைக்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான். அது.....

இவனால், அல்லது இவனைப் போன்றவர்களால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு, முகநூல், டிவிட்டர் போன்ற சமுக வலைத்தளங்களில், உண்மை முகவரிகளைத் தருபவர்களோ, உண்மை பேசுபவர்களோ மிக மிக மிக அரிது என்பது தெரியும்தானே?[அரிதாகச் சிறு வயதுப் பெண்கள் இருக்கலாம்].

இதனைப் பயன்படுத்துவதால் விளையும் சாதக பாதகங்களை இவர்கள் அறிந்திருப்பார்கள்தானே?

அடுத்தடுத்த வீடுகளிலும், அண்டை அயல் தெருக்களிலும் வசிப்பவர்களையே முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத இன்றையச் சூழலில், சமூக ஊடகங்கள் மூலமாக முற்றிலும் முகமறியாத ஆண்களை நம்பி இவர்கள் மனம் திறந்து உண்மை பேசுவதும், அவர்களை நம்புவதோடு  தனிமையில் சந்திப்பதும் ஏன்?

இம்மாதிரியான, பாலுணர்வு வேட்கையைத் தணித்துக்கொள்ள அலையும் ஆண்களின் தொடர்பை மனப்பூர்வமாக இவர்கள் விரும்புகிறார்கள் என்பதே காரணம்.

பணத்தை இழப்பது, தங்களின் கூடா ஒழுக்கம் பற்றியக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாவது போன்ற  அதிர்ச்சி தரும் சூழலில் அகப்படும்போதுதான் தாங்கள் செய்த தவற்றை உணர்கிறார்கள் இந்தப் பெண்கள்.

பெற்றோர்களிடம்கூட, செய்த தவற்றைப் பகிர இயலாத நிலையில் பலர் அடங்கிக் கிடக்க, சிலர் மட்டுமே துணிந்து காவல்நிலையங்களில் புகார் அளிக்கிறார்கள்.

அந்தச் சிலரில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த் அனிதா[உண்மைப் பெயரல்ல] என்பவர். இவர் அளித்த புகாரின் பேரில்தான் காவல்துறை இவனை[மேலே உள்ள படம்]க் கைது செய்து விசாரித்துக் கொஞ்சம் தகவல்களை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறது[அறியப்படாத பல தகவல்கள் இருக்கக்கூடும்].

இதற்கு முன்பும் இவனைப் போன்றவர்கள் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்கள்.

சிக்காத கேடிகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?

அது மிகப் பலவாக இருக்கலாம்.

அவர்கள் மிகப் பலர் என்றால், அவர்களின் தொடர்பை எதிர்பார்த்து வலிந்து அவர்கள் விரிக்கும் வலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக மிகப் பலவாக இருக்கவே வாய்ப்புள்ளது.

இந்நிலை பெரிதும் கவலை அளிப்பதாக உள்ளது.

பெண்கள் தவறு செய்வதற்குப் பெண்களைப் பெற்ற பெற்றோர்களும் காரணம் ஆவார்கள்.

செல்லம் கொடுத்து வளர்க்கிற அதே வேளையில், சமூக வலைத்தளப் பயன்பாட்டில் விளையும் பெரும் பெரும் கெடுதிகள் பற்றியும் சொல்லிக்கொடுத்து விழிப்புணர்வு ஊட்டாதது இவர்கள் செய்யும் குற்றம் ஆகும்.

கல்வி கற்கும் இடங்களிலும் வேலை பார்க்கும் சூழல்களிலும், இயன்றவரை நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து பழகும் முறைகளையும் அவர்களுக்குக் கற்றுத் தருதல் மிக மிக மிக மிக மிக அவசியம்!

======================================================================================