எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 8 மார்ச், 2023

நாம் இந்தியர்கள்! வாருங்கள் ‘இந்தி’யர்களிடம் பாடம் கற்போம்!!


பீகாரின் பாட்னா நகரில் 4ஆவது வேளாண் திட்ட நிகழ்ச்சி முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடந்தது. இதில், லக்கிசராய்யைச் சேர்ந்த அமித் குமார் என்ற விவசாயி பங்கேற்றுப் பேசினார்; ஆங்கிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரைப் புகழ்ந்து தள்ளினார்.

மேனேஜ்மெண்ட் படித்தவரான அவர், புனேவில் நல்ல வேலையை விட்டுவிட்டுச் சொந்த மாவட்டத்தில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கான தைரியம் வருவதற்கு நிதீஷ் குமார் அரசு கொண்டுவந்த திட்டம்தான் காரணம் என்றெல்லாம் சொல்லி, முதல்வரைப் பாராட்டிக்கொண்டிருந்தார்.


இந்தப் புகழ்ச்சியால் கிறுகிறுத்துப்போய், அமித்குமாரைக் கட்டித் தழுவிக் கைகுலுக்கி நன்றி சொன்னாரா முதல்வர் நிதிஷ்குமார் என்று கேட்டால், ‘இல்லை’ என்பதே அதற்கான பதில்.


பேசுவதை நிறுத்தச் சொன்னதோடு, “இது இங்கிலாந்து நாடல்ல. நீங்கள் பீகாரில் இருக்கிறீர்கள். ஆங்கிலத்தில் பேசாதீர்கள்; நம் மொழியான இந்தியில் பேசுங்கள்” என்றார் முதல்வர் நிதீஷ்குமார்.


[இவர்களில்{பீகாரிகள்} பலருக்கு இந்தியே தெரியாது. பிஹாரில் இருந்து வருபவர்கள் போஜ்புரி, மைத்திலி மொழி பேசக் கூடியவர்கள்’ என்கிறது ‘இந்து தமிழ்’இல் வெளியான ஒரு கட்டுரை https://www.hindutamil.in/news/opinion/columns/955163-migrant-workers-and-north-indians-issues-in-tamil-nadu-4.html பொய்ச் செய்தி பரப்புகிறதா ‘இந்து தமிழ்’?]


“நான் படித்தது ஆங்கிலவழிக் கல்வியில்” என்றார் அந்தப் பேச்சாளர். 


கல்வி கற்க ஆங்கில மொழியைப் பயன்படுத்துவது வேறு விசயம். அதற்காக நம் தாய்மொழியான இந்தியை அலட்சியப்படுத்தக் கூடாது” என்றார் பீகார் முதல்வர்.


இதைக் கேட்டு உற்சாகமான பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.


நிதீஸ்குமாரும் அங்குக் கூடியிருந்த பீகார் மக்களும் இந்தியர்களே என்றாலும், தாங்கள் ‘பீகாரிகள்’ என்பதையும், தங்களின் தாய்மொழி ‘இந்தி’ என்பதையும் மறக்கவில்லை; மறப்பதில்லை.


இதே மாதிரியான ஒரு நிகழ்ச்சி நம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால்.....


புரிகிறதோ இல்லையோ, ஆங்கிலத்திலான சொற்பொழிவைக் கேட்டுக் கைதட்டி ஆரவாரம் செய்திருப்போம். 


நம் தாய்மொழி புறக்கணிக்கப்படும்போது நம் உள்ளம் கொதிப்படைவதில்லை; இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நம் தமிழ் அழியும் என்று தமிழர்களாகிய நாம் கவலைப்படுவதும் இல்லை. 


“வாழ்க தமிழ்” என்று வாய்கிழிய மேடைகளில் முழங்குகிறோமே தவிர, மனதாரத் தமிழ் வளர வேண்டும் என்று எண்ணுவதில்லை. அதை வளர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதும் இல்லை.


“தமிழைப் படி; தமிழில் படி” என்று இங்கு வலியுறுத்துவார் இல்லை, 


தமிழ் அழிந்துகொண்டே இருக்கிறது.


இங்கே தமிழுக்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கும் தமிழர்களே எதிரிகள்.


இந்தி வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் வளர்ச்சியில் நடுவணரசு தனிக் கவனம் செலுத்துகிறது[கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கிறது] என்பது மட்டும் அதன் அசுர வளர்ச்சிக்குக் காரணம் அல்ல; ‘இந்தி’யர்களின் அசைக்க முடியாத தாய்மொழிப் பற்றும் காரணம்.


குறிப்பு:

பதிவில் தமிழர்களின் தாய்மொழிப் பற்றின்மை குறித்துக் கடிந்துரைத்திருப்பினும், ’தம் உயிரினும் மேலாகத் தமிழை மதிப்பவர்களும் உளர்’ என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் உண்மை!

===========================================================================================

https://tamil.oneindia.com/news/patna/is-this-england-nitish-kumar-after-an-upwardly-mobile-farmer-speaks-in-english-499949.html

அன்புத் தம்பி அண்ணாமலைக்கு[பாஜக] ஓர் அவசரக் கடிதம்!!!

 

தம்பி,

உங்களை நான் ‘தம்பி’ என்று உறவுமுறை கொண்டாடுவதற்கு, வயது வித்தியாசம் என்பதைத் தவிர, அண்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பதோ, இருவருமே கொங்கு மண்டலத்தின் மைந்தர்கள் என்பதோ[ஹி... ஹி... ஹி!!!]  காரணம் அல்ல.

கீழ்வருவது, ‘நக்கீரன்’ தளத்தில்[https://www.nakkheeran.in/24-by-7-news/politics/put-me-and-prashant-kishore-same-cell-annamalai-request-chief-minister] நீங்கள் பேசியதாக வந்த செய்தியின் ஒரு சிறு பகுதி.

//திமுகவின் அரசியல் கொள்கை என்பது பிரிவினைவாதம். வடக்கு தெற்கு, திராவிட நாடு வேண்டும் என்று கேட்டவர் பெரியார். அந்த வழித்தோன்றலில் வந்தவர்கள் திமுகவினர்//

பெரியாரின் வழித்தோன்றல்கள் ‘தி.மு.க.’வினர் மட்டுமல்ல; என்னைப் போன்ற ‘வழித்தோன்றல்கள்’ பல்லாயிரக் கணக்கில் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பெரியாரின் வழித்தோன்றல்களாக இருப்பது குற்றமா? இன்று எங்களில் எவரும் திராவிடநாடு கேட்பதில்லை; கேட்கவேண்டிய[உங்களைப் போன்றவர்களின் தூண்டுதலால்] தமிழ்நாடும் கேட்பதில்லை.

கேட்பது போன்ற ஒரு பொய்யான நம்பிக்கையை இந்திய மக்கள் மனங்களில் விதைத்து, நடுவணரசைத் தூண்டிக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, தமிழர்களின் இனப்பற்றை வேரறுக்க நினைக்கிறீர்களா சகோதரரே?

“நாங்கள் தமிழர்களே[இந்தியத் தமிழர்கள் என்றும் சொல்லத் தயங்குவதில்லை]; பெரியார் வழி வந்தவர்களே” என்று ஆயிரம் தடவை, இமயமலையில் உச்சியில் நின்று, உலகறிய ஓங்கிய குரலில் நாங்கள் முழக்கமிடவும் செய்வோம், உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எங்களைச் சீண்டிக்கொண்டே இருந்தால்.

திராவிட நாடு கேட்பதை[எவரும் கேட்கவில்லை]க் கண்டிக்கிற உங்களுக்கு அண்மையில் ஊடகம் ஒன்றில் கீழ்வரும் காணொலி[வீடியோ] வெளியானது தெரியுமா?[காணொலிச் செய்தியை விவரித்து எழுதினால், காலிஸ்தான் ஆதரவாளர் என்று முத்திரை குத்துவீர்கள் என்பதால் அது தவிர்க்கப்பட்டது].

ஒரிஜினல் தேசியவாதியான நீங்கள்[‘நாங்களும் இந்தியர்களே’ என்று தமிழர்கள் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள்] இப்படியொரு காணொலி வெளியானதை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

அறிந்திருந்தால் அவர்களைக் கண்டித்துக் கடும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை சகோதரரே?[அதைக் காணும் வாய்ப்பு அமையவில்லை என்றால் தமிழ்நாடு என்னும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவரா நீங்கள்?]

அன்புத் தம்பி அண்ணாமலை அவர்களே,

தமிழ்நாடு முதல்வர் ஆகவேண்டும் என்னும் தணியாத ஆசையின் விளைவாகப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு நீங்கள் உள்ளாகியிருந்தால்.....

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘ராஜினாமா’ செய்யும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.

உங்களின் நிலைமையறிந்து அவர் ராஜினாமா செய்வார். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக உங்களை முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள்.

அதன் பிறகேனும் அடாவடித்தனமாகவும் முரட்டுத்தனமாகவும்[இதைக் கருத்தில்கொண்டுதான் உங்களின் கட்சி மேலிடம் உங்களைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராக்கியது என்பதைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு இல்லை] பேசித் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகாமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

உங்களைத் தம்பி என்று உறவுமுறை கொண்டாடியது தவறு என்றால் அன்புகொண்டு என்னை மன்னியுங்கள்.

நன்றி!

===========================================================================================