“அவள்[வேலைக்காரி] ‘குனிந்து’ குப்பை கூட்டிக்கொண்டிருந்தாள். என் மனம் குப்பையானது!”-கவிஞர் பழனி பாரதி.
அம்சவேணி எங்கள் வீட்டு வேலைக்காரி; விதவை; அம்சமான தேகக் கட்டுக்குச் சொந்தக்காரி. அவளை அனுபவிக்கும் ஆசை எனக்கு இருந்தது.
“என் குடிகாரப் புருஷன் பத்தாயிரம் கடன் வெச்சிட்டு மண்டையைப் போட்டுட்டான். வீட்டு வேலை செஞ்சி சம்பாதிக்கிறது வயித்துப்பாட்டுக்கே பத்தல. எப்படித்தான் கடனை அடைக்கப்போறனோ?’ என்று என் இல்லத்தரசியிடம் அவள் புலம்புவது வழக்கம். அந்தப் பத்தாயிரத்தைக் கொடுத்தால் படிந்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. மேலாடையைச் சரி செய்வதில் அவள் காட்டும் அசட்டை, என் தாபத்துக்குத் தூபம் போடுவதாக இருந்தது. தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
அந்தத் தருணமும் வந்தது.
கோடை விடுமறையானதால், பிள்ளைகளுடன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டுப் போய்விட்டாள் என் மனைவி.
வீடு பெருக்கிக்கொண்டிருந்தாள் அம்சவேணி.
“அம்சா” -அழைத்தேன்.
“என்னங்கய்யா?” -நெருங்கி வந்தாள்.
“பத்தாயிரம் இருக்கு. வாங்கிக்கோ” பணக்கட்டை நீட்டினேன்.
“எதுக்குங்க?”
“உன் கடனை அடைச்சுக்கோ. திருப்பித் தரவேணாம்.” -என் ஒரு கை ஆறுதலாய் அவள் தோளைத் தொட்டுச் சரிந்து அவள் இடையைத் தடவியது.
என்னை ஏறிட்டுப் பார்த்த அம்சவேணி, "இது ஒரு தடவைக்கா, ஒரு நைட்டுக்கா, இல்லே எல்லா நாளுக்குமா?” என்று கேட்டாள்.
அவளின் இந்தக் கேள்வி என்னை நிலை தடுமாற வைத்தது; உன்மத்தனாய் நின்றேன்.
”உடம்பை வித்துப் பிழைக்கறவகூட, ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு வாங்குறா. என் புருஷன் கை தவிர இன்னொரு கை என்னைத் தொட்டதில்லை. கட்டுக் குலையாத கவர்ச்சியான உடம்பும் எனக்கிருக்கு. பத்தாயிரம் போதாதுன்னு சொல்றேன். புரியுதா?” -நக்கலாய்ச் சிரித்தாள் அம்சவேணி.
தொடர்ந்தாள்: "பத்தாயிரம் தர்றேன்னு சொல்லாம, பத்து லட்சம் தர்றேன். எனக்கு ’வைப்பாட்டியா இரு’ன்னு சொல்லியிருந்தா ரொம்பப் பெருமைப்பட்டிருப்பேன். ஒரு வேலைக்காரிதானேன்னு ரொம்பச் சீப்பா நினைச்சிட்டீங்க. அப்படித்தானே?" இப்போது வாய்விட்டுச் சிரித்தாள் அம்சவேணி. அது கட்டுப்படுத்தப்பட்ட கடுங்கோபத்தின் வெளிப்பாடு என்பது எனக்குப் புரிந்தது.
“அம்மா வந்ததும், நீ இல்லாத நேரத்தில் அம்சவேணி பத்தாயிரம் பணம் கேட்டா. அவள் நல்ல நடத்தையுள்ளவளாத் தெரியல. இனி வேலைக்கு வராதேன்னு விரட்டிட்டேன்னு சொல்லுங்க. தனக்கு வாய்ச்சது எத்தனை உத்தமப் புருஷன்னு அம்மா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதனால எனக்கொன்னும் பாதிப்பு இல்ல. ஏன்னா, நான் வேலைக்காரிதானே.”
கையிலிருந்த துடைப்பத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள் அம்சவேணி.
* * * * *
‘நான்’ என்று தன்மையில் கதை சொல்வது, புனைகதை ‘உத்தி’களுள் ஒன்று. இந்த ‘நான்’, ‘பசி’பரமசிவமாகிய நான் அல்ல! நம்புங்கள்.
