எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 16 ஜனவரி, 2025

பெரியார் சாடிய முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி... வேறுபாடுகள்?

“..... கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி .....” என்றார் பெரியார்.

“கடவுளைக் கற்பித்தவனும், பரப்புகிறவனும் வணங்குகிறவனும் முட்டாள்கள்” என்று சொல்லியிருந்தாலே போதுமே. எதற்காக மூன்று வேறு வேறு சொற்களை அவர் கையாண்டார்?

சிந்திக்கத் தெரிந்தவர்கள் ஆறறிவு வாய்க்கப்பெற்ற மனிதர்கள்.

அறிவு இருந்தும்... சிந்திக்கத் தெரிந்திருந்தும்.....

உரிய ஆதாரங்கள் இல்லாமல்[கடவுளின் இருப்பு குறித்த ஆய்வுரைகளை வாசித்தறியலாம்] கடவுள் என்று ஒருவர் இருப்பதாகக் கற்பனை செய்தவ[னை]ர்களை ‘முட்டாள்’ என்றார் பெரியார்[சிந்திப்பதற்கான அறிவு இருந்தும் அதை முழுமையாக/முறையாகப் பயன்படுத்தாததால் அவ[ன்]ர்கள் ‘முட்டாள்[கள்]’ ஆனா[ன்]ர்கள்].

அறிவு இருந்தும், கடவுள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பது தெரிந்திருந்தும்.....

கடவுள் நம்பிக்கையைப் பரப்பி, முட்டாள்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பயன் பெறத் திட்டமிட்ட சுயநலமிகளை ‘அயோக்கியர்கள்’ என்றார்[அவர்கள் யார் என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்].

அறிவு இருந்தும் சிந்திக்கத் தெரியாமல்.....

கடவுளை வணங்குகிறவர்களைக்[பெரும்பான்மையினர்] காட்டுமிராண்டிகள் என்றார்.

திட்டமிட்டுச் செயல்படும் அயோக்கியர்களைத் திருத்த முடியாது.

முட்டாள்களையும், காட்டுமிராண்டிகளையும் முயன்றால் திருத்தலாம்.  திருத்த வேண்டும் என்னும் பேராசையால்தான்.....

“கடவுள் இல்லை; இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

பரப்பியவன் அயோக்கியன்

நம்புகிறவன் காட்டுமிராண்டி

கடவுள் இல்லை; இல்லவே இல்லை” 

என்று கடைசி மூச்சுவரை மூத்திரப் பை சுமந்து திரிந்தவாறு முழக்கமிட்டுத் தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார் ஈ.வெ.ராமசாமி என்னும்  பெரியார்.