எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 5 டிசம்பர், 2011

ஒரு நாத்திகன் அழைக்கிறான்.

டவுள் என்று ஒருவர் இருப்பதாக அனுமானித்து, அவரைப் போற்றி வழிபடுகிற அனைத்து மதங்களுமே, அவருக்குரிய முக்கியக் குணங்களில் ஒன்றாகக் ‘கருணை’யைக் குறிப்பிடுகின்றன.

‘கருணை வடிவானவன் கடவுள்’

ஓரளவு சிந்திக்கத் தெரிந்த காலக் கட்டத்தில், பேரழிவுகளை உண்டுபண்ணிய வெள்ளப் பெருக்கு, பெரு நெருப்பு, சூறாவளி, கடல்கோள்[சுனாமி], போன்றவற்றைக் கொடிய தெய்வங்களாகக் கருதி அஞ்சி நடுங்கியது மனித குலம்.

சிந்திக்கும் அறிவு வளர்ச்சிபெற்ற நிலையில், அறிவு வளர்ச்சியில் முன்னிலை பெற்றவர்கள், அனைத்துப் பேரழிவுச் சக்திகளுக்கும் மேலாக எல்லாம் வல்ல ஒரு பேராற்றல் இருப்பதாகச் சொல்லி, அதைக் ‘கடவுள்’ ஆக்கினார்கள்.

அந்தக் கடவுளை, ’வெறும் சக்தி’ எனச் சொல்ல மனமில்லாமல், அன்பு, அருள்[கருணை], பரிவு, இரக்கம், அண்டினோரைப் பாதுகாத்தல் என்று அனைத்து நற்குணங்களையும் அவரின் தனி உடைமை ஆக்கி மகிழ்ந்தார்கள்.

அவரை வழி பட்டால், வாழ்வில் துன்பம் விலகி இன்பம் மலரும் என்று நம்பினார்கள். அறிவு வளர்ச்சியில் பின் தங்கிய... சிந்திக்கும் ஆற்றல் குறைந்த மக்களை நம்ப வைத்தார்கள். அவர்களின் வழி வந்தவர்கள் அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார்கள்.

இது, மனித குல வரலாற்றில் கடவுள் நம்பிக்கை உருவானதன் ஆரம்ப நிலை மட்டுமே.

இதை எதிர்த்து, ‘கடவுள் பொய்; இயற்கையே மெய்’ என்று எதிர்வாதம் எழுந்தது. இது குறித்து விரித்துரைப்பின் அது நீளும்.

அதை விவரிப்பது நம் நோக்கமன்று.

‘கடவுள் கருணை வடிவானவர்’ என்று சொல்லப் பட்டதை... சொல்லப் படுவதை விவாதிப்பது மட்டுமே நம் விருப்பம்.

இது பற்றி விவாதிக்கத்தான் இன்றைய மதவாதிகளையும் ஆன்மிகவாதிகளையும் அன்போடு அறைகூவி அழைக்கிறோம்.

அனைத்து மதக் குருமார்களே, பரப்புரையாளர்களே, ஆன்மிகச் செம்மல்களே........

நீங்கள் நம்பும் கடவுள் கருணை வடிவானவர் என்பதற்கு, உங்கள் முன்னோடிகள் சொல்லிப்போன அதே காரணங்களைத்தான் நீங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

‘இன்பங்கள் நிறைந்த உலகைப் படைத்து, அந்த இன்பங்களைத் துய்க்கும் பேற்றை உயிர்களுக்கு வழங்கியவர் கருணை வடிவான கடவுள்’ என்று சொன்னார்கள். நீங்களும் சொல்கிறீர்கள்.

நீங்கள் படைத்த கடவுளைப் போலவே..... ஏன், அவரைவிடவும் நீங்கள் கருணை நெஞ்சம் படைத்தவராக இருக்கலாம். நாம் மறுக்கவில்லை. ஆனாலும், நாம் எழுப்புகிற வினா ஒன்று உண்டு.

இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்களை உள்ளடக்கிய உயிர்கள் அனுபவிப்பது இன்பம் மட்டும்தானா? துன்பமும்தானே?

இவற்றில் எது அதிகம்?

நடுநிலை உணர்வுடன், ஒரு முறையேனும் சீர்தூக்கிப் பார்த்ததுண்டா?

கருணைக் கடலான உங்கள் கடவுள் நிகழ்த்திய அற்புதங்களை நெஞ்சுருகச் சொல்லிச் சொல்லி, ஆனந்தப் படுவதற்கும், அவன் பெருமைகளை வியந்து துதி பாடுவதற்கும், விழாக்கள் நடத்திக் குதூகளிப்பதற்குமே உங்களுக்கு நேரம் போதவில்லை. இதற்கெல்லாம் ஏது நேரம்?!

இப்போதாவது சிந்தியுங்கள்.

பிற உயிர்களும் மனிதர்களும் அதிகம் அனுபவிப்பது இன்பத்தையா, துன்பத்தையா?[அவையவை... அவரவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தைப் பொருத்தது என்ற அனுமானம் வேண்டாம். எதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். கண்ணால் காணும் நடைமுறை வாழ்க்கையைக் கணக்கில் வையுங்கள்]

“இன்பமே’ என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

இயற்கை அழகை அனுபவிப்பது இன்பம். அது எழுப்பும் இன்னோசைகளைக் கேட்பது இன்பம். உண்பது இன்பம். உறங்குவது இன்பம். நறுமணங்களை நுகர்வது இன்பம். ஆண் பெண் இணைவது மகத்தான இன்பம். மழலைச் செல்வங்களைத் தழுவுவது அலுக்காத இன்பம்.....

இவை அனைத்திற்கும் மேலாக...........................

உள்ளம் உருக, உடம்பு சிலிர்க்க, நா தழு தழுக்க ‘அவன்’ கருணையை நாளெல்லாம் பாடிப் பாடிப் பரவசப்பட்டுப் பெறுவது ‘பேரின்பம்’!

இப்படி நீங்கள் இடும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிச் சிந்தித்ததுண்டா?

சிந்தியுங்கள். சிந்தித்துப் பட்டியலிட்டால் இந்தப் பட்டியலைவிடவும் அது வெகுவாக நீளும்.

அடுத்தப் பதிவில் அந்தப் பட்டியல் இடம்பெறும்.