எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 25 நவம்பர், 2024

ஐயப்பனுக்கு ஆங்கிலம் அத்துபடி!!!

//'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என்ற கானா பாட்டைப் பாடிய இசைவாணி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் மற்றும் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது//[தினமலர்].

உலகங்களைப் படைத்து[கடவுள் ஒருவரே என்னும் கொள்கையின்படி], அனைத்து உயிர்களையும் படைத்து, அவற்றில் குறிப்பிடத்தக்க மனித இனத்தை உருவாக்கி, ஆயிரக்கணக்கான மொழிகளை மனிதர்களுக்கு வழங்கியருளியவரும் ஐயப்பனே[அனைத்து மொழிகளையும் அறிந்தவர் அவர் மட்டுமே].

உலக மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று.

எனவே, ஐயப்பனை முன்னிலைப்படுத்தித் தமிழில் கானாப் பாடல் பாடும்போது, “ஐ யாம் சாரி ஐயப்பா” என்று ஆங்கிலத்தில் தொடங்கியிருப்பதைக் குற்றம் சொல்பவர்கள் சிறுமதியாளர்கள்.

‘என்னப்பா’ என்னும் சொல்லாட்சியும், கடவுள்களை நினைவுகூரும்போதெல்லாம் பக்தர்கள் பயன்படுத்துகிற ஒன்றுதான்.

எடுத்துக்காட்டு.....

“கடவுளே நான் என்னப்பா[‘என்னய்யா என்பதும் வழக்கில் உள்ளது] பாவம் பண்ணினேன்.”

“அடக் கடவுளே” -துயரத்தின் எல்லையைக் கடக்கும்போது அவரை இப்படி அவமரியாதைக்கு உள்ளாக்குவதும் உண்டு.

ஆகவே.....

கானாப் பாடல் பாடிய இசைவாணியை இழித்துரைப்பவர்கள் இழிகுணத்தவர்கள் என்பது அறியத்தக்கது!


“ஐயப்பா நீ பொய்யப்பா? என்று கடவுள் மறுப்பாளர்கள் ஐயனை மட்டம்தட்டியபோதும் அவர் கோபித்துக்கொண்டது இல்லை!!

வாழ்க இசைவாணி! என் அப்பன் ஐயப்பனும் வாழ்க!!

* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/ghanaian-singer-kusumbu-controversy-over-dragging-ayyappan-into-a-frenzy-/3789194


ஸ்டாலின் ஆணவப் பேச்சும் அன்புமணியின் அடங்காத கடுங்கோபமும்!!!

“ஸ்டாலின் அதானியைச் சந்தித்தது ஏன்?” என்று வன்னியர் குலக் காவல் தெய்வம் ராமதாஸ் கேட்டாராம். “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை” என்று ஸ்டாலின் ஆணவமாக[ஆணவமா?!]ப் பதில் சொன்னாராம்.

பொங்கியெழுந்தார் ராமதாஸின் தவப்புதல்வன் அன்புமணி. “சமூகச் சீர்திருத்தவாதியாம் ராமதாசை அசிங்கப்படுத்திய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால், உணர்ச்சிவசப்பட்டிருக்கும் ‘பாமக’ தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலாது” என்று சீறியிருக்கிறார்[‘news தமிழ்’ செய்தி. 25.11.2024 பிற்பகல் 2.45].

அன்புமணியை ஆதரிப்பதோ கண்டிப்பதோ நம் நோக்கமல்ல.

‘தொண்டர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறாரே, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருத்தல் வேண்டும்.

“ஸ்டாலினை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புங்கள்; ஊரூருக்குப் போராட்டம் நடத்துங்கள். ஸ்டாலின் போகுமிடமெல்லாம் வாகனத்தை வழிமறித்து அடித்து நொறுக்குங்கள்[கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சிக்கு உள்ளானவர்கள் செய்யும் செயல் அடித்து நொறுக்குவதுதான்]” -அன்புமணி இப்படிச் சொல்ல நினைத்திருப்பாரோ? சொல்லவில்லை. சொல்லியிருந்தால்.....

அவர் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதால் தொண்டர்களைத் தூண்டிவிடுவதோடு நிறுத்திக்கொண்டார்.

தொண்டர்கள் தடியடிபடலாம்; சிறைக்குச் சென்று வதைபடலாம். அவையெல்லாம் ‘பாமக’வின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்யும் தியாகம்.

தொண்டர்களின் தியாகத்தில்தானே கட்சிகள் வளர்ச்சி அடைகின்றன! தலைவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்!!

பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களைக் கொண்டது ‘பாமக’. அன்புமணி அதன் தலைவர்[அறிக்கைவிடுவது மட்டுமே ராமதாஸின் பணி].

அவர் வாழ்க! வளர்க!!