எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 25 நவம்பர், 2024

ஸ்டாலின் ஆணவப் பேச்சும் அன்புமணியின் அடங்காத கடுங்கோபமும்!!!

“ஸ்டாலின் அதானியைச் சந்தித்தது ஏன்?” என்று வன்னியர் குலக் காவல் தெய்வம் ராமதாஸ் கேட்டாராம். “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை” என்று ஸ்டாலின் ஆணவமாக[ஆணவமா?!]ப் பதில் சொன்னாராம்.

பொங்கியெழுந்தார் ராமதாஸின் தவப்புதல்வன் அன்புமணி. “சமூகச் சீர்திருத்தவாதியாம் ராமதாசை அசிங்கப்படுத்திய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால், உணர்ச்சிவசப்பட்டிருக்கும் ‘பாமக’ தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலாது” என்று சீறியிருக்கிறார்[‘news தமிழ்’ செய்தி. 25.11.2024 பிற்பகல் 2.45].

அன்புமணியை ஆதரிப்பதோ கண்டிப்பதோ நம் நோக்கமல்ல.

‘தொண்டர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறாரே, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருத்தல் வேண்டும்.

“ஸ்டாலினை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புங்கள்; ஊரூருக்குப் போராட்டம் நடத்துங்கள். ஸ்டாலின் போகுமிடமெல்லாம் வாகனத்தை வழிமறித்து அடித்து நொறுக்குங்கள்[கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சிக்கு உள்ளானவர்கள் செய்யும் செயல் அடித்து நொறுக்குவதுதான்]” -அன்புமணி இப்படிச் சொல்ல நினைத்திருப்பாரோ? சொல்லவில்லை. சொல்லியிருந்தால்.....

அவர் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதால் தொண்டர்களைத் தூண்டிவிடுவதோடு நிறுத்திக்கொண்டார்.

தொண்டர்கள் தடியடிபடலாம்; சிறைக்குச் சென்று வதைபடலாம். அவையெல்லாம் ‘பாமக’வின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்யும் தியாகம்.

தொண்டர்களின் தியாகத்தில்தானே கட்சிகள் வளர்ச்சி அடைகின்றன! தலைவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்!!

பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களைக் கொண்டது ‘பாமக’. அன்புமணி அதன் தலைவர்[அறிக்கைவிடுவது மட்டுமே ராமதாஸின் பணி].

அவர் வாழ்க! வளர்க!!