எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

'சாதனை'... சிறு குறுங்கதை!

“என்னோட பள்ளித் தோழர் ஒருத்தருக்குக் கலைமாமணி விருது கிடைச்சிருக்கு”- செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த வாசுதேவன் சொன்னார்.

“அப்படியா? உங்ககூட, கல்லூரியில் ஒன்னாப் படிச்ச ஒருத்தருக்கு ஏதோ நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்கிறதாச் சொன்னீங்களே?” என்றார் அவர் மனைவி தேவி.

“அது போன மாசம். அதையும் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சிட்டேன். அது மட்டுமில்ல, என்னோட படிச்ச ஒரு பொண்ணு, இந்த வருசம் செஸ் போட்டியில், ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வாங்கியிருக்கு. இப்படி, இன்னும் யாரெல்லாமோ எதையெல்லாமோ சாதிச்சிருக்காங்க. என்னோட படிச்சவங்க சாதனைகள் நிகழ்த்துறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, அவங்களோட படிச்ச நான் எதுவுமே சாதிக்கல.” -மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் வாசுதேவன்.

"வணிகவரித் துறையில் அதிகாரியா இருக்கீங்க. ஏராளமான வாய்ப்பிருந்தும் லஞ்சமே வாங்காம கடமையைச் செய்யுறீங்க. பாராட்டையும் விருதையும் எதிர்பார்க்காத இந்தச் சாதனைக்கு வேறு எந்தச் சாதனையும் ஈடாகாதுங்க.”- தேவியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

மன வருத்தம் தணிந்தார் வாசுதேவன்.

===============================================================================

பழைய 'குமுதம்' இதழில் வெளியான 'என்' கதை.