கற்கள் ஒன்றோடொன்று உரசும்போது ‘தீ’ப்பொறி சிதறுவதையும், காய்ந்த மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காடுகள் தீப்பற்றி எரிவதையும் ஊன்றிக் கவனித்த காட்டுமிராண்டிகளாக இருந்த நம் மூதாதையர்கள், கற்களை உரசி, சருகுகளிலும் காய்ந்த மரத் துண்டுகளிலும் தீயைப் பற்றவைத்து, பச்சையான இறைச்சியை அதில் சுட்டுச் சுவைகூட்டி உண்ணப் பழகினார்கள்.
அப்போதெல்லாம் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.
காலப்போக்கில் அதை உருவாக்குவதில் புதிய புதிய வழிமுறைகள் கையாளப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருப்பிடத்தில் சூழ்ந்துள்ள இருளை அகற்ற விளக்குகளைக் கண்டுபிடித்தார்கள்[சிம்னி விளக்கு, மண் விளக்கு, லாந்தர் என்றிப்படி...]. அப்போதும் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.
சமையலுக்காக அதைப் பயன்படுத்திய நிலையிலும் ‘தீ’ தீதான்.
குவிந்துகிடக்கும் குப்பைகளை அள்ளி எடுத்து அப்புறப் படுத்துவதைத் தவிர்க்க, அவற்றில் தீயிட்டார்கள். பற்றிப் பரவி, பெரு நெருப்பாக அது கொழுந்துவிட்டு எரிந்தபோதும் அது சாதாரணத் ‘தீ’தான். மனிதர்கள் பகை காரணமாக ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் உடமைகளுக்குத் தீயிட்டு அழித்தபோதும் ‘தீ’ தீயாகவே இருந்தது.
இவ்வாறு, பலவகையிலும் பயன்படுத்தப்பட்ட அதே ‘தீ’தான் கோயில்களில் விளக்கு ஏற்றும்போது ‘தீபம்’ ஆன பேரதிசயம் நிகழ்ந்தது.
அது தானாக நிகழவில்லை; கட்டப்பட்ட கோயில் கலசங்களில், வேத மந்திரங்கள் சொல்லி அவற்றைப் புனிதமாக்குவதாகவும், உள்ளே வைக்கப்படும் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதி, அபிஷேகம் செய்து, அவற்றில் கடவுளைக் குடியேற்றுவதாகவும் கதையளந்து மக்களை நம்ப வைத்த ‘அவர்கள்’தான் ‘தீ’யைப் புனிதமான ‘தீபம்’ ஆக்கினார்கள்.
மக்களும் அதை நம்பினார்கள்.
கோயில்களில், உலோகங்களால் ஆன விளக்குகளில் தீபம் ஏற்றும் வழக்கம், காலப்போக்கில் கடவுள்கள் குடியிருப்பதாகச் சொல்லப்படும் மலை உச்சிகளில், அகன்ற பெரிய குண்டாக்களிலும் அண்டாக்களிலும்[கொப்பரை] பிரமாண்டமான திரிகள் வைத்து தீயைப் பற்றவைத்து ‘மகா தீபம்’ ஏற்றுவது வழக்கத்திற்கு வந்தது.
வெறும் ‘தீ’, இன்று மக்களுக்கிடையேயான மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் காரணமாகவுள்ள ‘மகா தீபம்’ ஆன கதை இதுதான்!


