அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 10 செப்டம்பர், 2012

முதல் அறுவை!

ஆனந்த விகடனில் [5.9.12] வெளியான, பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதை [’அடுத்த முறை’] இங்கே ‘அறுவை’ செய்யப்படுகிறது!                                            

 முதல் அறுவை!

கதை சொல்வது ஒரு கலை.

நெடுங்கதையோ குறுங்கதையோ, கதை கேட்கும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.  சொல்வது அத்தனை சுலபமல்ல..

அதில் தேர்ந்தவர்கள் கதை இலக்கிய வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.

புதினம், சிறுகதை, நாடகம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்தக் கதை இலக்கியம் அமோக வளர்ச்சி பெற்றது கடந்த நூற்றாண்டில்தான்.

இதன் வளர்ச்சியில் படைப்பாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் பங்களிப்பு இருப்பது போலவே, பருவ இதழ்களுக்கும் முக்கிய பங்குண்டு.

இன்றைய காலக்கட்டத்திலும் ,கதை இலக்கியப் பணியில் இவை ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்ததே.

இவற்றின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

பருவ இதழ்களில், பிறவற்றைக் [மாத, மாதம் இருமுறை, காலாண்டு வெளியீடுகள்] காட்டிலும் வார இதழ்களின் விற்பனை மிக அதிகம் எனலாம்.

குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன், ராணி, கல்கி, தேவி, பாக்யா போன்றவை விற்பனையில் முன்னணி வகிப்பவை.

இவற்றில் வெளியாகும் சிறுகதை, ஒரு பக்கக் கதை போன்றவற்றின் ‘தரம்’ குறித்த என் மதிப்பீடுகளைப் பிறருடன் பகிர்வதற்காகவே இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பகிர்வு  பிறருக்கு, குறிப்பாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு ஓரளவேனும் உதவும் என்ற நம்பிக்கையுடன்.................

 முதன் முறையாக, இவ்வார ஆனந்த விகடனில் [5.9.12] வெளியான, பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதையைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறேன்.

‘சுருக்’,  ’நறுக்’ பற்றியெல்லாம் கவலைப்படாமல், சிறுகதைக்குப் பல பக்கங்கள் ஒதுக்குகிற விகடன், இக்கதைக்கும் நான்கு பக்கங்களுக்கு மேல் ஒதுக்கியிருக்கிறது. இதன் சுருக்கத்தை...........

“கொஞ்சம் இரு. சுருக்கத்தை அப்புறம் சொல்லலாம். முதல்ல கதைத் தலைப்பு என்னன்னு சொல்லு”

என்ன இது, திடீர்னு ஒரு குறுக்கீடு! யாருங்க நீங்க?

“நான் யாரா இருந்தா என்ன? ஒரு X ன்னு வெச்சிகிட்டு பதில் சொல்லு”.

சொல்றேன்.

‘அடுத்த முறை’..........இதுதான் தலைப்பு.

“என்னப்பா இது? தலைப்பு கவர்ச்சியா, வாசகனைப் படிக்கத் தூண்டுறதா இருக்கணும்னு சொல்வாங்க. இது அப்படி இல்லியே”.

அது உண்மைதாங்க. ஆனா, இவரை மாதிரி பிரபல நட்சத்திர எழுத்தாளர்களிடம் அதை எதிர்பார்க்கக் கூடாதுங்க. ரொம்ப கனமான ‘கதைக்கரு’ வை வெச்சிச் கதை வடிக்கிறவங்க இவங்க. தலைப்பெல்லாம் இவங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல

“நடை எப்படி?”

”அவர் நடை எனக்கு எப்படிங்க தெரியும்? அசோகமித்திரனை நான் பார்த்ததே இல்லீங்க”.

“இந்த லொள்ளுதான் வேண்டாங்கிறது. வாசகன் கொட்டாவி போடாம படிச்சி முடிக்கணும்னா, கதை நடை [style] சூப்பரா இருக்கணும்பாங்களே, அந்த நடையைக் கேட்டேன்”.

அதை ஏன் கேட்குறீங்க. நாலு பக்கத்தைப் படிச்சி முடிக்கறதுக்குள்ள நாலஞ்சி தடவை தூங்கி விழுந்துட்டேன். அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?. பிரபல எழத்தாளர்னா, அழுத்தமான ‘கதைக்கரு’ இருக்கா? உன்னதமான ‘உள்ளடக்கம்’ இருக்கான்னுதான் பார்க்கணும்.

“அப்படியா, சரி. இனிமே நீ கதைச் சுருக்கம் சொல்லலாம்”.

அவன் பேரு ஸ்ரீகுமார். வேலை பார்த்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பொண்ணு ரமாவும் இவனும் வீட்டாருக்குத் தெரியாம கல்யாணம் கட்டிக்கிறாங்க......

“கொஞ்சம் இருப்பா....ஏன்? ரெண்டு வீட்டிலும் எதிர்ப்பா?”

இவங்க முன்கூட்டியே வீட்டில் அனுமதி கேட்டதாகவே தெரியல. ஒரு கட்டத்தில், ’என்கிட்ட சொல்லியிருந்தா நான் எல்லார் சம்மதத்தையும் கேட்டுப் பத்திரிகை வெச்சிக் கல்யாணம் செய்திருப்பேன். தம்பி, ஏன் இந்தத் திருட்டுக் கல்யாணம்?’ என்று இவன் மாமனார் இவன்கிட்டே சொல்றார். அப்புறம் ஏன் இவங்களுக்கு அசோகமித்திரன் திருட்டுக் கல்யாணம் செஞ்சி வெச்சார்னு தெரியல.

“அதை அவர்கிட்டதான் கேட்கணும். மேலே சொல்லு”.

ஸ்ரீகுமாரும் ரமாவும் மாலையும் கழுத்துமா பெத்த அம்மா முன்னால வந்து நிற்கிறாங்க. அவள் போட்ட கூச்சலில் தெருவே கூடிடுது.

“அடப் பாவமே!”

கண்ணீரும் கம்பலையுமா நிற்கிற பெண்டாட்டியை அவள் வீட்டில் விட்டுட்டுத் தன் வீட்டுக்கு வருகிறான் ஸ்ரீகுமார். நீ வேலைக்குப் போக வேண்டாம். அவள் மூஞ்சியில் முழிக்க வேண்டாம். நான் உனக்கு நல்ல பொண்ணாப் பார்க்கிறேன்” என்கிறாள் இவன் அம்மா.

“அம்மா நீ அப்பாவைச் சித்திரவதை பண்றதோட நிறுத்திக்கோ’ என்று கடுபடிக்கிறான் ஸ்ரீகுமார்.

“அறுவை மருத்துவா, கொஞ்சம் இருப்பா. எனக்கொரு சந்தேகம். குமாரோட அம்மா தன் புருஷனை எப்படியெல்லாம் சித்ரவதை பண்ணினாளாம்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன்”.

அது சாத்தியமில்ல.

“ஏன்?”

கதாசிரியர் இதைப் பத்தி ஒன்னுமே சொல்லல.

அந்த அம்மா கேரக்டரை எப்படிப் படம் பிடிக்கிறார்? அவங்க நல்லவங்களா, கெட்டவங்களா, இல்லை, ரெண்டுங்கெட்டானா?”

மன்னிக்கனும். இதுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது.

“கதையை முழுசா படிச்சியா?”

வரிவரியா வார்த்தை வார்த்தையா படிச்சுட்டேன். அந்த அம்மாவை அசோகமித்திரம் ஒழுங்கா ’கேரக்டரைஸ்’ பண்ணவே இல்லை.

”நல்லா யோசனை பண்ணிச் சொல்லு. ஸ்ரீகுமாரோட அப்பா வாயால அந்த அம்மாவின் குணாதிசயங்களை ஆசிரியர் விவரிச்சிருப்பாரே?”.

அதையும் அவர் செய்யல.

‘போகட்டும். மாமியார் பண்ணின கலாட்டாவில், கண்ணீரும் கம்பலையுமா பிறந்த வீடு போனாளே ஸ்ரீகுமார் பெண்டாட்டி....என்ன பேர் சொன்னே.... ஆங்...ரமா. அவளைப் பத்தி சொல்லு அறுவை”.

கல்யாணமாகி ஏழெட்டு மாசத்தில் அது அமெரிக்கா போயிடுச்சி.

“அமெரிக்காவுக்கா, எதுக்கு?”

இந்தக் கேள்விக்கும் அ.சோ.மித்திரன்தான் பதில் சொல்லணும்.

”என்னாய்யா எதைக் கேட்டாலும் அவரையே கை காட்டுறே”.

கதை எழுதினவர் அவர்தானே.

“அந்தப் பொண்ணு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கா?”

தெரியல. அதைப் பத்தியும் அவர் சொல்லல.

‘தெரியல...தெரியல....தெரியல. உன் கிட்டே நான் கதை கேட்க வந்ததே தப்பு. பாதியில் விட்டுட்டுப் போகவும் மனசில்ல. சொல்லு. ”இங்க நடக்குற கதையை அமெரிக்காவுக்கு ஏன் கடத்தினார்? இதுக்காவது பதில் தெரியுமா?”

அவரைச் சந்திக்க முடிஞ்சா கேட்டுச் சொல்றேன்.

”நீ ஒன்னும் கேட்க வேண்டாம். மிச்சம் இருக்கிற கதையைச் சொல்லி முடி”.

அமெரிக்காவிலிருந்தே ஃபோன் பேசிப் பேசி ஸ்ரீகுமாருக்கு தெம்பூட்டி, இவனை B.A. பாஸ் பண்ண வெச்சுடறா ரமா. இவனையும் அமெரிக்காவுக்கு வரவழைச்சு சொந்தமா ஒரு சிற்றுண்டிக் கடை வெச்சுத் தர்றா. சில வருஷங்கள் கழிச்சி, குழந்தைகளோட மாமனார் வீட்டுக்கு வந்த இவன், தான் மட்டுமே பெத்தவங்களைப் பார்த்துட்டு  அமெரிக்கா திரும்பிடறான். நாலு வருஷம் கழிச்சி, இப்போ பெத்தவங்களைச் சந்திக்கிறான். இவங்க சந்திச்சிப் பேசுற இந்தச் சம்பவம்தான் ‘அடுத்த முறை’ என்னும் இந்தச் சிறுகதையின் தொடக்கம். நான் சொன்ன மத்த சம்பவங்கள் எல்லாம் ’பின்னோக்கு’ [flash back] என்ற உத்தியைக் கையாண்டு ஆசிரியர் சொன்னது.

”அது என்ன பின்னோக்கு உத்தி? விளக்கமா சொல்லு”.

ஒருத்தன் ஊரைச் சொல்லி, பேரைச் சொல்லி, ஆதியோடந்தமா கதையை விவரிக்கிறது பழைய கதை சொல்லும் பாணி. அப்படியில்லாம, கதையின் நடுவில் வர்ற சுவையான சம்பவத்தைக் கதையின் தொடக்கமா வெச்சி, மற்ற சம்பவங்களை அடுக்கிட்டுப் போறதைத்தான் பின்னோக்கு உத்தின்னு சொல்வாங்க. இந்த உத்தி, மிச்சக் கதையையும் ஆர்வத்தோட படிக்கத் தூண்டும்.

‘இந்த உத்தி இந்தக் கதையிலும் ஆர்வத்தைத் தூண்டுதா?”

இல்ல. ஆனாலும் கதை முழுக்கப் படிச்சுட்டேன். கதையின் முடிவைச் சொல்லிடுறேன். என்ன சொன்னேன்? ஸ்ரீகுமார் நாலு வருசத்துக்கு அப்புறம் அம்மாவைச் சந்திச்சான், இல்லியா?

“சொல்லு”.

‘நீ மட்டும் வந்திருக்கிற, நான் ரமாவையும் என் பேரப் புள்ளைகளையும் பார்க்க வேண்டாமா?” என்கிறாள் அம்மா. [அம்மாவிடம் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்ததுன்னு ஆசிரியர் விளக்கல].

அடுத்த முறை [இதுதான் கதையின் தலைப்பு] பெத்தவங்களை அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போறதா ஸ்ரீகுமார் சொல்றான்.

அம்மா உடம்பு பூதம் மாதிரி பெருத்து நகர முடியாம இருக்கா. ”பத்து வருஷமா ஏதேதோ மருந்து சாப்பிடுறா” ன்னு அப்பா சொல்றார். அதுக்கு மேல அவருக்கு ஏதும் சொல்ல முடியல. அப்பாவை நொந்து கொள்கிறான் குமார்.

அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போவதாகக் குமார் சொல்ல, அவள் மறுக்கிறாள்.

பெற்றோருக்குத் தேறுதல் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் பயணம் புறப்படுகிறான் குமார்.

‘கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள். அழுத மாதிரி தெரியவில்லை’ என்கிறார் ஆசிரியர்.

அவன் ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ”உங்கள் அம்மா போய்விட்டாள்” என்கிறாள் ரமா.

வாசகன் எதிர்பார்க்காத ஒரு முடிவைக் [suspense] கொடுத்துக் கதையை முடிக்கிறார் அசோகமித்திரன். இவர் இந்த உத்தியை இங்கே கையாண்டது பாராட்டத்தக்கது.

”ஒரு வழியா கதையை விரிவாகவே சொல்லி முடிச்சிட்டே. இந்தக் கதையின் மூலமா அசோகமித்திரன் சொல்ல நினைப்பது [message]? அல்லது, இந்தக் கதையின் ‘கரு’ [theme] என்ன என்பதைப் புரியும்படி சொல்லிடு”

எந்த ஒரு கதாபாத்திரத்தையும் முழுமையா சித்திரிக்கல. நிகழ்ச்சி அமைப்பிலும் தெளிவான திட்டமிடல் இல்ல. அப்புறம் எப்படி கருவைக் கண்டுபிடிக்கிறது?

"புனைகதை அறுவை மருத்துவன்னு பெத்த பேர் சூட்டிக்கிட்டு இப்படி நழுவுனா எப்படி? நல்லா சிந்திச்சிப் பாரு. அசோகமித்திரன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். கருவைக் கதைக்குள்ளே எங்காவது ஒளிச்சி வெச்சிருப்பாரு. நல்லா தேடு”.

ஆங்...கண்டுபிடிச்சுட்டேன். ஸ்ரீகுமாரின் அப்பாவும் மனைவிக்குக் கட்டுப்பட்டவராய் பெத்த தாயைத் தவிக்க விட்டவர். அந்த அம்ம இறந்தபோதுகூட இவர் அவரோடு இல்லை என்ற தகவல் கதையில் இடம் பெற்றிருப்பது இப்போது நினைவுக்கு வருது. ஸ்ரீகுமாரும் தன் அப்பவைப் போலவே தன் தாயைத் தவிக்க விட்டவன். அவள் சாகும்போது இவன் அவளுடன் இல்லை. இதன் மூலம் அசோகமித்திரன் சொல்ல நினைப்பது..............................

’இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் பெண்டாட்டிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இவர்களைப் பெற்று வளர்த்தவர்கள் நிராதரவாக வாழ்ந்து, அனாதைகளாகச் செத்துப் போகிறார்கள்’.

உண்மையில் இதுதான் இந்தக் கதையின் கருவா?

என்னுடைய இந்த விமர்சனம் ஏற்கத் தக்கதா?

கதையைப் படித்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:

இது முதல் இடுகை மட்டுமல்ல; ‘முன்னோட்ட இடுகை’யும்கூட.

வாரத்தில் மூன்று நாட்களேனும் இடுகை சேர்க்கும் எண்ணம் உள்ளது. சூழ்நிலையின் பாதிப்பால் இடுகைகளின் எண்ணிக்கை குறையவும் கூடும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

2 கருத்துகள்:

  1. விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.
    இது உங்க பழைய ப்ளாக்கா பதிய ப்ளாக்கா.உங்க அலெக்சா ரேங்கிங் ஆறு லட்சத்து எண்பதாயிரத்துல இருக்கு சில பிரபல பதிவர்களுக்குக் கூட இதைவிடக் குறைவாத்தான் இருக்கு.
    நீங்க பதிவெழுதி விட்டு சும்மா ஒக்காந்திருக்கக் கூடாது.நீங்க பதிவுலகத்தில இருக்கீங்க அடையாளம் காட்ட பிற பதிவுகளை படிச்சு கருத்து போடுங்க.
    பதிவெழுதி பேர் வாங்குகிறவர்களைவிட கருத்தெழுதிப் பேர் வாங்குபவர்கள் உண்டு. நிச்சயம் பதிவுலகில் விரைவில் முன்னேறுவீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி முரளிதரன்.

    இது பழைய பிளாக்தான். ஒரு ‘பொருள்’பற்றி அறுபது பதிவுகளுக்கு மேல் எழுதினேன்.பதிவுகள் திருடப்பட்டதால், அதே தலைப்பில் எழுதுவதை நிறுத்தியதோடு, அனைத்தையும் draft இல் சேர்த்துவிட்டேன்.

    நூலாக வெளியிடும் எண்ணம் இருப்பதால் print out எடுத்து வைத்துள்ளேன்.

    அலெக்ஸா ரேங்க் ஐந்து லட்சத்தைத் தொட்டது. ஒரு மாதத்திற்கு மேல் பதிவு போடாததால் சரிவு ஏற்பட்டுவிட்டது.

    பழைய பிளாக்கையே முற்றிலும் புதிய ஒன்றாக மாற்றியிருக்கிறேன்.

    சில நாட்களில் தொடர்ந்து எழுதவுள்ளேன்.

    என்னைப் பாராட்டி உற்சாகமளித்த தங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு