வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

கருணைக் கடவுள்களும் கொடுத்துவைத்த கழுதையும்!!!

விநாயகர்: எலி(மூஞ்சூறு)

முருகன்: மயில்

சிவன்: காளை(நந்தி)

மகா விஷ்ணு: கருடன்(பறவை) மற்றும் ஆதிசேஷன்(பாம்பு)

துர்கை / பராசக்தி: சிங்கம்

சரஸ்வதி: அன்னப்பறவை

மகாலட்சுமி: ஆந்தை

சனி பகவான்: காகம்

மகேஸ்வரன் / பைரவர்: நாய்

எமதர்மன்: எருமை

இந்திரன்: ஐராவதம்(வெள்ளை யானை)  

விநாயகர் முதலான கடவுள்களைச் சுமந்து திரிந்த… திரியும்[?] எலி முதலான மேற்கண்ட விலங்குகளும் பறவைகளும் கொடுத்துவைத்தவை எனலாம்.

இவற்றுக்கான நல்வாய்ப்பை எண்ணி எண்ணி நான் வியப்பதுண்டு.

இதற்கிடையே, பொறுமையின் மகத்தான அடையாளமும், பொதி சுமப்பத்தில் ஈடு இணையற்றதும், குப்பை மேட்டிலும் சாம்பல் குவியலிலும் உருண்டு புரண்டு குதூகலித்துச் சுகம் காணுவதுமான கழுதையை, எந்தவொரு இந்துமதக் கடவுளும் தன் வாகனமாகப் பயன்படுத்தாது ஏன் என்னும் கேள்வி, என் அடி நெஞ்சை நெருடி நீங்காத பெரும் கவலையில் ஆழ்த்துவதும் உண்டு.சற்றும் எதிர்பாராத வகையில், ‘கடவுள்களும் கழுதை வாகனமும்’ என்று கூகுளில் தட்டச்சு செய்து தேடியபோது கிடைத்த தகவல்கள் என்னை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

தகவல்கள்:

பெரியம்மை போன்ற நோயிலிருந்து காக்கும் சீத்தலா தேவி கழுதையை வாகனமாகக் கொண்டுள்ளார். நவராத்திரியில் வணங்கப்படும் காளராத்ரி தேவி கழுதையின் மீது பவனி வருவது வழக்கம். ரிக் மற்றும் இதர வேதங்களின்படி இந்திரனுக்கும் அக்னி பகவானுக்கும்கூட இந்தக் கழுதைதான் வாகனம்.

தேடக் கிடைத்த இன்னொரு தகவலால் நீங்காத பேரின்பத்தில் திளைத்தேன் நான். அது…..

இயேசுநாதர்[பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவர் கடவுளின் மகனாக அவதரித்தார் என்று நம்புகின்றனர்> விக்கிப்பீடியா].  எருசலேமுக்குச் செல்லும்போது எளிய முறையில் பயணம் செய்யக் கழுதையைப் பயன்படுத்தியுள்ளார்[https://www.quora.com/Did-Jesus-ride-both-a-donkey-and-a-colt-into-Jerusalem].

மேற்கண்ட தகவல்களைப் படித்ததிலிருந்து இந்த வினாடிவரை, அற்ப மானிடனாகப் பிறக்காமல், மேற்கண்ட உயிரினங்களில் ஒன்றாகவோ, குறைந்தபட்சம் ஒரு கழுதையாகவோ நான் பிறந்திருக்கலாம். அவ்வாறு பிறக்காததால் உண்டான ஏக்கம் என்னை வருத்திக்கொண்டிருக்கிறது.