'பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது' என்னும் கருத்தாக்கத்தைச் சமண மதத்தவர் ஏற்பதில்லை.
'ஆதியும் அந்தமும் இல்லாதது பிரபஞ்சம். அது இருக்கிறது; இருந்துகொண்டே இருக்கிறது. எப்போதும் அழிவதும் இல்லை' என்று நம்புகிறவர்கள் அவர்கள்.
இருந்துகொண்டே இருக்கிற இந்த உலகில்[பிரபஞ்சத்தில் இதுவும் அடக்கம்] பழம் வினைப்பயன்களுடன் வந்து பிறந்திருக்கிறோம் நாம். அவற்றைக் களைவதற்கான வாய்ப்பை இங்கு நாம் பெற்றிருக்கிறோம். அதற்கான வழிதான் அகிம்சை.
கொல்லாமை, திருடாமை, புலால் உண்ணாமை போன்றவற்றைக் கடைபிடிப்பதே அகிம்சை நெறியாகும்.
அகிம்சை நெறியில் வாழ்ந்துகாட்டுவதன் மூலம் பிறவிக்குக் காரணமான அனைத்து வினைப்பயன்களிலிலிருந்தும் விடுதலை பெறலாம். பெற்றால்.....
சமணர்களின் நம்பிக்கை மெய்யானதாகவே இருக்கட்டும். ஆனால், 'பிரபஞ்ச ஒளியில் கலப்பது' என்கிறார்களே, அதுதாங்க புரிய மாட்டேங்குது.
பிரபஞ்ச ஒளியில் கலக்குற நாம் எப்படியிருப்போம்? எவ்வளவு காலத்திற்கு அங்கேயே இருப்போம்?
செத்துப்போனா, உடம்பு உருவாகக் காரணமாயிருந்த அத்தனை அணுக்களும் அழிஞ்சுடுது; அல்லது, காணாமல் போயிடுது. அப்புறம், 'நான்' அல்லது 'நாம்' என்பவை எப்படியிருக்கும்?
ஏதோ ஆவி போல, புகை போல என்று கொண்டாலும், அந்த ஆவி வடிவிலோ புகை வடிவிலோ பிரபஞ்ச ஒளியுடன் கலந்துவிடுவதன் மூலம் நாம் அடையும் பலன் என்ன? கலந்த பிறகும் ‘நான்’ என்னும் உணர்வு நமக்கு இருக்குமா?
'பேரானந்தம்' என்கிறார்கள். அதென்ன பேரானந்தம்? அந்தப் பேரானந்தத்தில் எவ்வளவு காலத்துக்குத் திளைத்திருப்போம்?
சமணர்கள் என்றில்லை, மற்ற மதவாதிகளும் இப்படித்தான். ஆன்மா, கடவுள், சொர்க்கம், நரகம்னு எதையெதையோ சொல்லியிருக்கிறார்கள். நம்ம மரமண்டைக்குத்தான் எதுவுமே புரியமாட்டேங்குது!
