சனி, 8 ஆகஸ்ட், 2026

‘தமிழ் ஆளுமைகள்’[எழுத்தாளர்கள்] தளத்தின் பட்டியலில் ‘பசி’[ப]பரமசிவம்!!!!!

Tamil Personalities

//தமிழின் ஜனரஞ்சக இதழ்களில் ஏராளமான ஒரு பக்கக் கதைகளையும், சிறுகதைகளையும் எழுதிப் புகழ் பெற்றவர் எழுத்தாளர் பசி.ப.பரமசிவம்.

இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கிடையூர் கிராமத்தில் பிறந்தவர்.

ஈரோடு, சிக்கையா நாயக்கர் மகாஜனக் கல்லூரியில் புதுமுக(பி.யூ.சி) வகுப்பில் படித்தபோது எழுத்தாளர் தமிழ்வாணன் நடத்திய ‘கல்கண்டு’ இதழின் தீவிர வாசகர் ஆனார். இவர் எழுதிய மூன்று கடிதங்கள் கல்கண்டு இதழில் வெளிவந்து எழுதுவதற்கு இவருக்கு உற்சாகம் அளித்தன.

1962-இல் கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் ‘தமிழ் வித்துவான்’ கல்வி பயின்றபோது, நாரண.துரைக்கண்ணன் நடத்திய ‘பிரசண்ட விகடன்’ இதழில் இவரது முதல் சிறுகதை ‘ஓடாதே நில்’ வெளிவந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘பி.ஓ.எல்’ படித்த காலக்கட்டத்தில் ஏராளமான நூல்களைப் படித்தார்; கதை எதுவும் எழுதவில்லை.

கேரளப் பல்கலைக் கழகத்தில் ‘முது கலை’ பயின்றபோது, ஆண்டு மலர்களில் மட்டும் இவரது படைப்புகள் வெளிவந்தன.

கல்லூரி ஆசிரியர் ஆன பிறகு எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

இவரது மொழி நடையானது தூய தமிழில் அமைந்தது; உணர்ச்சிமயமான சொல்லடுக்குகளை உள்ளடக்கியது; வினா, வியப்புக் குறியீடுகளைத் தன்னகத்தே கொண்டது.

1975-இல் இவரது ‘எவர்சில்வர் அண்டா’ என்னும் சிறுகதை ‘ராணி’ இதழில் வெளிவந்தது. அதன்பிறகு இவ்விதழில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கதைகளை எழுதினார்.

1982-இல் ‘குமுதம்’ இதழில் வெளிவந்த இவரது முதல் ஒரு பக்கக் கதை ‘டெஸ்ட்’. அதன் பிறகு இவருடைய ஒரு பக்கக் கதைகள் பல அவ்விதழில் வெளியாயின.

‘தமிழில் ஒரு பக்கக் கதைகள்’ எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து 1990-இல் முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாய்வு பின்னர் நூலாக வெளிவந்து, ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ – ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது.

இவர் கதைகள் எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் சேலம் மாலை முரசு – ‘கதை மலர்’ பகுதியில் 20க்கும் மேற்பட்ட இவருடைய கதைகள் பரிசுக் கதைகளாக வெளிவந்தன.

1982-இல் ‘ராணி’ வார இதழ், குடும்ப நலத் துறையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசு பெற்றது.

1983-இல் ‘ராணி’ வார இதழ் நடத்திய ‘ரூபாய் நோட்டுக் கதை’ போட்டியில் இவருடைய ‘பெண் நினைத்தால்’ கதை பரிசு பெற்றது.

தினமலர் – வாரமலர் சிறுகதைப் போட்டியில் இவரது ‘துருவ நட்சத்திரம்’ கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.

குமுதம், ஓம் சக்தி, ராணி, தினமலர், இதயம் பேசுகிறது, பாக்யா, குங்குமம், தினத்தந்தி, தினகரன், தாய், தேனமுதம், பூங்கனல், இளந்தமிழன் ஆகிய இதழ்களில் 135 கதைகளை எழுதியுள்ளார்.

2011 முதல் இணையத்தில் வலைப்பதிவு மூலம் சிறுகதைகளையும், ஒரு பக்கக் கதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

© 2026 Tamil Personalities

***‘தமிழ் ஆளுமைகள்’ பட்டியலில் இடம்பெறுவதற்குப் போதுமான தகுதி எனக்கு இல்லையென்றாலும், எவ்வெப்போதோ எங்கெல்லாமோ நான் பதிவிட்டத் தகவல்களை ஒருங்கிணைத்து, முறைப்படுத்தித் தளத்தில் இடம்பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

https://tamilpersonalities.com/people/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/