ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

பஸ்லுதீன் முஸ்லீம் அல்ல! ஆக்னஸ் கிறிஸ்தவர் அல்ல!! இவர்கள் மனிதர்கள் மட்டுமே!!!

கடவுளின் தேசம்[கேரளா] புனலூரில் ஒரு வீட்டின் பெயர் 'காஸ்ட்லெஸ்'. அந்த வீட்டில் வசிக்கும் 'பஸ்லுதீன் - ஆக்னஸ்' தம்பதியர், அவர்களின் வாரிசுகள் என்று அனைவருமே எந்தவொரு சாதியையும் மதத்தையும் சாராதவர்கள்.

பஸ்லுதீனும் ஆக்னஸ் கேப்ரியேலும் காதலித்து மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு, இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பிள்ளைகள். தான் வாழும் வீட்டிற்கு மட்டுமல்ல, தன்னுடைய மூத்த மகனுக்கும் 'காஸ்ட்லெஸ்' என்றே பெயரிட்டார் பஸ்லுதீன். 

காஸ்ட்லெஸ்ஸின் மனைவி சபிதா. இவர்களும் மதங்களைப் புறக்கணித்து மணம் புரிந்துகொண்டவர்களே.
குடும்பத்துடன் 'காஸ்ட்லெஸ்'
இளைய மகன் 'காஸ்ட்லெஸ் ஜூனியர்'. இவரின் மனைவி ராஜலட்சுமி. இவர்களுடையதும் மதம் சாராத திருமணம்தான்.
'காஸ்ட்லெஸ் ஜூனியர்' குடும்பம்
தன் மகள் 'ஷைன் காஸ்ட்லெஸ்'ஸுக்கும் இதே வழியில்தான் மணம் செய்துவைத்தார் பஸ்லுதீன். 

இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது குறித்து.....

''நான் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவன். அந்த மார்க்கத்தின் முறைப்படிதான் வளர்க்கப்பட்டேன். நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவன் நான். ஒரு கட்டத்தில்..... மதத்தை முன்னிறுத்திப் போதிக்கப்படுகையில், பேசுவது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருப்பதாகத் தோன்றியது. இதை அனைத்து மதங்களிலும் உணர்ந்தேன். மெல்ல மெல்ல மதங்களை விலக்கி மானிடச் சிந்தனையை வளர்த்துக்கொண்டேன்'' என்கிறார் பஸ்லுதீன்.

இஸ்லாமியக் குடும்பத்தைச் சார்ந்த பஸ்லுதீனும் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த ஆக்னஸ்ஸும் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்தனர். இரு தரப்பு வீடுகளிலும் கடும் எதிர்ப்பு. மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்தார்கள்.

பஸ்லுதீன் தொடர்ந்து சொல்கிறார்:
''எங்க மூனு பிள்ளைகளின் திருமணங்களைக்கூட மதச் சடங்குகள் இல்லாமல்தான் நடத்தினோம். சார்பதிவாளர்களே மண்டபத்துக்கு வந்து திருமணங்களைப் பதிவு செய்தார்கள். எங்கள் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையின்போது மதமும் சாதியும் கேட்டனர். படிவங்களில், இரண்டையும் 'இல்லை' என்றே பதிவு செய்தோம். பள்ளிப் பாடங்களில், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு' என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, சேர்க்கையின்போது சாதி மதம் கேட்பது பெரிய முரண் அல்லவா?''

அவரைத்  தொடர்ந்து ஆக்னஸ் சொல்கிறார்:
''சாதியும் மதமும் இல்லை என்பதே எங்கள் குடும்பத்தின் அடையாளம் ஆகிவிட்டது. விலகி நின்ற உறவுகளும் இப்போது கைகோத்துவிட்டனர். எங்கள் கொள்கையில் நாங்களும் அவர்கள் நம்பிக்கையில் அவர்களுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.....

.....எங்கள் வீட்டில் மூன்று மதங்களின் பண்டிகைகளையும் கொண்டாடுவோம்.  ஓணத்தின்போது அத்தப்பூ கோலம் போடுவோம். கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் வீட்டில் ஸ்டார் கட்டுவோம். ரம்ஜானுக்குப் பிரியாணி சமைப்போம். பண்டிகைகள் சாப்பிட்டு மகிழத்தான் வருகின்றன. மதம் பார்த்து நாங்கள் எதையும் விலக்கி வைப்பதில்லை.''

சாதி மத வேறுபாடுகளற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிட விதை தூவியிருக்கிறார்கள் 'காஸ்ட்லெஸ் பவன்' குடும்பத்தினர். இவ்வகையில், விதை தூவுவோர் எண்ணிக்கை பன்மடங்கு பெருகுதல் வேண்டும். இவர்களுக்கு இடையூறு செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

'காஸ்ட்லெஸ்' குடும்பத்தார்க்கு நம் வாழ்த்துகள். செய்தி வெளியிட்ட 'இந்து தமிழ்'[05.08.2018] நாளிதழுக்கு நம் பாராட்டுகளும் நன்றியும்.
========================================================================





9 கருத்துகள்:

  1. அருமையான தகவலை தெரியதந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. காஸ்ட்லெஸ் குடும்பம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு