சனி, 23 செப்டம்பர், 2017

'ஷீரடி ஃபக்கீர்’, பகவான் சாய்பாபா ஆனது எப்படி?!

'சாய் பகவான் நல்ல பொன் நிற மேனியும் நீல நிறக் கண்களும் கொண்டவர். இவர் பல் துலக்கியதை எவரும் பார்த்ததில்லை. இவரின் பற்கள் காறை படிந்து நிறம் மாறிக் காட்சியளிக்கும்'.....ஒருவர் எளிய மனிதனாக இருந்து உலகம் போற்றும் பகவானாக உயர்வதற்கு இதுவும் ஒரு தகுதி போலும்!
மழைக்குக்கூட இவர் பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்கியது இல்லை. ஆனாலும், பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே யூகித்துவிடும் அபூர்வ ஞானசக்தி இவருக்கு இருந்ததாக ஏராளமானோர் நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள்.

இந்தப் பகவான் சிறு வயதில், அழுக்கு உடையுடன் காடுகளில் திரிவதும் மரங்களின் அடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதுமாக இருப்பாராம். மற்ற சிறுவர்கள் இவரைக் ‘கேணப் பக்கிரி’ என்று எள்ளி நகையாடுவார்களாம். 

ஆனால், பயாஜி என்பவரோ இவரைக் காண நேர்ந்தபோதெல்லாம், ‘இவன் சாதாரணச் சிறுவன் அல்ல. இவனிடம் அற்புதமான சக்தி உள்ளது. தெய்வத்தன்மை நிறைந்திருக்கிறது. கடவுளின் அவதாரம் இவன்’ என்று நினைத்தாராம்; பிறரிடம் சொன்னாராம். 

இவ்வாறே மேலும் பல பேர் நினைத்தார்களாம்; சொன்னார்களாம். விளைவு.....

இளம் பருவத்திலேயே இவருக்குப் பல சீடர்கள் உருவானார்கள். ஞானி என்றும் மகான் என்றும் பலரும் போற்றத் தலைப்பட்டார்கள். ஃபக்கீர், பகவான் சாய்பாபா ஆனார்.

இவர் நிகழ்த்திய அற்புதங்கள் அளவிறந்தவை[ஆதாரம்: ‘சீரடியும் சீடர்களும்’, ஆர்.எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.முதல் பதிப்பு: 2011.] என்கிறார்கள். அவற்றில் சில.....

* தனக்கிருந்த ஆஸ்துமா நோயைக் குணப்படுத்துவதற்காக மூன்று நாட்கள் செத்த சவமாகக் கிடந்து[பிணத்துக்குக் காவல் இருந்தவர் ஒரு பக்தர்] பின்னர் உயிர்பெற்று எழுந்தாராம்.

* தான் 72 பிறவிகள் எடுத்ததாக இவர் சொல்லிக்கொள்வதுண்டு.

*“நான் புனித நீராடுவதற்காகப் பிரயாகை செல்ல வேண்டும்” என்று சாய் பாபாவிடம் ஒரு பக்தர் சொன்னார்.

“அங்கெல்லாம் எதற்குப் போகிறாய்? இங்கேயே பிரயாகை இருக்கிறது” என்றார் இவர்.

பாபா ஏதோ அற்புதம் நிகழ்த்தப்போவதைப் புரிந்துகொண்ட பக்தர் இவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். அப்போது....

கூடியிருந்தோர் கண்டு வியந்து புளகாங்கிதம் பெறும் வகையில் சீரடி பகவானின் கட்டை விரல்களில் கங்கையும் யமுனையும் பெருக்கெடுத்ததாம். “பாபா...பாபா” என்று பக்தி முழக்கம் செய்த பக்தகோடிகள் புனித நீரைத் தத்தம் தலைகளில் அள்ளித் தெளித்துப் பாவம் போக்கிக்கொண்டார்களாம்[வெள்ளத்தில் முங்கிக் குளித்துப் பரவசப்பட்டார்கள் என்று ஏனோ நூலாசிரியர் குறிப்பிடவில்லை!].

* “குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றார் ஒருவர் இவரிடம்.

“உங்களுக்குக் கீழேயே இருக்கிறது” என்றார் சீரடி.

குழப்பமடைந்த அவர், தான் அமர்ந்திருந்த பாறையின் மேற்பரப்பை மெல்லச் சுரண்டினார். என்ன ஆச்சரியம்! பாறையிலிருந்து இளநீர் போன்ற சுவையான நீர் பெருகி வழிந்தது. நீர் கேட்ட ‘நானா’ என்ற அந்தப் பக்தர் தன் தாகம் தீரப் பருகினாராம்.

*தன்னைச் சரணடைந்த பக்தரொருவர் நடைப்பயணம் மேற்கொண்டபோது, வழியிலிருந்த ஒரு தேனீர்க் கடைக்காரரிடம் பயணிக்குத் தேனீர் வழங்குமாறு அசரீரியாகச் சொன்னாராம் பகவான் சாய். பகவானின் அதியற்புத சக்தியை எண்ணி எண்ணிப் பயணி அகமகிழ்ந்தாராம்.

*பிச்சைக்காரராக நாயாக எல்லாம் உருமாறித் தன் பக்தர்களை இவர் சோதித்ததுண்டு.

*இவரின் அருட்பார்வை பட்டு இவரிடம் மேலாளராக இருந்த ஒருவரின் கண் வலி காணாமல் போனது.

*பாம்பு தீண்டி, உடம்பில் நஞ்சு ஏறிக்கொண்டிருந்த ஒருவரை இவரிடம் தூக்கிவந்தார்கள். “ஏறாதே...இறங்கு” என்று இவர் கட்டளை இட்டவுடன், நஞ்சு மேலே ஏறாமல் முற்றிலுமாய் இறங்கிவிட நோயாளி முழுமையாகக் குணமடைந்தார்.

* படிப்பறிவில்லாத பாபா ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார்.

மேற்கண்டவை போல எத்தனையோ  அடுக்கடுக்கான அதிசயங்களை இவர் நிகழ்த்தியதாக நூலாசிரியர் பரவசப்பட்டிருக்கிறார்; சீரடியாரின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கிறார்.

ஆக,

ஃபக்கீர் என்னும் சாதாரண மனிதரை, மகான் ஆக்கியவை பொய்யும் புனைந்துரையும் விரவிய இம்மாதிரி நூல்களும் இவை போன்ற ஊடகங்களும்தான்.

பிறருக்கு உரியவற்றை அபகரிப்பதும் விபச்சாரம் செய்வதும் போதைப் பொருள்களை விற்பதும் குற்றங்கள் என்று கருதும் அரசு, ஆன்மிகத்தின் பெயரால் அவதாரங்களையும் மகான்களையும் இட்டுக்கட்டுதல் மூலம் உருவாக்கி, மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும்  செயலைக் குற்றமாகக் கருதுவதில்லை. இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோரைத் தண்டிப்பதும் இல்லை.

இந்த அவல நிலை மாறுவது எப்போது?
=====================================================================================











12 கருத்துகள்:

  1. இவரின் அற்புதங்களைப் பார்த்தால் இவரை'இந்திய ஜீசஸ் 'னு சொல்லலாம் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி சொல்லுவார்கள். சந்தேகமே வேண்டாம்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. இவரும் சோறு தின்று மலம்தானே கழி(ந்)த்தார்.... ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கமகமக்கும் ஆவியாக மாறி வெளியேறியிருக்குமோ!!!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா - இது கொள்ளையடிப்பதில்
    வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா ...

    இருக்கும் அறிவை மடமை மூடிய
    இருட்டு உலகமடா - வாழ்வில் எந்த நேரமும்
    சண்டை ஓயாத முரட்டு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா - இது கொள்ளையடிப்பதில்
    வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா

    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்து விளையாடும் .... ஓ... ஓ.. ஓ..
    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்து விளையாடும்
    மனம் வெந்திடும் தோட்டக் காரனிடம்
    மிரட்டல் வார்த்தைகளாடும்
    பல வரட்டு கீதமும் பாடும்
    விதவிதமான பொய்களை வைத்துப்
    புரட்டும் உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா

    அன்பு படர்ந்த கொம்பினிலே
    ஒரு அகந்தைக் குரங்கு தாவும்
    அதன் அழகைக் குலைக்க மேவும்
    கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும்
    கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும்
    சிலர் குணமும் இது போல்
    குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா - இது கொள்ளையடிப்பதில்
    வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா
    ஆ.. ஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்தமைந்த பாடலை எடுத்தாண்டமைக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. ஆன்மீகம் என்பதானது பிழைப்புத்தேடல், ஏமாற்றுதல் என்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தும்போது வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாறுபவர் கணக்கில் அடங்காதோர் என்பதுதான் பெரும் வேதனை.

      நன்றி நண்பர் ஜம்புலிங்கம்.

      நீக்கு