அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

அண்ணாமலையின்[பாஜக] அடி பணிந்து அடியேன் சமர்ப்பிக்கும் வேண்டுகோள்!!!

#இது ஜனநாயக நாடு. 'ரோடு ஷோவை' மக்கள் தரிசன யாத்திரை என்று நாங்கள் சொல்கிறோம். அமைச்சர் ராஜாவின் அப்பா சமூக விரோதி. கோபாலபுர ஊழல் குடும்பம், 2024 தேர்தலுக்கு பின் சிறைக்குச் செல்லும். இதை மோடி கியாரண்டியாகக் கொடுத்திருக்கிறார்[கொடுத்தல்?]# 

நம்மூர் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும் இது[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-annamalai-angry-interview-in-coimbatore-by-people-who-drive-the-demon-of-money-politics--/3598220].

கோபாலபுரக் குடும்பம் என்பது உதயநிதி ஸ்டாலினும், தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும், கனிமொழியும் இன்ன பிறரும் உள்ளடங்கிய மு.க.[தமிழ்நாடு முதலமைச்சர்]ஸ்டாலின் குடும்பத்தைக் குறிக்கிறது.

ஸ்டாலின் குடும்பத்தார், தேர்தல் முடிந்து மோடி மூன்றாம் முறையாக இந்தியத் திருநாட்டின் பிரதமர் ஆனபிறகு, சிறையில் அடைக்கப்படுவார்கள் என்னும் அண்ணாமலையாரின் அறிவிப்பு, தமிழ் மக்களின் மனங்களில் தேன் கலந்த பாலை வார்த்திருக்கிறது.

தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகறிந்த உண்மை.

ண்ணல் அண்ணாமலை அவர்களே,

தமிழரின் உரிமை குறித்து ஓரளவுக்கேனும் குரல் கொடுத்த... கொடுக்கும் பெரிய கட்சி[சிறு கட்சிகளும் உள்ளன] என்று வேறு எதுவும் இல்லாத நிலையில்தான் தி.மு.க.வை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள்.

தமிழனாகப் பிறக்காததற்காக வருந்தி வருந்தி உடல் மெலிந்தவரும், தமிழுக்காகத் தன் உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருப்பவரும், உத்தமக் குணத்தவருமான மோடியும், அவரின் அப்பழுக்கற்ற சீடருமான தாங்களும் தமிழையும் தமிழினத்தையும் தத்தெடுத்துக்கொண்டீர்கள் என்பதால், தி.மு.க என்னும் கட்சியைத் தமிழர்கள் முற்றிலுமாய்ப் புறக்கணித்துள்ளார்கள் என்பது உண்மை.

இந்நிலையில் மில்லியன் கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஸ்டாலின் குடும்பத்தாரைச் சிறையில் தள்ளிக் கம்பி எண்ணச் செய்தல் வேண்டும் என்பது, தங்களைப் போலவே தமிழ் மக்களின் விருப்பமாக உள்ளது.

கைச் சுத்தமும் மனச் சுத்தமும் கொண்ட அவதாரப் புருஷர் மோடி அவர்கள் தமக்குள்ள அளவற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை[ஸ்டாலின் குடும்பத்தாரைச் சிறையிலடைத்தல்] முன்பே செய்திருக்கலாம்.

நல்லுறவை வளர்ப்பதற்காகக் கூறி உலக நாடுகளுக்குச் சுற்றுலாச் செல்லுதல், பக்தி வளர்ப்புக்காக மேற்கொண்ட தேவைக்குக் கூடுதலான கோயில் பணிகள், ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்பதாகச் சொல்லிச் சிறுபான்மை மத வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கை[தாக்குதல்&அடித்து நொறுக்குதல்] எடுத்தல், தாடி வளர்த்த சாமியார்களையும் அம்பானி அதானிகளையும் ஊக்குவித்தல், மான் வளர்த்தல், மயில் வளர்த்தல் போன்ற கடமைகளை ஆற்றுவதில் அதீதக் கவனம் செலுத்தியதால் அது செயலாக்கம் பெறவில்லை.

தமிழினம் செய்த புண்ணியமோ என்னவோ, உயர் பதவியைத் துறந்து தாங்கள் ஓடோடி வந்து தமிழ்நாடு ‘பாஜக’வின் தலைவர் ஆகி, திமுக’வைச் சேர்ந்த ஊழல் பெருச்சாலிகளைப் பூண்டோடு அழிப்பதை முழு நேரப் பணியாகச் செய்கிறீர்கள். இதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

இனியும் காலம் தாழ்த்தாமல், கோபாலபுரக் கும்பலைச் சிறையில் தள்ளுவதற்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரும், உலகம் போற்றும் உன்னதத் தலைவருமான மோடிஜியிடம் பரிந்துரை செய்யுமாறு மிக்கப் பணிவுடன் வேண்டுகிறேன்.

இதைச் செய்தால்.....

‘திமுக’காரர்கள் வரும் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பை இழப்பதோடு, மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிச் சொகுசாக வாழவும்[தமிழ்நாடு மாநில திமுக ஆட்சி கலைக்கப்படும் என்பதால்] வழியில்லாமல்போகும்.

தமிழ் மக்கள் என்றென்றும் தங்களுக்குக் கடமைப்பட்டிருப்பதோடு, நடக்கவுள்ள தேர்தலில் தங்கள் கட்சிக்கே வாக்களிப்பார்கள்.

இது உறுதி.