சனி, 23 ஜூலை, 2016

ஜென்மத்துக்கும் புரியாத சில ‘ஜென் கதை’கள்!

என்னை எச்சரித்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ரொம்பவே பயந்துட்டேன்!!!   இன்று, சுவையான  நான்கு ‘ஜென் கதை’கள்[சைவம்] மட்டும்.

=======================================================================

மிரட்டும் மின்னஞ்சல்....

#எச்சரிக்கை!

இன்பாக்ஸ்
x

பொறம்போக்கு !!!

முற்பகல் 9:14 (1 நிமிடத்திற்கு முன்பு)
பெறுநர்: எனக்கு
பகுத்தறிவுவாதின்னு சொல்லிட்டு ரொம்பத்தான் ஆட்டம் போடுறே. அடக்கி வாசி. இல்லேன்னா உதைபடுவே. அம்புட்டுதான்#
=================================================================
ஜென் கதைகள்:

கதை ஒன்று:

குரு: மரணப்படுக்கையில் உள்ள உனக்கு நான் உதவட்டுமா?
சீடன்: எனக்கு உங்களால் என்ன உதவி செய்துவிட முடியும்? நான் 
தனியாக வந்தேன். இப்போது தனியாகப் போகிறேன்.
குரு: வந்ததாகவும் போவதாகவும் நீ நினைத்தால் அது குழப்பம். அது 
மயக்கம். வருவதும் இல்லை; போவதும் இல்லை. இதுதான் உண்மை.

[எனக்கு மயக்கம் வந்தது. உங்களுக்கு?]

கதை இரண்டு:

“நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்; வெறுங்கையுடன் வந்திருக்கிறேன். என் மனம் அமைதியாக இருக்கிறது” என்று ஒருவர் குருவிடம் சொன்னார்.

“அப்படியா? சரி. அதை விட்டுவிடு” என்றார் குரு.

வந்தவருக்குத் திகைப்பு. 

“நான்தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டதாகச் சொன்னேனே சுவாமிஇனி எதை விட்டுவிடுவது?” என்றார் குருவைத் தேடி வந்தவர்.

“விட்டுவிட ஒன்றுமில்லையா? சரி. அப்படியானால் அதை வைத்துக்கொள்” என்றார் குரு.

[வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கு?]

கதை மூன்று:

ஜென் ஞானம் பெற ஒருவர் குருவைத் தேடி வந்தார்.

குருவை வணங்கினார்; ஜென்னைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார்.

“ஜென்னைப் பற்றிச் சொல்வதானால்.....” என்று கூறி நிறுத்தினார் குரு.

வந்திருந்தவரிட்ம ஆர்வம் பெருகியது.

“எனக்கு ஒன்றுக்கு வருகிறது” என்று சொல்லி எழுந்து போய்விட்டார் குரு.

வந்தவருக்குத் திகைப்பு; காத்திருந்தார்.

குரு திரும்பி வந்தார். “ நான் யாராக இருந்தாலும் ஒன்றுக்குப் போய்த்தான் ஆகவேண்டும். அதுவும் நானேதான் செய்ய வேண்டும். எனக்காக நீ செய்ய முடியுமா என்ன?” என்றார் குரு.

வந்தவர் ஞானம் பெற்றார்.

[இது கொஞ்சம் தேவலாம். இருந்தாலும்,  எனக்கு ஞானம் பிறக்கவில்லை!]

கதை நான்கு:

குரு சீடர்களை அழைத்தார்.

“சென்ற வாரம் நான் சொன்னது நினைவிருக்கிறதா? இன்றுதான் நான் புறப்படும் நாள். சாகும்போது ஏதாவது நல்லது சொல்லிவிட்டுப் போக வேண்டும். நான் கவிஞன் அல்ல; எழுத்தாளனும் அல்ல. எனக்கு எழுதவே தெரியாது. யாராவது நான் சொல்வதை எழுதுகிறீர்களா?” என்றார்.

“எழுதுகிறேன் சுவாமி” என்றான் ஒரு சீடன்.

குரு சொன்னார்: “ஒளியிலிருந்து நான் வந்தேன்; இப்போது ஒளிக்கே திரும்புகிறேன்.”

“குருவே, ஒரு சொல் போதவில்லை” என்றான் சீடன்.

“ஆகா...”என்று சிங்கத்தைப் போல் கர்ஜித்தார் குரு.

அதுதான் அவரின் கடைசிச் சொல். அடுத்த கணம் சமாதி ஆகிவிட்டார்!
***************************************************************************************************************
கதைகள், புவியரசுவின் ‘மீண்டும் ஜென் கதைகள்’ தொகுப்பிலிருந்து சுட்டவை! அவரால் தரப்பட்ட தத்துவ விளக்கங்கள் நூலில் உள்ளன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக