அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 18 நவம்பர், 2017

பெண்களுக்குக் ‘கற்பு’ ஏன்? கண்ணதாசன் கண்டறிந்த உலக நீதி!!!

#ஒருவன், தனக்குச் சொந்தமான நிலத்தை உழவு செய்து ‘வித்து’ இடுகிறான்[பயிர் செய்கிறான்]. அந்நிலத்தில் விளையும் பொருள் அந்த நில உரிமையாளனுக்குத்தான் சொந்தம்[இது உலக நீதி]. அது போல.....

மனைவி என்பவள் கணவனின் ‘உடைமை’. மனைவி என்னும் நிலத்தில் ‘வித்து’ இடுபவன் கணவன். எனவே, மனைவி பெற்றெடுக்கிற குழந்தைகள் கணவனின் குழந்தைகள் ஆகின்றன. அதனால்தான்.....

“நீ யாருடைய பிள்ளை?” என்று கேட்டால் தந்தை பெயரைச் சொல்கிறோம். இன்னும் சொல்லப்போனால், தந்தை யார் என்பதைத் தாயார் சொல்லித்தான் அறிகிறோம்; அவரைத் தந்தையாக ஏற்கிறோம். தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பன் யார் என்பது தெரியாவிட்டால்[?!] தாயார் பெயர் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை#

‘ஆணுக்குப் பெண் அடிமையல்ல’ என்னும் உண்மையை ஏறத்தாழ உலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், பெண் என்பவள் ஆணுக்குச் சொந்தமான விளைநிலம் ஆவாள்’ என்னும் பத்தாம்பசலித்தனமான கருத்துக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல; மறைந்த கவிஞர்[இவர் சிறந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை] கண்ணதாசன்தான்.

தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் நூலில் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரின்  கருத்தை மேற்கோள்  காட்டி அதைப் பாராட்டவும் செய்கிறார் கவிஞர்.

‘மனைவியானவள் கணவனின் உடைமை ஆதலால், அவள் கற்பு நெறி பிறழாமல் வாழ்வது அவசியம்; அது உலக நீதி’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
இப்படிப் பல அபத்தமான கருத்துகளின் தொகுப்புத்தான் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’[‘கண்ணதாசனின் அர்த்தமற்ற இந்துமதம்’என்னும் தலைப்பில் நூல் இருப்பதை அறிவேன். அதை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை].

இந்நூலில், பெரும்பான்மை மக்களின் மனங்களில் ஆழமாய்ப் பதிந்துவிட்ட மூடநம்பிக்கைகளுக்குப் பகுத்தறிவு முலாம் பூசியிருக்கிறார் கவிஞர்.

எளிய இனிய கவித்துவ நடையைக் கையாண்டு, மூடநம்பிக்கைகளைத் திணிப்பதில் கண்ணதாசன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கில் இந்நூல் விற்பனையாகியிருப்பதே இதற்குச் சான்று[இப்பதிவுக்குப் பயன்பட்டது ‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’, அறுபத்து ஒன்பதாம் பதிப்பு: ஃபிப்ரவரி, 2005].

தற்காலிக அல்லது, இறுதி மூச்சுவரை நீடிக்கிற துன்பங்களைத் தாங்குவதற்கான மன உறுதியைப் பெறுவதில் நம் மக்களுக்கு நாட்டமில்லை; அது குறித்துச் சிந்திப்பதும் இல்லை. கடின உழைப்பின் மூலம் பெற வேண்டியவற்றைக் கடவுளை வழிபடுதல், ஜோதிடனின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுதல் என்று குறுக்கு வழிகளில் பெற நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதுதான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ போன்ற நூல்கள் பல்லாயிரக் கணக்கில்  விற்பனையாவதற்கான காரணம் ஆகும்.

கண்ணதாசன் போன்ற ஆன்மிகப் பரப்புரையாளர்களையே பெரும்பாலான ஊடகங்களும் ஆதரிக்கின்றன; மிகச் சிறுபான்மையினராக உள்ள பகுத்தறிவாளர்களைச் சீந்துவதே இல்லை. 

ஊடகங்களைத் திருத்தும் முயற்சியில் சிறுபான்மைச் சிந்தனையாளர்கள்[எண்ணிக்கை என்ன?] ஈடுபடுவார்களா? அவர்களின் முயற்சி எள்ளளவேனும் பலன் தருமா?

ஆழ்ந்து சிந்தித்தால் கவலைதான் மிஞ்சுகிறது.

காலம் ஒரு நாள் மாறும்[?]. காத்திருப்போம்.

[அர்த்தமுள்ள இந்துமதத்தால் விளையும் அனர்த்தங்கள் குறித்து வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் எழுதுவேன்].

நன்றி.
=====================================================================================