எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 23 நவம்பர், 2017

சொறிதலும் சொறிதல் நிமித்தமும்!

'ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே தவிர வேறென்ன?'[அர்த்தமுள்ள இந்துமதம் 69ஆம் பதிப்பு, 2005; பக்கம்: 121] என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
கண்ணதாசனின், கடவுள் குறித்த   கருத்துகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து, 'ஒரு தாயின் வயிற்றில் நாம் பிறக்க வேண்டிய நேரத்தை முடிவு செய்வதும் அவனே' என்கிறார் கவியரசு, 'நமக்குச் சூட்டப்பட வேண்டிய பெயரையும் அவனே குறிக்கிறான்' என்று  குறிப்பிடுவதோடு, 'மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளேயாவார். .....தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும் பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்து போன்ற ரேகை பொறித்து.....' என்னும் மதுரை ஆதீனக்கர்த்தரின் கருத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

தன் உள்ளங்கையிலிருந்த ரேகையைப் படித்திருப்பாரா கவிஞர்? 'ஆம்' என்றால் அதைப் பிரதி எடுத்து இந்த நூலிலும் இணைத்திருக்கலாம். மறந்துவிட்டார் போலும்!

தனக்குப் பெற்றோர் வைத்த 'முத்தையா' என்னும் பெயரும், 'கண்ணதாசன்' என்னும் புனைபெயரும்கூட, தான் தன் தாய் வயிற்றில் கருவாக வளரும்போதே இறைவனால் குறிக்கப்பட்டது என்கிறார்.

முத்தையா என்பது வைத்தீஸ்வரன் கோயில் சாமி பெயராம்!

கவிஞர் உயிரோடு இருந்தால், "வைத்தீஸ்வரன் சாமிக்குப்[சாமிக்கே] பெயர் சூட்டியது எந்தக் கடவுள்?" என்று கேட்கலாம். அவர் காலமாகிப் பல ஆண்டுகள் கழிந்துவிட்டதால் அதற்கு வாய்ப்பில்லை.

அனைத்துப் பிரபஞ்ச நிகழ்வுகளுக்கும் கடவுளே காரணம் என்கிறார் கண்ணதாசன். அவ்வாறாயின் அந்த இறைவன் மனிதனுக்கு ஆறறிவைத் தந்தது ஏன்?

சுயமாகப் பெயர் சூட்டுவதற்குக்கூடப் பயன்படவில்லை என்றால், ஆறாவது அறிவு எதற்கு?

எதற்கு.....?

உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வதற்கா?

அரிப்பை உண்டாக்குபவனும் கடவுளே; சொறிந்துகொள்ளத் தூண்டுபவனும் அவனே என்கிறீர்களா?

உண்மைதான். எல்லாம் அவன் செயல்தான்.

அவனின்றி அணுவும் அசையாது. நம் ஆறறிவைப் பயன்படுத்திச் சுயமாகச் சொறிந்துகொள்ளக்கூட இயலாது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++